திருக்குற்றால ஊடல் காப்பு
பொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற ஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத் திருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி மருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே. நூல்
குழல்வாய்மொழியம்மையார்:
தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வலம்புரியின் செம்பொற் கோயில் தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால் ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே 1 குற்றாலநாதர்:
காகமணு காததிரி கூடமலை அணங்கேயுன் கற்பின் சீர்த்தி யோகமுறை பணிந்தேத்தி உயர்மறை எலாம்வெளுப்பா யுனக்கு மூத்த வேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன் ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே. 2 குழல்வாய்மொழியம்மையார்:
ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ணலாரே சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம் மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோ உமது நெஞ்சந் தானே. 3 குற்றாலநாதர்:
நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய் அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே 4 குழல்வாய்மொழியம்மையார்:
மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத்து எந்தை யாரே ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர் நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே 5 குற்றாலநாதர்:
நிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில் பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோம் அதுதனக்குப் பொறுப்பில் லாமல் சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே. 6 குழல்வாய்மொழியம்மையார்:
அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர் மின்னாரும் இனிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. 7 குற்றாலநாதர்:
வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண்டரியதவ வேடம் தாங்கி ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட உங்களண்ணன் மார்க்க மெல்லாம் காதுகேட்டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. 8 குழல்வாய்மொழியம்மையார்:
மாதர்பாற் பலிஇரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர் சாதுவாய்த் தோலுடுப்பீர் அரையிலுள்ள சோமனையும் தலைமேற் கொள்வீர் காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர் ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே 9 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |