http://www.chennailibrary.com





6

     ஒரு பெரிய பங்களாவின் தோட்டத்தில் வலது ஓரமாக இருந்த சிறிய அவுட்ஹவுஸுக்கு மாதவி அவனை அழைத்துச் சென்றாள். வீட்டின் வரவேற்பு அறை, கூடம், சமையலறை யாவும் கச்சிதமாகவும் நவீனமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் ஒரு மூலையில் டெலிபோன் இருந்தது. வீட்டில் மாதவியின் தாயையும் ஒரு வேலைக்காரியையும் தவிர வேறெவரும் இல்லை. மாதவி தன் தாயை முத்துக்குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்த வயதான அம்மாள் மலையாள பாணியில் காதில் ஓலையணிந்து பட்டையாகச் சரிகைக் கரையிட்ட பாலராமபுரம் நேரியல் - முண்டு தரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் காபி குடிக்காமல் அங்கிருந்து தப்ப முடியவில்லை.

     "கடற்கரைக்குப் போய்விட்டு மறுபடி இரவு சாப்பாட்டுக்கு இங்கேதான் திரும்ப வரப்போகிறோம் இப்போதே காபியைக் கொடுத்து அனுப்பி விடலாமென்று பார்க்காதீர்கள்" - என்று முத்துக்குமரன் கேலியாகக் கூறியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. அவனுக்கும், மாதவிக்கும் சக்கை வறுவல், காபி கொடுத்த பின்பே கடற்கரைக்குப் போக விட்டாள். அவர்கள் கடற்கரைக்குப் புறப்படும் போதே "எட்டு எட்டரை மணிக்குள் சாப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும்" - என்பதையும் வற்புறுத்திச் சொல்லியனுப்பினாள். கூட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் 'எலியட்ஸ்' கடற்கரைக்குப் போகலாம் என்றாள் அவள். அவனோ அதற்கு நேர்மாறாக முரண்டு பிடித்தான்.

     "கூட்டத்துக்குப் பயப்படறதுக்கும், அதைக் கண்டு விலகி ஓடறதுக்கும் நம்ம ரெண்டு பேரும் கோபாலைப் போல அவ்வளவு பிரபலமாயிடலையே?"

     "அதுக்குச் சொல்லலே... உட்கார்ந்து பேசறதுக்கு வசதியா இருக்கும்னுதான் பார்த்தேன்."

     "எந்த இடத்திற்குப் போனாலும் வசதியாகத்தானிருக்கும். இந்தக் குளிர் காலத்திலே எவன் கடற்கரைக்கு வரப்போறான்?" - என்றான் முத்துக்குமரன். சாலையிலேயே காரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கடற்கரை மணலிலே நடந்தார்கள் அவர்கள். எலியட்ஸ் பீச்சில் அந்தக் குளிர் மிகுந்த டிசம்பர் மாத முன்னிரவில் கூட்டமே இல்லை. ஒரு மூலையில் வெள்ளைக்காரக் குடும்பமொன்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல வண்ணப் பந்துக்களை (பீச் பால்) வீசி எறிந்தும் பிடித்தும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரனும் மாதவியும் மணல் சுத்தமாக இருந்த ஒரு பகுதியாகத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். கடலும் வானமும், சூழ்நிலையும் அப்போது அங்கே மிக மிக அழகாயிருப்பதாக இருவருக்குமே தோன்றியது. திடீரென்று முத்துக்குமரன் மாதவியை ஒரு கேள்வி கேட்டான்.

     "மாவேலிக்கரையிலிருந்து மெட்ராசுக்கு வந்து இந்தக் கலையிலே ஈடுபட வேண்டிய நிலை உனக்கு எப்போ ஏற்பட்டது?" திடீரென்று ஏன் அவன் இப்படித் தன்னைக் கேட்கிறான் என்று அறிய விரும்பியோ அல்லது இயல்பான தயக்கத்துடனோ - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

     "சும்மா தெரிந்து கொள்ளலாம்னுதான் கேட்டேன். உனக்கு விருப்பமில்லைன்னாச் சொல்ல வேண்டாம்" - என்றான் அவன்.

     "சேட்டன் - நல்ல வாலிபத்தில் இறந்து போனப்புறம் - அம்மையும் நானும் மெட்ராஸ் வந்தோம். சினிமாவுக்கு 'எக்ஸ்ட்ராக்கள்' சேர்த்துவிடும் ஆள் ஒருவன் எங்களை ஸ்டுடியோக்களில் நுழைத்துவிட்டான். அங்கே கோபால் சாரோடு பழக்கம் ஏற்பட்டது..."

     "பழக்கம்னா...?"

     - அவள் பதில் சொல்லவில்லை. அவள் முகம் கலவரமான மனநிலையைப் பிரதிபலித்தது. அவனும் மேலே அழுத்திக் கேட்கத் தைரியமற்றவனாக இருந்தான். சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. பின்பு அவளே மேலும் தொடர்ந்தாள்:



சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv6.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.