மதுரைக் கண்ணங்கூத்தனார்
இயற்றிய
கார் நாற்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது. தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல், திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ, 'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம் கரு இருந்து ஆலிக்கும் போழ்து? 1
திருவில் - இந்திரவில்லை கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த, நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!- 'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து. 2
நெடுங்காடு - நெடிய காடு எழில் - அழகு வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள். பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி,
தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது
வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள, உரும் இடி வானம் இழிய, எழுமே- நெருநல், ஒருத்தி திறத்து. 3
தண் - குளிர்ச்சி அயிர் மணல் - இள மணல் ஆலி - ஆலங்கட்டி வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது. தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது
ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள, காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன; பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!- வாடும் பசலை மருந்து. 4
அணி கொள - அழகுபெற ஆடு மகளிர் - கூத்தாடும் மகளிர் மஞ்ஞை - மயில் கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும். |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |