கண்ணஞ் சேந்தனார்
இயற்றிய
திணைமொழி ஐம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ... பின்னின்ற தலைமகனைக் காவல் மிகுதி சொல்லிச் சேட்படுத்தது
விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார் வரையிடை வாரன்மின்; - ஐய! - உரை கடியர்; வில்லினர்; வேலர்; விரைந்து செல் அம்பினர்; கல்லிடை வாழ்நர் எமர். 5
விரை கமழ் - மணம் வரை - மலை "இம்மலையில் வாழும் எங்களவரான வேடுவர், மணமிக்க இம்மலைச்சாரலில் உள்ள தினைப்புனத்தினை கையில் வேலையும், வில்லையும், விரைந்து செல்லும் அம்புகளையும் ஏந்தி இரவில் காவல் செய்வர். ஆதலின் இம்மலையிடம் இரவில் வரவேண்டாம்" எனத் தோழி தலைவனிடம் கூறினாள்.
யானை உழலும் அணி கிளர் நீள் வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்; ஏனலுள், - ஐய! - வரவு மற்று என்னைகொல்? காணினும், காய்வர் எமர். 6
ஏனல் - தினை "தலைவனே! யானைகள் திரியும் குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடமகள் நாங்கள். மேன்மகனாகிய தாங்கள் இத்தினைப் புனத்தில் என்ன பயன் கருதி வந்தீர்? எம்மவர் கண்டால் சினந்து உமக்குத் தீங்கு செய்வர். இங்கு வர வேண்டாம்" என்று தலைவனிடம் தோழி கூறினாள். இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது
யாழும் குழலும் முழவும் இயைந்தென வீழும் அருவி விறல் மலை நல் நாட! மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இர வரின், ஊர் அறி கெளவை தரும். 7
மாழை - அழகு "யாழ், குழல், முழவு ஒலி ஒன்று சேர்தல் போன்ற ஒலியை உடைய அருவிகளை உடைய நாடனே! நீ இரவில் வருவதால் மான் போன்ற பார்வையை உடைய தலைவி உனக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்து வருந்துவாள். ஊரவர் அறியும் பழிச் சொற்களே பரவி நிற்கும்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். (சேட்) படை
வேங்கை மலர, வெறி கமழ் தண் சிலம்பின் வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம்; சோர்ந்து குருதி ஒழுக, மற்று இப் புறம் போந்தது இல், - ஐய! - களிறு. 8
அமை - மூங்கில் "தலைவனே! வேங்கை மலர்களால் மணம் வீசும் மலைச் சாரலில் மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களை உடைய குறப் பெண்களாகிய நாங்கள் வாழும் பகுதியில் இரத்தம் வடிந்து ஒழுகும் ஆண் யானை வரவில்லை. வேறு இடத்திற்குப் போய்த் தேடுவீர்" என்று தோழி தலைவனை அங்கிருந்து அகற்றினாள். தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது
பிணி நிறம் தீர்ந்து, பெரும் பணைத்தோள் வீங்க, மணி மலை நாடன் வருவான்கொல், - தோழி! - கணி நிற வேங்கை மலர்ந்து, வண்டு ஆர்க்கும் மணி நிற மாலைப் பொழுது? 9
பிணி நிறம் - பசலை நிறம் "தலைவியே! நம் மலைநாட்டுத் தலைவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தால் தோன்றும் பசலை நீங்கப் பெற்றுப் பூரிக்குமாறு தினையைக் கொய்ய வேண்டும் காலத்தைக் காட்டும் சோதிடன் போல வேங்கை மலர்ந்தன. அப்படிப்பட்ட மாலை நேரத்தில் தலைவன் வரமாட்டானோ?" என்று கூறுவதன் மூலம் பகற்குறியைத் தவிர்த்து இரவுக் குறியில் வருமாறு தோழி தலைவனிடம் கூறினாள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |