![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
வெள்ளை மாளிகையில் 6 கருப்பு நட்சத்திரம் "நான் படித்த எல்லா இலக்கியங்களிலேயும் என் உள்ளத்தில் அதிக அளவு எழுச்சியூட்டியது மார்க்ஸ் கார்வியின் தத்துவம் பற்றிய இலக்கியமே" என்று ஆர்வத்துடன் கூறினார் கனா நாட்டு அதிபராக இருந்து அகற்றப்பட்ட நிக்ருமா, 1958-ல். நீக்ரோக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் போராடியவர்களிலே மிகத் தீவிரவாதி இந்தக் கார்வி. இவர் பற்றிப் பெரு மதிப்புக் கொண்டவர் நிக்ருமா. அக்ராவில் 1958-ல் நடைபெற்ற அகில ஆப்பிரிக்க மக்கள் காங்கிரசில் பேசும் போது கார்வியைப் பெரிதும் பாராட்டிப் பேசியதுடன், கனா நாட்டுத் துரைத்தனம் அமைத்த வியாபாரக் கப்பல் அணிக்கு, நிக்ருமா, "கருப்பு நட்சத்திர அணி" என்று பெயருமிட்டார். எந்தக் கார்வியிடம் நிக்ருமா அத்தனை மதிப்பு வைத்திருந்தாரோ, அவர் பொறிபறக்க பேசினவர், புதுப்புதுத் திட்டம் தீட்டியவர் - துணிவுடன் போராடியவர், ஆனால் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திச் செல்லாமல் தோல்வி கண்டவர். பல ஆண்டுகள் கார்வியின் புகழ் நாடு பலவற்றினிலே பரவி நின்றது. கருப்பரின் கஷ்டமெல்லாம் இனித் தீர்ந்து போகும், விடுதலையும், புதுவாழ்வும் கிடைத்துவிடும் என்று எண்ணற்ற நீக்ரோக்கள் நம்பினர். மார்க்ஸ் கார்வி, நீக்ரோக்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு அல்லலையும் இழிவையும் தாங்கிக் கொண்டிருப்பானேன், அவர்களுக்கென்று தாயகம் இருக்கிறது, ஆப்பிரிக்கா! அங்கு சென்று உரிமையுடன் வாழ்ந்திடலாம்! எழுக! என்னுடன் வருக! ஆப்பிரிக்கா சென்றிடுவோம், அங்கு நமது அரசு கண்டிடுவோம்! என்று அழைத்தார். எழுச்சி ததும்பிற்று. மேற்கிந்தியப் பகுதியில் பிறந்த இந்தக் கார்வி அமெரிக்க நீக்ரோக்களின் மாபெரும் தலைவரானார். ஆப்பிரிக்கா சென்றிடுவது என்ற அவருடைய திட்டம், சொல்லளவுடன் இருந்து விடவில்லை; ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் தயாரிக்கப்பட்டன; பெருநிதி திரட்டப்பட்டது; பல இலட்ச நீக்ரோக்கள் புனிதப் பயணத்துக்குத் தயாராயினர், மூன்று கப்பல்கள் கிளம்பின! அந்தப் பயணக் கம்பெனிக்கு கார்வி சூட்டிய பெயர்தான் 'கருப்பு நட்சத்திரம்' என்பது. அந்தப் பெயரைத் தான் ஆட்சியில் அமர்ந்த போது நிக்ருமா கனா நாட்டுக் கப்பல் அணிக்குச் சூட்டினார். நிக்ருமாவுக்கு எழுச்சியூட்டத்தக்க சிறப்புப் பட்டங்கள் பல உண்டு; அதுபோலவே கார்விக்கும் தளபதிகளாக்கப்பட்டவர்களுக்கும் விதவிதமான பட்டங்கள். ஆப்பிரிக்க மாமன்னர் - மன்னர் - அமைச்சர் - தளபதி - என்றெல்லாம் பட்டங்கள். எல்லாம் அமெரிக்காவில் இருந்து கொண்டே! கார்வி ஆப்பிரிக்காவில் காலடி வைத்ததே இல்லை; ஆனால் பல ஆண்டுகள் அமெரிக்காவில் அவரைச் சுட்டிக் காட்டுவர் பெருமிதத்துடன், ஆப்பிரிக்க மாமன்னர் என்று! பட்டங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கேற்ற விதமான பகட்டுடைகள்! பவனிகள்! பராக்குகள்! கார்வி தோற்ற பிறகு இவை பற்றிப் பலர் ஏளனம் செய்தனர்; ஆனால் அவர் புனிதப் பயணம் பற்றிய திட்டத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது ஏளனம் செய்தவர் எவரும் இல்லை. எங்கும் எழுச்சி மயம்!! அப்போது நிக்ருமா, அமெரிக்காவில் மாணவர்! அந்த இளம் உள்ளத்தில் பதிந்துவிட்ட எழுச்சி காரணமாகவே, நிக்ருமா ஆட்சிக்கு வந்தபோது, கார்வியே தனக்கு 'வழிகாட்டி'யாக விளங்கிவந்தார் என்று கூறிடச் செய்தது. அடிமைப்பட்டு, இன்னலையும் இழிவையும் தாங்கித் தாங்கிக் குமுறிக் கிடக்கும் மக்களுக்கு, விடுதலை ஆர்வம் ஊட்ட, எழுச்சி உண்டாக, ஒரு நம்பிக்கை எழவேண்டும். அந்த நம்பிக்கையைத் தரத்தக்க ஒரு மாவீரன் வேண்டும். கார்வி அந்த மாவீரனாக விளங்கினான். ஆனால் எழுச்சியூட்டப் பயன்பட்ட அந்த மாபெருந் தலைவன் தானே எழுச்சி வயப்பட்டு, நடைமுறைக்கு ஏற்றதல்லாத திட்டம் தீட்டி, தோல்வி கண்டான்; சிறையிலே தள்ளப்பட்டான்; நாடு கடத்தப்பட்டான். நீக்ரோ இனத்தவரை அழைத்துச் சென்று மாபெரும் ஆப்பிரிக்கப் பேரரசு அமைக்கப் போவதாக அறிவித்து, அணிவகுப்பு நடத்திய கார்வி தன் கடைசி நாட்களை, இலண்டன் நகரில் கழிக்க வேண்டியதாயிற்று; கனவு கலைக்கப்பட்ட நிலையில்; மனம் உடைந்த நிலையில் கவனிப்பாரற்று! நட்சத்திரம் கருப்பாகி விட்டது! இலட்சியங்களைக் கொண்டு எழுச்சியூட்டுவதிலேயே வெற்றி கிட்டியான பிறகு, மக்களை அணி திரட்டியான பிறகு, செயலில் ஈடுபட்டு, இலட்சியத்தை நிறைவேற்றிட முனையும் போது ஏற்படும் ஏமாற்றம் தோல்வி வரலாற்று ஏட்டினிலே பலப் பல காணக் கிடக்கின்றன. இலட்சியம் காண்பதில், அதனை மக்கள் ஏற்று கொள்ளச் செய்வதில் வெற்றி கண்டவர்களிலேயே பலர், இலட்சியத்தை நடைமுறை வெற்றியாக்கிடும் முயற்சியில் தோல்வியால் தாக்குண்டு போயுள்ளனர். காலம் ஏற்றதாக அமையாததாலும் கருவிகள் செம்மையாகக் கிடைக்காததாலும், புதிய சூழ்நிலைகள் எதிர்பாராதவகையிலே வடிவமெடுத்து விடுவதாலும், அத்தகைய தோல்விகள் ஏற்பட்டு விடுகின்றன. அந்தத் தோல்விகள் எல்லாமே இலட்சியம் சரியானதல்ல என்பதற்குச் சான்றுகள் என்று கொண்டுவிடக் கூடாது. தோல்வி தாக்கிடும் என்று அஞ்சி இலட்சியங்களை மேற்கொள்ளாதிருப்பதும் தவறு; நடைமுறைக்கு ஏற்றதோ அல்லவோ என்பது குறித்த கவலையற்று காலமும் கருவியும் தக்கவிதமாக அமைகின்றனவா என்பதுபற்றிப் பொருட்படுத்தாமல், வெறும் இலட்சியமுழக்கம் எழுப்பியபடி இருந்து வருவதும் பயனற்ற வேலையாகிவிடும். குழலின் துளைகள் சரியானபடி அமைத்து விடுவதாலேயே அதனைக் கொண்டு எவரும் இன்னிசை எழுப்பிடலாம் என்று எண்ணுவதும் தவறு; அதுபோலவே திறமைமிக்க இசைப் புலவன் நான்! எனவே சூழலின் துளைகள் எப்படித் தாறுமாறாக இருப்பினும் இனிய இசையினை எழுப்பிட என்னால் முடியும் என்று இறுமாந்து கூறுவதும் தவறு. மக்கள் நம்முடன் வருவார்களா அவர்களால் முடியுமா கடினமான பயணம் மேற்கொள்ள என்று எண்ணி எண்ணித் தயங்கிப் பயணத்தைத் துவக்காமல் இருந்து விடுவதும் தவறு. மக்கள் தன்னோடு வருகிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலையற்று பயணத்தை மேற்கொண்டு விடுவதும் பயனற்றதாகிவிடும். ஆர்வம் காரணமாக, எந்தத் திட்டமும் எளிதாக நிறைவேற்றிவிடக் கூடியது என்ற 'மனமயக்கம்' ஏற்பட்டுவிடுவதுண்டு; ஆனால் அந்த மயக்கம் பீடித்து கொண்ட நிலையிலே செய்துவிடும் செயல் வெற்றிக்கு வழி அமைப்பதில்லை. அச்சகத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கிய கார்வி ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக கொடி, படை, முழக்கம் அமைத்துக் கொண்டு 'ஆப்பிரிக்கப் பேரரசு அமைத்திடுவேன்' என்று சூள் உரைத்துக் கிளம்பியபோது, வெற்றி நிச்சயம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார். பச்சை - கருப்பு - சிகப்பு - என்ற விதமான மூவர்ணக் கொடியினைப் பறக்கவிட்டார் கார்வி! கருப்பு, இனத்திற்குச் சின்னம்; சிகப்பு இரத்தம் சிந்தியேனும் வெற்றி காண்போம் என்பதனை உணர்த்த; பச்சை - வளமான வாழ்வு அமைந்திடும் என்பதற்கான அடையாளம்! கிட்டத்தட்ட பத்து இலட்சம் டாலர்கள் திரட்டினார், புனிதப் பயணத்துக்காக. கப்பல்கள் கிளம்பின! வழியிலேயே இன்னல், இழப்பு! திரட்டிய பணத்தைக் கொண்டு செம்மையாக அமைப்பை நடத்திட முடியவில்லை. பணம் திரண்டதும், பசப்பித் திரிவோர், பல்லிளிப்போர், பறித்துத் தின்போர் மொய்த்துக் கொண்டனர். பணம் பாழாயிற்று. பொதுமக்களிடம் பணம் திரட்டி மோசம் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. கார்விக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாண்டுச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு கார்வியை அமெரிக்க அரசு நாடு கடத்திவிட்டது. அவ்வளவோடு அவர் 'கதை' முடிந்தது. கார்வியை, மாணவ நாட்களிலே கண்டு களித்து, எழுச்சி பெற்ற நிக்ருமாவும், தனது நாட்டை வாழவைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெறியும் உள்ளத்தினர்; அதிலே ஐயமில்லை. ஆனால் நடைமுறைக்கு ஏற்றதா அல்லவா என்பதுபற்றி எண்ணிப் பார்த்திடாமல் திட்டம் பல மேற்கொண்டதுடன், எவருடைய கருத்தையும் மதிக்க மறுத்து, ஜனநாயகத்தைச் சிதைத்து ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தைத் திணித்தார்; எல்லாம் நாட்டின் நன்மைக்காகவே!! ஆனால் நாடு தாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. எந்த நாட்டிலே அவரை 'வழிபட்டு' நிற்க மக்கள் துடித்துக் கிடந்தனரோ, அதே நாட்டிலே அவர் இனி 'படையுடன்' வந்து போரிட்டு வெற்றி பெற்றாலன்றி 'பவனி' வந்திட முடியாது என்ற நிலை. ஜனநாயகம் சிதைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய கேட்டினைக் கனா நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது; அது போன்றே ஜனநாயகத்தை போலியானதாக்கி, ஆட்சி செய்பவரை 'தலையாட்டி' யாக்கிட தருக்கர் சிலர் முனையக் கூடும்; அதிலும் நிறவெறி காரணமாக அந்தத் தருக்கு ஏற்பட்டிருப்பின் எத்தகைய அக்கிரமத்தையும் துணிந்து செய்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார் இர்விங் வாலாஸ், தாம் எழுதிய கருத்தாழம் மிக்க மனிதன் என்ற ஏட்டின் மூலம். வெள்ளையருக்கு அஞ்சி அநீதிக்கு அடிபணியவும் மாட்டேன்; கருப்பர் என்ற இனப்பாசத்திற்காகவும் அநியாயத்துக்குத் துணை நிற்கவும் மாட்டேன் என்று டில்மன் பேச்சால் அல்ல, செயலால் காட்டியது கண்டு வெகுண்ட வெள்ளைப் பேரதிகாரிகள், அவர் மீது 'கண்டனம்' தொடுத்தனர். தகுதியற்றவர் தருக்கர் காமவெறி பிடித்தவர் சதிகாரருக்குத் துணை நிற்பவர் என்ற பல்வேறு வகையான குற்றங்களைச் சுமத்தினர். தம்பி! இனம், ஜாதி, குலம், செல்வம், என்பவை காரணமாக அமைக்கப்பட்டுவிடும் பேத உணர்ச்சி இருக்கிறதே, அதனால் ஆட்டிப்படைக்கப்படுபவர்கள், சொல்லிடவும் கூசும் கொடுமைகளைச் செய்திடவும் துணிவர்; இனப்பெருமை காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, கொலையும் துணிந்து செய்திடுவர். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் - ஜாதிப் பிடிப்பு இன்றுள்ளதைவிட பயங்கரமான அழுத்தத்துடன் இருந்தது; அந்த நாட்களில், ஜாதி வெறிபிடித்தவர்கள் எத்தகைய கொடுமையைச் செய்யத் துணிவர் என்பதனை எடுத்துக் காட்டும் ஒரு பயங்கரச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டு கிடுகிடுத்துப் போனேன். தன்னை சற்று மேல்ஜாதி என்று கூறிக் கொண்டு தமது மகளை மணமுடித்துக் கொண்டவன் உள்ளபடி தம்மைவிடச் சிறிதளவு 'மட்டமான' ஜாதி என்று அறிந்து கொண்ட பெண் வீட்டார், என்ன செய்தனர் தெரியுமோ! தாலியை அறுத்துப்போடு! அந்தத் தகாதவனுடன் செய்து கொண்ட திருமணம், சாஸ்திர சம்மதம் பெற்ற திருமணம் அல்ல!! - என்று கூவிக் கொக்கரித்து 'மாப்பிள்ளை'யை விரட்டிவிட்டு, பெண்ணைத் தமது வீட்டோடு வைத்துக் கொண்டார்கள் என்று எண்ணிக் கொள்ளுவாய். அவ்விதம் செய்யவில்லை! ஊரிலே கேள்வி பிறக்காதா? ஏன் பெண் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகவில்லை? என்ன தகராறு சம்பந்திகளுக்கு? என்று கேள்விகள் துவங்கி, கடைசியில் 'மட்ட ஜாதி'க்காரனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டார்களாம் என்ற உண்மை அம்பலமாகி, ஊர் ஏசுமே, ஏளனம் செய்யுமே! காலத்துக்கும் இருக்குமே அந்தக் கறை!! ஆகவே வெளியே சொல்லவில்லை. உண்மை தெரிந்துவிட்டது என்று மாப்பிள்ளையே கூடத் தெரிந்துகொள்ள விடவில்லை. புன்னகை காட்டியபடி இருந்தனர். மாப்பிள்ளை 'விருந்து' சாப்பிட வந்தவர், மாலையில் உலவப் போனார்! இரவு பிணத்தைத்தான் தூக்கிக் கொண்டு வந்து போட்டனர்; யாருக்கும் தெரியாமல், ஆளைவிட்டு அடித்துக் கொன்று போட்டு விட்டனர். மகளை விதவையாக்கினர், ஜாதி கெடக்கூடாது, ஜாதி காரணமாக இருந்து வந்த மதிப்பு மடியக் கூடாது என்பதற்காக; கொலையே செய்தனர், குலப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள! பெரிய இடம்! ஒரு துப்பும் கிடைக்கவில்லை! ஒரு புகாரும் எழவில்லை!! இங்கு மங்குமாக, மெள்ள மெள்ளப் பேச்சுக் கிளம்பிற்று. இருக்கும்! இருக்கும் என்றவர்களும், இதை எல்லாம் யார் கண்டனர் என்றவர்களும், இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது என்றவர்களும் நிரம்ப இருந்தனர்; இந்த அக்கிரமம் ஆகுமா என்று கேட்க எவரும் கிளம்பவில்லை. அது மட்டுமல்ல, தம்பி! ஜாதியைக் கெடுத்துக் கொள்ள எவனய்யா சம்மதிப்பான்? என்று கேட்டவர்களும், "வேறே வழி! தீர்த்துக் கட்டுவது தவிர வேறு வழி?" என்று 'நியாயம்' பேசியவர்களும், அவன் செய்த அநியாயத்துக்கு அவனை வெட்டி வெட்டியல்லவா போட்டிருக்க வேண்டும் என்று கொதித்துக் கூறியவர்களும், கொலை! கொலை! என்று பேசுகிறார்களே! பாம்பைச் சாகடிக்காமல், படுக்கையில் புரளவிடுவார்களா! ஜாதியைக் கெடுக்க வந்தவனைச் சாகடித்துப் போடாமல், சந்தனத் தாம்பூலம் கொடுப்பார்களா! என்று பேசியவர்களும் இருந்தனர், பெரிய புள்ளிகளாக! ஊருக்கு நியாயம் வழங்கும் பெரியவர்களாக!! ஒரு கருப்பு இனத்தவன் நாட்டை ஆள்வது, எஜமானர் இனமான வெள்ளையர் அடிபணிந்து கிடப்பது இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? இது சட்ட சம்பந்தமானது என்று சொல்லுகிறீர்களா? அரசியல் வேறு? இன இயல் வேறு என்று விளக்கம் கூற முற்படுகிறீர்களா? இந்த வாதமும் விளக்கமும் கோழைத்தனத்தின் விளைவு. மதிப்பறியா நிலையின் விளைவு; நான் அவ்விதம் இருக்க மாட்டேன்; இந்தக் கருப்பனை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டி அடிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன், நிம்மதியாக உறங்கமாட்டேன் என்று துவக்கமுதலே உறுமிக் கொண்டிருந்தான், நிறவெறியை ஒரு தத்துவம் தர்மம் என்று நம்பிய வெள்ளை இதழாசிரியன் ஒருவன். அவன் போன்றவர்கள், டில்மன் மீது வழக்கு தொடரப்பட்டதும் களிநடமாடினர். விரட்டி விடுவதைவிட, வீழ்த்தி விடுவதைவிட, அவன் மீது குற்றம் சுமத்தி, தண்டித்து வெளியே துரத்துவதுதான் அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய 'இனத்துக்கே' - இன்று மட்டுமல்ல, என்றென்றும் துடைக்கப்பட முடியாத கறையை ஏற்றிவைக்கும் என்று கருதி மகிழ்ந்தனர் நிறவெறியர்கள். இனம், ஜாதி, குலம் ஆகியவை கெட்டுவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், 'இரத்தக்கலப்பு' ஏற்படக் கூடாது; இரத்தக் கலப்பு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இரு இனத்தவர்க்குள்ளே கலப்புமணம் அனுமதிக்கப்படக்கூடாது; உடலுறவு ஏற்பட்டு விடக்கூடாது என்று அழுத்தமான நம்பிக்கை காரணமாக, கட்டுதிட்டமும் சட்டமும் சம்பிரதாயமும் அமைந்து விடுகின்றன. நீக்ரோக்கள் தாழ்ந்தவர்கள், அவர்களுடைய 'இரத்தம்' வெள்ளை இனத்தவரின் இரத்தம் போன்றதல்ல; உயர்வானது அல்ல! என்று வாதாடினர்; அக்கிரமக்காரர்களும் அடாவடிப் பேர்வழிகளுமல்ல, கற்றவர்களே!! தம்பி! இன்று வெகு எளிதாகக் கூறிவிடுகிறோம். எல்லோர் உடலிலும் ஒரேவிதமான இரத்தம் தான் ஓடுகிறது! இதிலே நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? என்று கேட்கிறோம். மறுப்பார் இல்லை!! ஆனால் அமெரிக்காவில் இன்றளவும், நீக்ரோ இரத்தம் வேறு, வெள்ளையர் இரத்தம் வேறு; இந்த இரண்டும் கலந்திடக்கூடாது என்ற முரட்டுத்தனத்தையும் குருட்டுப் போக்கையும் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் பலப்பலர்! இத்தகைய 'காட்டுமிராண்டி'க் கருத்தைக் கொண்டவர்கள் முன்பு அமெரிக்காவில், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என்ற நிலையிலும், பாதிரிமார்கள் என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருந்தனர். ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தாலும் போதும், நீக்ரோ ஆகிவிட வேண்டியதாகிவிடும்! ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தால் போதும் தலைமுடி சுருண்டுவிடும், உதடு பெருத்துவிடும், முகம் தட்டையாகி விடும், அறிவு ஒளி அணைந்து விடும், மிருக இயல்பு மிகுந்துவிடும், நீக்ரோ தன்மை தன்னாலே வந்துவிடும். 1906-ல் தம்பி! இப்படிக் கூறியவர் தாமஸ் டிக்சன் என்பார். கர்த்தருக்கு பூஜை நடாத்திடும் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் போக்கினராக இருந்த பல்லாயிரவரில் இந்த டிக்சன் ஒருவர். இவ்விதமான குருட்டுக் கோட்பாடு காரணமாக வெள்ளை இனத்தவர் தங்கள் 'இரத்தம்' தூய்மையானதாக இருந்தாக வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்ததுடன், நீக்ரோக்களுக்கு உரிமை கொடுத்தால், மனிதத் தன்மையுடன் நடத்திவந்தால், மெள்ள மெள்ள அந்த இரு இனத்துக்கும் இரத்தக் கலப்பு ஏற்பட்டு விடும். பிறகு வெள்ளை இனத்தின் உயர்வும் தனித்தன்மையும் நாசமாகிவிடும் என்று கருதினர். இந்த எண்ணத்தின் தொடர்பாக வேறோர் கருத்து கிளம்பிற்று; நீக்ரோக்கள் காமவெறியர்கள்! சிறிதளவு ஏமாந்த நிலையில் இருந்திடின் போதும், வெள்ளை மாதர்களைக் கற்பழித்து விடுவர்; அவர்களின் விலங்கியல்புக்கு வெள்ளை மாதர்கள் பலியாகிப் போவர்! - என்ற எண்ணம்! நீக்ரோக்களைத்தான் வெள்ளையர் தமது பண்ணைகளிலே மட்டுமல்ல, வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில், கேளிக்கைக் கூடங்களில் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தனர்; கடுமையாக உழைப்பார்கள், அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள், கூலியும் அதிகம் தரத் தேவையில்லை என்ற காரணத்தால். வெள்ளையருடன் - மாதருடனும் - பழகியே தீர வேண்டிய நிலை நீக்ரோக்களுக்கு. ஆனால் வெள்ளையர்களுக்குச் சொல்லிவைக்கப்பட்ட தகவல், கருப்பரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்கள் மிருக இயல்பினர், காமவெறி கொண்டவர்கள் என்பது! இதன் பயனாக வீணான சந்தேகத்துக்கு ஆளாகி, சித்திரவதை செய்யப்பட்ட நீக்ரோக்களைப் பற்றிய ஏடுகள் படிப்போரின் உள்ளத்தை உருக்கும்; இரத்தக் கண்ணீர் வடிப்பர். நிலைமையை உணர்ந்த நீக்ரோக்கள், இது விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பர். வெள்ளை மாதர்களை நெருப்பாகக் கருதுவர்! எந்த நேரத்தில் எந்த விதமான பழி சுமத்தப்பட்டுவிடுமோ என்பது மட்டுமல்ல, எந்தச் சமயத்தில் என்ன விதமான பயங்கரச் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமும் கூட. டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரானதும், இந்த நிலைமையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. தம்பி! படித்ததும், நம்மையுமறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது. வெள்ளையர்கள் மனதில் நெடுங்காலமாகப் படர்ந்து கிடக்கும் வெறுப்புணர்ச்சி, ஒரு கருப்பர் குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவி பெற்றுவிடுவதாலே மட்டும், ஒரே அடியாக மறைந்து விடுமா? தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது, சகித்துக் கொண்டாக வேண்டும். வேறு வழி இல்லையே, என்ன செய்வது, என்று எண்ணிக் கொள்வரேயன்றி, நிறம் எதுவாக இருந்தால் என்ன, குடியரசுத் தலைவர் என்ற முறையில், அவர் நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவராகிறார் என்றா எண்ணிக் கொள்வர்; இயல்பு இலேசாகவா மாறிவிடும்! டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவராகி, வெள்ளை மாளிகை சென்ற நாள்; முதல் நாள். குடியரசுத் தலைவருக்கென்று உள்ள பல அலுவலர்கள், ஒரு கருப்பரின் கீழ் வேலை செய்யவேண்டி இருக்கிறதே என்ற விசாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். சிலர் நீக்ரோ இனத்தவரான டில்மனுக்கு அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் பணியாட்களாக இருப்பது முறையாக இருக்கும் என்று கருதி, தமது வேலைகளை ராஜிநாமாச் செய்துவிட முடிவு செய்தனர். அவ்விதம் முடிவு செய்தவர்களில் ஒருவர் எட்னா என்ற வெள்ளை மாது; குடியரசுத் தலைவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்ப்பவர். இனி நீக்ரோ மாது ஒருத்தியைத்தான் இந்த வேலையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லவேண்டும், இன்று மட்டும் குடியரசுத் தலைவருக்கு அலுவலக முறைகளைக் கூறிவிட்டால் போதும் என்று எண்ணிக் கொண்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தயாராக எடுத்துக் கொண்டு, அன்று அவர் பார்க்கவேண்டிய அலுவல்கள் பற்றிய குறிப்புப் புத்தகத்துடன், குடியரசுத் தலைவருடைய தனி அறைக்குச் செல்கிறாள். டில்மனுக்கு வணக்கம் கூறிவிட்டு, அவருடைய அன்றைய அலுவல் பற்றிய குறிப்பைத் தந்துவிட்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தந்திடத் தயாராகிறாள். முக்கியமான ஒரு கடிதம் எழுதப்படவேண்டும் என்ற குறிப்பினைக் காட்டுகிறார் டில்மன். அவர் கூறிக்கொண்டு வர எட்னா சுருக்கெழுத்தில் எழுத வேண்டும். இருவரும் உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக அமைந்திருந்த ஒரு சோபாவைக் காட்டுகிறார் டில்மன். உடனே எட்னா, பலகணியை இழுத்து மூடுகிறாள்; அறைக் கதவைச் சாத்தித் தாளிடுகிறாள். "என்ன செய்கிறாய் எட்னா?" "கதவைச் சாத்தித் தாளிடுகிறேன். தாங்கள் கூறப்போகும் தகவல் - கடிதம் - இரகசியமானதாயிற்றே! குடியரசுத் தலைவர் தமது அந்தரங்கக் காரியதரிசியைக் கொண்டு தயாரிக்கும் கடிதத்தில் உள்ள விஷயம் வெளியே ஒருவருக்கும் தெரியக்கூடாதே..." "அதனால் கதவைத் தாளிட்டாயா, எட்னா? வேண்டாம், கதவு திறந்தே இருக்கட்டும். ஏன் என்று திகைத்திட வேண்டாம் - என் நிலை அப்படி - ஒரு சம்பவம் நினைவிலே இருக்கிறது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்த அயிசனவர் ஒரு நீக்ரோவுக்கு முக்கியமான பதவி கொடுத்தார் - அந்த நீக்ரோ தனக்கு உதவியாளராகப் பணிபுரிய, வெகு கஷ்டப்பட்டுத்தான் ஒரு வெள்ளை மாதைப் பெற முடிந்தது - வெள்ளை மாதர்கள் ஒரு கருப்பரிடம் வேலை பார்த்திட விரும்பவில்லை... பலர்... எப்படியோ... ஒரு பெண் கிடைத்தாள்... அவள் அலுவலகத் தனி அறையில் அமர்ந்து வேலை பார்க்கும்போது, கதவுகளைத் திறந்தே வைத்திருந்தாள். பாவம்! அத்தனை பயம், யார் என்ன சொல்வார்களோ, கருதிக் கொள்வார்களோ என்பதால்... நான் அந்தச் சம்பவத்தை மறக்கவே இல்லை... மறக்கவே முடியாது... எட்னா! கதவுகளைத் திறந்துவை! தம்பி! இந்தக் கருத்துப்பட டில்மன் கூறியதும், எட்னாவின் மனம் எப்படி உருகாமலிருந்திருக்க முடியும்? நிறம் கருப்பு என்ற ஒரு காரணத்தினால், குடியரசுத் தலைவர் பதவி பெற்ற போதிலும், வெள்ளை மாதுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருப்பது முறையல்ல, முறைமை அல்ல என்று வெள்ளை உலகம் வெகுண்டெழுந்து கூறும் என்றல்லவா கருதுகிறார் டில்மன்! நிலைமையும் வெள்ளையர் நினைப்பும் அதுபோலத்தானே இருக்கிறது! எத்தனை வேதனை ஏற்பட்டிருக்கும் தனது நிலைமையை எண்ணிப் பார்த்திடும் போது! தத்தளிக்கிறார் பரிதாபம்! இவருக்குப் பரிவு காட்டி, மனித உள்ளத்தோடு நடந்துகொள்ள வேண்டும். நிறவெறி எல்லோருக்கும் இருந்தே தீரும் என்பதில்லை; வெள்ளையரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனை மெய்ப்பித்தாக வேண்டும். அஞ்சாதீர் ஐயா! உமது நிறம் கருப்பு, என் நிறம் வெளுப்பு! இருந்தால் என்ன? ஒரு வெள்ளை மனிதர் மேலான பதவியில் இருந்தபோது நான் எப்படி நடந்து கொண்டேனோ அதுபோலவே உம்மிடம் நடந்துகொள்வேன்; பேதம் காட்டமாட்டேன்; உமது இதயத்தில் குமுறும் வேதனையை நான் உணருகிறேன்! - என்றெல்லாம் எட்னா கூறவில்லை; பார்வையின் மூலமாகவும் பெருமூச்சின் மூலமாகவும் இவ்வளவும் இதற்கு மேலும் விளக்கமாக்கினாள் போலும்! தலைவர் அவர்களே! கதவுகள் தாளிடப்பட்டே இருக்கட்டும். அதுதான் முறை. எப்போதும் உள்ள முறை. சரி. எட்னா! நான் பார்க்க வேண்டிய முதல் அலுவல் என்ன? குறிப்பு இருக்கிறதல்லவா? முதல் அலுவல், உமது அலுவலகத்திற்கான பணியாளர்களை நியமித்துக் கொள்வது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்தவரிடம் வேலை பார்த்தவர்களையே வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம்; புதிதாக நியமித்துக் கொள்ளவும் செய்யலாம். அப்படியா! முன்பு இருந்தவர்களையே நியமிக்க விரும்புகிறேன். எட்னா! முதலாவதாக உன்னிலிருந்து துவக்க விரும்புகிறேன், என்னிடம் பணியாற்ற சம்மதமா? நன்றி, வணக்கம். பணியாற்றுகிறேன் மகிழ்ச்சியுடன். அப்படியானால் எட்னா! குடியரசுத் தலைவராகியுள்ள நான் முதன் முதலாகப் பிறப்பிக்கும் உத்திரவு, உன்னை வேலைக்கு அமர்த்துவதுதான். மெத்தவும் நன்றி, தலைவர் அவர்களே! மிக்க நன்றி, உமக்கு எல்லோருமே துணை நிற்பார்கள்; உதவி செய்வார்கள்! அப்படியா கருதுகிறார்! எனக்கு அப்படித் தோன்றவில்லை, எட்னா! எல்லோரும் உதவி செய்வர்! உங்கள் வெற்றிக்காகப் பிரார்த்தனை நடத்துவர். ட்ருமனுக்கும் ஜான்சனுக்கும் துணை நின்றது போல உமக்கும் துணை புரிவார்கள், முன்பு போலவே. முன்பு! இப்போது நிலைமை மாறி இருக்கிறது. அவர்கள் - முன்பு தலைவர்களாக இருந்தவர்கள் கருப்பர் அல்லவே... இருக்கட்டும்... யாருடைய உதவி கிடைக்காவிட்டாலும், ஆண்டவனுடைய உதவி கிடைக்குமல்லவா... ஆண்டவன் கருப்பா, வெள்ளை நிறமா என்று நிச்சயிக்கப்படவில்லை அல்லவா! இந்தக் கருத்துப்பட டில்மன் பேசக்கேட்ட எட்னாவால் அழுத்திவைக்கப்பட்ட, தாழ்வாக நடத்தப்பட்டு வந்த ஒரு இனத்தின் இதயத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் வேதனையை உணர முடிந்தது. டில்மன் எத்தனை நேர்த்தியான நற்குணம் படைத்தவர் என்பதையும் எப்படி உணராமல் இருந்திருக்க முடியும்? ராஜிநாமாக் கடிதத்தைக் கசக்கி எறிந்துவிட்டு, அந்த மனிதனிடம் பணியாற்றி, மனிதத்தன்மையின் மாண்பினை உயர்த்திட உறுதி கொண்டாள். எட்னா எனும் வெள்ளை மாதிடம் இத்துணைப் பெருங்குணத்துடன் நடந்து கொண்ட டில்மன் மீதுதான் வெள்ளைப் பேரதிகாரிகள், சாலி வாட்சன் என்ற வெள்ளை மாதைக் கற்பழிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டினர். சாலி என்ற அந்த வெள்ளை மாது, வாட்சன் என்ற செனட் உறுப்பினரின் மகள்! சீமானின் மகள், சீமானுக்கு வாழ்க்கைப்பட்டு அவனிடமிருந்து விடுதலை பெற்று, புதிய பூங்காவில் உலவிடத் துடித்துக் கொண்டிருந்த உல்லாசி. குறியற்ற குதூகலத்திலும் சாலி குடைந்தாடியபடி இல்லை. பெரிய இடம் தேடிக் கொண்டிருந்தாள். ஈட்டன் என்ற வெள்ளைப் பேரதிகாரி, குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையினன்! ராஜாங்கக் காரியதரிசி என்ற செல்வாக்கு மிக்க பதவி வகித்து வந்தவன் - மணமானவன் - மனைவியோ மலைமுகடு, கடலோரம், சந்தைச் சதுக்கம், சல்லாபக்கூடம் ஆகிய இடங்களிலே உலவிக் கொண்டிருந்தாள், இவனைத் தனியனாக்கி விட்டு! அவனைத் தன் 'இனியன்' ஆக்கிக் கொண்டிருந்தாள் சாலி! இந்தச் சல்லாபியைக் கெடுக்க முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு. அவள் போக்கு அறிந்தவர்களும் அந்தப் புகார் கேட்டுக் கொதித்தனர்; ஆயிரம்தான் இருக்கட்டும், அவள் ஆடிக் கெட்டவள் என்ற பெயரெடுத்தவளாகக் கூட இருக்கட்டும், அவள் வெள்ளை இனம்! இவன் குடியரசுத் தலைவராகிவிட்டதாலேயே வெள்ளை இனத்தவனாகிவிடுவானா! கருப்பன்! நீக்ரோ! ஒரு நீக்ரோ வெள்ளை மாதைக் கற்பழிக்க...! என்ன அக்கிரமம்! என்ன அக்கிரமம்! என்று கொதித்தனர். டில்மன், மாசற்றவன்; பொறுப்பு மிக்கவன்; வெள்ளை இனத்தவரால் தன் இனத்தவர் மீது ஏற்றப்பட்டிருக்கும் பழிகளை நன்கு அறிந்தவன்; எட்னா எனும் வெள்ளை மாது தன்னுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருந்துங்கூட தகாத செயல் என்று 'நாலு பேர்' கூறுவார்களே என்பதை எண்ணி நடுங்கினவன்; நேர்மையாளன்! அவன் மீது இந்தப் பழி! பொதுவாக நீக்ரோக்கள் மீது சுமத்தப்படும் பழி இது! அவர்கள் மனிதர்கள் அல்லவே! மிருகங்கள்! மிருகங்கள் தாக்கத்தானே செய்யும், அடக்கி வைக்காவிட்டால்! சாலி வாட்சன் தந்திர மிக்க சதி புனைந்தாள். டில்மன் - ஒரு கரு நிறத்தான் - குடியரசுத் தலைவரானது அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை; ஆயினும் தானாக வலியச் சென்று 'சிபாரிசு' பிடித்துக் கொண்டு சென்று டில்மனிடம் வேலைக்கு அமர்ந்தாள்; - குடியரசுத் தலைவர் அவ்வப்போது உள்நாட்டுப் பிரமுகர்களுக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் நடத்திடும் விருந்து வைபவங்களைக் கவனித்துக் கொள்ளும் காரியதரிசியாக. பகட்டும் ஆடம்பரமும், பளபளப்பாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதற்கும் மட்டுமல்ல; குடியரசுத் தலைவருடன் நெருங்கிப் பழகவும், அவருடைய 'அந்தரங்கம்' அறியவும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால். அதிலே என்ன ஆதாயம்? என்று எண்ணுவாய் தம்பி! ஏன் ஆதாயம் இல்லை! கண்டறியும் தகவல்களை உடனுக்குடன் தன் 'காதலன்' ஈட்டனுக்குத் தந்திடலாம்; அதனைக் கொண்டு அவன் தன் செல்வாக்கை மேலும் வலுவாக்கிக் கொள்ளலாம்... பிறகு... பிறகு குடியரசுத் தலைவராகவே வந்துவிடலாமே, தக்கசமயம் பார்த்து. அதனால் சாலிக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்குமா? அவள் சாலி ஈட்டன் ஆகிவிடலாம்! அமெரிக்காவின் முதல் ஆரணங்கு ஆகிவிடலாம்!! இத்தனை சதித்திட்டம் உருவாயிற்று, அந்தச் சரசிக்கு. குடியரசுத் தலைவரின் கட்டிலறை! இரவு! ஆடை நெகிழ, மயங்கிய நிலையில், சாலி! டில்மன் அவளை எழுப்புகிறார்; அவள் சாய்கிறாள் மேலே; மயக்கத்தில்! அவர் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். எப்படி நேரிட்டது இந்த நிலை? ஏன் நேரிட்டது என்று கேட்கிறாய்; புரிகிறது தம்பி! உன் ஆசை. சல்லாபச் சீமாட்டியின் சதி நாடகத்தை அவ்வளவு சாமான்யமாகவா எண்ணிக் கொண்டாய். ஒரு வாரம் பொறுத்திரு, முழு வடிவம் கண்டிட. |