http://www.chennailibrary.com


பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி ...

10. தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடல் ஆமே. 10

(இப்பாடல் 1165-ம் பாடலாகவும் வந்துள்ளது)

11. அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே. 11

12. கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே. 12

13. மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே. 13

14. கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே. 14

15. ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. 15

16. கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள் நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே. 16

17. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே. 17

18. அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே. 18

19. இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதியாக அமருகின்றானே. 19

20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் *அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலை அது தானே. 20

* அரனெறி

21. வானப் பெருங்கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே. 21

22. மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே. 22




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saiva/thirumanthiram2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.