முதல் பிடில் நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது. "சூ... சூ" என்று ஒருவர் மாத்தி ஒருவராக கத்தினார்கள். காதலுக்கு கண் மட்டுமல்ல, காது கூட கிடையாது போல் இருக்கிறது. பூனைகள் இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, காதல் தீ மூளப் பாடுவதை நிறுத்தவுமில்லை. நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு ஓங்கி, இரவின் நிசப்தத்தில் பயங்கரத்தின் பிரத்யக்ஷ உருவாயிற்று. வந்த ஆத்திரத்தில் தெருவாசி ஒருவர், எதையோ எடுத்து பூனையைப் பார்த்து விட்டெறிந்தார். அதற்குப் பிறகு எழுந்த குரல் ஒரு நீண்ட ஓலம் மாதிரியிருந்தது. அவ்வளவு தான், அப்புறம் ஆண்பூனையின் குரல் கேட்கவில்லை. மீளவும் நடுநிசியின் மோனம்... மறுநாள் காலை மாடியில் ஒரு ஆண் பூனை செத்துக் கிடந்தது. வீட்டுக்காரர் அதை தூக்கிக் கொல்லை மைதானத்தில் எறியச் சொன்னார். பூனையின் சவம் மெத்தென்ற பொருள்மீது வந்து விழுந்தது. "என்ன மேலே வந்து விழுகிறாய்" என்றது அந்த மெத்தென்ற பொருள். "கோபித்துக் கொள்ளாதே நான் வேண்டுமென்று செய்யவில்லை. பிசகு அந்த வீட்டு மனுஷன் மேலே" என்று சமாதானம் சொல்லிவிட்டு, பூனையின் உடல், மேலே கேட்டது. "அது போகட்டும், என்னைப் போல நீயும் ஏதாவது செய்துவிட்டு இந்த மாதிரி தண்டனை அடைந்திருக்கிறாயா என்ன - மைதானத்திலே ஈ மொய்த்துக் கிடக்கிறாயே?" அங்கே கிடந்தது செத்துப்போன பந்தயக் குதிரை ஒன்று. "என் எஜமான் ஒரு இந்தியன், பந்தயப் பித்து. எனக்கு முந்தி எத்தனையோ குதிரையை வாங்கி வளர்த்து, பந்தயம் ஓட்டியிருக்கிறான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம் ஒரு தடவை கூட ஜயிக்கவில்லை. ஜயம் தான் கிட்டவில்லையே, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிடக் கூடாதா? அதுதான் இல்லை. கடைசித் தடவை என்று சபதம் கூறிக் கொண்டு தன் சொத்து முழுவதையும் விற்று என்னை வாங்கினான். எனக்காக அவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்ட மனிதனுக்கு நான் துரோகம் செய்யவில்லை. பந்தயத்தில் முதலாவதாகவே வந்து கொண்டிருந்தேன். ஜனங்களுடைய உற்சாகத்தையும் என் எஜமானருடைய கர்வத்தையும் வர்ணிக்கத்தரமல்ல. பந்தயம் முடியும் இடம் வந்தது. என்ன காரணத்தாலோ என் கால் தடுமாறி, கீழே விழுந்துவிட்டேன். முன்னங்கால் இரண்டும் என்னாயிற்றோ. எழுந்திருக்க முடியவில்லை. நான் கீழே விழுந்ததும் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த இரும்பு வர்ணக் குதிரை ஜயித்து வெற்றி மாலை சூடிற்று. என் எஜமானன் பந்தய வெறியன் அல்லவா? என் மீது பிறந்த வெறுப்பில் கைத்துப்பாக்கியால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். அதுமுதல் அவனுக்குப் பித்துபிடித்து விட்டதாம். இந்த மைதானத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வாரமாக இங்கே கிடக்கிறேன் கேட்பாரற்று. இப்பொழுது நீ வந்து சேர்ந்திருக்கிறாய் தோழனாக" என்று சொல்லி நிறுத்திற்று குதிரையின் சவம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|