புல்லங்காடனார்
இயற்றிய
கைந்நிலை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ... வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன் தான் கலந்து உள்ளாத் தகையனோ, - நேரிழாய்! - தேம் கலந்த சொல்லின் தெளித்து? 4
ஓங்கல் - மலை நேரிழை - பெண் "மலையில் உள்ள பலாமரத்தில் இனிய பழத்தைக் கருங்குரங்குகள் பறிக்கும் மலைநாட்டுத் தலைவன், இயற்கைப் புணர்ச்சியால் தேன் கலந்த சொற்களைக் கூறி என்னைத் தெளிவித்துச் சேர்ந்து பின்னர் அவற்றை எண்ணாது மறக்குந் தன்மையுடையவனோ?" எனத் தோழியிடம் தலைவி கூறினாள். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப் பிரசை இரும் பிடி பேணி வரூஉம் முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள் நிரையம் எனக் கிடந்தவாறு! 5
இரசம் - இன்பம் நிரையம் - நரகம் "கரிய பெண் யானை, இனிய வண்டுகள் இன்பத்துடன் பாடும் ஒலியைக் கேட்டுத் தேன் கூட்டை நாடி வரும் முரசு போன்று முழங்கி வரும் அருவிகளையுடைய மலை நாட்டுத் தலைவனுக்கு என் தோளில் சேர்கின்ற இன்பம் நரகத்தில் இருப்பது போல இருக்கின்றது போலும்" என்று தலைவி கூறுகிறாள்.
மரையா உகளும் மரம் பயில் சோலை, உரை சால் மட மந்தி ஓடி உகளும் புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் உரையா வழங்கும், என் நெஞ்சு. 6
உகளும் - திரியும் புரை - குற்றம் "காட்டுப் பசுக்கள் திரியும் மரங்கள் நிறைந்த சோலையில், இளமையான குரங்குகள் திரியும் படியான குற்றமற்ற மலைநாட்டுத் தலைவனின் அணிகலன்கள் அணிந்திருக்கும் மார்பானது என் மனத்தைத் தேய்த்து அதனுள் நடக்கின்றது" என்று தலைவி கூறினாள்.
கல் வரை ஏறி, கடுவன், கனி வாழை எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு, ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை சொல்ல, சொரியும், வளை. 7
கடுவன் - ஆண் குரங்கு எல் - சூரியன் "பாறைகளையுடைய மலையின் மீது ஆண்குரங்குகள் ஏறிப் பகற்பொழுதில் இனிய வாழைப் பழங்களைப் பறித்து உரித்துக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு விரைவாய் ஓடும். இத்தகைய மலை நாடனின் நாட்டின் சிறப்பினை சொல்ல எண்ணிய அளவில் என் கை வளையல்கள் நெகிழ்ந்து கழல்கின்றன" என்றாள் தலைவி. தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்
கருங் கைக் கத வேழம், கார்ப் பாம்புக் குப்பங் கி . . .க் கொண் . . . . . . . . . . . . . கரும் பெருங் கல் மலை நாடன் பேணி வரினே, சுருங்கும், இவள் உற்ற நோய். 8
கதம் - சினம் கரிய துதிக்கையை உடைய சினம் கொண்ட யானைகள் கரிய பாம்பின் பக்கத்தில்... மலைநாட்டுத் தலைவன் இவளை விரும்பி நாள்தோறும் வந்தால் இவள் கொண்ட பிரிவாற்றாமையாகிய நோய் குறையும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |