20 குரலிலிருந்து கோபால் நன்றாகக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது. "மாதவி அங்கே இருக்காளா? வீட்டுக்குப் போய்விட்டாளா?" சொற்கள் குழறின. கோபாலுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் டெலிபோனை அப்படியே மாதவியின் காதருகே வைத்தான் முத்துக்குமரன். அதே கேள்வி குழறலாக அவள் காதிலும் ஒலித்தது. அவள் முகத்தில் பழைய பயம் இன்னும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். கவனித்தபடியே அவளை வினவினான்: "என்ன பதில் சொல்லட்டும்? முன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து பீச்சுக்குப் போனன்னிக்கி, 'பீச்சுக்குப் போனதெல்லாம் அங்கே ஒண்ணும் சொல்ல வேண்டாம்'னு கோபாலுக்கு நடுங்கினியே; அப்பிடியேதான் இன்னிக்கும் இருக்கியா? அல்லது..." "சும்மா அதையே குத்திக்காட்டிப் பேசாதீங்க. இன்னிக்கி நான் எதுக்கும் யாருக்கும் பயப்படலே, அவருக்கு நீங்க என்ன பதில் சொல்லணுமோ அதைச் சொல்லலாம்." அவள் குரலில் தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் அவனுக்கும் புரிந்தது. தொடர்ந்து போனில் ஒரே கேள்வியை மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்த கோபாலுக்கு முத்துக்குமரன் தீர்க்கமான - தெளிவான குரலில் பதில் கூறினான்: "ஆமா இங்கேதான் இருக்கா..." உடனே எதிர்ப்புறம் பதில் சொல்லாமல் டெலிபோன் ரெஸ்டில் 'ணங்' என்று வைக்கப்பட்டது. "இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன்; நீங்க இடம் கொடுத்தாத்தான் இங்கே தங்கலாம்னு!" "நெஞ்சிலேயே இடம் கொடுத்தாச்சி! இங்கே இடம் தர்ரத்துக்கு என்ன? பிடிவாதமா நீ கேட்டு வாங்கிக்கிட்டியே." சிங்கப்பூரில் ஷாப்பிங் போனபோது வாங்கிக் கொண்டு வந்த ஸெண்ட்டை விமானத்திற்குப் புறப்படுமுன் பூசியிருந்தாள் மாதவி. இருளில் அவள் ஒரு வனதேவதை போல் நறுமணத்தோடு எதிரே நிற்பதை அப்படியே புதிதாக அப்போதுதான் பார்ப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முத்துக்குமரன். "இந்தாங்க தலையணை..." "வேண்டாம்! எனக்கு ரொம்ப மெதுவான தலையணை வேண்டும்" - என்று அவளுடைய தங்க நிறத்தோளைத் தொட்டுக் காண்பித்துக் குறும்புத்தனமாகச் சிரித்தான் அவன். "சரிதான்! இந்த வீட்டிலே இந்த ஒரு ரூம்லியாவது பாதுகாப்புக் கிடைக்கும்னு நினைச்சேன். இதுவும் மோச மாகத்தான் இருக்கும் போலேருக்கு." அவள் பொய்க் கோபத்தோடு இப்படிக் கூறியபோது அவளுடைய உதடுகளில் புன்னகையும், முகமும் மிக மிக அழகாயிருந்தன. அவன் மகிழ்ச்சியிலே திளைத்தான். "தரையிலே ஜில்னு ஈரம். வீணா நாளைக்கு ஜுரம் வந்து கஷ்டப்படப் போறே..." "இப்ப நீங்க என்ன பண்ணனும்கிறீங்க - ?" "ரொம்ப நாளா நடிச்சு நடிச்சு நடிக்கறது உனக்கும் அலுத்திருக்கு, எனக்கும் அலுத்திருக்கு. இனிமே நாம வாழணும் - " முத்துக்குமரன் எழுந்து நின்று அவளுடைய கரங்களைப் பற்றினான். அவள் வீணையாக வளைந்து அவன் மேற் சாய்ந்தாள். அவனுடைய பரந்து விரிந்த மார்புப் பகுதியும், திரண்டு பருத்த தோள்களும் அவளுடய பூங்கைகளால் வளைக்க முடியாத அளவு பெரியவையாக இருந்தன. முத்துக்குமரன் அவள் காதருகே முணுமுணுத்தான்: "என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கிறே?" உலகத்தின் முதல் பெண் போல் அவள் அவன் முன் நாணிக் கண் புதைத்தாள். "ஏன் பேச மாட்டேங்கிறே?" அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|