விளம்பி நாகனார்
இயற்றிய
நான்மணிக்கடிகை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் இப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். விளம்பி என்பது ஊரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந் நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனைப் பற்றியவை. எனவே, நூல் ஆசிரியர் வைணவ சமயத்தினர் என்று கொள்ளலாம். கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 செய்யுட்கள் உள்ளன. 'மதி என்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம் அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்னும் செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்கள். ஏனைய அனைத்தும் நேரிசை, இன்னிசை, அளவியல் வெண்பாக்கள். கடவுள் வாழ்த்து
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்; முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப் புது மலர் ஒக்கும், நிறம்.
பழனம் - வயல் பூவைப்பூ - காயாம்பூ நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும். வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.
படியை மடியகத்து இட்டான்; அடியினான் முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின் அருமை அழித்த மகன்.
படி - உலகம் மடி - வயிறு உலகத்தைத் தன் வயிற்றுக்குள் அடக்கியவனான திருமால் தன் திருவடிகளால் மூவுலகத்தையும் அளந்தான். பசுக்களின் குளிரைப் போக்குவதற்காகக் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தான். பாணாசுரனது நெருப்பு மதிலை அழித்து அநிருத்தனை மீட்டான். நூல்
எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும் கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும் சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க, கூறல்லவற்றை விரைந்து! 1
எள்ளற்க - இகழாதே எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.
பறை பட வாழா, அசுணமா; உள்ளம் குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச் சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2
உரவோர் - அறிவுடையோர் அசுணமா - கேகயப் பறவைகள் கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துபடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |