இரண்டாம் பாகம் : சுழற்காற்று 51. சுழிக் காற்று காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். அவன் உள்ளத்தில் மட்டும் பேரலைகள் எழுந்து விழுந்தன. திடீரென்று இரு கரங்களையும் கடலை நோக்கி நீட்டிக் கொண்டு, 'ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷட்!' என்று கூவினான். மறுகணத்தில் கையில் கத்தியை எடுத்துக்கொண்டான். சக்கராகாரமாக இரண்டு தடவை சுழற்றினான். "ஆம்! ஆம்! சமுத்திர ராஜன் பலி கேட்கிறான்! இரட்டைப் பலி கேட்கிறான். தூங்குகிறவர்களைத் தாக்கிக் கொல்லும் இரண்டு சூரர்களைப் பலியாகக் கொடு என்று கேட்கிறான்! பலி கொடுத்தால் தான் மேலே இந்த மரக்கலத்தைப் போக விடுவேன் என்கிறான். எங்கே! உடனே அப்படி இரண்டு பேரும் வந்து தலையை நீட்டுங்கள்! சீக்கிரம்!" என்று ஆர்ப்பரித்தான். "தம்பி! இது என்ன விளையாட்டு?" என்றான். "அண்ணன்மார்களே! இது விளையாட்டு அல்ல; வினை! சற்று முன் நான் கீழே கட்டப்பட்டுக் கிடந்தபோது சிறிது தூங்கிப் போனேன். அப்போது கனவு கண்டேன். கடலையும் வானத்தையும் ஒன்றுசேர்த்த பூதம் போன்ற நீல நிற உருவம் ஒன்று என் முன்னால் நின்றது. ஏதோ சொல்லியது, அது என்னவென்று அப்போது புரியவில்லை; இப்போது புரிந்தது! மந்திர தந்திரங்களில் தேர்ந்த காளி பக்தர்கள் இரண்டு பேருடைய உயிர்ப் பலி வேண்டும் என்று சமுத்திர ராஜன் கோருகிறான். கொடுக்காவிட்டால் இந்தக் கப்பலை மேலே போக விடமுடியாது என்றும் சொல்லுகிறான். ஆறு முரட்டு அராபியர்களின் உயிர்ப் பலியினால் அவன் திருப்தி அடையவில்லை. வாருங்கள்! சீக்கிரம்!" என்று கூறி, வந்தியத்தேவன் கையில் பிடித்த கத்தியை வானை நோக்கி உயர்த்தினான். ரவிதாஸனும், தேவராளனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ரவிதாஸனும், "தம்பி! கதை கட்டுவதில் உன்னைப் போன்ற கெட்டிக்காரனை நான் பார்த்ததேயில்லை!" என்றான். வந்தியத்தேவன், "ஓ! நான் சொல்லுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கதை கட்டுகிறேனா? சமுத்திர ராஜனே இந்த மூடர்களுக்கு நீயே மறுமொழி சொல்!" என்று கூவினான். அவன் அவ்வாறு கூவிய குரல் சமுத்திர ராஜனுடைய காதிலே கேட்பது போலும். அதற்கு மறுமொழி கூறவும் சமுத்திர ராஜன் விரும்பினான் போலும்!
கடலில் அப்போது ஒரு விந்தையான காட்சி
தென்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் நாலு திசைகளிலும் கடல் ஒரு சிலிர்ப்புச்
சிலிர்த்தது. சிறிய சிறிய சின்னஞ் சிறிய அலைகள் ஆயிரமாயிரம் எழுந்து
விழுந்தன. இது ஒரு நிமிஷ நேரந்தான். அடுத்த நிமிஷத்தில் அவ்வளவு அலைகளும்
வெள்ளிய நுரையின் நுண் துளிகளாக மாறின. விரிந்து பரந்த கடற் பிரதேசமெங்கும்
அந்த வெண் நுரைத் துளிகள் துள்ளி விளையாடின. விசாலமான பசும்புல் தரையில்
கோடி கோடி கோடித் தும்பை மலர்களை இளங்காற்றில் உருண்டு உருண்டு உருண்டு
போய்க் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்! அவ்வாறு இருந்தது அச்சமயம்
கடலின் காட்சி!
ஆம்; இலேசான இளங்காற்று, - இனிய குளிர்ந்த காற்று - அந்த மரக்கலத்தையும் ஒரு கணம் தழுவிக்கொண்டு அப்பால் சென்றது. கப்பலில் ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்தது. வெப்பத்தினால் வறண்டிருந்த வந்தியத்தேவனுடைய உடலும் சிலிர்த்தது. "தம்பி! சமுத்திர ராஜனே உன் கேள்விக்கு மறுமொழி சொல்லிவிட்டான்! நாங்கள் எங்களைப் பலி கொடுக்க ஆயத்தமாக வேண்டியதுதான்!" என்றான் ரவிதாஸன். வந்தியத்தேவன் உள்ளம் கலக்கமுற்று. கடலிலே ஏற்பட்ட அந்தச் சிலு சிலுப்பும் உடனே ஏற்பட்ட மாறுதலும் அவனைத் திகைக்கச் செய்திருந்தன. ஆகா! இது என்ன? அவ்வளவு ஆயிரமாயிரம் சிறிய அலைகளும் கோடானு கோடி வெண் நுரைத்துளிகளும் எங்கே போயின? மாயமாய்ப் போய் விட்டனவே? மறுபடியும் கடல் அமைதியுற்றுப் பச்சை நிறத்தகடு போல் காணப்படுகின்றதே! சற்று முன் கண்ட காட்சி உண்மையாக நிகழ்ந்ததா? அல்லது வெறும் பிரமையா? ஒருவேளை இந்த மந்திரவாதி ரவிதாஸனின் மந்திர சக்தியாகத்தான் இருக்குமோ! "அதோ பார்த்தாயா? தம்பி! கடல் கூறியதை வானமும் ஆமோதிக்கிறது!" என்று ரவிதாஸன் தென்மேற்குத் திசையைச் சுட்டிக் காட்டினான். அவன் காட்டிய திசையில் - பச்சைக் கடலும் நீல வானமும் ஒன்று சேரும் மூலையில், - ஒரு சின்னஞ் சிறு கரியமேகத் துணுக்கு ஒரு சாண் உயரம் எழுந்து நின்றது. அந்தக் கரிய மேகத் துணுக்கின் உச்சிப் பகுதி செக்கச் செவேலென்று இரத்தச் சிகப்பு வர்ணத்துடன் திகழ்ந்தது. சாதாரண நாட்களில் இந்தத் தோற்றத்தை வந்தியத்தேவன் கவனித்திருக்கவே மாட்டான். கடலும் வானும் சேரும் மூலையில் மேகத்திரள் காணப்படுவது ஓர் ஆச்சரியமா, என்ன? இல்லைதான்! ஆயினும் அந்தச் சிறிய தோற்றமும் அந்த வேளையில் நம் கதாநாயகனுடைய மனத்தைச் சிறிது கலக்கி விட்டது. மறு கணத்தில் வந்தியத்தேவன் சமாளித்துக் கொண்டான். இந்த மந்திரவாதியின் வலையில் நாம் விழுந்து விடக்கூடாது. என்று மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான். ரவிதாஸனை ஒரு தடவையும் தேவராளனை ஒரு தடவையும் விழித்துப் பார்த்து, "அப்படியானால் ஏன் தாமதம்? வாருங்கள்!" என்று சொல்லிக் கத்தியை வீசினான். "அப்பனே! நாங்கள் பலியாவதற்கு முன்னால் எங்கள் குலதெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம். அரை நாழிகை அவகாசம் கொடு!" என்றான் ரவிதாஸன். "சரி! பிரார்த்தனையைச் சொல்லி விட்டு உடனே வாருங்கள். உங்கள் தந்திர மந்திரம் ஒன்றையும் என்னிடம் காட்டவேண்டாம். காட்டினாலும் பலிக்காது!" என்றான் வந்தியத்தேவன். "இதோ வந்துவிடுகிறோம் எங்களுடைய ஆயுதத்தையும் இங்கேயே போட்டுவிட்டுப் போகிறோம், பார்!" என்றான் ரவிதாஸன். அப்படியே இருவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அம்மரக்கலத்தின் இன்னொரு புறத்துக்குச் சென்றார்கள். அந்த அரை நாழிகை, அச்சமயம் வந்தியத்தேவனுக்கும் தேவையாயிருந்தது. கடலிலும் வானிலும் ஏற்பட்ட தோற்றங்களினால் விளக்கமில்லாத கலக்கம் அவனுடைய உள்ளத்தில் எழுந்து அவன் உடம்பையும் சிறிது தளரச் செய்திருந்தது. அவசியம் நேர்ந்தால் ஒரே கத்தி வீச்சில் அந்த கிராதகர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் அதற்கு வேண்டிய பலம் தன் கையில் அச்சமயம் இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டிருந்தது. ஆகையால் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கையிலும் பூரண பலத்தை வருவித்துக் கொள்ளச் சிறிது அவகாசம் அவனுக்கு வேண்டியிருந்தது. தென்மேற்கு மூலையில் கவனம் மறுபடியும் தற்செயலாகச் சென்றது. சற்றுமுன்னால் சாண் உயரம் தோன்றிய மேகத்திரள் இப்போது முழு உயரமாக வளர்ந்திருந்தது. உச்சியில் இரத்தச் சிகப்பு நிறம் சிறிது மங்கியிருந்தது. மேகத்திரள் மேலும் மேலும் உயர்ந்து வருவதாகத் தோன்றியது. முதல் சிலுசிலுப்புடன் நின்று விட்டிருந்த காற்று மறுபடியும் நிதானமாக வரத்தொடங்கியது. கடலிலும் கலக்கம் காணபட்டது. சிறிய சிறிய அலைகள் நடனமாடத் தொடங்கியிருந்தன. மேகத்திரள் மேலும் மேலும் வானில் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. காற்றின் வேகமும் அதிகரித்து வருவதாகத் தோன்றியது. கப்பல் இலேசாக அசைய ஆரம்பித்தது. ஆ! இது என்ன? துடுப்புகளினால் படகு தள்ளும் சத்தம் அல்லவா கேட்கிறது?.. வந்தியத்தேவன் உடனே ஓடிச் சென்று கப்பலின் மறுபக்கத்தை அடைந்தான். அவன் அங்கே கண்ட காட்சி உண்மையில் அவனைத் திடுக்கிடச் செய்தது. அப்படி நடக்கக் கூடும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னைச் சமரசப்படுத்துவதற்காக அவர்கள் கலந்து யோசனை செய்யப் போயிருக்கிறார்கள் என்றே நினைத்தான். ஆனால் அவர்கள் கப்பலின் மறுபக்கத்தில் சேர்த்துக் கட்டியிருந்த சிறு படகை அறுத்துவிட்டுக் கடலிலே, இறங்கி அதில் ஏறிக்கொண்டிருந்தார்கள்! துடுப்பு வலித்துப் படகைத் தள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள்! வந்தியத்தேவனைப் பார்த்ததும் ரவிதாஸன் சிரித்தான். "தம்பி! சமுத்திர ராஜனுக்குப் பலியாக எங்களுக்கு விருப்பம் இல்லை தெரிகிறதா?" என்றான். வந்தியத்தேவன் ஒரு நொடியில் தன் நிலையை உணர்ந்தான் அந்தப் பெரிய மரக்கலத்தில் தன்னைத் தனியாக விட்டுவிட்டு, அவர்கள் போகிறார்கள். கப்பல் ஓட்டும் கலையைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. கடலில் எந்த இடத்தில் கப்பல் நிற்கிறது, எந்தத் திசையாகப் போனால் எங்கே போய்ச்சேரலாம் என்பதொன்றும் அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட அநாதரவான நிலையில் அவனை விட்டுவிட்டு அவர்கள் போகிறார்கள். "பாவிகளே! என்னையும் அழைத்துக்கொண்டு போகக் கூடாதா?" என்று கேட்டான். "தம்பி! சமுத்திர ராஜனுக்கு ஒரு பலிகூட இல்லாமற் போகலாமா?" என்றான் ரவிதாஸன். படகு கப்பலை விட்டு அகன்று போய்க்கொண்டேயிருந்தது. 'கடலில் குதித்துப் படகைப் போய்ப் பிடிக்கலாமா?' என்று வந்தியத்தேவன் ஒரு கணம் நினைத்தான். உடனே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவனுக்கோ நன்றாக நீந்தத் தெரியாது. கப்பலிலிருந்து குதிப்பதற்கே மனம் திடப்படாது. அப்படிக் குதித்துத் தட்டுத் தடுமாறிச் சென்று படகைப் பிடித்தாலும் அந்தக் கிராதகர்கள் என்ன செய்வார்களோ, என்னமோ? தன்னிடம் அவர்களுடைய இரகசியத்தை வெளியிட்டு விட்டார்கள்! தான் அவர்களுடன் ஒருநாளும் சேரப் போவதில்லையென்பதையும் தெரிந்து கொண்டார்கள். படகைப் பிடிக்கப் போகும் சமயத்தில் அவர்கள் தன்னைத் துடுப்பினால் அடித்துக் கொல்லப் பார்க்கலாம். தான் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டே படகில் உள்ளவர்களுடன் சண்டை போட முடியாதல்லவா? 'போகட்டும்! போய்த் தொலையட்டும்! அந்தச் சண்டாளக் கொலைக்காரர்களுடன் ஒரு படகிலே இருப்பதைக் காட்டிலும் இந்தப் பெரிய கப்பலில் தன்னந்தனியாக இருப்பதே மேல்! இதற்கு முன்னால் எத்தனையோ சங்கடங்களிலிருந்து கடவுளின் கிருபையினால் தான் தப்பிப் பிழைக்கவில்லையா? இந்த அபாயத்திலிருந்து தப்புவதற்கும் கடவுள் ஏதேனும் வழி காட்டுவார்! பாவிகள் போகட்டும்... ஆனால் அவர்களை உயிருடன் போகவிட்டது சரியா? அவர்கள் எங்கே போய்க் கரை ஏறுவார்களோ? இன்னும் என்னென்ன சூழ்ச்சிகளையும் கோர கிருத்யங்களையும் செய்வார்களோ? கடவுள் இருக்கிறார், நாம் என்ன செய்ய முடியும்? எப்படியாவது இளவரசருடன் மறுமுறை சேர்ந்து விட்டால் போதும்! இருந்தாலும் அவர் இப்படி என்னைக் கைவிட்டிருக்கக்கூடாது! பூங்குழலியுடன் என்னையும் யானை மீது ஏற்றி அழைத்துப் போயிருக்கலாம். மறுபடியும் அவரைச் சந்திக்க நேர்ந்தால், கட்டாயம் பலமாகச் சண்டை பிடிக்க வேண்டும். "உங்கள் பழமையான சோழ குலத்தின் சிநேகதர்மம் இதுதானா?" என்று கேட்க வேண்டும். ஆனால் அப்படிக் கேட்கும் சந்தர்ப்பம் வரப்போகிறதா?.. இளவரசரை மீண்டும் பார்க்கப் போகிறோமா?... ஏன் பார்க்க முடியாது? நான் இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டதைச் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது செய்யாமலா இருப்பார்கள்? இளவரசரை அவர்கள் சந்தித்திருந்தால் கட்டாயம் சொல்லியிருப்பார்கள் அல்லவா?' இப்படி வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டு நின்ற நேரத்தில் படகு கடலில் வெகுதூரம் போய்விட்டது என்பதைக் கவனித்தான். படகு அவ்வளவு வேகமாகச் சென்றது எப்படி? படகு மட்டும் போகவில்லை; தான் ஏறியிருந்த கப்பலும் இலேசாக அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனாலேதான் கப்பலுக்கும் படகுக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் அவ்வளவு தூரம் ஏற்பட்டுவிட்டது! கடலில் அலைகள் பெரிதாகிக் கொண்டு வருவதையும் வந்தியத்தேவன் பார்த்தான். அது மட்டுந்தானா? இது என்ன? பட்டப்பகலில் திடீரென்று ஒரு பக்கம் இருண்டு வருகிறதே! மேகத்திரள்கள் மேலும் புரண்டு உருண்டு வந்தியத்தேவனுடைய தலைக்கு மேலே வந்தன. பிறகு கீழ்த் திசையிலும் இறங்கத் தொடங்கின. படகு சென்ற திசையை வந்தியத்தேவன் நோக்கினான். படகு இருந்த இடமே தெரியவில்லை. அவனுடைய பார்வையின் எல்லைக்கு அப்பால் போய்விட்டது போலும்! காற்றின் மெல்லிய ரீங்காரம் 'ஹோ' என்ற பெரும் இரைச்சலாக மாறிவிட்டது. அத்துடன், நிமிஷத்துக்கு நிமிஷம் பெரிதாகி வந்த அலைகளின் இரைச்சலும் சேர்ந்தது. கப்பலில் விரித்திருந்த பாய்கள் சடபடவென்று அடித்துக் கொண்டன. மரங்களும் கட்டைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து ஆயிரம் குடுமிக் கதவுகளைக் திறந்து மூடும் சத்தத்தை உண்டாக்கின. பாய்மரங்களை வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். அவற்றின் நிலையிலிருந்து கப்பல் ஒரு திசையாகப் போகாமல் சுழன்று சுழன்று வருகிறது என்று தெரிந்து கொண்டான். 'சுழிக்காற்று' என்று அடிக்கடி சொன்னார்களே! அந்தச் சுழிக்காற்றுதான் அடிக்கப்போகிறது போலும்! சுழிக்காற்று அடிக்கும் போது பாய் மரங்களிலிருந்து பாய்களைச் சுழற்றிச் சுற்றி வைக்க வேண்டும் என்று வந்தியத்தேவனுடைய அறிவுக்குப் புலப்பட்டது. ஆனால் அவன் ஒருவனால் அது எப்படி முடியும்? பத்துப் பேர் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் அல்லவா? பத்துப் பேர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது வேண்டும். ஒருவன் தனியாக என்ன செய்வது? கடவுள் விட்டவழி விடுகிறார். கப்பல் அடைந்த கதியை அடைகிறது என்று சும்மா இருக்க வேண்டியதுதான்! கப்பல் அடையப்போகிற கதி என்னவென்று அவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போயிற்று. அப்படியும் இப்படியும் சிறிது நேரம் அலைப்புண்டிருந்து பிறகு கடலில் முழுகிப்போக வேண்டியதுதான்! முழுகுவதற்கு முன்னால் சுக்குச் சுக்காக உடைந்து போனாலும் போகும்! கப்பலின் கதி எப்படியானாலும், தன்னுடைய கதியைப் பற்றிச் சந்தேகமில்லை! நடுக்கடலில் மரணம்! அந்தக் கும்பகோணத்துச் சோதிடன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பார்! சோதிடனாம் சோதிடன்! அவனை மறுபடி பார்க்க நேர்ந்தால்... பைத்தியக்காரத்தனம்! அவனை மறுபடி பார்ப்பது ஏது? திடீரென்று வந்தியத்தேவன் தோளில் கெட்டியான பொருள் ஏதோ விழுந்தது. சடபடவென்று கப்பல் முழுவதும் சிறிய சிறிய கூழாங் கற்கள் விழுந்தன. அந்தக் கூழாங் கற்கள் எப்படிப் பளிங்குபோல் பிரகாசிக்கின்றன! வானத்திலிருந்து இவை எப்படி விழுகின்றன! இன்னும் இரண்டு மூன்று கற்கள் அவன் தலையிலும் முதுகிலும் தோள்களிலும் விழுந்தன. அவை விழுந்த இடத்தில் முதலில் வலி; பிறகு ஒரு குளிர்ச்சி. கப்பலில் விழுந்த கற்களைப் பார்த்தால், ஆ! அவை உருகிக் கரைந்து போய் கொண்டிருக்கின்றனவே? ஆ! அவை உருகிக் கரைந்து போய் கொண்டிருக்கின்றனவே? ஆம்; இது பனிக்கட்டி மழை; அதுவரை வந்தியத்தேவன் அத்தகைய மழையைப் பார்த்ததுமில்லை; அநுபவித்ததுமில்லை. மடிவதற்கு முன்னால் இந்த அற்புதத்தைப் பார்க்க முடிந்ததே என்ற குதூகலம் அவன் உள்ளத்தில் தோன்றியது. கப்பல் தளத்தில் உட்கார்ந்து, கரைந்து கொண்டிருந்த பனிக்கட்டிக் கற்களைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். அப்பா என்ன சிலிர்ப்பு! தொடும்போது தீயைத் தொடுவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆனால் தீ தோலைச் சுட்டுத் தீய்ப்பது போல் அது செய்யவில்லை. விரைவில் சூடு குளிர்ச்சியாகி விடுகிறது. கல் மழை எதிர்பாராமல் வந்தது போலவே சட்டென்று நின்றது. பெய்த நேரம் அரைக்கால் நாழிகை கூட இராது. பிறகு சாதாரண மழை பெய்யத் தொடங்கியது. மழை ஜலம் கப்பலில் விழுந்து சிதறி ஓடிக் கடலில் விழுந்துவிடுவதை வந்தியத்தேவன் கவனித்தான். சோழ நாட்டு மரக்கலத் தச்சர்களின் கெட்டிக்காரத்தனத்தை வியந்தான். எத்தனை மழை பெய்தாலும் எத்தனை பெரிய அலைகள் மோதிக் கடல் ஜலம் கப்பலில் வந்தாலும், மீண்டும் கடலிலேயே தண்ணீர் போய் விழும்படியாக அக்கப்பல் அமைக்கப்பட்டிருந்தது. கப்பலின் கீழ்ப்பகுதி உடைந்து கடல்நீர் உள்ளே புகுந்தாலன்றி அதை மூழ்கடிக்க முடியாது! மேலே காற்றும் மழையும் பொறுக்க முடியாமற் போனால் அந்த அறைக்குள்ளே புகுந்துகூடத் தான் கதவைத் தாளிட்டுக் கொள்ளலாம். பிறகு கடவுள் விட்ட வழி விடுகிறார் என்று நிம்மதியாக இருக்கலாம். இவ்வளவு பத்திரமான கப்பலை விட்டு அந்த முட்டாள்கள் இருவரும் படகில் ஏறிப்போய் விட்டதை நினைத்து வந்தியத்தேவன் அநுதாபப்பட்டான். ஆனால் அந்தப் படகில் அமைப்பும் விசித்திரமானது தான். எவ்வளவு காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் அதை மூழ்க அடிக்க முடியாது. அப்படிப் படகு உடைந்து முழுகினாலும் பக்கத்தில் அதனோடு சேர்த்துக் கட்டியுள்ள கட்டை ஒன்று இருக்கிறது. அதைப் பிடித்துக்கொண்டு அந்தக் கொலை பாதகர்கள் தப்பிக் கரைசேர்ந்து விடுவார்கள்! அநேகமாகக் கோடிக்கரைக்குச் சமீபமாகப் போய்க் கரை ஏறுவார்கள். கோடிக்கரையிலிருந்து வந்தியத்தேவனுடைய உள்ளம் பழையாறைக்குத் தாவியது. சக்கரவர்த்தி திருக்குமாரிக்குத் தனக்கு நேர்ந்த கதி எப்படித் தெரியப்போகிறது? அவள் இட்ட பணியை நிறைவேற்றும் முயற்சியிலே தான் நடுக்கடலில் முழுகியதை யார் அவளுக்குத் தெரிவிக்கப் போகிறார்கள்? கடல் தெரிவிக்குமா? காற்று சென்று சொல்லுமா? - கடவுளே! அந்த மாதரசியைச் சந்திப்பதற்கு முன்னாலேயே நான் இறந்து போயிருக்கக்கூடாதா? போர்க்களத்தில் வீரமரணம் எய்தியிருக்கக் கூடாதா? சொர்க்க பூமியைக் கண்ணால் பார்க்கச் செய்துவிட்டு உடனே அதல பாதாளத்தில் தள்ளுவது போல் அல்லவா இருக்கிறது! காற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடலின் கொந்தளிப்பு மிகுதியாகிக் கொண்டிருந்தது. கப்பலின் பாய்மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டு ஆடின. இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது. இருட்டை விடக் கரியதான இருட்டு எப்படி இருக்க முடியும்? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றி ஒரு மூலையிலிருந்து ஒரு மூலை வரை பாய்ந்தது. அதற்குப் பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக் கரியதாயிருந்தது. மின்னலைத் தொடர்ந்து இடிமுழக்கம் கேட்டது; கப்பல் அதிர்ந்தது; கடல் அதிர்ந்தது; திசைகள் அதிர்ந்தன. இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக்கொண்டு புறப்பட்டது. அது மேலும் மேலும் நீண்டு, கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து, பற்பல ஒளிக்கோலங்கள் ஆகாசமெங்கும் போட்டு வானையும் கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு, அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது. இடிமுழக்கம் தொடர்ந்தது. அம்மம்மா! அண்டகடாகங்கள் வெடித்து விழுகின்றன என்பதில் சந்தேகமில்லை. மேலும் மின்னல்கள்; இடி முழக்கங்கள். 'இன்னும் வானம் பிளக்கவில்லையே; இது என்ன அதிசயம்!" என்று வந்தியத்தேவன் எண்ணமிட்டானோ, இல்லையோ, அந்தக் கணமே ஆகாசம் வெடித்துப் பிளந்தது. வெடித்த பிளப்பின் வழியாகப் பிரளய வெள்ளம் பொழிந்தது. ஆம்; அதை மழை என்றே சொல்வதற்கில்லை. வான வெளியில் ஒரு கடல் குமுறிக் கொண்டிருந்தது. அது திடீரென்று தோன்றிய பிளவின் வழியாகக் கொட்டுவது போலவே இருந்தது. கடல் அலைகள் ஆவேச தாண்டவமாடின. மின்னல் வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் ஆடும் மலைச் சிகரங்கள் காட்சி அளித்தன. காற்றின் கும்மாளம் உச்சத்தை அடைந்தது. ஆடும் மலைச் சிகரங்களை அப்படியே பெயர்த்து எடுத்து வாயு பகவான் வான வெளியில் விசிறி எறிந்து விளையாடினார். வந்தியத்தேவனுடைய கப்பல்மீதும் அந்த நீர்மலைகளில் சில வந்து மோதின. மேலேயிருந்து மழை வெள்ளம் தொபு தொபுவென்று கொட்டியது; நாலா பக்கமிருந்தும் அலைமலைகள் வந்து மோதித்தாக்கின. விரித்த பாய்மரங்கள் மீது சுழற்காற்று தாக்கிப்படுத்திய பாட்டைச் சொல்லி முடியாது. இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அந்தச் சோழ நாட்டுத் தச்சர்கள் கட்டிய அதிசய மரக்கலம் சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தது. ஆனால் எவ்வளவு நேரந்தான் சுழன்று கொண்டிருக்க முடியும்? எவ்வளவு நேரம் அந்த மாபெரும் பூதங்களின் தாக்குதலைக் கப்பலினால் சமாளிக்க முடியும்? - முடியாது, இந்த வினாடியோ, அடுத்த வினாடியோ, கப்பல் முழுக வேண்டியதுதான். அத்துடன் வந்தியத்தேவனும் முழுக வேண்டியதுதான்! காற்றின் வேகம் சிறிது குறைவதுபோலத் தோன்றியது. பிரளயமாகக் கொட்டிய மழை நின்று விட்டது. சிறு தூறல்கள் போட்டுக் கொண்டிருந்தன. மின்னலும் இடியும் நின்றுவிட்டது போலத் தோன்றியது. கடல் கன்னங்கரிய இருள் பிழம்பாகத் தோன்றியது. வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கு முன்னால் மின்னல்களின் ஒளி வீச்சைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தான். இடிகளின் பெரு முழக்கத்தைக் கேட்க முடியாமல் காதுகளைத் தன் கைகளினால் இறுக்கிப் பொத்திக் கொண்டிருந்தான். இப்போது கண்ணைத் திறந்து பார்த்தான்; கைகளை அகற்றிக் காதுகளையும் திறந்துவிட்டான். 'ஆகா! இவ்வளவு பெரிய சுழிக்காற்று விபத்திலிருந்து நான் தப்பித்துக்கொண்டேனா! கடவுள் காப்பாற்றி விட்டாரா? மீண்டும் பழையாறை அரசிளங்குமரியை இந்த ஜன்மத்தில் காணப்போகிறேனா? இளவரசரைச் சந்தித்து அளவளாவப் போகிறேனா?...' 'அதற்குள் அவசரப்படக்கூடாது. இந்தக் கப்பல் இப்போது எங்கே இருக்கிறதோ, யார் கண்டது? இது பத்திரமாய்க் கரைசேரும் என்று எப்படிச் சொல்ல முடியும்? கப்பல் தப்பினாலும், நான் உயிரோடு தப்பிக் கரையேறுவேன் என்பது என்ன நிச்சயம்?' 'இன்னும் எத்தனை எத்தனை அபாயங்கள் இருக்கின்றனவோ...?' வந்தியத்தேவனுடைய மனத்தில் இந்தக் கேள்வி எழுந்ததும் அதற்குப் பதில் சொல்வதுபோல் வானத்தைக் கீறிக் கொண்டு ஒரு மின்னல் மின்னியது. அதன் பிரகாசம் அவன் கண்ணெதிரே நூறு சூரியனைக் கொண்டுவந்து நிறுத்தியது போலிருந்தது. இருட்டிலாவது கொஞ்சம் பார்க்கலாம்; அந்தப் பயங்கரப் பிரகாசத்தில் ஒன்றுமே பார்க்க முடியவில்லை. தன் கண்களையே அம்மின்னல் பறித்துவிட்டதோ என்று வந்தியத்தேவன் அஞ்சினான். எரிச்சல் எடுத்த கணத்திலேயே அவன் செவிகளுக்கும் ஆபத்து வந்துவிட்டது. எத்தனையோ இடி முழக்கங்களை வந்தியத்தேவன் முன்னம் கேட்டிருக்கிறான்; இன்றைக்கும் எத்தனையோ கேட்டான். ஆனால் இப்போது இடித்த இடியைப் போல் - சே! அது இடியா? இந்திரனுடைய வஜ்ராயுதம் அவனுடைய காதின் வழியாகப் பிரவேசித்து மண்டைக்குள்ளேயே நுழைந்து தாக்கியது போலிருந்தது. சற்று நேரம் வந்தியத்தேவன் கண்களையும் திறக்க முடியவில்லை; காதிலோ 'ஓய்' என்ற சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மூடியிருந்த கண்கள் ஏதோ சமீபத்தில் தலைக்கு மேலே புதிய வெளிச்சம் பரவியிருப்பதை உணர்ந்தான். காதிலும் 'ஓய்' சத்தத்துக்கு மத்தியில் வேறொரு விநோத சப்தம் கேட்டது. காட்டில் தீப்பற்றி எரியும்போது, மரங்களில் தீப்பிடிக்கும்போது, உண்டாகும் சப்தத்தைப் போல் தொனித்தது. வந்தியத்தேவன் கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் இருந்த கப்பலின் பாய்மரம் உச்சியில் தீப்பற்றி எரிவதைக் கண்டான். அந்தக் கப்பல் மேலேயோ அல்லது, வெகு சமீபத்திலோ இடி விழுந்திருக்கிறது! அதனால் பாய்மரத்தில் தீப்பிடித்திருக்கிறது! பஞ்ச பூதங்களில் இரண்டு பூதங்கள் அந்தச் சோழ நாட்டு மரக்கலத்தைத் தாக்கி அழிக்கப் பார்த்தன. நீரும், காற்றும் தோல்வியுற்றன. வருணனும், வாயுவும் சாதிக்க, முடியா காரியத்தைக் சாதிக்க இப்போது அக்கினி பகவான் தோன்றியிருக்கிறார்! கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |