கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
இயற்றிய
ஆசாரக்கோவை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். 'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ளார். பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் அதிகம் காணப்படுகின்றன. இந் நூல் வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பது,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம் யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் தெரியவருகிறது. இந் நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயர் போலும்! கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ எண்ணவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் 'திரு வாயில் ஆய திறல் வண கயத்தூர்' என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. இது கொண்டு செல்வமும், திறலும், வண்மையும் ஓங்கிய ஊர் இது என்பது விளங்கும். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தார் என்பதும் விளங்கும். இந்நூலில் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுட்கள் உள்ளன. வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, என்பன இதில் உள்ளன. ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. 1
பொறையுடைமை - பொறுமையும் நட்டல் - நட்பு செய்தல் நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும். ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு, நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை, இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும் ஒழுக்கம் பிழையாதவர். 2
நெடு வாழ்க்கை - நீண்ட வாழ்நாள் நிலக்கிழமை - நிலத்திற்கு உரிமை நற்குடிப்பிறப்பு, நீண்ட வாழ்நாள், செல்வம், அழகுடைமை, நிலத்திற்கு உரிமை, சொல் மேன்மை, படிப்பு, பிணியில்லாமை இவை எட்டையும் ஒழுக்கம் தவறாதவர்கள் அடைவர். |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |