திருக்குற்றால மாலை காப்பு
பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர் நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர் தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க் கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு. நூல்
மொழிகொண்ட மூவர் திருப்பாடல் கற்று முழுதுமுன்பால் வழிகொண்ட பேரன் புவைப்பதென்றே குழல்வாய் மொழிப்பெண் விழிகொண்ட காட்சிக் கெளியாய்பெண் பூமிபொன் வேட்கையெல்லா மொழிகொண்ட தொண்டர்க் குரியாய்குற் றாலத் துறைபவனே. 1 எனக்கேற நின்வழி நில்லாமல் யானென தென்னும்வழி தனக்கேறி ஐவர் தடையிற்பட் டேன்தடை தீர்ப்பதற்கோ கனக்கே ளுனையன்றிக் காணேன் முழுதும் உன் கையிற்பிள்ளை உனக்கேயடைக்கலம் திருவாசகம்கண்டாய்குற்றாலத் துறைபவனே 2 பொன்னைப் பரமென்று மின்னார் கலவிப் புலவியின்பம் தன்னைப் பரமென்று மேயிருந் தேன்யம தண்டம்வந்தால் பின்னைப் பரமொன்றுங் காணே னுனதருட் பேறருள்வாய் உன்னைப் பரமென்று சார்ந்தேன்குற் றாலத் துறைபவனே 3 ஆக்கமுண்டாக மகிழ்ச்சியுண்டாகியு மல்லவென்றான ஏக்கமுண்டாகியு மேயிளைத் தேனன்ப ரின்பக்கல்வித் தேக்கமுண் டாகியுந் தேறே னெனைமுற்றுந் தேற்றுகண்டாய் ஊக்கமுந் தூக்கமு மில்லாய்குற்றாலத் துறைபவனே 4 அருமந்த நின்னருள் போற்றென் பொசிப்புக் கமைத்தபடி வருமென்றிருக்கவு மாட்டேன் பிறவி மயக்கமறக் குருவென்று நீவந்து தோன்றாய்முன் மூவர்கள் கோட்டைகொன்ற ஒருமந்த காசப் படையாய்குற்றாலத் துறைபவனே 5 பெற்றார்தம் பிள்ளைக ணோவறியார் பிள்ளை நோவறிந்தால் சற்றா கிலும்பகிர்ந்தால் தரியார் தந்தை தாயினுமென் பற்றாப் பசிகண்டமுதூட்டி நோயறப் பார்க்கவல்ல உற்றா ருனையன்றி யுண்டோ குற்றாலத் துறைபவனே 6 மறையாடும் தெய்வத் திரிகூடஞ் சார்ந்து வடவருவித் துறையாடி உன்னைத் தொழுவதென் றோதடஞ் சோலையெல்லாம் சிறையாறு கால்வண்டு பண்பாட மாந்தளிர்ச் செங்கரத்தால் உறையாடுந் தேனமு தூட்டுங்குற் றாலத் துறைபவனே 7 கிள்ளைகள் போற்படித் தாவதிங் கேதுன் கிருபையின்பால் பிள்ளைகள் போலுண்ணப் பேறவருள் வாய்கிளிப் பிள்ளையெல்லாம் வள்ளைகள் பாடுஞ் சித்ராநதி யாயன்பு வைத்ததொண்டர் உள்ளையெல் லாங்கொள்ளை கொண்டாய்குற்றாலத் துறைபவனே 8 ஆசையெ லாம்பொருண் மேலோ யொருவ னகத்திலிரா வேசையு மென்னெஞ்சு மொக்குங்கண்டாய் விண்ணு ளோர்புரியும் பூசையம் போருகத் தாளாய் நிறைந்த சம்பூரணமாம் ஓசையும் விந்துவு மாவாய்குற் றாலத் துறைபவனே 9 கருக்கொண்ட போதுள்ளுங் கன்மருவி யாதி கருவிலுருப் பெருக்கும் பொழுது நெருக்கும் வியாதி பிறந்துபின்னை இருக்குஞ் சடமும் வியாதியென் றாலிதை நம்பிநன்றாய் உருக்குஞ் செனன மெடுத்தேன்குற் றாலத் துறைபவனே 10 கன்மமரும் பியவா வீங்கியைம் புலன்கண் கள்வைத்துப் பன்மலஞ்சீக் கொண்ட சென்மவி யாதி பழுத்துவந்தால் தன்ம வயித்தியன் சத்ரமிடா மற்ற விர்க்கமருந் துன்மலர்த் தாளினை தாராய்குற் றாலத் துறைபவனே 11 அமையம் பலவு மொருபொழு தாயசை யாமலுன்றன் சமயங் கருதத் தவமெய்து மோசண்ப காடவிசூழ் இமயம் பெறுமங்கை சுந்தரி கோமளையா மளையென்னும் உமையம் பிகைமண வாளாகுற்றாலத் துறைபவனே 12 பூங்கா ரணிகுழ லார்மயக் கால்மனம் புத்திசித்தம் ஆங்கா ரந்தட் டழிவேற்கி ரங்காயன் புநீர்பெருகித் தேங்கா மற்றேங்கு மனத்தார் பரவித்தி யானஞ்செய்யும் ஓங்கார வட்டத் தொளியேகுற் றாலத் துறைபவனே 13 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |