கண்ணஞ் சேந்தனார்
இயற்றிய
திணைமொழி ஐம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டுப் பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக் கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று அறியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலால், சேந்தனாரும், கூத்தனாரும் ஒரு வேளை உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு. 1. குறிஞ்சி அஞ்சி அச்சுறுத்துவது
புகழ் மிகு சாந்து எறிந்து, புல் எரி ஊட்டி, புகை கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும் வான் உயர் வெற்ப! இரவின் வரல் வேண்டா, யானை உடைய சுரம். 1
புலவோர் - தேவர்கள் வெற்பு - மலை "மணமிக்க சந்தனமரங்களை வெட்டி, நெருப்பு வைத்து புகையைத் தேவர்களுக்கு அளிக்க, அதைப் பெற்ற தேவர்கள் மழையை அளிக்கும் மலைநாட்டை உடையவனே! நீ வரும் வழியில் யானைகள் உலவுவதால் இரவில் வரவேண்டாம்" எனத் தோழி கூறினாள். இதன் பயன் விரைவில் தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
கண முகை கை எனக் காந்தள் கவின், 'மண முகை' என்று எண்ணி, மந்தி கொண்டாடும் விறல் மலை நாட! வரவு அரிதாம்கொல்லோ? புனமும் அடங்கின காப்பு. 2
மந்தி - பெண் குரங்கு முகை - அரும்பு "காந்தள் கைகள் என்று கூறும்படி அரும்புகளுடன் இருப்பதைக் கண்ட பெண் குரங்குகள் முளைப் பாலிகைகளை உடைய குடங்கள் எனக் கருதி விளையாடும் நாட்டை உடையவனே! தினைக் கதிர்கள் கொய்து காவலும் முடிந்துவிட்டது. தலைவி வீட்டில் இருக்கிறாள். நீ இங்கு வருதல் அரிது. எனவே தலைவியை மணந்து கொள்வாய்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
ஓங்கல் இறு வரைமேல் காந்தள் கடி கவின, பாம்பு என ஓடி, உரும் இடிப்பு, கண்டு இரங்கும் பூங் குன்ற நாடன் புணர்ந்த அந் நாள் போலா, ஈங்கு நெகிழ்ந்த, வளை. 3
ஓங்கல் - உயர்ச்சி கடி - புதிது உரும் - இடி "காந்தள் பூக்களுடன் திகழ, மேகம் கண்டவர் பாம்பு என வியக்கும்படி மின்னுக்கொடியுடன் விளங்க, இடி இடிக்க, பிரிந்த காதலர் வருந்தும் மலையை உடையவன், களவு ஒழுக்கத்தில் புணர்ந்த அந்த நாளைப் போன்று வேறு எந்த நாளும் இன்பம் தராது வளைகள் நெகிழ்ந்தன" என்று வெளிப்புறத்தில் இருக்கும் தலைவன் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறினாள். தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு, எல்லிடை, கானவர் மக்கள் கனல் எனக் கை காய்த்தும் வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி மேனி பசப்புக் கெட? 4
ஏனம் - தினை எல் - இரவு "குறவரின் மக்கள் உழுங்காலத்தில் விட்ட மாணிக்க மணிகளைத் தீயாகும் என எண்ணி இரவுக் காலத்தில் குளிர் காய்வர். அத்தகைய நாட்டை உடையவனே! தலைவியின் பசலை நிறமானது கெடும்படி இரவில் அருள்வானோ, அறியேன்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். (தலைவனை இரவில் வருமாறு கூறல்) |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |