புல்லங்காடனார்
இயற்றிய
கைந்நிலை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) 'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதும், இவர் தந்தையார் பெயர் காவிதியார் என்பதும் விளங்கும். இவர் தந்தையார் அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவராக இருத்தல் கூடும். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவார். 1. குறிஞ்சி வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல் நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் கானக நாடன் கலந்தான்இலன் என்று, மேனி சிதையும், பசந்து. 1
இவர்தல் - பொருந்துதல் ஏனல் - தினைப்புனம் தினைக்கதிர்களைத் தின்பதற்காக அமரும் கிளிகளை ஓட்டும் தினைப்புனத்தில் தனக்கு நிகரற்ற மான்கள் சிலிர்த்து நிற்கும்படியான கானக நாட்டுத் தலைவன் மலைச்சாரலில் என்னைச் சேர்ந்தான். அத்தகையவன் இன்று இங்கு என்னைப் பிரிந்து சென்றான் என்பதை அறிந்த எனது உடல் பசலை நிறம் கொண்டு அழகு இழந்தது. வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம் வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என் நெஞ்சம் நடுங்கி வரும்! 2
புனம் - காடு "தீயினால் கருகிய காட்டுக்கு மீண்டும் நறுமணம் உண்டாகும்படி மலையினின்று வரும் அருவிகள் சந்தனக் கட்டைகளை அடித்துக் கொண்டு வந்து சேர்கின்ற கள்ள மனமுடைய மலைநாட்டுத் தலைவன் இனி இங்கு வருவானோ? வராது விடுவானோ" என்று தலைவி தோழியிடம் அஞ்சுகின்றாள். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர் காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும், பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு ஆசையின் தேம்பும், என் நெஞ்சு. 3
பாங்கர் - பக்கம் மந்தி - குரங்கு "பாசி படர்ந்த பசுமையான நீர்ச்சுனையின் பக்கத்தில் பெருகுகின்ற பசுமையான நீரில் கோபங்கொண்ட குரங்குகள் அந்நீரில் அடித்துவரும் பழங்களை எடுத்துச் சுவைக்கும். இத்தகைய பாசமுடைய அருவியுடைய மலை நாட்டுத் தலைவன் பொருட்டு என் மனம் காதலால் வருந்துகின்றது" என்று தலைவி தோழியிடம் கூறினாள். |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |