http://www.chennailibrary.com




மூவாதியார்
இயற்றிய
ஐந்திணை எழுபது

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

     ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந் நூலின் முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று உள்ளது. இக் கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லாமையும் சிந்திக்கத் தக்கது. இந் நூலில் உள்ள 70 பாடலகளில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26), நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன. இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர்.

1. குறிஞ்சி

தோழி தலைமகனை வரைவு கடாயது

அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை. 1

ஏனல் - தினை
இழை - அணிகலன்

     அவரைக் கொடிகள் நிறைந்த பசுமையான கதிர்களையுடைய தினைப்புனத்தில் இளைய கவரிமான்கள் மேய்கின்ற மலைநாட்டுத் தலைவனே! அணிகலன்களை அணிந்த தலைமகளுக்கும் உமக்கும் நடுவே புணையாக இருந்த என் உதவியை மறக்காமல் அவளை மணந்து என்னை மகிழ்விப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறினாள்.

கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து,
வானின் அருவி ததும்ப, கவினிய
நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும்,
வாடல் மறந்தன, தோள். 2

புனம் - தினைப்புனம்
கவின் - அழகு

     "தோழியே! மழை அருவிப் பெருக்கெடுத்து ஓடும் தினைப்புனத்தில் உள்ள அகிற்கட்டைகளைச் சுமந்து செல்லும் அருவியினை உடைய மலைநாட்டுத் தலைவன் வாய்மையுள்ளவன் என்பதால் அவன் பொருள் தேட என்னைப் பிரிந்து சென்றாலும் என் உடல் வருந்தவில்லை" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது

இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்,
குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை
அலையும் அலை போயிற்று, இன்று. 3

குளவி - காட்டுமல்லிகை
இமிரும் - ஒலிக்கும்

     என் தலைவியே! தழை அடர்ந்து குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் படர்ந்து, காந்தள் மலர்கள் நிறைந்த சோலையில் வண்டின் கூட்டம் தேனுண்டு பாடும். அப்படிப்பட்ட மலைநாட்டுத் தலைவன் மணம் பேச சான்றோர்களை அனுப்பியுள்ளான். எனவே நம் செவிலித்தாயின் துயரம் நீங்கியது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது

மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம். 4

மந்தி - பெண் குரங்கு
ஆ - பசு

     "பொது இடத்தில் இருந்த பலா மரத்தில் இனிய பலாப்பழத்தைத் தின்று நீர் வேட்கை மிக அங்கிருந்த பசுவின் மடியை மந்தி தடவ அப்பசு தன் கன்றுக்குப் பால் கொடுப்பதைப் போல பால் கொடுக்கும் படியான மலைநாட்டுத் தலைவனை யாம் பிரிந்து வாழ இயலாது" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/iynthinaiezhupadhu.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.