சமகால இலக்கியம்
|
புதிய சிறகுகள் முன்னுரை ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றக்கூடிய இரத்த பந்த நெருக்கமான உறவைக் குறிப்பிட வேண்டுமானால் அது தாய்-மகன் உறவுதான். இந்த ஆதி உறவில் இருந்து தான் மானிட உறவுகளே பல பரிமானங்களுடன் விரிவடைகின்றன எனலாம். தாய்மைப் பேற்றுக்கு இன்றியமையாத காரணியாக ஆண் உறவை முதன்மைப் படுத்தலாமென்றாலும், அந்த உறவு, பெரும்பாலும் செயற்கையாகவும், வற்புறுத்தல், கட்டாயம் ஆகிய நிலைகளிலும் கூடப் பிணைப்பாகி விடலாம். மேலும், அத்தகைய உறவில் பிணைபவர்கள் இருவரும் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகிய கூறுகளில் ஒருவருக்கு மற்றவர் சமமானவர்களாக இருக்கிறார்கள். உள்ளார்ந்த பிணைப்பு, பல தூலமான கூறுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஓர் ஆணையும் பெண்ணையும் இவ்வாறு பிணைக்கும் திருமண பந்தங்களை, மறுபிறப்புக்களிலும் கொண்டு செல்லும் மரபுக் கொள்கைகளை வழி வழியாக்கியும், ஒருவர் மற்றவரைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியும் உறுதி செய்தார்கள். ஆனால் இந்த தூல நெறிகள் தளர்ந்த போது, உள்ளார்ந்த பிணைப்புக்களும் போலியாக, விரிசல் சாத்தியமாகிறது. தாய்-மகன் என்ற பந்தத்தில், தூலமான சிதைவுகளும் கூட அத்தகைய விரிசல்களைக் கொண்டு வருவதில்லை. இந்தப் பிணைப்பில் சமமான உடல்-மன வளர்ச்சி இல்லை. பெண்ணின் பக்கம் உணர்ச்சிகளே முதன்மையிடம் வகிக்கின்றன. உணர்ச்சிகளின் உந்துதலாலேயே அவள் மகவுக்குப் பாலூட்டுகிறாள்; அதன் அசுத்தங்களை முகம் சுளிக்காமல் ஏந்துகிறாள்; சுத்தம் செய்கிறாள். 'வாத்ஸல்யம்' என்ற அமுதைப் பொழிகிறாள். ஆனால், மகவு இதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை. அது தனது எல்லாத் தேவைகளுக்கும் தாயைச் சார்ந்துதான் இருக்கிறது. அது தனது எல்லாச் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி அவளைப் பற்றிக் கொள்கிறது. தனது தேவைகளைத் தானாகக் கேட்டு உரிமையுடன் பெற முடியும் என்ற வளர்ச்சி பெற்றதும், அதன் நீக்கும், போக்கும் வேறு பட்டுப் போகிறது. ஆனால் தாய் அந்த ஆதி உணர்வு நிலையிலிருந்து மாறாதவளாகவே பழக்கப்பட்டுப் போகிறாள். பொதுவாகவே தாயின் இயல்பு தன் மக்கள் எல்லோரிடத்திலும் இவ்வாறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இயற்கையாக எழும் உணர்வுக்கும் பாசத்துக்கும் மகன் வேறு, மகள் வேறு எனற பிரிவுகள் இருக்க முடியாது. கூட்டுக்குஞ்சுகளுக்கு உணவூட்டிப் பாதுகாக்கும் பறவைத்தாய் ஆண் குஞ்சு, பெண் குஞ்சு என்று பார்ப்பதில்லை. அது இயல்பூக்கத்தினால் செயல்படுகிறது. ஆனால், மனிதரில் மட்டும், பகுத்தறிவு பிரித்துப் பார்க்க வழியமைக்கிறது. மகள் என்று வரும்போது, தாய் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. மகளின் சந்தோஷத்தை விட, அவளை சமூகம் ஒப்புக் கொள்ளும் இலக்கையே தாய் பெரிதாகக் கணிக்கிறால். ஆனால், மகன் என்ற நெகிழ்ந்த உணர்வில், கல்வி வசதியில்லாமல் தெருவோரத்தில் ஆப்பக்கடை போட்டிருக்கும் ஏழைத்தாயும், உலகு புகழ் நாடாளும் ஒரு பெண்மணியும் ஒரே கோட்டில் சந்திக்கிறார்கள். இது ஏன்? இந்தத் தாய்மை நெகிழ்ச்சி நாடு, சமயம், மொழி, என்ற வரையறைகளுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது. அறிவும் அநுபவமும் பின்னுக்குச் சென்றுவிடும் வகையில், மகன் பாச உணர்வு, பல சமயங்களிலும் கண் மூடித்தனமான வகையில் ஒரு தாயை வழி நடத்துகிறது. ஒரு பெண் தனக்கு மகன் பிறந்ததும், கணவனை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறாள் என்ற நியதியும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏன்? துருவித் துருவிப் பார்த்தால், பெண் எப்போதும் சார்ந்திருக்க ஓர் ஆணையே நம்பி இருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அச்சார்பு நிலை, பெண்ணிடத்தில் ஆணுக்கு இல்லை. குடும்பமாகிய ஓர் அமைப்பில் ஆணும் பெண்ணும் கூட்டாகப் பொறுப்புக்களையும், உழைப்பையும் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் பாங்கு இன்று நம்மிடையே இல்லை. எனவே, பெண்ணின் சார்பு மிக அதிகமாக நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவள் கொண்டவன் என்று இணைபவனுடன் சார்ந்திருக்கும் சார்பை விட, தன்னுள் இடம் கொடுத்து, தன் அணுவாய்க் காப்பாற்றி வளர்க்கும் மகனை மிக அதிகமாகப் பற்றுகிறாள். பிரதிபலன் கிட்டுமா, கிட்டாதா என்ற ஐய இழைக்குக் கூட இடமின்றித் தன்னை ஒட்டவைத்துக் கொள்கிறாள். இந்தத் தன்மை, மகனின் சலுகைகளை, உரிமைகளை வரம்பில்லாமல் பெருக்கிவிடுகிறது. அவனைக் கட்டுப்பாடற்றவனாகவே கூட வளர்க்கிறது. |