-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்



(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

நான்காம் பாகம்

34. ஆன்மப் பயிற்சி

     சிறுவர்களின் உடல், அறிவுப் பயிற்சியைவிட அவர்களுடைய ஆன்மிகப் பயிற்சியே இன்னும் அதிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆன்மப் பயிற்சிக்கு நான் சமய நூல்களை அவ்வளவாக நம்பியிருக்கவில்லை. என்றாலும், ஒவ்வொரு மாணவனும் தன் சமயத்தைக் குறித்த மூலாதாரமான விஷயங்களை அறிந்திருப்பதோடு அச்சமய சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம் என்று கருதினேன். ஆகவே, என்னால் இயன்றவரையில், அத்தகைய அறிவு அவர்களுக்கு இருக்கும்படி செய்து வந்தேன். ஆனால், அது அறிவுப் பயிற்சியின் ஒரு பகுதியே என்பது என் கருத்து. டால்ஸ்டாய் பண்ணையில் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கும் பணியை நான் மேற் கொள்ளுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆன்மப் பயிற்சி அதனளவில் தனியானது என்பதை அறிந்திருந்தேன். ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரைப் பாடுபடும்படி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும். இளைஞருக்கு அளிக்க வேண்டிய பயிற்சியில் இது முக்கியமானதோர் பகுதி என்று கருதினேன். ஆன்ம வளர்ச்சியோடு தொடர்பில்லாத எல்லாப் பயிற்சியும் பயனற்றது என்றும், அது தீமையாகவும் ஆகக் கூடும் என்றும் எண்ணினேன்.

     வாழ்க்கையில் நான்காவது நிலையான சன்னியாச ஆசிரமத்தை அடைந்த பிறகே ஆன்ம ஞானத்தை அடைய முடியும் என்ற மூட நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், மதிப்பதற்கரியதான இந்த அனுபவத்திற்கு வேண்டிய முயற்சியை வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தை அடையும் வரையில் தள்ளி வைத்துக் கொண்டு போனால் பிறகு அடைவது கிழப் பருவத்தையேயன்றி ஆன்ம ஞானத்தை அன்று. பரிதாபகரமான இரண்டாவது குழந்தைப் பருவத்திற்குச் சமமான அந்த முதுமைப் பருவம், பூமிக்குப் பாரமாக வாழ்வதேயாகும். நான் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தபோதே, 1911-12-ஆம் ஆண்டிலேயே இக்கருத்தைக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால், என்னுடைய இக்கருத்துக்களை இதே முறையில் நான் அப்பொழுது எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.

     அப்படியானால், ஆன்மப் பயிற்சியை அளிப்பது எப்படி?குழந்தைகள், தோத்திரப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் படி செய்தேன் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் நூல்களிலிருந்து அவர்களுக்குப் படித்துச் சொன்னேன். ஆனால் இவையெல்லாம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. குழந்தைகளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பிக்கவே, நூல்களின் மூலம் அவர்களுக்கு ஆன்மப் பயிற்சியை அளித்துவிட முடியாது என்பதைக் கண்டேன். எவ்விதம் தேகாப்பியாசங்களின் மூலமே உடற்பயிற்சியும், அறிவு அப்பியாசங்களினாலேயே அறிவுப் பயிற்சியும் அளிக்க முடியுமோ அவ்வாறே ஆன்ம சாதனங்களினாலேயே ஆன்மப் பயிற்சியை அளிக்க முடியும். ஆன்ம சாதனப் பயிற்சியோ, முழுக்க முழுக்க உபாத்தியாயரின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் பொறுத்தது. ஓர் உபாத்தியார் குழந்தைகளின் நடுவில் இருக்கும் போதும் சரி, தனியாக இருக்கும் போதும் சரி, தம்முடைய குணத்திலும் செயலிலும் எப்பொழுதும் அதிகக் கவனத்துடன் இருக்கவேண்டும்.

     ஓர் உபாத்தியாயர், மாணவர்களுக்குப் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதும் தமது வாழ்க்கை முறையைக் கொண்டு அம்மாணவர்களின் ஆன்மப் பயிற்சிக்கு உதவவோ, தீமை செய்யவோ முடியும். நான் பொய்யனாக இருந்து கொண்டு, உண்மை பேசும்படி மாணவர்களுக்குப் போதிப்பது என்பது வீண் வேலை. தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும், பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.

     அங்கே இருந்த பையன்களில் ஒருவன் முரடன்; அடங்காப்பிடாரி. அவன் பொய் சொல்லுவான்; யாருடனும் சண்டை போடுவான். ஒரு நாள் அவன் துஷ்டத்தனம் எல்லை மீறிப் போய்விட்டது. எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. சிறுவர்களை நான் தண்டித்ததே இல்லை. ஆனால், அச்சமயமோ எனக்கு அதிகக் கோபம் வந்துவிட்டது. அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்தப் பார்த்தேன். அவனோ, பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான். கடைசியாகப் பக்கத்திலிருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன். அவனை அடித்தபோதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. இதை அவனும் பார்த்திருக்கவே வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே இது புதிய அனுபவம். அப்பையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினான். அவன் அழுதது, பட்ட அடி அவனுக்கு வேதனையாக இருந்ததனால் அல்ல. அவன் பதினேழு வயதுள்ள திடகாத்திரமானவன். விரும்பியிருந்தால், என்னை அவன் திருப்பி அடித்திருக்கவும் கூடும். ஆனால், அடிக்கவேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்துகொண்டான். இச் சம்பவத்திற்குப் பிறகு அவன் எனக்குப் பணியாமல் இருந்ததே கிடையாது. என்றாலும், பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்றும் வருத்தப்படுகிறேன். அன்று அவனுக்கு முன்னால் என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டி விட்டேன் என்று அஞ்சுகிறேன்.

     அடிப்பது போன்ற தண்டனையே கூடாது என்று நான் எப்பொழுதும் எதிர்த்து வந்திருக்கிறேன். என் குமாரர்களில் ஒருவனை ஒரே தடவை மாத்திரம் நான் அடித்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆகையால், அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா, தவறா என்பதில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். கோபத்தினாலும், தண்டிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தூண்டப் பெற்று நான் அவ்விதம் செய்ததால் ஒருவேளை அது தவறானதாக இருக்கலாம். என் மன வேதனையை வெளிப்படுத்துவதாக மாத்திரமே அது இருக்குமாயின், அது நியாயமானதே என்று நான் கருதியிருப்பேன். ஆனால், இவ்விஷயத்தில் நோக்கம் கலப்பானதாகவே இருந்தது.

     இச்சம்பவம், என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படி செய்தது, மாணவர்களைத் திருத்துவதற்குச் சிறந்த முறையையும் அது எனக்குப் போதித்தது. ஆனால், அம்முறை நான் கூறிய அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தூரம் பயன்பட்டிருக்கும் என்று நான் கூற முடியாது. இளைஞன் சீக்கிரத்திலேயே அச் சம்பவத்தை மறந்துவிட்டான். எப்பொழுதேனும் அவனிடம் அதிக அபிவிருத்தி காணப்பட்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இச் சம்பவம் மாணவர்கள் விஷயத்தில் உபாத்தியாயரின் கடமை என்ன என்பதை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது.

     சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டுவிட்ட சம்பவங்கள் இதற்குப் பிறகும் நடந்தது உண்டு. ஆனால், அடி கொடுக்கும் தண்டனையில் அதன் பிறகு நான் இறங்கியதே இல்லை. இவ்விதம் என்னிடம் இருந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்க நான் செய்த முயற்சியில் ஆன்மாவின் சக்தியை மேலும் மேலும் நன்றாக நான் அறியலானேன்.