http://www.chennailibrary.com


நல்லாதனார்
இயற்றிய
திரிகடுகம்

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

... தொடர்ச்சி ...

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. 3

இல்லம் - வீடு

     கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்
சாவ உறுவான் தொழில். 4

சேறல் - செல்லுதல்
பெற்றம் - மாடு

     பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி. 5

இழிந்து - இறங்கி
விழைவு - விருப்பம்

     பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 6

பேணுங்கால் - விரும்புமிடத்து

     பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சபையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா. 7

துஞ்சு - தூங்குகின்ற

     உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள். 8

அவையுள் - சபையில்
ஆர்ந்த - நிறைந்த

     பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirikadugam2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.