சமகால இலக்கியம் |
பழந்தமிழ் இலக்கியம் |
5 நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படியேறி அறைக்குள் வந்ததும்... தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக்குமரனுடைய அணைப்பில் சிக்கியது. "என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவதற்குத்தான் வந்தேனாக்கும்..." "இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில்லையா?" -அவள் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள். "உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்..." "ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத்திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும்." முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளுடைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன. "உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி"- "எனக்கும் கூடத்தான்...ஆனால்" இப்படி மெல்லிய குரலில் அவன் காதருகே கிளுகிளுத்த போது அவள் குரலில் சங்கீத நயத்துக்கும் அப்பாற்பட்டதோர் இனிமை நிலவியதை அவன் உணர்ந்தான். அவனிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து விடைபெற்றுச் சென்றாள் அவள். இரவு அவனும் தனியாக விடப்பட்டான். அவள் நின்ற இடத்து மல்லிகைப்பூ வாசனையும் சிறிது நிலவியது. அவளை அவன் அணைத்த போது உதிர்ந்த இரண்டொரு பூக்கள் தரையில் இருந்தன. அதைத் திரட்டி எடுத்து மறுபடியும் அந்த வாசனையை நினைவிற் பதிக்க முயன்றான் முத்துக்குமரன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வாடைக் காற்று சில்லென்று வீசியது. அவன் ஜன்னலை அடைத்துத் திரையை இழுத்து விட்டான். டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சென்று எடுத்தான். "நான்தான் மாதவி, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்..." "அதைச் சொல்றதுக்கு ஒரு ஃபோனா?" "ஏன்? நான் அடிக்கடி ஃபோன் பேசறது பிடிக்கலையா உங்களுக்கு?" "அப்படி யார் சொன்னா? நீயா ஏன் சண்டைக்கு இழுக்கறே?" "வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேனோ இல்லையோன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கப் போறீங்களேன்னு ஃபோன் பண்ணினாச் சண்டைக்கு இழுக்கறேங்கிறீங்க...?" "எனக்கே உன்கிட்டச் சண்டை போடணும்னு ஆசையாயிருக்குன்னு வச்சுக்கயேன். ஆனா இப்படி ஃபோனிலே...இல்லை." "பின்னே எப்படி?" "நேரிலே சண்டை போடணும். 'சொல்றபடி கேட்டுக்கிட்டு ஒழுங்கா இருன்னு' உன் கன்னத்திலே ஒண்ணு வைக்கணும்..." "செய்யுங்களேன். எனக்குக்கூட உங்ககிட்ட அப்படி ஓர் அறை வாங்கணும்னு ஆசையாயிருக்கு..." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|