உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 2 குன்றையே அணைப்பது போல், அந்த இடத்தில் ரயில் லாடமாய் ஒடிந்தது. எத்தனை நாள் இந்த வளைவை நானும் சகுந்தலையும் நின்று வேடிக்கை பார்த்திருப்போம்! ரயில் கடந்த சூட்டில் துண்டித்து விழுந்து கிடக்கும் பாம்பின் துடிப்புப் போல், தண்டவாளத்துக்கு மூச்சு இறைப்பது போல் எங்களுக்கு ஒரு ப்ரமை. "அம்பி, இதில் ஒரு நாள் ஏறி நீ போய்விடுவையோன்னோ?" "ஆமாம். கரடிமலையிலிருந்து தப்ப வேறு என்ன வழி?" எங்கள் பின், எங்கள் மேல், மலை முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு ஓங்கி நின்றது. கடவுளுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்று ஐதீகம் கொண்டாடிற்று. ஆனால் கரடி எங்களை அணைக்க வந்ததென்ற நினைப்பில் கூசி, எனக்குக் கண்கள் தானே மூடிக் கொள்ளும். மலைமேல் குருக்கள் பூஜை செய்கிறார். அடிவாரத்தில் அவருக்குக் காத்திருக்கிறோம். "நான் ரயிலில் போனதேயில்லை." "நிஜம்மா? ஒரு தடவை கூட?" "எங்கள் உறவுக்காராள் ஊருக்கெல்லாம் ரயில் கிடையாது. எல்லாம் சுற்று வட்டாரத்தில், கிட்டக்கிட்ட. மாட்டு வண்டி, கால்நடை. மழை வந்துட்டா ஆறு தாண்டப் பரிசல் -" அவள் என்னைப் பார்க்கவில்லை. எதிரே கத்தாழைப் புதரில் எங்களைக் காட்டிக் கொடுப்பது போல் கழுத்தையாட்டும் ஓணான் மேல் அவள் கவனம் பதிந்திருந்தது. அவளே அப்படித்தான். பேச்சு இங்கே, பார்வை எங்கோ. "சக்கு, நீ என்னோடு வந்துடறையா?" ஒரு வயதுப் பெண்ணிடம் இவ்வளவு துணிச்சலாக வார்த்தைகள் எப்படிப் பல்லைத் தாண்டின எனும் வியப்பினின்று பின்னர் நான் முற்றிலும் மீண்டதில்லை. அவள் பார்வை மெதுவாய் என் பக்கம் திரும்பிற்று. அதில் நான் கண்டது அலக்ஷியமா? அதிர்ச்சியா? என்னையே அடையாளம் தப்பிப்போன திடீர் மறதியா? அவள் விழிகளின் ஆழம் எனக்கு என்றுமே பிடிபட்டதில்லை. நான் அறிந்தமட்டில் அவைகளில் என்றுமே காட்டில் விட்ட திகைப்பு. எந்த இருட்டினின்று இந்தப் பிறவியுள் வழி தப்பி மிதந்து வந்து விட்ட உயிர்க்கீறல்? அவள் விழிச் சிமிழ்கள் மெதுவாய்த் திறந்து நிறைந்து வழிந்து கன்னங்களில் கண்ணீர் அருவி கண்டது. அவள் அதைத் துடைக்க முற்படவில்லை. எத்தனை நேரம் இப்படியே மௌனமாய் நின்றோமோ! நித்தியத்துவத்தினின்று சிந்தி உருண்ட கண்ணீர்த்துளி விரிந்த இரு பாதிகள் எனக் காட்டும் முறையில் எங்கள் மேல் கவிந்த வான் கிண்ணமும், எங்களை ஏந்திய பூமியின் வரம்பும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் விளிம்பு கட்டின. நாங்கள் அதனுள் மாட்டிக் கொண்ட கண்ணீரின் நிழல்கள். குன்றின் உச்சியினின்று தீபாராதனை மணியின் கார்வை எங்கள் மேல் தீர்க்கமாய் இறங்கிற்று. காலத்தைத் தடுத்து நிறுத்திய இந்தத் தருணத்துக்கு மணியோசைதான் சாக்ஷி. குருக்களின் கைத்தட்டில் கடவுளை வட்டம்வரும் கற்பூரச் சுடர் சாக்ஷி. இத்தனை வருடங்கள் தான் இருந்தது தெரியாமல் நினைவில் மூழ்கிக் கிடந்த இந்த வேளை, திரும்பவும் நெஞ்சில் முகடு கண்டதும் பரபரப்புத் தாங்க முடியவில்லை. மார்க்குலையில் ஒரு கை தவித்தது. "ஏன், நெஞ்சு காஞ்சு போச்சா? இந்தாங்கோ ஒரு முழுங்கு குடியுங்கோ-" என் தொண்டையின் அடைப்பு சாவித்ரிக்குப் புரியாது. புரியவைக்கவும் நான் முற்படவில்லை. டம்ளரை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டேன். ஆனால் சில நாட்களாகவே மாடிப்படியேறினால் மார்பு படபடக்கிறது. சற்று வேகமாக நடந்தால் மூச்சு இறைக்கிறது. டாக்டர் 'ஸ்டெத்'தை வைத்து சோதித்து விட்டுச் சிரிக்கிறார். "அதெல்லாம் ஒன்றுமில்லை. Heartbeat quite perfect. ஜீரணக் கோளாறாயிருக்கலாம். அல்லது மனதில் ஏதாவது idea pressure இருந்தாலும் இந்த மாதிரியெல்லாம் நேர்வதுண்டு. இதை எங்கள் பாஷையில் psychosomatic என்போம். பாட்டியம்மா பாஷையில் 'உடம்பு கால்; மனசு முக்கால்' என்று அதற்கு அர்த்தம். பாட்டியம்மா பாஷைன்னா சூள் கொட்டாதேங்கோ ஸார்! அதுதான் எழுத்தையும் மீறி, வழிவழியா பாட்டி பேத்திக்குச் சொல்லி, பேத்தி பாட்டியாகி அவள் பேத்திக்குச் சொல்லி வழக்கில் வந்த உயிர்ப்பாஷை. நம்ம பாஷையை விட அதில் தான் உண்மை அதிகம்-" இப்படி ஆரம்பித்து பேச்சை எங்கோ கொண்டு போவார். அடித்துக் கேட்டால், "பேச்சும் ஒரு 'ட்ரீட்மென்ட்', எல்லாக் கோளாறுக்கும் ஒரே கட்டு மாத்திரை" என்பார். ஆனால் கூடவே ஒன்று. சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனம் வருவதில்லை. குரோதங்களைப் புதைக்க இடம் வயிறு, இன்பங்களுக்கு இதயம் என்று என் துணிபு. இரண்டுமே ஊமைக் காயங்கள்தான். ஸ்புடத்தினின்று நெஞ்சுக்கு சாவகாசமாய் வரவழைத்துக் கொண்டு குமுறுகையில், அல்ல, கரைகையில், அப்போது கடைந்து உடல் பூரா பரவுவது நஞ்சோ அமுதமோ, அசைதரும் சுவை அவரவர்க்குத் தனி. இதை மனைவியே ஆனாலும் பகிர்ந்து கொள்வது எப்படி? அதுவும் சாவித்ரியுடனா? "உங்களைப் போல் நீங்களே இருங்கள். நான் இருக்க வேண்டாம். 'மனசில் ஒண்ணும் வெச்சுக்கத் தெரியாதவள்; வெகுளி'ன்னு கட்டின அசட்டுப் பட்டம் அப்படியே இருந்துட்டுப் போகட்டும். யாரும் என் நெஞ்சில் உப்புமண்ணை வெச்சு நெருட வேண்டாம். வயத்துலேயே வெச்சுண்டு வெடிக்காமல் உப்பி உப்பி, செத்தாலும் வேகாத பச்சைப் புண்ணாய் அழுகிண்டு இருக்க வேண்டாம். கட்டையிலே வெச்சதும் காஷ்டம் காஞ்சதா, தணல் பட்டவுடன் பஸ்மமா போச்சுதா? அதுவே என் வெள்ளை மனசுக்கு அத்தாக்ஷியாக இருக்கட்டும்." பிராசம் எப்படித்தான் பெண்களுக்குக் கூடவே பிறக்கிறதோ! குன்றை ரயில் பாதி ப்ரதக்ஷிணம் செய்கையில் சுண்ணாம்பும் செங்காவியும் ஒழுகிக் காய்ந்து போன கல்படிக்கட்டு கீழிருந்து கிளம்பிச் சீறி வளைந்து ஏறி உச்சி மேல் அடர்ந்த பச்சையுள் புகுந்து மறைந்தது. குன்றின் அடிவாரத்தில் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் மொத்தாகாரமாய், முகம் தேய்ந்து கல்லில் ஒரு உரு, சிற்பி செதுக்க ஆரம்பித்துப் பாதியில் விட்டது, நந்தியுமில்லை நாயிலும் சேர்த்தியில்லை. தலைமுறை தலைமுறையாகப் படிக்கட்டைக் காவல் காத்துக் கிடக்கிறது. மலையுச்சியில் கருவேலங் காட்டுள், மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் திருவேலநாதரை எனக்கு நன்கு தெரியும். கோபுரமா, கூரையா, பந்தலா ஒன்று கிடையாது. பக்தர்கள் எழுப்பப் பார்த்தும் ஒத்து வரவில்லை. ஒன்று கூரை சரிந்தது; இல்லை கொத்தனுக்குக் கால் ஒடிந்தது. இல்லை மெய்வருந்தச் சேர்த்துக் குன்றின் மேல் கொண்டு போய்க் குவித்த மணலும் தாளித்து வைத்த சுண்ணாம்பும் அங்குமட்டும் இரவில் மழை பெய்து மறுநாள் சோடை கூடத் தெரியாது கரைந்து போயின. பிறகு அவரே கனவில் வந்து சொல்லிவிட்டாராம், “நீங்கள் இந்த சிரமமெல்லாம் படாதீர்கள். இதுவேதான் என் மஹாத்மியம்” என்று. எது மஹாத்மியம்? பக்ஷிகள் எச்சமிட்டு, குரங்கு கொட்டையுமிழ்ந்து, வெய்யிலில் வெந்து, மழையில் ஊறி, மண்டை வழுக்கை உருண்டையாய் வழவழ பளப்பள - அடுத்தவர், மலையேறச் சோம்பல், ஆனால் புண்ணியம் மட்டும் கட்டிக் கொள்ள ஆசைப்பட்டவர், குன்றடியில் படிக்கட்டில் ஏற்றிவைத்த கற்பூரத்தைத் திருவேலநாதர் தன்னிடத்திலிருந்தே மோப்பம் பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அதைக்கூட அவருக்கு ஏற்றிவைப்பார் யார்? "ஆனால் அவர் க்ருபை புரிவதும் அந்த மாதிரி சிரத்தாவான்களுக்குத்தான்” என்பார் நொண்டி குருக்கள். குருக்களுக்குக் கோபமில்லை கசப்பில்லை. அந்த நிலையெல்லாம் அவர் எப்பவோ தாண்டியாச்சு. "எங்கள் ஜாதியே விதியை நொந்து பயனில்லை. சுவாமியைத் தொட்டு நடத்தும் ஜீவனம் உருப்பட வழியேயில்லை. இது குலசாபம். திருஷ்டாந்தம் வெளியே தேட வேண்டாம். எங்கள் குடும்பத்தையே எடுத்துக் கொள்ளேன். அரிசி ரூபாய்க்கு எட்டுபடி வித்த அந்த நாளிலேயே எங்களுக்கு விடிஞ்சதில்லை. என்னைப் பார், கார்த்திகை அமாவாசை வந்தால் எழுபதை எட்டிப்பிடிக்கப் போறேன். அறுபது வருஷமா நொண்டிண்டிருக்கேன். இளம்பிள்ளைவாதம். காலை இழுத்தூட்டு நொண்டி குருக்கள்னு கட்டின பட்டம் வழக்கில் வந்து கெட்டிப்பட்டு, தொட்டிலிட்டு சூட்டின சர்மன் ஊருக்கே மறந்து போச்சு. மூக்குக் கண்ணாடிக்குக் கம்பி ஒடிஞ்சு வருஷம் மூணு ஆறது. கயித்தைப் போட்டுக் கட்டிண்டிருக்கேன். மூக்குக்குப் பழக்கம் கண்ணுக்குத் தைரியம்னு தவிர கண்ணாடியால் உண்மையால் உபயோகமில்லை. அதில் பவர் எப்பவோ போயாச்சு. "சரி அதுதான் அப்படிப் போச்சா? போகட்டும். இந்த நொண்டிக்காலோடு எங்கள் சக்திக்கேற்றபடி - இல்லை, சக்தியை மீறிக் கல்யாணம் ஆகி சிசுக்களுக்கும் குறைச்சலில்லை. குழந்தைகள்னு சொல்றோம், ஆனால் எல்லாம் பெத்த கடன்கள்; வெறும் இச்சாவிருத்திகள். குழியில் வெக்கறதும் வயத்தில் காண்றதுமா உயிர்க் குமிழிகள் வெடிச்சதுபோக தங்கினது பிள்ளை ஒண்ணு, பெண் ஒண்ணு. சகுந்தலையைத்தான் உனக்குத் தெரியும். அவளுக்கு அண்ணன், அம்மா செல்லம், உதவாக்கரை. ஒரு நாள், எனக்கு ‘உடம்பு சரியில்லை. கோவிலுக்குப் போ’ன்னு சொல்லியிருக்கேன். வேறெங்கோ காசு வெச்சு கோலியாடப் போய், ஒரு கால பூஜை, அதையும் முழுங்கிட்டான். விஷயம் வெளிப்பட்டதும் அடிச்சேன்; அதுவே சாக்கு, வீட்டை விட்டு பன்னிரண்டு வயசில் ஓடிப் போனவன் இன்னும் திரும்பிவல்லே. வந்தால் உன் வயசிருப்பான். நான் செத்துப் போனப்புறம் பட்டனத்தார் மாதிரி கொள்ளி போடத்தான் வருவானோ, இல்லை அவனே தான் கொள்ளிக்கிரையாயிட்டானோ? ஏன் முகத்தை சுளிக்கிறே? பேச்சுன்னா எல்லாத்தையும்தான் பேசி ஆக வேண்டியிருக்கு. மாமிக்கும் எனக்கும் பேச்சறுந்து போச்சு. நீயே கவனிச்சிருக்கலாம். இதேதான் காரணம். என்ன பண்ணுவேன்? திருவேலநாதர் பிறக்கும்போதே பிள்ளையாண்டானுக்கு மண்டையில மரத்தையும் காலில் கருவேல முள்ளையும் தைச்சு விட்டுட்டார். அவரால் எங்களுக்கு முடிஞ்சது அவ்வளவுதான். "ஆனால் அம்பீ, இப்போ வரவரத் தள்ளல்லேடப்பா, சகுந்தலையே குடம் ஜலத்தை மலைமேல் கொண்டு போய் வைக்க வேண்டியிருக்கு. ஒரொரு சமயம் நீயும் தான் கை கொடுக்கறே. என் பாட்டன் முப்பாட்டன் நாளிலிருந்து இதே மாதிரி தினே தினே மலையேறி சுவாமி தலைமீது கொட்டியிருக்கும் ஜலத்தை தேக்கினால் கரடிமலையே முழுகிப் போயிருக்கும். ஆனால் கண்ட மிச்சம் என்ன? இந்த விரக்திதான். விரக்தி என்பது என்னென்று நினைக்கறே? தோல் தடுமன்; குண்டு பட்டால் குண்டு பாயக்கூடாது, குண்டு தெறிச்சு விழணும்னு அர்த்தம். ரோசத்துக்கு முழுக்குன்னு அர்த்தம். பசிச்சவனின் பழம் கணக்கு; தரிசனம் தராத சிரமத்தின் ரிகார்டு; காலே தேஞ்சாலும் போய்ச் சேராத ஊருக்கு வழி...” குருக்கள் பேச இன்று முழுக்கக் கேட்கலாம். பொழுது போவதே தெரியாது. பேச்சில் ஒரு கிண்டல், வார்த்தைகளினிடையிடையே ஸம்ஸ்கிருதம் தெளித்து பேச்சிலேயே இன்னதென்று இனம் தெரியா மணம் கமழும். தான் உள்பட உலகத்தையே எள்ளும் புன்னகையில், மேல்வாயில் முன்பற்கள் இரண்டு காணோம், ஏன் என்று காரணம் கேட்காமலே, தானே: “கீழே விழவில்லை வயிற்றுள் இருக்கு” என்று அதிலும் ஒரு பொடி. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரொரு நாள் அங்கேயே தங்கி விடுவேன். சிக்குப் பிடித்த அழுக்கு முண்டையவிழ்த்து நைவேத்தியத்திலிருந்து, மாமி சாதத்தைக் கையாலேயே அள்ளி வைப்பாள். அரிசி மட்ட ரகம். சிவந்த ராசி. இரத்தத்தைக் கலந்தாற்போல், ஆறிப்போய் இலையில் சிலிர்த்துக் கொண்டு நிற்கும். ”பயப்படாதே, சுவாமிக்கே இதுதான்! எதை எங்களிடமிருந்து வாங்கிக்கறாரோ அதைத்தானே அவருக்கு நாங்கள் திருப்பித் தரமுடியும்!” நடுவில் குருக்கள். நானும் சகுந்தலையும் மூவரும் சேர்ந்து ஃன்னா மாதிரி. சாதம் போதாது. சகுந்தலையெழுந்து கையலம்பி வந்து மூலைப் பழையதைப் பிழிந்து வைப்பாள். பார்க்கத்தான் பயம். ஆனால் பசிக்கு ருசி. இப்போ நினைக்கிறேன். உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டிவிடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம் தான் நெஞ்சு நிறைகிறது. மாமா வீட்டுச் சாப்பாட்டை இத்துடன் ஏணி வைத்துத்தான் பார்க்கணும். ஆள் போட்டு சமையல். சங்கரன் இட்டதுதான் சட்டம். தினம் ஒரு தேங்காயை உடைக்காமல், அவனுக்குச் சமைக்கத் தெரியாது. மாமா வீட்டில் தினம் ஒரு கூட்டு, கறி இல்லாமல் சாப்பிடத் தெரியாது. ஒரு விருந்தாளியேனும் இல்லாத பந்தியே கிடையாது. ஆனால் என்னைக் காணோமே என்று உள்ளோடு கவலைப்படுவோர் யார்? மறுநாள் போனதும் திட்டுவதற்கு ஒரு சாக்காச்சு ஆனாலும்! மாமாவுக்குப் பேச்சில் அலாதி தோரணை. ஏற்கெனவே ஊருக்குப் பெரிய மனுஷன். கடல்போல் வாசல் திண்ணையில் தான் அவர் கச்சேரி. காலைப்பிடிக்க ஒரு ஆள். என்னதான் அந்த வலது காலில் அப்படி ஓயாத ஒரு குடைச்சலோ? வேலை உண்டோயில்லையோ, உத்தரவுக்குக் காத்த வண்ணம் மார்மேல் கைகட்டிக் கொண்டு எதிரே சேவகம் இரண்டு ஆள். அவர் சொல்வதற்கெல்லாம் கூடவே தலையை ஆட்டவும் பல்லைக் காட்டவும், விஷயம் புரிந்தோ புரியாமலோ, மாமா முகம் பார்த்து, மனமறிந்து சிரிக்கத் தெரிந்து குஞ்சுத் திண்ணையில் மூணு மந்திரிகள். அவ்வளவுதான். மாமாவுக்குக் களை கட்டிவிடும். ”என்னடா குறவன் மாதிரி முழிக்கறே? சோத்தை வெச்சுண்டு எத்தனை நாழி ஐயர்வாளுக்குக் காத்துண்டிருக்கணுமோ தெரியல்லியே! தவிடு தின்கறத்துலே ஒய்யாரம் வேறேயாக்கும்! உன் மாமி உடம்பை இரும்பாலே அடிச்சுப் போட்டிருக்குன்னு எண்ணமோ, உன் இஷ்டப்படி ஆட்டிவைக்க? எங்கே போயிருந்தே? என்னடா முணுமுணுக்கறே? என்னடா எதிர்த்துப் பேசறே? ஓஹோ அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? ஓஹோ நெருப்பிலிருந்து எடுத்து விட்ட கையைக் கடிக்கிற பாம்பா?” குஞ்சுத் திண்ணையிலிருந்து: “ஹி! ஹி!! ஹி!!!” நான் பதில் பேசவே மாட்டேன். மாமா நல்லவர். கேள்வி கேட்பார்; ஆனால் பதில் எதிர்பார்க்க மாட்டார். மாமா ‘ஸோலோ!’ அவருக்கு அவர் குரல் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். மாமா பக்கத்தில் யானைத்தலை பெரிது ரயில் கூஜாவில் தீர்த்தம். அருகே எப்பவும் வெள்ளி வெற்றிலைச் செல்லம். உதட்டோரம் சாறு ஒழுகும். புகையிலைக் காட்டம் அவருக்கு ஏற்றபடி வாய்த்துவிட்டால்போதும், பேச்சின் ஜோரும் அலாதி தான். நானும் அவரும் பிட்டுக் கொண்டதே இதுபோல் புகையிலைக் குஷியில் அவருக்குப் பேச்சு வழி தப்பிப் போனதால்தான். அன்றும் இதே போல் ‘கோர்ட்’. ”என்னடா நினைச்சுண்டிருக்கே? எங்கே போயிருந்தே? நான் ஒருத்தன் கேக்கறேன். இடிச்ச புளிமாதிரி வாயை மூடிண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஊம்? காது கேட்கத்தான் சொல்லித் தொலையேன்! என்னது?... கரடிமலையா? ஓஹோ! குருக்கள் வீட்டில் குருகுல வாசமா? பகலெல்லாம் அங்கே குழையறது போதாதுன்னு ராத்தங்க வேறே ஆரம்பிச்சாச்சா? குதிர்மாதிரி பெண்ணை வீட்டில் வெச்சுண்டு குருக்கள்வாள் ப்ளான் என்ன போட்டிருக்கார்? ‘உங்காத்துப் பையனுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகல்லே வாஸ்தவந்தான். அதனால் என்ன? வளைகாப்புக்கு நாள் வெச்சாச்சு, ஸீமந்தம் முறைப்படி உங்கள் வீட்டில் சொல்லக் காத்’” பிறகு என்ன நேர்ந்ததென்று எனக்கே நிச்சயமான நினைவில்லை. எல்லாம் கோடழிந்த மாதிரிதான் இருக்கிறது. நான் பூமியை உதைத்துக் கொண்டு கிளம்பின நொடி நேரம் கால் பூமியைத் தொடவில்லை. ஆகாயத்தில் நீந்தின மாதிரியிருந்தது. அடுத்த நேரம் மாமா மேல் பொத்தென்று விழுந்தேன். ரொட்டி போல் தொப்பை என் முழங்காலின் கீழ் மெத்தென்று அமுங்கியது. ”ஐயோ! ஐயோ!” ஏக அமர்க்களம். ஆரவாரம். என் கண் இருட்டு. (இத்தனை பேர் இருப்பதற்கு அது கூட இல்லாவிட்டால் பிறகு என்ன இருக்கிறது?) அப்படியே பிய்த்துக் கொண்டவன் தான் நான். அனேகமாய் நாம் எல்லோருமே ஆணி மாண்டவ்யர்கள் தான். நாலு பேர் மெச்ச (”ஹி! ஹி!! ஹி!!!”) என் பேச்சின் பெருமையில் நான் நுகரும் இன்பம் தான் எனக்குப் பெரிசு. என் சொல்லில் கழுவேறிப் பிறர் படும் வேதனையை உண்மையில் நான் அறியேன். என் முறை வரும் வரை. மாமா சுபாவத்தில் கெட்டவர் என்று இன்றும் எனக்குத் தோன்றவில்லை. அவர் வாயுள் வார்த்தை நிற்கவில்லை. என் செயல் என் கட்டில் நிற்கவில்லை. அவ்வளவு தான். ஆனால் வாழ்க்கையின் திருப்பங்கள் எல்லாம் அனேகமாய் இம்மாதிரி கடிவாளம் தெறித்த சமயங்கள் தான். பூகம்பத்தில், குஹையை மூடிய பாறை தானே உருண்டு விழுகிறது. நுழைவது புதையல் குஹையோ புலிக் குஹையோ. புதையல் கண்டவன் எல்லாம் தன்னால் தான் என்று பூமாலை சூட்டிக் கொள்கிறான். புலிக்கிரையானவன் வேளைமேல் பழி. குருக்கள் வீட்டில் சொல்லிக் கொள்ளக் கூட நேரமில்லை. முதலில் அவர்களைப் பற்றி நினைக்க நேரமேது? வயல் பரப்பில் குறுக்கு வழியாக நான் விழுந்தடித்துக் கொண்டு வருகையிலேயே ரயில் குன்றை வளைக்க ஆரம்பித்துவிட்டது. அந்தத் திருப்பத்தில்தான் அதன் வேகம் சற்றுத் தணியும். டிக்கட் இல்லாமல் ஏறுபவன் அங்கு தான் தொத்திக் கொள்ள முடியும். நான் தொத்திக் கொண்டேன். பின்னால் வேணுமானால் ஆயிரம் நினைத்துக் கொள்ளலாம். பின்னால், அவ்வப்போது, சிறுகச் சிறுகத் தோன்றியதைக் கூட அப்பவே தோன்றியதாகச் சிந்தனையில் சேர்த்துக் கொண்டு, மாறாத நினைவுக்கு என்னைவிட இல்லை என்று எனக்கே நான் நினைப்பில் கோரி கட்டிக் கொண்டு, கட்டடம் கண்டு பிரமித்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம். நெஞ்சைச் சோதித்துக் கொண்டால், டிக்கட் இல்லாமையால் பரிசோதகன் அங்கங்கே என்னை இறக்கி விடுகையில், ஆங்காங்கு வேற்றிடத்தின் திகைப்பில், பசி வேதனையில், கரடிமலையிலிருந்து என் வெளியேற்றத்துக்கு நான் குருக்கள் வீட்டையே காரணமாகக் கண்டு, சமயங்களில் கசந்ததுதான் உண்மை. கரடிமலை மண்ணைக் காலினின்று இவ்வாறு உதறிய பிறகு சகுந்தலையின் நினைப்பில் இப்போதுதான் திரும்புகிறேன். மனித இயல்புக்கு வ்யவஸ்தை ஏது? ரயிலை விட்டிறங்கி, ஒரு மாட்டு வண்டியைத் தேடிப் பிடித்துக் கூலி பேசி, பெட்டி படுக்கை, மூட்டை முடிச்சுக்களை ஏற்றிக் கொண்டு, ‘லொடக்’ ‘லொடக்’கென்று ஆடி ஆடி வண்டி நகர்வதற்குள் வெய்யில் முதுகிலேறிவிட்டது. கண் விழித்ததிலிருந்து காப்பியைக் காணாது சாவித்ரிக்கு மண்டை பிளந்தது. முகமும் வாயும் கடுகடு சிடுசிடு. ஸ்டேஷனிலிருந்து கரடிமலை, வயல் வரப்பில் கால் நடையாகவே மூணு மைலுக்குக் குறைவில்லை. வண்டிப் பாதை கண்டிப்பாய் அஞ்சு குறையாது. கரடிமலை மேல் பெரிய குடைபோல் ஒரு கருமேகம் தொங்குகிறது. அதனடியில் திருவேலநாதர், அன்றிலிருந்து இன்றுவரை, வேணுமானால் இனிமேலும் என்று வரையும் மாறாதவர். ஏனெனில் அவர் எப்பவும் ஊமை. சில சமயங்களில் மலையுச்சியில் காலைக்கும் மாலைக்கும் கூட வித்தியாசம் தெரியாது. அன்றொரு நாள் மாலை... சுவாமிக்கு நீராட்டிய பின் குருக்கள் குன்றின் மறுபுறத்தில் பொன்னரளியைப் பறிக்கச் சென்றிருந்த சமயம், சந்ததி சந்ததியாக எண்ணெயும் தண்ணீரும் பூசி வழிந்து நாளுக்கு நாள் பளபள பப்பளபள லிங்கத்தின் மண்டை வழவழப்பில் என் மனதைக் கொடுத்திருக்கையில், என் பக்கத்தில் நின்றவள் சட்டென்று கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்கரித்து எழுந்து நின்றாள். ”இந்த நிமிஷம் நினைத்துக் கொண்டு நீ திடீரென்று வேண்டிக்கொண்டதென்ன?” என்று கேட்டேன். அந்தி ஒளிச்சாயங்களின் எதிர்பாராத தோய்வு தானோ என அவள் நெற்றி, கன்னங்கள் திடீரெனச் செவேலாகிவிட்டன. ”நான் வேண்டிண்டது இப்பவே வெளிச்சமாயிட்டால் வேண்டிண்டது வேண்டியபடி நடந்தேறுவது எப்படி?” அவளுடைய அந்தரங்கம் சிதைந்தாற்போல், அவள் கோபம் அவள் குரல் கடுப்பில் தெரிந்தது. என் கேள்வி அவளுக்கு அபசகுனமாய்ப் பட்டதோ என்னவோ? அந்த ஆத்திரத்தில் அழுது விடுவாள் போல் அவள் கீழுதடு பிதுங்கிற்று. வலது கன்னத்தில் நரம்பு ‘பட்பட்’ என அடித்துக் கொண்டது. அந்தத் துடிப்பின் மீது கையை வைக்கலாமா? ஆனால் ஆசை அஞ்சிற்று. விரல் நுனிகள், ரேகைகளின் கழிப்பே உள் சுருங்கிவிடும்போல், விரல்நுனிகளில் ஆயிரம் ‘ஜிவ்வுகள்’ கவ்வியிழுத்தன. உள்ளூர உணர்ந்தும் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்ள அஞ்சி இருவரும் அவர் சன்னிதானத்தில் படும் வேதனை கண்டு திருவேலநாதரின் உள்ளத்தில் மிளிரும் குஞ்சிரிப்பு அவர் மண்டை வரை ஒளி வீசுகின்றது. கல்லின் உருண்டையில் மண்டையென்றும் முகமென்றும் ஏது கண்டோம்? காலம்காலம் கற்பாந்த காலமாய் அவர் மட்டும் அறிந்து இது போன்ற எண்ணற்ற ஆத்ம ஆஹுதிகளின் தேனடைதானே அவரே! பித்தத்தின் உச்சம் தேன்குடித்த நரி புன்னகையாலேயே அழித்து புன்னகையாலேயே ஆக்கி புன்னகையாலேயே ஆகி புன்னகை மன்னன். ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே. |