உயிர் ஆசை

ஜாக் லண்டன் - அமெரிக்கா

     அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்டார்கள்; உடம்பு வலுவிழந்துவிட்டது. நெடிய துன்பம் முகத்திலே, விதியற்ற பொறுமையைக் காட்டியது. அவர்களது முதுகில் தோளோடு சேர்த்து இறுகக் கட்டிய கம்பளி மூட்டை அமுக்கியது. முதுகுச் சுமைக்கு அண்டை கொடுத்து; நெற்றியைச் சுற்றி மண்டைக்கட்டு; ஒவ்வொருவனும் கையில் துப்பாக்கியை ஊன்றி நடந்தான். தலையும் தோளும் முன்னே சாய, கண்களைத் தரையில் ஊன்றியபடி நடந்தனர்.

     "அந்தக் குடிசையிலிருக்கும் இரண்டும் தோட்டாக்களும் நம் கையிலிருந்தால் தேவலை" என்றான் பின்னால் வந்தவன்.

     குரலிலே நயப்பு அற்றிருந்தது. உற்சாகமற்றுப் பேசினான்.

     பாறைகளின் மீது நுரைத்துக் கொண்டு ஓடும் ஆற்றுப் படுகையில் நொண்டிச் சென்றவன் பதிலே சொல்லவில்லை.

     பின்னவன் அவனது சுவட்டைத் தொடர்ந்து வந்தான். இருவரும் காலில் போட்டிருந்த ஜோடுகளைக் கழற்றவில்லை. தண்ணீர் உறைபனி மாதிரி காலை வெட்டியது. அதனால் அவர்களது கணுக்கால் வலித்தது; பாதம் மரத்துப் போயிற்று. சில சமயம் தண்ணீர் முழங்கால் வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவர்களைத் தள்ளாட வைத்தது. பாறை வழுக்க பின்னால் வந்தவன் விழுந்து விட்டான். ஆனால் திக்குமுக்காடித் தடுமாறி காலை ஊன்றிக் கொண்டான். அதே சமயத்தில் வலி பொறுக்க மாட்டாமல் கத்தினான். தலை கிறங்கியது. விழாமல் நிற்பதற்குப் பற்றுக்கோடு தேடுவதுபோல காற்றில் துழாவினான். கடைசியாக ஊன்றி நின்று, பிறகு மேலே கால் எட்டிவைக்க, தள்ளாடி முன்னால் விழப்போனான். பிறகு நிலையாக நின்று மற்றவனை நோக்கினான். அவன் தலையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

     தனக்குள் ஆலோசிப்பதுபோல ஒரு நிமிஷம் நின்றான். பிறகு வாய்விட்டு முன்னவனுக்குக் குரல் கொடுத்து, "ஏடோ ய், என் கணுக்கால் மொழி புரண்டுவிட்டது" என்றான்.

     முன்னவன் நுரைத்துக்கொண்டு பாயும் ஆற்றில் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். பின்புறம் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின்னவன் கண்கள் அவனையே தொடர்ந்தன. கண்ணிலே களையில்லை; அம்பு பட்ட மானின் வேதனை அவன் கண்களில் தேங்கியது.

     முன்னவன் எதிர்க்கரைக்கு தள்ளாடித் தள்ளாடி நேராக நடந்தான். திரும்பிப் பார்க்கவே இல்லை. பின்னவன் உதடு சற்று நடுநடுங்கியது. அதனால் அவன் முகத்தை மறைத்த மயிர் அசைந்து குலுங்கியது. நாக்கு கூட சற்று எட்டிப் பார்த்து உதட்டைத் துழாவி நனைத்தது.

     முன்னவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.

     உடல் வலு மிக்கவன் நொடிந்து இற்றுப்போய் கூவி அழைக்கும் ஓலம் அது. முன்னவன் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். முன் நோக்கி குனிந்துகொண்டு தள்ளாடி சரிவின் மேலேறி தூரத்தில் வானத்தைக் கோடிட்டுக் காட்டும் மலைச் சரிவை நோக்கினான். தூரத்து மேட்டில் தாண்டி அந்தப்புறமாக இறங்கி மறைந்துவிட்டான்; - முன்னவன் போயே போய்விட்டான். இனி என்ன, தன்னையும் தனிமையையும் சூழ்ந்த உலகைச் சுற்றி நோக்கினான். தூரத்திலே சூரியன் மங்கலாகத் தெரிந்தது. மஞ்சும் பனியும் அதே மறைத்துத் திரையிட்டு, அது இருந்த இடத்தை வெள்ளை வெளிச்சத்தால் காட்டியது. ஒற்றைக் காலில் பலத்தை ஊன்றி நின்றுகொண்டு கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி நாலு. மாசம் ஜூலையோ ஆகஸ்டோ என அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. தேதி விட்டுப் போய்விட்டது. சூரியன் உத்தேசமாக வடமேற்கைத்தான் காட்டுகிறது என்பது அவனுக்குத் தெரியும். அவன் தென்திசை நோக்கினான். தென்படும் குளிர் மலைகளைத் தாண்டி எங்கோ தூரத்தில் கிரேட் பேர் ஏரி இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். அந்தத் திசையில்தான் ஆர்க்டிக் வட்டம் கனடா பனிப் பாலைவனத்தை ஊடுருவுகிறது என்பது அவனுக்குத் தெரியும். இவன் நிற்கும் சிற்றாறு தாமிரச் சுரங்க நதிக்கு ஒரு உபநதி, தாமிரச் சுரங்க நதி வடதிசை நோக்கி ஓடி காரனேஷன் வளைகுடாவில் சங்கமமாகிறது. அவன் அங்கு சென்றதில்லை. ஆனால் ஹட்ஸன் பே கம்பெனியின் பூமிப் படத்தில் அதைப் பார்த்ததுண்டு.

     மறுபடியும் தன்னைச் சூழ நோக்கினான். நெஞ்சில் நம்பிக்கை வளர்க்கும் காட்சியல்ல அது. சுற்றிலும் அஷ்ட திசையிலும் வானவளையம் அவனைச் சிறையிட்டது. மலைகள் உயரமற்றவை. மரமோ, செடியோ, புல்லோ எதுவும் கிடையாது. எங்கு பார்த்தாலும் அத்துவானமாகக் கிடந்தது. பயம் கண்ணுக்குள் உதயமாயிற்று.

     முன்னவனைப் பெயரிட்டழைத்து மெல்லிய குரலில் இரண்டொரு தடவை கூப்பிட்டான்.

     சுக்காம் பாறைத் தண்ணீரில் வெடவெட என்று நடுங்கினான். எல்லையற்ற பெரு வெளியும் தனிமையும் அவனை மூச்சுத் திணற அமுக்குவது போலிருந்தது. நிர்த்தாட்சண்யமாக மனசில் சற்றும் கசிவு இல்லாமல் அவை அப்படியே அமுக்கிக் கொன்றுவிடும் போன்றிருந்தது. காக்கை வலிப்புப்போல அவனது கைகள் வெடவெடவென்று நடுங்கின. பிடித்திருந்த துப்பாக்கி தண்ணீருக்குள், 'சளப்' பென்ற சப்தத்துடன் விழுந்தது. இந்தச் சத்தம் மீண்டும் அவனுக்கு சுதாரிப்பு கொடுத்தது. பயத்தோடு போராடினான். நீரில் துழாவி, துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். முதுகுச் சுமையைச் சற்று மேலே இழுத்துக் கொண்டான்; புரண்டு போன கணுக்காலில் பளுவைக் குறைக்க முயன்றான். மெதுவாக, ஜாக்கிரதையாக, வலி ரம்பம் போட்டு அறுக்க கரைக்கு வந்தான்.

     அங்கு அவன் நிற்கவில்லை. வலியையும் மதியாது வெறி பிடித்த வேகத்துடன் தன் சகா மறைந்து போன மேட்டின் மேல் ஏறினான். முன்னவனைவிட நெளிந்து நெளிந்து தள்ளாடி நடக்கவேண்டியிருந்தது. மேட்டில் நின்று பார்த்தான். எதிரே பள்ளத்தாக்கு; உயிர்ச் சலனமற்ற பள்ளத்தாக்கு. பள்ளத்திலே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அதனடியில் பஞ்சு போல பாசி படிந்து கிடந்தது. அவன் காலை ஊன்றி நடக்கும் போது, 'ஈச்' 'ஈச்' என்று உறிஞ்சி காலைக் கவ்வியது. பாசிப் படர்மேல் முன்னவன் காலடித் தடத்தைத் தொடர்ந்தான். பாசிக்கிடையே பாறைக் குவியல்கள் தீவுக்கூட்டங்கள் போலத் தலைதூக்கி நின்றன.

     அவன் தனித்துப் போனான் என்றாலும் திசை தப்பிவிடவில்லை. இப்படியே நடந்து சென்றால் குறுகிக் குட்டையாக வளர்ந்துள்ள ஸ்புரூஸ், பர் மரங்கள் நிறைந்த பிராந்தியத்துக்குப் போகலாம் என்பது அவனுக்குத் தெரியும். அங்கே ஒரு ஏரி உண்டு; ஏரிக்கு ஒரு சுற்றாறு உண்டு. அங்கே தண்ணீர், பால்போல சுக்காம் பாறைத் தண்ணீராக இராது. ஆற்றுப்படுகையிலே கோரை வளர்ந்திருக்கும். அது அவனுக்கு நினைவிருந்தது. அங்கே உத்தரத்துக்கேற்ற பெரிய மரமில்லை. அந்த நதியை ஒட்டியே சென்றால் அதுவும் குறுகிக் குறுகி, நீர்க்கோலமாகச் சிறுத்துவிடும். அங்கே அதைக் கடந்து மற்றொரு சிற்றாறு. அது மேற்கு நோக்கி ஓடுகிறது. அது கடைசியில் டியூஸ் நதியில் கலக்கிறது. அங்கே, கவிழ்த்துப்போட்ட படகு குடிசையாக இருக்கிறது. அதிலே தோட்டா இருக்கிறது. மீன் பிடிக்கத் தூண்டில் உண்டு. சின்ன வலை உண்டு; உணவைப் பிடித்துத் தின்ன வகையுண்டு. அதுமட்டுமா; மாவு இருக்கிறது. பன்றிக்கறி இருக்கிறது. பயறு வகையும் கொஞ்சம் உண்டு.

     முன்னே நடந்து விட்டவனும் அங்கே அவனுடைய வருகைக்காகக் காத்திருப்பான்; பிறகு இரண்டு பேருமாக டியூஸ் நதியில் படகேறித் தண்டு வலித்து கிரேட்பேர் ஏரிக்குச் சென்று, அங்கிருந்து ஏரியில் குறுக்கே தெற்கு நோக்கி மக்கன்ஸி வரை செல்ல முடியும். வட திசையிலிருந்து விரட்டி வரும் உறைபனிக்காலத்தை முந்திக்கொள்ள இவர்கள் மேலும் மேலும் தென் திசை நோக்கி ஓடினாலும், ஜலத்தில் உறைபனிக் கட்டிகள் மிதந்து சுழித்து ஓடத்தான் செய்யும். இப்படியாக இவர்கள் தெற்கு நோக்கி படகில் சென்றுகொண்டே இருந்தால் வானளாவிய விருட்சங்கள் அடர்ந்த பகுதியில் ஹட்ஸன் பே கம்பெனிக் கிடங்கு ஏதாவது ஒன்றுக்குச் செல்லுவது நிச்சயம். அங்கே போனால் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை.

     பின்னவன் முக்கி முனகி நடந்து கொண்டிருக்குபோது அவன் மனதில் ஊசலாடிய எண்ணங்கள் இவைதான். முன்னேறி நடக்க தன்னை அவன் நிர்ப்பந்தப்படுத்தி ஈடுபடுத்தினான்; அதே மாதிரி; முன்னே சென்றவன் தன்னை இடைவழியில் விட்டுவிட்டு ஓடிப் போய்விடவில்லை என்றும், குடிசையில் தனக்காகக் காத்திருப்பான் எனவும் நம்பும்படி மனசைப் பலவந்தப்படுத்தினான். இம்மாதிரி நினைக்கும் நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. இல்லாவிட்டால் நடப்பதற்கு முயற்சி செய்வதில் பலனே கிடையாது. வழியிலே கிடந்து செத்து மடிந்திருக்க வேண்டியதுதான். மங்கி மங்கித் தெரியும் சூரிய வட்டமும் வடமேற்கில் மூழ்கி மறைந்தது. இதற்கு முன் இதே மாதிரி பலதடவை தொடர்ந்து எட்டிப்பிடிக்க ஓடிவரும் பருவத்தைத் தப்பி ஓடுவதற்கு தன் சகாவுடன் ஓடியதை எல்லாம் ஒவ்வொரு அடிவைக்கும் போதும் நினைத்தான். மறுபடியும் குடிசையில் இருக்கிற உணவு, ஹட்ஸன் பே கம்பெனி கிடங்கில் உள்ள உணவு அத்தனையையும் நினைத்தான். அவன் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. வெகுநாளாகவே எதுவும் சாப்பிடவே வேண்டியிருக்கவில்லை. வழியிலே காய்ந்துக் கிடந்த காட்டுக் காய்களைப் பறித்து வாயில் போட்டான். காட்டுக்காயில் பொட்டுத் தண்ணீரும், கசக்கும் வித்தும்தான் உண்டு. கடித்துச் சுவைத்தான். இந்தக் காயைத் தின்றால் பசி ஆறாது என்பது தெரியும். ஆனால் அனுபவத்தையும் அறிவையும் மீறியதொரு நம்பிக்கை அவனைத் தின்ன வைத்தது.

     இரவு ஒன்பது மணி இருக்கும். குத்துக்கல்லில் கட்டை விரல் மோத, சோர்வும் பலவீனமும் அவனை மேற்கொண்டது. அவன் விழுந்தான். இப்படியும் அப்படியும் அசையாமல் கிடந்தான். முதுகுச் சுமைக் கயிற்றைத் தளர்த்தித் தழுவவிட்டு உட்கார்ந்தான். வடதிசைப் பிராந்தியமாகையால் இன்னும் நன்றாக இருட்டவில்லை. பாறையில் தடவித் தடவி காய்ந்துலர்ந்த பாசியைச் சேகரித்தான். அதைக் குவித்து வைத்து நெருப்பு மூட்டினான். நெருப்பு நின்று எரியவில்லை, புகைந்து குமைந்தது. தகரப் போணியில் தண்ணீர் சுட வைத்தான்.

     மூட்டையை அவிழ்த்தவுடன் முதல் வேலையாகக் கையிலிருந்த தீக்குச்சிகளை எண்ணினான். மொத்தம் அறுபத்தி ஏழு தீக்குச்சிகள் இருந்தன. நிச்சயப்படுத்திக் கொள்ள மூன்று தடவை திருப்பித் திருப்பி எண்ணினான். அவற்றைச் சில கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும், ஈரம் கசியாத வெண்ணைக் கடுதாசியில் சுருட்டி ஒன்றை சுங்கான் புகையிலைப் பையிலும், மற்றொன்றை தொப்பியின் சுற்றுப்பட்டியிலும் இன்னொன்றை உள் சட்டைக்குள் மாரிலும் சொருகிக் கொண்டான். திடீரென்று பயம் உந்தித் தள்ள மறுபடியும் எல்லாவற்றையும் எடுத்து நன்றாக எண்ணிப் பார்த்தான். அறுபத்தியேழுதான் அப்போதும் இருந்தது.

     ஜோடுகளை நெருப்பருகில் வைத்துக் காய வைத்தான். காலைச் சுற்றுவதற்கிருந்த மொக்காஸின் தோல் தொப்பலாக நனைந்து திரிதிரியாகக் கிழிந்து போயிருந்தது. கம்பளி மேஜோடு ஓட்டை விழுந்துவிட்டது. பாதம் புண்ணாகி ரத்தம் கசிந்தது. கணுக்காலில் வலி தெறித்தது. சற்றுத் தடவிப் பார்த்தான். முழங்கால் பருமனுக்கு வீங்கிவிட்டது. கம்பளிப் போர்வையில் ஒரு துண்டை எடுத்துக் கிழித்து கணுவை இறுக வரிந்து கட்டினான். பாதத்தைக் குளிரிலிருந்து பாதுகாக்க இன்னும் இரண்டு துண்டுகளைக் கிழித்து பாதங்களையும் கட்டிக் கொண்டான். பிறகு வென்னீரைக் குடித்தான். போர்வைக்கடியில் சுருண்டான். பிரேதம் மாதிரி தூங்கிக் கிடந்தான். சூரியன் வடகிழக்கில் உதயமாயிற்று. மேகம் சூரியனை மறைத்தது.

     காலை ஆறு மணிக்கு விழித்தான். மல்லாந்தபடி படுத்துக் கிடந்தான். சாம்பல் பூத்த வானத்தைப் பார்த்தே கிடந்தான். வயிறு பசிக்கிறது என்பது தெரியும். ஒருக்களித்துச் சரிந்து படுக்கும்போது, ஒரு முக்காரச் சத்தம் கேட்டது. ஒரு காட்டுமான் இவனையே பார்த்துக்கொண்டு நின்றது. மிருகம் ஐம்பது அடி தூரத்தில்தான் நின்றது. மனிதனுக்கு உடனே காட்டு மான் கறி நெருப்பில் தளதளவென்று பொறிவதுதான் மனக்கண்ணில் தெரிந்தது. பக்கத்திலிருந்த துப்பாக்கியை எடுத்து, தெய்வத்தைக் கும்பிட்டு, குதிரையை இழுத்தான். மிருகம் துப்பாக்கியைக் கண்டதும் குதிபோட்டுக் கொண்டு ஓடிப்போயிற்று.

     வாயிலே வந்தபடி திட்டிக்கொண்டு துப்பாக்கியை எறிந்தான். எழுந்து நிற்பதற்கு வலி பொறுக்க மாட்டாமல் அலறினான். நடப்பது பகீரத பிரயத்தனமாகி விட்டது. கால்களை இழுத்து இழுத்துப்போட்டு மெதுவாக நடந்தான். துருப்பிடித்துப் போனதுமாதிரி கால்கள் மடங்க மறுத்தன. மனசை இழுத்துப் பிடித்து பலவந்தமாக வலியைப் பொருட்படுத்தாமல் காலை மடக்கி நீட்ட வேண்டி இருந்தது. கடைசியாக எழுந்து நின்றான். இம்முயற்சியில் இவனது தெம்பு முழுவதும் இற்று விட்டது.

     சற்று மேடான இடத்தில் சென்று சுற்றுமுற்றும் பார்த்தான். நாலா திசையிலும் மரமோ குத்துச் செடியோ பெயர் சொல்லக்கூடக் கிடையாது. பாசியும் பாறையும், குட்டையும் சிற்றோடையுந்தானே தென்பட்டது. வானம் சாம்பல் பூத்திருந்தது. தரையும் தண்ணீரும் சாம்பல் பூத்துக் கிடந்தது. வானத்தில் சூரியனோ, சூரியன் இருப்பதாக அறிகுறியோ தென்படவில்லை. வடக்கு எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. நேற்றிரவு இந்த இடத்துக்கு வந்த தடம் மறந்து போயிற்று. ஆனால் வழிதப்பி விடவில்லை. அவனுக்கு அது தெரியும். நிச்சயமாக, சீக்கிரத்தில் குத்துச் செடிகள் செழித்து வளரும் பிரதேசத்துக்குப் போவான். அது இடது பக்கமாக, எங்கோ, வெகு அருகிலேயே, ஒரு வேளை அதோ தெரியும் அந்த மலையைத் தாண்டியதும் இருப்பதாக அவன் நினைத்தான். திரும்பிப் போய் மூட்டையைக் கட்டினான். மூன்று பொட்டணங்கலாக மடித்து வைத்த தீக்குச்சிகள் வைத்த இடத்திலேயே இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொண்டான். ஆனால், அவன் அதை மறுபடியும் எண்ண உட்காரவில்லை. ஆனால் சற்றுத் தயங்கினான். எதிரில் ஒரு மூட்டை, தோற்பை மூட்டையைப் பார்த்துத் தயங்கினான். அதை வெடுக்கென்று எடுத்தான். வெறிச்சோடிக் கிடந்த பனி வனாந்தரம் அதையும் அவனிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முயன்றது போலப் பட்டது. அதன் எடை பதினைந்து பவுண்டுகள். மறுபடியும் அவன் பகலுக்குள் தள்ளாடி நுழையும்போது, அதுவும் அவன் மூட்டைக்குள் நுழைந்தது.

     இடது பக்கமாக நடந்தான். காட்டுக் காய்களைப் பறித்துத் தின்னுவதற்காக மட்டும் இடையிடையே நின்றான். கணுக்கால் மடங்க மறுத்தது. நொண்டுதல் ஜாஸ்தியாயிற்று. ஆனால் வயிற்றில் உண்டான வலியைவிட இந்த வலி பெரிதாகத் தென்படவில்லை. பசி குடலைப் பின்னி முறுக்கியது; பிய்த்துப் பிய்த்துத் தின்றது. குத்துச்செடி முளைத்துக் கிடக்கும் பிரதேசத்தை அடைவதற்கு தடம்பிடித்துச் செல்லுவதற்கு வேண்டிய சிரத்தையைக்கூடக் குலைத்தது அந்தப் பசி. காட்டுக் காய் பசியை ஆற்றவில்லை. நாக்கையும் அண்ணாக்கையும் நமைச்சலால் துன்புறுத்தியது.

     கடைசியாக ஒரு பள்ளத்தாக்கில் வந்திறங்கினான். பாறையில் முட்டையிட்டு வாழும் காட்டுப் பட்சி, கிர் கிர் என்ற கூச்சலிட்டு சிறகையும் படபடவென்றடித்துப் பறந்தது. கல்லெடுத்து வீசினான். கல் அதன்மீது விழவில்லை. மூட்டையைக் கீழே இறக்கிவிட்டு, பூனை குருவியை பிடிக்கப் பதி வைப்பதுபோல் அவற்றைத் தொடர்ந்தான். கூர்மையான பாறையின் முனை கால்சட்டையைக் கிழித்து, முழங்காலையும் தேய்த்து வழி நெடுக ரத்தம் கசிவுகொண்டு தடக்கோலமிட்டது. பசியின் வலியிலே இந்த வலி அஸ்தமித்தது. பாசியிலே புழுப்போல நெளிந்து ஊர்ந்தான். சட்டை தொப்பலாயிற்று. உடம்பும் நனைந்தது. அது அவனுக்குப் படவில்லை. பசியின் வேகம் ஜன்னிமாதிரி இருந்தது. எப்போதோ பட்சிகள் சிறகெடுத்துப் பறந்துவிட்டன. அவற்றின் கிர் - கிர் என்ற சப்தம் அவனைக் கேலி செய்வது போல இருந்தது. அவற்றைக் கற்பித்தான். அவற்றின் குரல் காட்டி அவற்றைக் கேலி செய்தான்.

     ஒன்று தூங்கிக் கொண்டிருக்கையில் அதனிடம் நெருங்கி விட்டான் போலும். பாறைக் குடுவையிலிருந்து அவன் முகத்தில் மோதிக்கொண்டு பறந்தது. சடக்கென்று எட்டிப் பிடித்தான். பட்சியைப்போல அவனுக்கும் அது எதிர்பாராத நிகழ்ச்சி. கையில் அகப்பட்டது மூன்று இறகுகள். அது பறந்து செல்லுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அதனிடம் அவனுக்கு வந்த கோபம் சொல்லி மாளாது. அது ஏதோ மன்னிக்க முடியாத ஒரு தப்பிதத்தைச் செய்துவிட்டது போலிருந்தது அவனுக்கு.

     நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினால், சோர்ந்து விழுந்து விடுவது நிச்சயம் என்று நினைத்தான். ஒரு கருநரி, வாயில் காட்டுப் பட்சியொன்றைக் கவ்விக்கொண்டு அவனருகே ஓடிவந்தது. அவன் இரைந்து கூச்சலிட்டான். சத்தம் பயங்கரமாக இருந்தது. நரி பதறிப்போய் ஓட்டமெடுத்தது. பட்சியைப் போடவில்லை.

     பிற்பகலில், சுக்காம்பாறைத் தண்ணீர் பிரவாகமாக ஓடும் சிற்றோடையைத் தொடர்ந்து சென்றான். அது கோரைப் புல் ஊடே ஓடியது. கோரையைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டு பிடுங்கினான். கோரைத் தண்டினடியில் வெங்காயம் மாதிரி குருத்து இருந்தது. அது மெதுவாக இருந்தது. நெர நெரவென்று அவற்றை மென்று தின்றான். உணவு கிடைத்துவிட்டது போலிருந்தது. ஆனால் நார்மென்று விழுங்க முடியாமல் திப்பி திப்பியாக இருந்தது. தண்ணீரும் நாரும் கலந்த ஒரு தாவரச் சேர்க்கை, பசியாற்ற லாயக்கற்றது. மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, ஆடுமாடு மாதிரி கோரைக் கிழங்குகளைப் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தான்.

     உடம்பில் ரொம்பவும் அசதி தட்டியது. அடிக்கடி படுத்துத் தூங்க வேண்டும்போலிருந்தது. ஆனால் கால் ஓயாமல் நடந்து சென்றான். பசி அவனை ஊந்தித் தள்ளிச் சென்றது. தண்ணீர் குட்டைகளில் தவளைகள் இருக்குமா எனவும், மண்ணுக்குள் நிலப்புழுவாவது இருக்குமா எனவும், இவ்வளவு வடக்கில் தவளையோ நிலப்புழுவோ இருக்காது என்பதை அறிந்தவன் தான், இருந்தாலும் நோண்டிப் பார்த்தான்.

     குளம் குட்டைகளில் எல்லாம் குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே சென்றான். பொழுது மயங்கும் சமயத்தில் ஒரு நீர்த் தேக்கத்தில் சின்ன மீன் இருப்பது அவன் கண்ணுக்குத் தெரிந்தது. தோள்வரை கையைத் தண்ணீரில் இட்டு பிடிக்க முயன்றான். அது அகப்படவில்லை. இரண்டு கைகளையும் போட்டுப் பிடிக்கப் பார்த்தான். அதிலும் தப்பிவிட்டது. சகதியைக் குழப்பி விட்டான். அவசரத்தில் உள்ளே விழுந்துவிட்டான். இடுப்புவரை நனைந்தது. தண்ணீர் கலங்கிவிட மீன் தெரியவில்லை. வண்டல் மறுபடியும் படிந்து ஜலம் தெளியும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

     ஜலம் தெளிந்ததும் மறுபடியும் முயன்றான். மறுபடியும் குட்டை கலங்கியது. நேரத்தை மேலும் வீணாக்கிக் கொண்டிருக்க அவனுக்கு அவகாசம் இல்லை. தகரப் போணியை வைத்து குட்டையை இரைக்க ஆரம்பித்தான். முதலில் அவசரப்பட்டு தண்ணீரைக் கண்டபடி வீச, மறுபடியும் அது குட்டைக்குள்ளாகவே வந்து விழுந்தது. பின்பு சற்று ஜாக்கிரதையோடு வேலை செய்தான். நெஞ்சு திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டது. கைகள் நடுங்கின. அரைமணி சாவகாசத்தில் குட்டை வரண்டுவிட்டது. சொட்டுத் தண்ணீர்கூடக் கிடையாது. மீனும் இல்லை. பாறைகளுக்கு இடுக்கில் பெரிய நீர்த் தேக்கத்துடன் சேரும் ஒரு சிறு இடுக்கு இருந்தது. அந்தக் குட்டையை இரவு பகல் ஓயாமல் இறைத்தாலும் வடியாது. இடுக்கு இருப்பது முன்னமே தெரிந்திருந்தால் கல்லை வைத்து முதலில் அதை அடைத்திருப்பான். மீன் அவனுடையதாகி இருக்கும்.

     இப்படி நினைத்து நொடிந்துபோய் சகதியில் உட்கார்ந்து விட்டான். முதலில் மனசுக்குள் அழுதான். பிறகு வாய்விட்டு ஓங்கி மனவலி பொறுக்க மாட்டாமல், நாலா திசையிலும் தன்னை விலங்கிடும் அத்துவானத்தை நோக்கி அழுதான். நெடுநேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்.

     நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தான். முந்திய இராத்திரி போல பாறையில் வென்னீரைப் பருகி உடலில் வெக்கை உண்டு பண்ணிக்கொண்டு பாறை மீது போர்வையை மூடிப் படுத்தான். படுக்குமுன் கடைசியாக, கெடிகாரத்துக்குச் சாவி கொடுத்துவிட்டு, நெருப்புக்குச்சி நனையாமல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான். கம்பளிப் போர்வை ஈரம் பட்டு நசுநசுவென்றிருந்தது. கணுக்காலில் வலி தெறித்தது. நாடி அடிப்பதுபோல அடித்தது. பசி ஒன்றைத்தான் அவன் அறிந்தான். தூக்கத்திலே கலங்கிய நினைப்பிலே கண்ட சொப்பனத்தில் எல்லாம் சாப்பாடும் விருந்துமே தென்பட்டன.

     விரைத்துப் போய் விழித்துக்கொண்டான். உடம்பெல்லாம் நொந்தது. மண்ணும் விண்ணும் சாம்பல் பூத்து இன்னும் இருண்டு கிடந்தது. வாள்போல் வாடைக்காற்று வெட்டியது. உறைபனிப்பஞ்சு மலையுச்சியில் வெள்ளைவிட ஆரம்பித்துவிட்டது. சுற்றிலும் காற்று கனத்தது. வெண்மையாயிற்று. அவனைச் சூழ மஞ்சு மூடியது. சிரமப்பட்டு நெருப்பேற்றி வென்னீர் காயவைத்தான். மழையும் பனிப் பஞ்சுமாகப் பெய்ய ஆரம்பித்தது. உறைபனிச் சிதர்கள் அகலமாக நொது நொதுவென்றிருந்தன. முதலில் அவை தரையில் பட்டதும் உருகியோடின. ஆனால் மேலும் மேலும் விழுந்து தரையை நனைத்து நெருப்பை அணைத்து பாசி விறகையும் ஈரமாக்கியது.

     மூட்டையைக் கட்டிக்கொண்டு முன்னேறு என உத்தரவு கொடுப்பதுபோலிருந்தது பருவம். எங்கு போவது. குத்துச் செடி முளைத்த பிரதேசமோ, முன்னே சென்ற சகாவோ, டியூஸ் நதி அருகே கவிழ்த்துப் போட்ட படகுக் குடிசையோ ஒன்றும் அவன் மனசில் ஊன்றி நிலைக்கவில்லை. 'உண்ணு' என்ற வினைச்சொல் அவனை ஆட்டி வைத்தது. உறைபனி வழியாகக் காட்டுக் காய்களையும் கோரைக் கிழங்குகளையும் நாடி பசி வெறி பிடித்து அலைந்தான். அது சப்பென்றிருந்தது; பசியை ஆற்றவில்லை. புளித்துக் கிடந்த காட்டுத் தழையைத் தின்றான். அதுவும் நிறைய வளரவில்லை. தரையோடு தரையாகப் படர்ந்து கிடந்தது. உறைபனி விழுந்து அதை மூடி மறைத்தது.

     அன்று அவன் நெருப்பு மூட்டவில்லை; வென்னீர் போட்டுப் பருகவில்லை. போர்வையை இழுத்து மூடிக்கொண்டு பசி கொல்ல தூக்கத்தில் விழுந்தான். பனி மாறி மழை பெய்ய ஆரம்பித்தது. பல தடவை, இடையிடையே, பிரக்ஞை வர மலர்ந்து கிடந்த முகம் நனைவதை உணர்ந்தான். பகல் வந்தது. பழைய மேகம் மொய்த்த பகல்தான். சூரியனில்லை. மழையும் ஓய்ந்தது. பசியின் வேகம் மடிந்துவிட்டது. உணவின் மீதிருந்த பற்றுதலும் மாறியது. வயிற்றிலே கனத்துக்கிடந்த வேதனை மட்டுமே இருந்தது. ஆனால் அறிவு மழுங்கவில்லை. மறுபடியும் குத்துச்செடி முளைத்துக்கிடக்கும் நிலமும் டியூஸ் நதிப் படகுக் குடிசையும் நினைவுக்கு வந்தது.

     மிஞ்சிக் கிடந்த மற்றொரு போர்வைத் துண்டை நீளமாகக் கிழித்து ரத்தம் கசியும் கால்களைக் கட்டினான். மறுபடியும் மொழி பெயர்ந்த கணுக்காலை இழுத்துக் கட்டி நடப்பதற்கு ஆயத்தம் செய்தான். மறுபடியும் மூட்டை கட்ட முனையும்பொழுது தோல் பொதியை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். கடைசியாக மூடைக்குள் வைத்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டான்.

     உறை பனி, மழையின் வேகத்தால் உருகிவிட்டது. மலையுச்சி மட்டுமே வெள்ளை பூத்திருந்தது. சூரியன் வெளியில் வந்தது. அதை வைத்து லெக்கு நிர்ணயம் செய்துகொண்டான். இப்பொழுது அவனிருக்குமிடத்திலிருந்து தடம் பிடித்துப் போவது கஷ்டம் என்பதை உணர்ந்தான். முந்திய தினங்களில் இடது பக்கமாக வெகு தொலைவில் வந்து விட்டான் போலும். சரியான தடத்துக்கு வருவதற்காக வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தான்.

     பசி தன்னைப் பிடுங்கித் தின்னவில்லை என்றாலும் தனக்குத் தெம்பு போய்விடாது என்பதை உணர்ந்தான். அடிக்கடி நின்று நின்று போகவேண்டியிருந்தது. காட்டுக் காய்களையும் கோரைக் கிழங்குகளையும் பிடுங்கித் தின்றதால் நாக்கு வரண்டு பெருத்து சிலிர்த்துக் கொண்டு வலித்தது. நாக்கில் மயிர் முளைத்த மாதிரி ஒரு பாவனை. அது கசந்தது. நெஞ்சு ரொம்பவும் தொந்திரவு கொடுத்தது. சில நிமிஷங்கள் நடந்தால் நெஞ்சுக்குள் ஏதோ குதிபோட்டது. மூச்சுத் திணறியது. தலை கிறங்கியது.

     அன்று மத்தியானம் ஒரு பெரிய குளத்தில் இரண்டு சின்ன மீன்களைக் கண்டான். குளத்தை இறைக்க முடியாது. பதறாமல் அவற்றைத் தகரப் போணியில் பிடித்தான். அவை இரண்டும் சிறு விரல் பருமன் கூட இல்லை. மேலும் அவனுக்கு அவ்வளவாகப் பசியும் இல்லை. வயிற்றிலிருந்த வேதனைகூட படிப்படியாக மடிந்து வந்தது. அவற்றைப் பச்சையாகத் தின்றான். மெதுவாக, ஜாக்கிரதையாக மென்று தின்றான். பசி வேட்கையில் பிறந்த செயல் அல்ல அது. அறிவு தூண்ட அவன் தின்றான். தின்னும் ஆசை கிடையாது. பிழைத்துக் கிடக்க தின்பது அவசியம் என்று தின்றான்.

     மாலையில் மூன்று மீன் குஞ்சுகளைப் பிடித்தான். இரண்டைத் தின்றுவிட்டு ஒன்றை மறுநாள் காலைக்கு என்று சேமித்து வைத்தான். சூரியன் மீண்டும் பாசியை உலர்த்தி விட நெருப்பு மூட்டி வென்னீர் பருகி உடம்பைச் சூடாக்கிக் கொள்ள முடிந்தது. அன்று பத்து மைலுக்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. இதன் பிறகு மறுநாள் நெஞ்சில் வலி இல்லாதபோதெல்லாம் தினத்துக்கு ஐந்து மைல் நடந்தான். வயிற்றில் அவனுக்கு வேதனையே கிடையாது. அது துயில்கொள்ள ஆரம்பித்துவிட்டது. புதியதொரு பிரதேசத்தில் அவன் நடந்து கொண்டிருக்கிறான். காட்டு மான் கூட்டமும் ஓநாய் ஊளையும் ஜாஸ்தி. மூன்று ஓநாய்கள் அவன் கண்ணெதிரில் பதுங்கிச் சென்றன.

     மீண்டும் ஓரிரவு. மறுநாள் காலையில் சற்று புத்தித் தெளிவு இருந்தது. தோல் பொதியைத் தூக்கி அவிழ்த்தான். தரையில் கொட்டினான். தங்கப் பொடியும் கட்டிகளும் வந்து விழுந்தன. அதை இரண்டு கூறாகப் பிரித்து, ஒன்றைக் கம்பளித்துண்டில் கட்டி பாறையிடுக்கில் வைத்தான். மற்றதைப் பையில் போட்டுக் கட்டிக் கொண்டான். மிஞ்சியிருந்த மற்றொரு கம்பளிப் போர்வையையும் காலைக் கட்டுவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் துப்பாக்கியை விட்டெறிந்து விடவில்லை. டியூஸ் நதிப் படகுக் குடிசையில் தோட்டாக்கள் உண்டு.

     இன்று மஞ்சு மூடி இருந்தது. பசியும் அவனைத் தட்டியெழுப்பியது ரொம்பவும் வலுவிழந்து விட்டான். அடிக்கடி தலை கிறக்கம் வந்தது. கண்ணும் பஞ்சடைந்தது. தடுமாறித் தடுமாறி விழுவது இயல்பாகி விட்டது. ஒரு தடவை காட்டுப்பட்சியின் கூட்டிலேயே விழுந்தான். முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகள் நான்கு, பிறந்து ஒரு நாள் கூடக் கழியவில்லை ஜீவத்துடிப்போடிருந்தன. நாலும் சேர்ந்தாலும் ஒரு வாய்க்குத்தான் வரும். அவற்றை ஒவ்வொன்றாக உயிருடன் தன் வாய்க்குள் திணித்து முட்டையின் ஓட்டை நொறுக்குவது போல் நெறநெறவென்று மென்று தின்றான். தாய்க்குருவி அவனைச் சூழவந்து கூக்குரலிட்டு வட்டமிட்டது. அதையும் அடிக்க துப்பாக்கி மட்டையை ஓங்கினான். அடிபடாமல் தப்பியது. கல்லை வாரி வீசினான். அதன் சிறகு ஒடிந்தது. ஆனால் ஒடிபட்ட சிறகைப் பாட்டில் போட்டுத் தத்தித் தத்திப் பறந்தது. அவனும் அதைத் தொடர்ந்தான்.

     குருவிக் குஞ்சுகள் பசியை எழுப்பின. நொண்டி நொண்டிப் பின் தொடர்ந்தான். கல்லை விட்டெறிந்தான். சமயத்தில் 'ஊங்' 'ஆங்' என்று கூச்சலும் போட்டான். பிறகு ஜாக்கிரதையாக நொண்டினான், தடுமாறி விழுந்தான்; தத்திப்பற்றி எழுந்தான். பஞ்சடைய ஆரம்பித்ததால் உள்ளங்கை கொண்டு கண்களை உறுத்தித் தேய்த்தான்.

     இந்த வேட்டை இவனைப் பள்ளத்தாக்கின் அடிமட்டத்துக்கு இழுத்துச் சென்றது. அங்கு ஊளைச்சேறு. அதில் காலடித் தடம் தெரிந்தது. தன்னுடையதல்ல என்பது நிச்சயம். முதலில் பெடைக் குருவியைப் பிடித்துவிட்டு, பிறகு வந்து முன்னே சென்றவனுடையதா என்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தான்.

     தாய்க் குருவியும் சோர்ந்து விட்டது, தானும் சோர்ந்து விட்டான். அது ஒருச்சாய்த்துக் கிடந்தது. அதற்குப் பன்னிரெண்டடி தூரத்தில் அவன் சோர்ந்து கிடந்தான். அவன் ஊர்ந்தால் அது ஊர்ந்தது. மீண்டும் தொடர்ந்தான். ஆனால் இரவு வழி மறித்தது. அது தப்பியது. சோர்ந்து போய்க் குப்புற விழுந்தான்; விழுந்த வாக்கில் முகத்தில் காயம்பட்டது. முதுகில் அப்படியே மூட்டை இருந்தது. வெகுநேரம் அப்படியே கிடந்தான். பிறகு ஒருக்களித்துச் சாய்ந்து கெடிகாரத்தை எடுத்துச் சாவி கொடுத்தான். விடியுமட்டும் அப்படியே கிடந்தான்.

     மறுநாளும் மஞ்சு மூடிக் கிடந்தது. போர்வையில் பாதியை கால்கட்டுக்காகக் கிழித்துத் தீர்த்தாகி விட்டது. முன்னவன் சென்ற தடம் தெரிந்து கொள்ள முடியவில்லை. முன்னவனும் வழி தவறிவிட்டானோ என்ற சந்தேகம். முதுகில் மூட்டை உறுத்த ஆரம்பித்தது. மறுபடியும் தங்கத்தில் பாதியை தரையில் கொட்டினான். மத்தியானம் மீதியிருந்ததையும் வீசிவிட்டான். கையிலே தகரப் போணியும் பாதிப் போர்வையும் துப்பாக்கியுந்தான் மிச்சம்.

     வீண் பிரமைகள் மனசைக் குமைக்க ஆரம்பித்தன. ஒரு தோட்டா கையில் நிச்சயமாகத் தெரிந்தது. துப்பாக்கியில் சொருகி இருக்கிறது. அது மறந்துபோய் விட்டதாம். உண்மையில் துப்பாக்கியில் தோட்டா இல்லை. உள் மனசுக்கு அது காலி என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இந்த வீண் நினைப்பு விடாப்பிடியாகப் பற்றியது இதைப் போக்கிக் கொள்வதற்காக, துப்பாக்கியைத் திறந்து பார்த்தான். தெரிந்திருந்தும் அது காலியாகக் கிடந்தது அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

     அரை மணி நேரம் நடந்தான். மறுபடியும் இந்த பிரமை கவ்வியது. அதை எதிர்த்துப் போராடினான். ஆனால் மனசைக் கவ்வியது. அதைக் கொல்லுவதற்கு துப்பாக்கியைத் திறந்து காட்ட வேண்டி இருந்தது. சில சமயம் மனம் இதையும் தாண்டி உலாவியது. அவன் வெறும் யந்திரம் போல் நடந்தான். விபரீத நினைப்புகளும் வக்கரித்த எண்ணங்களும் பிரமைகளும் மூளையைத் தின்னும் புழுக்கள்போல் மொய்த்தன. நிஜத்தைவிட்டு அகன்று அவன் செய்த யாத்திரை கொஞ்ச நேரந்தான். பசியென்ற பாசக்கயிறு அவனை மறுபடியும் இழுத்து வந்தது. மனக் குரளியின் ஓட்ட சாட்டத்தில் திடுதிப்பென்று அதிரடித்து நின்றான். எதிரில் நின்றது, அவனைத் தள்ளாட வைத்தது. அவன் எதிரே ஒரு குதிரை பஞ்சடைந்திருந்தது. அதிலே நட்சத்திரம் தெறித்தது. கண்களை முரட்டுத் தனமாகக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எதிரே நின்றது ஒரு செங்கரடி அவன்மீது பாயும் நோக்கத்துடன் பார்த்து நின்றது.

     மனிதன் துப்பாக்கியை தோளுக்கு நேராகத் தூக்கினான். பாதியில்தான் தோட்டா இல்லை என்ற நினைப்பு வந்தது. அதைக் கீழே போட்டுவிட்டு, வேட்டைக் கத்தியை உருவினான். எதிரே கறியும் உயிரும் நின்றது. கத்தியின் முனை கூராக இருக்கிறதா என்று கட்டைவிரலால் தடவிப் பார்த்துக் கொண்டான். கூராக இருந்தது. நுனியும் கூராக இருந்தது. கரடியின் பேரில் பாய்ந்து அதைக் கொல்ல வேண்டும். ஆனால் நெஞ்சில் இடது பக்கம் ஏதோ குதிபோட ஆரம்பித்தது. நெற்றியைச் சுற்றி யாரோ இரும்புக் கிடுக்கிபோட்டு அமுக்குவது போல் இருந்தது. மூளையிலே மயக்கம் படர்ந்தது.

     உள்ளிருந்து பொங்கிய பயமே அவனுக்கு நெஞ்சுத் தெம்பைக் கொடுத்தது. தொய்ந்து கிடக்கும்போது அந்த மிருகம் அவனைத் தாக்கிவிட்டால் என்னவாவது. நெட்ட நிலையாக கைகளை உயரத் தூக்கி கத்தியைக் காட்டியபடி நிமிர்ந்து நின்று கரடியையே பார்த்தான். கரடி இரண்டடி முன்னுக்கு வந்து முன்னங்காலைத் தூக்கி நின்று முக்காரம் போட்டது. மனிதன் ஓடினால் அவனைத் தொடர்வது என்பது அதன் நினைப்பு. அதற்கும் பயத்தின் தைரியம் பிறந்தது. மனிதனும் முக்காரமிட்டுப் பயங்கரமாக, பேய்த்தனமாக, கத்தினான். பயத்தின் பிளிறல் இது. உயிரின் மூலாதார வேர்களிலே பின்னிக் கிடக்கிறது அந்தப் பயம்.

     கரடி ஒரு புறமாக ஒதுங்கி உறுமியது. பயமற்று நிமிர்ந்து நிற்கும் மிருகத்தைக் கண்டு அது பயந்துவிட்டது. மனிதன் அசையவில்லை. அபாயம் அகலும்வரை கற்சிலைபோல் நின்றான். பிறகு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. பாசிபடர்ந்த மண்ணில் விழுந்தான்.

     பிறகு தெளிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். புதிய பயம் ஒன்று பற்றியது. பட்டினியால் வழியில் மடிந்து விடுவோம் என்ற பயம் அல்ல அது. உயிரிச்சை அவனை இழுத்துச் செல்லுமிடத்துக்குச் செல்லுவதற்கு, உடம்பில் உள்ள வலு அவ்வளவும் போகுமுன்பே, பட்டினி அவனை ஹதம் செய்துவிடக் கூடாதே என்பதுதான் அந்தப் பயம். ஓநாய்கள் சஞ்சரித்தன. முன்னும் பின்னும் அவை ஊளையிட்டு, வனாந்தர வெளியிலே தம் குரலில் இழைகளால் ஆபத்தைப் பின்னி வலை வீசின. அந்த வலை அவன் மீது விழுந்து அமுக்குவது போலவே பயந்தான்.

     அடிக்கடி ஓநாய்க் கூட்டம் இரண்டும் மூன்றுமாக அவனுக்குக் குறுக்கே ஓடின. ஆனால் அவனை நெருங்கவில்லை. போதுமான எண்ணிக்கையில் வரவில்லை. மேலும் அவை காட்டுமானை வேட்டையாடி ஓடின. மான்கள் எதிர்த்துப் போர் புரியவில்லை. ஆனால் இந்த அதிசய மிருகமோ நிமிர்ந்து நடந்தது; கடிக்கலாம், பிராண்டி விடவும் கூடும் என பயந்தன.

     ஓநாய்கள் கிழித்துத் தின்று போட்டுவிட்டுப் போன எலும்புக் குவியல்களைப் பிற்பகலில் அவன் நெருங்கினான். சிதைந்து கிடைக்கும் தோலும் எலும்பும் ஒரு மணி நேரத்துக்கு முன் மான்குட்டியாக இருந்தது. எலும்புகளையே பார்த்துக்கொண்டு நின்றான். துளி தசைகூட இல்லாமல் நக்கி தின்றுபோட்ட எலும்பு. சிகப்பு நிறம் பாரித்த எலும்பின் அணுக்களில் உயிர் மடியவில்லை. இன்று கழியுமுன் இவனும் இப்படி இருக்கக்கூடும். இதுதான் வாழ்வு. வீணான தோற்றத்திலே மறையும் விவகாரம். வாழ்வில்தான் வலியுண்டு. மரணத்தில் வேதனை கிடையாது. சாவது தூங்குவது. அதன் பொருள் அற்றுப் போதல், ஓய்வு என்பதுதான். பின் ஏன் சாவதில் திருப்திப் படக்கூடாது?

     வெகுநேரம் இவ்வாறு சிந்திக்கவில்லை. பாசியில் உட்கார்ந்து எலும்பைக் கடித்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். சதைப்பற்று சொப்பனம் போல அவனை வாட்டியது. எலும்பைக் கடிக்க ஆரம்பித்தான். சில சமயம் எலும்பு தெறித்தது. சில சமயம் பல் தெறித்தது. பாறையில் போட்டு கல்லை வைத்து எலும்பை நொறுக்கினான். அவசரத்தில் விரல் நைந்தது. அதிலே வலி அவ்வளவில்லாதது கண்டு ஆச்சரியப்பட்டான். எலும்பை நொறுக்கி விழுங்கினான்.

     அதன் பிறகு எத்தனையோ நாள் பனியும் மழையும் பயங்கரமாக வாட்டியது. எங்கே தங்கினான்; எப்போது எழுந்து நடந்தான் என்ற பேதமே அற்றுவிட்டது. பகலிலும் இரவிலும் நடந்தான். விழுந்தபோதெல்லாம் ஓய்வெடுத்தான். மடிந்து வரும் உயிர் சற்று நிமிர்ந்து எரியும்போது ஊர்ந்தான். பிறகு மறுபடியும் மங்கி எரிய ஆரம்பித்தது. மனிதன் என்ற நிலையில் அவன் முயலவில்லை. சாக மறுத்த உயிர்தான் அவனை உந்தித் தள்ளிச் சென்றது. அவனுக்கு வேதனை மங்கிவிட்டது. நரம்புகள் மழுங்கி மரத்துப் போயின. மனதில் மட்டும் விபரீத சொப்பனங்களும், ருசிக்கும் கனவுகளும் நிறைந்திருந்தன. நொறுக்கி வைத்த மான்குட்டி எலும்பை எப்போதும் சுவைத்துக் கொண்டிருந்தான். அவன் மலையையும் பள்ளத்தையும் கடக்கவில்லை. அகண்டதொரு பள்ளத்தாக்கில் சென்ற சிற்றோடையைத் தொடர்ந்து நடந்தான். கனவுகளைத் தவிர அவன் வேறு எதையும் பார்க்கவில்லை. உயிரும் உடம்பும் பக்கத்தில் பக்கத்தில் ஊர்ந்தோ நடந்தோ சென்றன. அருகருகில்தான் சென்ற. பந்தம் இருந்தது.

     பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியும் எங்கோ எப்போதோ அடித்தது. அது இரண்டு நாளோ, இரண்டு வாரமோ அவனறியான்.

     சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் கிடந்தான். சூரிய வெப்பம் அவனை 'நனைத்து' நொடிந்த உடலுக்கு உயிர் கொடுத்தது. 'சுகமான நாள்' என்று நினைத்தான். இன்று லெக்குத் தெரிந்துகொள்ள முடியும். ரொம்பவும் ஒருக்களித்துப் புரண்டான். அவனடியில் நதி ஒன்று ஓடியது. ஆனால் லெக்கு புரியவில்லை. நதியைத் தொடர்ந்தே, சாவதானமாக, சிரத்தை இல்லாமல் கண்களை ஓட்டினான். தூரத்திலே வானம் தொடும் எல்லையிலே இந்த நதி சமுத்திரத்தில் சங்கமமாயிற்று. அவனுக்கு இன்னும் அதிர்ச்சி. சாத்தியமில்லை, வெறும் சொப்பனம், மனக்குரளி என்று நினைத்தான். தூரத்திலே கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிந்தது. சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு மறுபடியும் திறந்து பார்த்தான். காலித் துப்பாக்கி ஏமாற்றவில்லையா. கப்பலும் கடலும் தெரிவதா அதிசயம். இன்னும் தெரியத்தான் செய்தது.

     அருகே யாரோ செருமுவது மாதிரி கேட்டது. உடம்பு மரத்துப்போய் வலுவிழந்துவிட்டதினால், மெதுவாக, ரொம்ப மெதுவாகத் திரும்பினான். அருகே எதுவும் தென்படவில்லை. பொறுமையுடன் காத்திருந்தான். மறுபடியும் கனைப்பு கேட்டது. சற்றுத் தூரத்தில் இரண்டு பாறைகளுக்கு இடுக்கில் சாம்பல் பூத்த நிறத்தில் ஒரு ஓநாயின் தலை தெரிந்தது. அது காதுகளை நெரித்துக் கொண்டு நிற்கவில்லை. கண்களில் அழுக்கு நுரைத்தது. விழிகள் ரத்தம்போலச் சிவந்திருந்தது. தலை தொங்கித் தொங்கி விழுந்தது. வெயிலைப் பார்க்க முடியாமல் அது கண்களை மூடி மூடி விழித்தது. அது நோய்ப் பட்டது போலத் தெரிந்தது. மறுபடியும் செருமியது; பிறகு இருமியது.

     இதுவாவது நிஜமாக இருக்கும் என்று நினைத்தான். பிறகு மறுபடியும் திரும்பி, சொப்பனம் திரையிட்டு மறைக்க முயன்ற உலகத்தைப் பார்க்க முயன்றான். ஆனால் தூரத்திலே கடலும் அந்தக் கப்பலும் தெரியத்தான் செய்தன. அது நிஜமேதானோ! கண்களை மூடிக்கொண்டு வெகு நேரமாக யோசனை செய்தான். அப்புறம் ஞாபகம் வந்தது. அவன் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி வந்துவிட்டான். அகன்று கிடக்கும் அந்த ஆறுதான் தாமிரச் சுரங்க நதி. எதிரே இருக்கும் கடல் ஆர்க்டிக் சமுத்திரம். கப்பல் திமிங்கில வேட்டைக் கப்பல். ரொம்பவும் கிழக்கே தள்ளி மக்கன்ஸி நதி முகத்துவாரத்திலிருந்து வந்துவிட்டது. காரனேஷன் வளை குடாவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. ரொம்ப நாட்களுக்கு முன் ஹட்ஸன் பே கம்பெனி படத்தில் பார்த்த இடமே இது. எல்லாம் தெளிவாக மனசில் தெரிந்தது.

     எழுந்து உட்கார்ந்து ஆகவேண்டிய காரியத்தைக் கவனித்தான். காதில் கட்டியிருந்த கம்பளிப் போர்வைத் துண்டுகள் தேய்ந்து நைந்துவிட்டன. காலும் நைந்து உருவற்ற சதைக் கோளமாக இருந்தது. போர்வையும் எங்கோ போய்விட்டது. கத்தியும் துப்பாக்கியும் விழுந்த இடம் தெரியவில்லை. தொப்பியும் அதில் சொருகி இருந்த தீக்குச்சிப் பொட்டணமும் போய்விட்டது. நெஞ்சருகில் சொருகி வைத்திருந்தது ஜாக்கிரதையாக இருக்கிறது. புகையிலைப் பையில் போட்டு வைத்ததும் அப்படியே. கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான்; நிற்கவில்லை, பதினொரு மணி காட்டியது. மறக்காமல் எடுத்து சாவி கொடுத்து வந்திருக்கிறான்.

     சாவதானமாக சிந்தனையைச் சிதற விடாமலிருந்தான். உடம்பு ரொம்பவும் சோர்ந்து விட்டது. ஆனால் வலி இல்லை. சாப்பாட்டு நினைப்பு கூட இப்பொழுது அவனுக்கு ருசிக்கவில்லை. கால் சட்டையை முழங்காலுக்குக் கீழ் கிழித்து காலை இறுக்கிக் கட்டினான். எப்படியோ தகரப் போணி மட்டும் தவறிப் போகாமல் கூட வந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு போவது மகா கஷ்டமான வேலை. அதற்கு முன் சற்று வென்னீர் வைத்துப் பருக விரும்பினான்.

     அவனால் அசைய முடியவில்லை. நடுக்கல் வாதம் போல உடம்பெல்லாம் நடுங்கியது. உலர்ந்த பாசியைச் சேகரிக்க முயன்றான். எழுந்து நிற்க முடியவில்லை. ஊர்ந்து சென்று முயன்றான். ஒரு தடவை நோய்ப்பட்டு நிற்கும் ஓநாய் அருகிலேயே சென்று விட்டான். அது ரொம்பவும் சங்கடத்துடன் பின்னுக்கு வாங்கியது. நாக்கு சதைக்கோளமாகத் தொங்கியது. வளைத்து நக்கக்கூட அதற்கு இயலவில்லை. நாக்கு செக்கச் செவேல் என்றில்லை. மஞ்சள்பூத்து அழுக்குப் படிந்து காய்ந்திருந்தது.

     ஒரு போணி தண்ணீரைக் குடித்ததும் உடம்புக்கு தெம்பு வந்தது. எழுந்து நிற்கவும் முடியும் என்று கண்டான். நடக்கவும் முயன்றான். நிமிஷத்துக்கு நிமிஷம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவனும் தடமாடி நடந்தான்; ஓநாயும் தடமாடி நடந்தது. இருட்டு வந்து கடலை மறைத்தது. அன்று நான்கு மைல்தான் வந்திருக்க முடியும் என்று நினைத்தான்.

     இராத்திரி முழுவதும் ஓநாயின் கனைப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. சமயா சமயத்தில் காட்டுமான் குட்டியின் சத்தமும் கேட்டது. உயிரும் கூடிய ஜந்துக்கள் திரிந்தன. நோயாளியை, நோய் பற்றிய ஓநாய், அவன் முதலில் சாகமாட்டானா என்ற நினைப்பில் தொடர்ந்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். விடியற்காலையில் விழித்ததும் அதன் முகத்தில்தான் விழித்தான். செத்துவிட மாட்டானா என்ற ஒரு ஏக்கத்துடன் அது அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. வாலை காலுக்கிடையில் சுருட்டிக் கொண்டு நின்றிருந்தது பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தது. குளிர் காற்றில் நடுங்கியது. மனிதன் ஏதோ அடித்தொண்டையில் பேசியதைக் கேட்டு பல்லை இளித்தது.

     சூரியன் தேஜோமயமாக உதயமாயிற்று. மனிதன் விழுவதும் எழுவதுமாகக் கடலில் உள்ள கப்பலை நோக்கிச் சென்றான். பருவம் சீராக இருந்தது. வடகோடியிலும் திடீர் திடீரென்று இப்படி சுகமான பருவம் வருவதுண்டு. அது ஒரு வாரம் இருக்கலாம்; அல்லது ஒரு நாளைக்குக் கூட தங்காமல் ஓடிப் போகலாம்.

     அன்று பிற்பகலில் மனிதத் தடம் ஒன்று தென்பட்டது. முன்னவனுடையதுதான். அவன் நடந்து செல்லவில்லை. ஊர்ந்து சென்றான். முன்னே சென்று விட்ட சகபாடியாக இருக்கக்கூடும் என நினைத்தான். நினைப்பில் சிரத்தை லயிக்கவில்லை. அவன் தானா என்று ஊன்றிப் பார்க்கும் கவலை கூட அற்றுவிட்டது. ஸ்பரிசனையும் உணர்ச்சியும் மரத்துப் போயின. வலி அகன்று நெடு நாளாகிவிட்டது. வயிறும் நரம்பும் ஆழ்ந்த தூக்கத்தில் ஒடுங்கிவிட்டன. இருந்தும் உயிரின் வலுதான் அவனை ஊந்தித் தள்ளிச் சென்றது. அவன் சோர்ந்து விட்டான்; ஆனால் சாக மறுத்தான். சாக மறுத்ததினால்தான் காட்டுக் காய்களையும் மீன் குஞ்சையும் தின்று வென்னீரைப் பருகி நோய் பற்றிய ஓநாயைக் கவனித்து வந்தான்.

     ஊர்ந்து சென்றவன் தடத்திலேயே தொடர்ந்து சென்றான். அதுவும் முடிவடைந்தது. நன்றாக சதைப் பற்று இழந்த சில எலும்புகளும், கொஞ்சம் காயந்துலர்ந்த பாசியும் ஓநாய்த் தடங்களும் தென்பட்டன. தான் வைத்திருந்தது போன்ற தோல் பொதியும் அங்கே உட்கார்ந்து கிடப்பதைக் கண்டான். அதுவும் ஓநாயின் பல் பட்டு கிழிந்திருந்தது. அதைக் கையிலெடுத்தான். ஆனால் அதைத் தூக்க அவனது விரல்களில் பலம் இல்லை. முன்னவன் அதை இவ்வளவு தூரம் சுமந்து கொண்டு வந்துவிட்டான். சபாஷ்! இப்போது யார் கெட்டிக்காரர்? தப்பி மீண்டும் கப்பலுக்கு அந்தப் பொதியை நான் தானே கொண்டு போவேன் என்று நினைத்தான். எக் எக் என்ற சிரிப்பு அவனது குரல் வளையை விக்கியது. காகம் கரைவது போலிருந்தது அவன் சிரிப்பு. நோய்ப்பட்ட ஓநாயும் அவனுடன் ஒத்துக் குரல் எடுத்தது. மனிதன் திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான். கிடப்பவன் சகாவாக இருந்தால், அவனை எப்படித் துரோகிப்பது? அந்த எலும்புகள் - அவைதானே ஒரு காலத்தில் என் சகாவாக இருந்தன.

     முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டான். அவன் என்னை நடுவழியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். இருந்தாலும் அவனுடைய தங்கப் பொதியை எடுத்துக் கொள்ளக்கூடாது. நான் செத்து அவன் மிஞ்சி இருந்தால், அவன் எடுத்துக்கொண்டுதான் போயிருப்பான்... இருந்தாலும்... இப்படியே நினைத்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.

     வழியிலே சிறு நீர்த்தேக்கமிருந்தது. மீன் எதுவும் இருக்குமா என்பதைக் கவனிக்க குனிந்து பார்த்தான். திடுக்கிட்டு தலையை இழுத்துக் கொண்டான். நீரிலே தென்பட்ட தன் முகத்தின் பிம்பத்தைப் பார்த்தான். அவ்வளவு கோரமாக இருந்தது. அந்தத் திக்பிரமை தீர வெகு நேரம் பிடித்தது. அதிலே முன்று மீன்களிருந்தன. குளத்தை இறைக்க முடியாது. தகரப்போணியில் அவற்றைப் பிடிக்க இரண்டு மூன்று தடவை முயன்று பார்த்து, விட்டுவிட்டான். ரொம்பவும் சோர்வு தட்டி இருப்பதினால் குளத்துக்குள் விழுந்து மடிந்து விடுவோமோ என்ற பயம். இந்தப் பயத்தின் காரணமாகவே கரையில் ஒதுங்கிக் கிடந்த கட்டையை மிதக்கவிட்டு அதில் உட்கார்ந்து கொண்டு செல்லுவதற்கும் பயந்தான்.

     அன்று கப்பலுக்கும் தனக்குமிடையிலிருந்த தூரத்தை மூன்று மைல் குறைவாக்கினான். மறுநாள் இரண்டு மைல் ஏனென்றால் முன்னவனைப் போல இவனும் ஊர்ந்து ஊர்ந்து சென்றான். ஐந்தாவது நாள் வந்தது. கப்பலுக்கும் தனக்கும் இன்னும் ஏழு மைல் தூரம் இருக்கிறது என்று கண்டான். அன்று அவனுக்கு ஒரு மைல் கூடச் செல்ல முடியவில்லை. பருவம் கெட்டுப் பாழ்படவில்லை. ஊர்ந்து சென்றான்; மயங்கினான். நெளிந்து நெளிந்து கொடுத்தான். நோய்ப்பட்ட ஓநாயும் களைத்துக் கொண்டே தொடர்ந்து வந்தது. பாதத்தைப் போல முழங்காலும் தேய்ந்து சதைக் கோளமாயிற்று. முதுகுப் பக்கத்தில் சட்டையைக் கிழித்துக் கட்டிக்கொண்டான். இருந்தாலும் பாசியிலும் பரல் கல்லிலும் ரத்தக் கோலம் அவனைத் தொடர்ந்தது. ஓநாயும் அதை நக்கிக்கொண்டே தொடர்ந்து வந்தது. அந்த ஓநாயைத் தீர்த்துக் கட்டாதவரை தன் கதை எப்படி முடியும் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டான். அதிலிருந்து பிறந்தது உயிர் வாழ்வுக்காக நடைபெறும் கோரமான போராட்டம். நோயாளி ஊர்ந்து சென்றான். நோய்ப்பட்ட ஓநாய் சாயைபோல நொண்டி நொண்டித் தொடர்ந்தது. உயிர்ப் பசை போக்கும் வனாந்தரத்திலே, செத்து மடிந்துவரும் சடலங்களை இழுத்துக்கொண்டு இரண்டு ஜீவன்கள் ஒன்றையொன்று வேட்டையாடித் தொடர்ந்தன.

     ஓநாய் ஆரோக்கியமுள்ளதாக இருந்திருக்குமாகில் மனிதன் அவ்வளவு கவலைப்பட்டிருக்கமாட்டான். பார்ப்பதற்கே குமட்டலெடுக்கும், செத்து மடிந்து விட்டது என்று சொல்லத்தக்க மிருகத்தின் பசிக்காளாவது என்ற நினைப்பை மனம் ஒப்பவில்லை. மனசு 'நுறநாட்டியம்' பிடித்த மனசு மீண்டும் அவனது சித்தம் நெறிகெட்டு அலைய ஆரம்பித்தது. நினைப்புச் சொப்பனங்கள் அவனை அலைக்கழிக்க ஆரம்பித்தன. புத்தித் தெளிவும் அரிதாகி வர ஆரம்பித்தது.

     காதருகே சற்று பனிக்காற்றுடன் மோதும் ஈச்சுச் சத்தம் கேட்க ஒருதடவை புத்தி சற்று தெளிந்தது. ஓநாய் பின்னுக்குப் பாய்ந்தது. பாய்ச்சலில் கால் தவறி விழுந்தது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவனுக்குச் சிரிப்பு வரவில்லை. அதற்கு உடம்பில் வலு இல்லை. அந்த நிமிஷம் புத்தி தெளிவாக இருந்தது. கிடந்துகொண்டே யோசித்தான். கப்பல் நாலு மைல் தூரத்தில் தானிருந்தது. பூத்துப்போன கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தால் சிறு படகின் வெள்ளைப் பாய்ச்சீலை தெரிந்தது. படகு மினுமினுக்கும் கடலைக் கிழித்து வந்தது. அது அவனுக்குத் தெரிந்தது. அந்த ஞானம் அவனைப் பதற வைக்கவில்லை. இன்னும் அரைமைல் கூட ஊர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். இருந்தாலும் உயிர் வாழ விரும்பினான். இவ்வளவும் பட்டு அனுபவித்து விட்டு சாவது தப்பு.

     விதி அவனிடம் சக்திக்கு மீறியதைக் கேட்கிறது. மடிந்து கொண்டிருந்தான்; ஆனால் சாகச் சம்மதிக்கவில்லை. அது வெறும் வெறித்தனம் என்று சொல்லவேண்டும். மரணத்தின் கைக்குள் சிக்கிவிட்டான்; ஆனால் அதை எதிர்த்தான், சாகச் சம்மதிக்கவில்லை.

     சர்வ ஜாக்கிரதையுடன் கண்களை மூடிக்கொண்டு ஒடுங்கினான். தன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் பொங்கி எழும் சோர்வை, அவனையே மூழ்கடித்துவிட முயலும் சோர்வைச் சமாளித்து சித்தத் தெளிவைப் பெற முயன்றான். இந்த மரணச் சாயையான சோர்வு கடலைப் போல பொங்கிப் பொங்கி அவனது பிரக்ஞையைக் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்தது. சில சமயம் அதில் அடியோடு மூழ்கிவிட்டான். தடமாடித் தடமாடி அதில் முக்குளித்து நீச்சலடிக்க முயன்றான். ஜீவன் கற்ற வேதி நூல் அவனுக்கு சமயத்தில் துணை கொடுத்தது. சிதறுண்ட புத்தியை எட்டிப் பிடிப்பான்; சற்றுத் தெம்புடன் மிதப்பான்.

     அசைவே இல்லாமல் மலர்ந்து கிடந்தான். நோய்ப்பட்ட ஓநாய் மூசுமூசென்று இளைத்துக்கொண்டு தன்னை நெருங்குவதை உணர்ந்தான். வரம்பற்ற காலத்தினூடே எத்தனையோ யுக சஞ்சாரங்களுக்குப் பின் அது அவனை நெருங்கிக் கொண்டே வந்தது அவனது காதருகே நெருங்கியது. வரண்டுபோன நாக்கு, பரபரவென்று முகத்தை வருடியது. அவனது கைகள் பாய்ந்தன. அதாவது பாயும்படி அவன் புத்திகொண்டு நினைத்தான். விரல்கள் கூரிய நகங்கள்போல வளைந்திருந்தன. ஆனால் காற்றைத்தான் எட்டிப் பிடித்தது. நிச்சயத்துடன் சடக்கென்று பிடிப்பதற்கு பலம் வேண்டும். அது அவனிடம் இல்லை.

     ஓநாயின் பொறுமை பயங்கரமாக இருந்தது. மனிதனுடைய பொறுமையும் அதைப்போல பயங்கரமாக இருந்தது. அரை நாள் வரை மயக்கத்தை உதறித்தள்ளி எது தன்னைத் தின்ன விரும்புகிறதோ அதற்காக, எதைத் தின்ன அவன் விரும்புகிறானோ அதற்காகக் காத்திருந்தான். சில சமயங்களில் சோர்வு பொங்கியது. அவன் நெடிய கனவுகளில் மிதந்தான். விழிப்பிலும், கனவிலும், செருமிவரும் அந்த மூச்சுக்கும் நாக்கின் கரகரப்புக்குமாகக் காத்திருந்தான்.

     மூச்சு அவனுக்குக் கேட்கவில்லை. ஏதோ கனவிலிருந்து வழுவி கையில் நாக்கு பட்டதை உணர்ந்தான். காத்திருந்தான். பற்கள் மெதுவாக அழுத்தின. பல் பதிய ஆரம்பித்தது. இத்தனை நாட்களாகக் காத்திருந்த உணவில் பல்லைப் பதிய வைக்க அந்த ஓநாய் தனது பலம் முழுவதையும் உபயோகித்தது. மனிதன் வெகுநேரம் காத்திருந்தான். கிழிபட்ட கை, மிருகத்தின் வாயைப் பற்றியது. ஓநாய் தெம்பிழந்து உதற முயற்சித்தது. கையும் வலுவற்ற நிலையிலும் பற்று விடவில்லை. இந்த நிலையில் மற்றொரு கையும் சேர்ந்து பிடித்துக் கொண்டது. ஐந்து நிமிஷங் கழித்து மனிதனின் முழு கனமும் ஓநாய்மீது விழுந்தது. ஓநாயை மூக்கை அமுக்கிக் கொல்ல கையில் பலம் இல்லை. மனிதனுடைய முகம் ஓநாயின் கழுத்தில் விழுந்து கிடந்தது. அவன் வாயில் அதன் மயிர். அரைமணி நேரம் கழித்துத் தனது தொண்டைக்குள் வெதுவெதுப்பாக ஒழுகிச் செல்வதை உணர்ந்தான். அது ருசிக்கவில்லை. உருக்கிய ஈயத்தை வயிற்றுக்குள் நிர்ப்பந்தமாக செலுத்துவது போல இருந்தது. அவனது சித்தத்தின் உறுதியே அதை உள்ளே செலுத்தியது. பின்னர் அந்த மனிதன் திரும்பி மலர்ந்து படுத்து உறங்கினான்.

     திமிங்கில வேட்டைக் கப்பலான 'பெட்போர்ட்' என்பதில் சில விஞ்ஞான பண்டிதர்கள் இருந்தார்கள். கப்பலின் மேல்தட்டில் நின்று பார்த்தபோது, கரையில் ஏதோ ஒரு புது மாதிரியான பொருள் தெரிந்தது. அது கரையில் தண்ணீரை நோக்கி வந்து கொண்டிருந்தது. என்னதென்று ரகவாரியாக அத்தனை தூரத்திலிருந்து நிர்ணயிக்க முடியவில்லை அவர்களுக்கு. என்னவென்று பார்க்க படகில் ஏறி கரைக்குப் போனார்கள். உயிரோடிருந்தது மனிதன் என்று சொல்ல முடியாது. அது கண்ணிழந்து பிரக்ஞையிழந்து இருந்தது. பெரிய புழுப்போல தரையில் நெளிந்தது. அதன் முயற்சிகள் பயனற்றவை என்றாலும், இடைவிடாது முயற்சித்தது. உருண்டு நெளிந்து மணிக்கு இருபதடி தூரம் சென்றது.

     மூன்று வாரங்கள் கழித்து பெட்போர்ட் கப்பல் பங்கில் படுத்துக் கிடந்த மனிதன், ஒட்டிப்போன கன்னங்களில் நீர் வழிய, தான் யார் என்று சொன்னான்; தான் பட்டனுபவித்ததைச் சொன்னான். அப்பாவையும் ஊரையும் ஆரஞ்சுத் தோட்டத்தையும் பற்றிப் பிதற்றினான்.

     விஞ்ஞான பண்டிதர்களுடனும், கப்பல் உத்தியோகஸ்தர்களுடனும் உட்கார்ந்து சாப்பிடும் காலமும் வந்தது. சாப்பாட்டைப் பார்ப்பதிலேயே அவனுக்குப் பரம திருப்தி. மற்றவர்கள் வாயினுள் செல்லுவதை வெகு கவலையுடன் கவனித்தான். ஒவ்வொரு கவளமும் வீணாகிறதே என்ற கவலையை அவன் முகம் காட்டியது. அவனுடைய புத்தி தடுமாறி விடவில்லை. இருந்தாலும் சாப்பாட்டு நேரத்தில் அவர்களை அடியோடு வெறுத்தான். உணவற்றுப் போய்விடுமோ என்ற பயம் நெஞ்சில் புரை ஏறி இருந்தது. குசினிக்காரனை, காபின் பையனை, காப்டனை எல்லாம் சாப்பாடு எவ்வளவு இருக்கிறது என்று கேட்டான். நிறைய இருக்கிறது என்று பலதடவை சொல்லி அவன் கவலையைப் போக்க முயன்றார்கள். அவர்களை நம்பாமால் திருட்டுத்தனமாக உக்கிராணத்துக்குள் சென்று தானே பார்த்தான்.

     இந்த மனிதன் வர வர பருத்து வருவது தென்பட்டது. நாளொரு மேனியாகப் பருத்து வந்தான். விஞ்ஞான பண்டிதர்கள் தலையை ஆட்டிக்கொண்டு சித்தாந்தம் பண்ணிப் பார்த்தார்கள். அவனுக்குச் சாப்பாட்டைக் குறைத்தார்கள். அப்படியிருந்தும் அவன் ஷர்ட்டுக்கடியில் எல்லையில்லாமல் பருத்து வந்தான்.

     மாலுமிகள் சிரித்தார்கள். அவர்களுக்குத் தெரியும். விஞ்ஞான பண்டிதர்கள் ஒருவனைக் காவல் போட்டார்கள். அவர்களும் தெரிந்து கொண்டார்கள். காலையில் சாப்பிட்டவுடன் திருட்டுத்தனமாக அவன் கையை நீட்டிப் பிச்சையெடுக்கப் போவதைக் கவனித்தார்கள். அவனது ஏந்திய கையில் மாலுமிகள் ஒரு பிஸ்கோத்துத் துண்டைப் போடுவார்கள். உடனே அவன் அதை ஷர்ட்டுக்கு அடியில் ஒளித்து விடுவான். பணப் பேய் பிடித்தவன் தங்கத்தைக் கண்டதும் தாவிப் பிடிப்பதைப் போல அதை வாங்கிக் கொண்டான். மாலுமிகள் கருமித்தனம் செய்யவில்லை.

     பண்டிதர்கள் விவேகிகள். அவன் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள். அவனில்லாதபோது அவனிருந்த அறைக்குச் சென்று பார்த்தார்கள். எங்கு பார்த்தாலும், தலையணை முதல் மெத்தை வரை எங்கும் உணவுப் பொருள்களை ஒளித்து வைத்திருந்தான். இருந்தாலும் அவனுக்குப் பைத்தியமில்லை. மீண்டும் பஞ்சம் ஏற்படாதபடி முன் ஜாக்கிரதையுடன் தடுத்துக் கொள்கிறான். அவ்வளவுதான். அதுவும் தெளிந்துவிடும் என்றார்கள் பண்டிதர்கள். அப்படியே தெளிந்தது. பெட்போர்ட் கப்பல் ஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாவுக்குள் போகுமுன் அவனுக்குப் புத்தி தெளிந்துவிட்டது.




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
மேலும் விபரம்
ரூ. 211.00
ரூ.200.00
இலவசம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00