http://www.chennailibrary.com




கணிமேதாவியார்
இயற்றிய
ஏலாதி

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

     ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை பெற்றமையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.

     இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர். கணிமேதை என்பது கொண்டு சோதிட நூற் புலமை மிக்கார் இவர் என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சமண சமயத்தவர் என்று கொள்ளலாம்.

     இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன. ஆறு பொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும் இந் நூலில், மகடூஉ முன்னிலைகளைச் சிற்சில பாடல்களில் ஆசிரியர் மேற்கொள்ளுதல், பொருளை மேலும் குறுக்கிவிடுகிறது.

கடவுள் வாழ்த்து

அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு.

புரிந்து - விரும்பி
விண்ணோர்க்கு - தேவர்களுக்கு

     மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்ற புகழமைந்த தனது சிவந்த பாதங்களால் இட்ட பணியைச் செய்ய ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்ற பிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக் கொடுத்து, நான்மறை கற்று, அவ்வொழுக்கத்துடன் வாழ்ந்தால் அவன் தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்வான்.

நூல்

சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு. 1

வள்ளன்மை - ஈகைத்தன்மை
வனப்பு - அழகு

     நிறைந்த நவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையான சொல், வீரத்தில் அசையாத நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறி ஒழுகுவோரது இலக்கணம் ஆகும்.

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2

கூர்த்த - மிக்க
யாதும் - சிறிதும்

     தேன் சிந்தும் பூவையணிந்த கூந்தளையுடையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3

தக்கார்க்கேல் - தகுதியுடைய சான்றோர்களால்
அவம் இலா - தாழ்வில்லாத

     யாவருக்கும் தவம் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது, பெரியோரின் குற்றத்துக்கு ஆளாதல் எளிது, நன்நெறியில் ஒழுகுதல் அரிது, வீட்டின்பம் தவறுமாயின் பிறவி தொடர்தல் எளிது, முக்தி பெறுதல் அரிது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/elathi.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.