கபில தேவர்
இயற்றிய
இன்னா நாற்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ...
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா; கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா; திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா, பெரு வலியார்க்கு இன்னா செயல். 4
புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல் எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.
சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா; உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா; முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா, மறை இன்றிச் செய்யும் வினை. 5
ஓம்பல் - பாதுகாத்தல் வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா; மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா; இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா, கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6
மறம் - வீரம் கொடை - ஈகை அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும் துன்பமாகும்.
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா; நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா; தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா, மாற்றம் அறியான் உரை. 7
உரை - சொல் தேற்றம் - தெளிவு வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா; நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா; இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா, நயம் இல் மனத்தவர் நட்பு. 8
நகை - சிரித்தல் நெஞ்சத்தார் - மனமுடையார் ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |