மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய
முதுமொழிக் காஞ்சி (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது எனச் சிலர் கூறுவர். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். இந் நூலுள் பத்துப் பத்துக்களும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது. நூறதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு சேர் முதுமொழிக் காஞ்சி. எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக்காஞ்சி நூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும். 1. சிறந்த பத்து ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - 1. ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
ஆர்கலி - கடல் ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும் ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும். 2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும் சிறந்தன்று - சிறப்புடையது பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது. 3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
கற்றது - கற்ற பொருளை மறவாமை - மறவாதிருத்தல் புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது. 4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
வண்மையின் - வளமையோடிருத்தலை விட செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும். 5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
மெய் - உடம்பு பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல் நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|