http://www.chennailibrary.com



4

     "அன்புள்ள முத்துக்குமார் என்னுடைய செயலைத் தவறாக நினைக்காமல் - இதனுடனிருக்கும் ஆயிரம் ரூபாயைக் கைச்செலவுக்கு வைத்துக் கொள். சமயத்தில் நான் ஊரிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது, என்று புதிய ஊரில் புதிய இடத்தில் நீ செலவுக்குத் திண்டாடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடனேயே இதை உனக்குக் கொடுத்தனுப்புகிறேன்" என்றெழுதிக் கீழே கோபால் கையொப்பம் இட்டிருந்தான்.

     - இந்தச் சிறிய கடிதத்தைப் படித்துவிட்டு - உடனிருந்த ரூபாய் நோட்டுக்களையும் பார்த்தபோது நண்பனின் செய்கைக்கு ஆத்திரப்படுவதா அன்பு கூறுவதா என்று புரியாமல் மீண்டும் குழம்பினான் முத்துக்குமரன். 'தன்னிடம் பணம் இருக்கிறதென்ற திமிரில் தானே இப்படிக் கொடுத்தனுப்புகிறான்' ...என்பதாக நினைத்தபோது கோபமும்... 'பாவம்! நான் சிரமப்படப் போகிறேனே என்ற எச்சரிக்கையுணர்வோடு குறிப்புணர்ந்து கொடுத்தனுப்பி இருக்கிறான்'...என்பதாக நினைத்த போது வியப்பும் அன்பும் மாறி மாறி உண்டாயின. தங்க இடம், உண்ண உணவு, நாடகம் எழுத வசதிகள், எல்லாம் செய்து கொடுக்கப்பட்டு விட்ட பின் தனக்குப் பணம் தேவை இல்லை என்றாலும்... திருப்பிக் கொடுத்தனுப்பினால் நண்பனுடைய மனம் புண்படுமே என்ற தயக்கம் முத்துக்குமரனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தேவை இல்லாத ஒரு காகிதக் கற்றையை டிராயருக்குள் திணிப்பது போல் மேஜை டிராயரில் அந்த உரையையும் கடிதத்தையும் பணத்தோடு எடுத்துப் போட்டு வைத்தான் அவன். மனமோ நண்பனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நாடகத்தைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. சென்னையைப் போன்ற ஒரு பெரிய கஸ்மாபாலிடன் நகரத்தில் - கோபாலைப் போன்ற புகழ்பெற்ற நடிகன் ஒருவன் தயாரித்து அளிக்கிற தான் எழுதும் நாடகம் எத்தனை பெருமைக்குரியதாக அமைய வேண்டுமோ அத்தனை பெருமைக்குரியதாக அதை அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் முதலில் அவனுக்குள் ஏற்பட்டது. மதுரை கந்தசாமி நாயுடுகாருவின் சபைக்கு எழுதிக் கொடுத்த பழைய பாலவிநோத நாடகங்களுக்கும், இப்போது எழுதப்போகிற இந்த நாடகத்துக்கும் என்னெண்ண வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்பதை முதலில் அவன் சிந்தித்தான். உத்தி, அமைப்பு, உரையாடல், சம்பவக் கோவை, நகைச்சுவை எல்லாவற்றிலுமே பட்டினத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற முறையில் இந்த நாடகம் அட்வான்ஸாக இருக்க வேண்டுமென்று அவனுக்கே தோன்றியது. அதனால்தான் அவன் திரும்பத் திரும்ப அந்த நாடகத்தைப் பற்றிச் சிந்தித்தான். நாடகமோ, வசனமோ, பாடல்களோ எழுதுவது அவனுக்குக் கைவந்த பழக்கம்தான் என்றாலும் அந்தப் பழக்கத்தை ஒரு புதிய உலகுக்குப் பயன்படுத்திக் காண்பித்து வெற்றிபெற வேண்டியவனாகத் தான் இருப்பதை இப்போது அவன் உணர்ந்திருந்தான். சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் அதுதான் காரணமாக இருந்தது. பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக நண்பன் மூலம் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையாயினும் - கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்பதில் இப்போது அக்கறை பிறந்தது. அது சம்பந்தமான திட்டங்களை மனத்தில் போடத் தொடங்கினான் அவன்.

     காலை ஒன்பதரை மணிக்கு நாயர்ப் பையன் - இட்டிலியும் காபியும் கொண்டு வந்து வைத்துவிட்டு "சார்! உங்க 'ப்ரேக்ஃபாஸ்ட்' ரெடி" - என்றான்.

     "ஐயா இருக்காரா! ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுப் போயிட்டாரா?" - என்று அவனிடம் விசாரித்தான் முத்துக்குமரன்.

     "இன்னும் புறப்படலே! பத்து நிமிசத்திலே புறப்பட்டிடுவாரு" - என்று பதில் கிடைத்தது. "சாருக்கு எது வேணும்னாலும் உடனே செய்யச் சொல்லி ஐயா உத்திரவு போட்டிருக்கு" - என்று முத்துக்குமரன் கேட்காத ஒன்றையும் சேர்த்துத் தன் மறுமொழியில் கூறினான் பையன்.

     முத்துக்குமரன் சிற்றுண்டியை முடித்துவிட்டு காபி அருந்திக் கொண்டிருக்கும்போது ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து கோபால்தான் கூப்பிட்டுப் பேசினான்.

     "நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன் வாத்தியாரே! எது வேணும்னாலும் பையனிட்டக் கூச்சமில்லாமக் கேட்டுக்கலாம். ஸ்டூடியோவிலிருந்து அப்புறம் ஃபோன் பண்றேன்...நாடகம்...ஜல்தி தயாராகட்டும்..."



சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv4.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.