அகநானூறு - Akananooru - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 19 ...

181. தலைமகன் கூற்று

     துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
     பின் நின்று பெயரச் சூழ்ந்தனை; ஆயின்,
     என் நிலை உரைமோ - நெஞ்சே! ஒன்னார்
     ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
5   அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ,
     முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
     ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
     ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
     வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
10  விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
     பூ விரி அகன் துறைக் கனை விசைக் கடு நீர்க்
     காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
     எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
     வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
15  ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
     நான் மறை முது நூல் முக்கண் செல்வன்,
     ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
     பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
     கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
20  மகர நெற்றி வான் தோய் புரிசைச்
     சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
     புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
     பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
     பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
25  அணங்குசால், அரிவை இருந்த
     மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.

இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
பரணர்

182. தோழி கூற்று

     பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
     வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
     தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
     வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
5   ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
     வேட்டம் போகிய குறவன் காட்ட
     குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
     முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
     அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
10  உரவு மழை பொழிந்த பால்நாள் கங்குல்,
     தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
     பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
     கடும் பகல் வருதல் வேண்டும்; தெய்ய;
     அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
15  உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
     கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
     வெறி அயர் வியன் களம் கடுக்கும்
     பெரு வரை நண்ணிய சாரலானே.

தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது
குறிஞ்சி
கபிலர்

183. தலைமகள் கூற்று

     'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
     திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
     அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
     சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
5   நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
     பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
     குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
     வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
     இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
10  காலை வந்தன்றால் காரே; மாலைக்
     குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
     வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
     கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
     பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
15  வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
கருவூர்க் கலிங்கத்தார்

184. தோழி கூற்று

     கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
     புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
     நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
     இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
5   அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
     சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
     வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
     குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
     புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
10  ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
     தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
     புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
     கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
     அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
15  செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
     செக்கர் வானம் சென்ற பொழுதில்,
     கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
     தார் மணி பல உடன் இயம்ப
     சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.

தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது
முல்லை
மதுரை மருதன் இளநாகனார்

185. தலைமகள் கூற்று

     எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
     நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
     பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
     இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
5   வலித்து வல்லினர், காதலர்; வாடல்
     ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
     கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
     பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
     வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
10  அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
     பெரு விழா விளக்கம் போல, பல உடன்
     இலை இல மலர்ந்த இலவமொடு
     நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

186. பரத்தை கூற்று

     வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
     நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
     மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
     நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
5   இருங் கயம் துளங்க, கால் உறு தோறும்
     பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
     எழுந்த கௌவையோ பெரிதே! நட்பே,
     கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
     புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
10  ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
     ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
     தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
     இன்னும் பிறள் வயினானே; மனையோள்
     எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
15  மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
     காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
     செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
     யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
     திரு நுதல் பசப்ப நீங்கும்
20  கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது
மருதம்
பரணர்

187. தலைமகன் (அ) தோழி கூற்று

     தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
     நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
     நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
     அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
5   நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
     தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
     வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
     பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
     தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
10  புலம்புறும் கொல்லோ தோழி! சேண் ஓங்கு
     அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
     கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
     எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
     மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
15  கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
     வேனில் வெற்பின் கானம் காய,
     முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
     பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
     ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
20  கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
     வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
     நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
     வைகு கடல் அம்பியின் தோன்றும்
     மை படு மா மலை விலங்கிய சுரனே?

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம்
பாலை
மாமூலனார்

188. தோழி கூற்று

     பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
     இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
     போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
     அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
5   அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
     கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
     மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
     கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
     மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
10  பொலிந்த ஆயமொடு காண்தக இயலி,
     தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
     அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
     குறமகள் காக்கும் ஏனல்
     புறமும் தருதியோ? வாழிய, மழையே!

இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
குறிஞ்சி
வீரை வெளியன் தித்தனார்

189. செவிலி கூற்று

     பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
     விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
     கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
     நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
5   விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக்,
     களிறு அதர்ப் படுத்த கல் உயர் கவாஅன்
     வெவ் வரை அத்தம் சுட்டிப், பையென,
     வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்,
     திதலை அல்குல் குறுமகள் அவனொடு
10  சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
     படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
     மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
     நன்னராளர் கூடு கொள் இன் இயம்
     தேர் ஊர் தெருவில் ததும்பும்
15  ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது
பாலை
கயமனார்

190. தோழி கூற்று

     திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
     உப்பின் குப்பை ஏறி, எல் பட,
     வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
     ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
5   அலமரல் மழைக் கண் அமர்ந்தும் நோக்காள்;
     அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
     பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
     வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
     பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
10  உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
     இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
     வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
     எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
     நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
15  இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
     ஆய்ந்த பரியன் வந்து, இவண்
     மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது
நெய்தல்
உலோச்சனார்






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247