5 ... தொடர்ச்சி ... - இப்படி வெகு நேரம் நீண்டது அவர்களுடைய உரையாடல். இருவரும் பேச்சை முடிக்க விருப்பமில்லாமலே முடித்துக் கொண்டார்கள். அவளிடம் பேசுவதற்கு இன்னும் நிறைய மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவனும், அவனிடம் பேசுவதற்கு நியை மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவளும் மனமில்லாமலே ஃபோனை வைத்தார்கள். மனம் களிப்பினால் பொங்கி வழிந்த அந்த வேளையில் - நாடகத்துக்குப் பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் தொடங்கினான் முத்துக்குமரன். பாண்டிய மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு கழைக் கூத்தியைப் பற்றிய கதையை மனத்தில் அமைத்துக் கொண்டு எடுப்பாகவும் - பிரமாதமாகவும் அமைய வேண்டிய முதற் காட்சியை உருவாக்குவதில் அவன் ஈடுபட்டான். பாண்டிய மன்னன் தன் அமைச்சர், புலவர், பரிவாரங்களுடன் கழைக் கூத்தைப் பார்க்கும் காட்சி. அதில் கழைக் கூத்தாடுகிறவள் பாடுவதாக ஒரு பாடலையும் எழுத வேண்டியிருந்தது. கழைக் கூத்தியான அந்தக் கதாநாயகியைக் கற்பனை செய்ய நேர்ந்த போதெல்லாம் அவன் மனக் கண்ணில் மாதவி சிரித்துக் கொண்டு நின்றாள். கதாநாயகனையோ அவன் கற்பனையே செய்யவில்லை. தன்னையே பாவித்துக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவுக்கு மேல் நேரம் சரியாகத் தெரியாத வேளையில் பங்களாவிலிருந்து கோபால் ஃபோன் செய்து முத்துக்குமரனை அழைத்தான். "என்ன வாத்தியாரே! இங்கே வர்ரியா! 'சோம பானம்'லாம் ரெடியாயிருக்கு. ஒரு கை பார்க்கலாம்..." "வேண்டாம்பா...நான் எழுதிக்கிட்டிருக்கேன். நல்லா எழுத வர்ரப்ப பாதியிலே விட்டுட்டு வரவேண்டான்னு பார்க்கிறேன்." "அங்கேயே கொடுத்தனுப்பட்டுமா?" "வேண்டாம்; சொன்னாக் கேளு..." "சரி! அப்புறம் உன் இஷ்டம்" - என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான் கோபால். - முத்துக்குமரனின் மனத்திலோ மாதவியே பெரிய போதையை உண்டாக்கி அப்போது அவனை எழுதுவித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய நாசியில் இன்னும் அவள் மேனியின் நறுமணம் நினைவு இருந்தது. அநுபவம் நிறைந்திருந்தது. அவளுடைய பொன் மேனியின் மென்மை இன்னும் அவனுடைய கைகளில் நிறைந்திருந்தது. அவற்றை விட அதிகமான எந்தச் செயற்கை மதுமயக்கமும் அப்போது அவனுக்குத் தேவையாயிருக்கவில்லை. அவளே அவனுடைய இதயத்தின் எல்லாப் பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு ஒரு பெரிய மது மயக்கமாக உள்ளே உறைந்து போயிருந்தாள். அவளை அற்புதமாக அலங்கரித்துப் பாண்டியப் பேரரசனுடைய திருக்கொலுவில் கழைக் கூத்தாட வைத்து இரசித்துக் கொண்டிருந்தான் அவன். கழைக் கூத்தின் போது, கழைக்கூத்தி பாண்டியனை நோக்கிப் பாட வேண்டிய பாடலும்கூட நன்றாக வந்து விட்டது. "நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்" - என்ற பல்லவியோடு மிக இனிய இராகமொன்றில் மெட்டமைத்து அந்தப் பாடலை அவன் இயற்றியிருந்தான். அன்றிரவு அவன் படுக்கப் போகும் போது ஏறக்குறைய விடிகாலை மூன்று மணிக்கு மேலாகி விட்டது. படுக்கையில் களைப்போடு விழுந்தபோது அவுட்ஹவுஸுக்கு அருகில் தோட்டத்திலிருந்து பவழ மல்லிகைப் பூக்களின் ஈர வாசனை குளிர்ந்த காற்றுடன் கலந்து வந்தது. அந்த வாசனையை உள்வாங்கி மனத்திலிருந்த மாதவியைப் பற்றிய நினைவுகளுக்குச் சூட்டிக்கொண்டு உறங்கினான் அவன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|