மதுரைக் கண்ணங்கூத்தனார்
இயற்றிய
கார் நாற்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ...
இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்- பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப் பவழம் சிதறியவை போலக் கோபம் தவழும் தகைய புறவு. 5
புறவு - காடுகள் அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி, வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;- கடிது இடி வானம் உரறும், நெடு இடைச் சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6
கடிது - கடுமையாய் தொலைந்த - மெலிந்த உரறும் - முழங்கும் மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.
நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும், தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!- பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல எச் சாரும் மின்னும், மழை. 7
தெறுதலும் - அழித்தலும் ஈதல் - கொடுத்தல் தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.
மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி, பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்- கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும் நுண் அரும்பு ஊழ்த்த புறவு. 8
ஞாலம் - உலகம் அஞ்சனம் - மை பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.
கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று; எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும், இன் சொல் பலவும் உரைத்து. 9
வரல் - வருதலை வனப்பு - அழகு கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |