http://www.chennailibrary.com

Visit Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com



திருக்குற்றால ஊடல்

காப்பு

பொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற
ஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத்
திருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி
மருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே.

நூல்

குழல்வாய்மொழியம்மையார்:

தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வலம்புரியின் செம்பொற் கோயில்
தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே
ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்
ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே 1

குற்றாலநாதர்:

காகமணு காததிரி கூடமலை அணங்கேயுன் கற்பின் சீர்த்தி
யோகமுறை பணிந்தேத்தி உயர்மறை எலாம்வெளுப்பா யுனக்கு மூத்த
வேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே. 2

குழல்வாய்மொழியம்மையார்:

ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ணலாரே
சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்
மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே
நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோ உமது நெஞ்சந் தானே. 3

குற்றாலநாதர்:

நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ
உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்
அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி
மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே 4

குழல்வாய்மொழியம்மையார்:

மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல
வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத்து எந்தை யாரே
ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்
நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே 5

குற்றாலநாதர்:

நிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்
பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோம் அதுதனக்குப் பொறுப்பில் லாமல்
சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது
குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே. 6

குழல்வாய்மொழியம்மையார்:

அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே
பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே
இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
மின்னாரும் இனிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. 7

குற்றாலநாதர்:

வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண்டரியதவ வேடம் தாங்கி
ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி
மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட உங்களண்ணன் மார்க்க மெல்லாம்
காதுகேட்டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. 8

குழல்வாய்மொழியம்மையார்:

மாதர்பாற் பலிஇரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்
சாதுவாய்த் தோலுடுப்பீர் அரையிலுள்ள சோமனையும் தலைமேற் கொள்வீர்
காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே 9




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/thirikoodarasappar/thirukutralavudal.html

ஆன்மீகம்
தினசரி தியானம்

சென்னை நூலகம் தேடல்
Custom Search
இலக்கிய தகவல்கள்