மாறன் பொறையனார்
இயற்றிய
ஐந்திணை ஐம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ...
உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்? வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி, நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக் கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார். 4
உள்ளுதல் - நினைத்தல் தொடி - வளையல் கூர்தல் - மிகுதல் "ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள். பருவம் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக் கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி, வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும், துளி கலந்து வீழ்தரும், கண். 5
கோடு - சிகரம் கொண்மூ - மேகம் வளி - காற்று என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.
முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை ஈரும், இருள் மாலை வந்து. 6
தும்பி - வண்டு மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால், சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு எறிவது போலும் எனக்கு. 7
ஆன் - பசு தொடி - வளையல் கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |