![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை முப்பத்தாறாம் அத்தியாயம் - வாகீசரின் ஆசி அகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும், நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப் பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள். ஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள். அப்போது அவளுடைய உள்ளத்தில் அரும்பும் பக்திக் காதலானாது. பின்னர் படிப்படியாக வளர்ந்து பெருங்கனலாகிக் கொழுந்து விட்டெரிகிறது. இந்த வரலாற்றை அற்புதமான முறையில் வர்ணிக்கும் அத்திருப்பாடல் பின்வருமாறு: "முன்னம் அவனுடைய நாமம்கேட்டாள்
பாடலை ஒரு முறை முழுவதும் பாடிவிட்டு,
மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள் சிவகாமி.
அப்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து
பெண் உள்ளத்தில் அரும்பி மலர்ந்த காதல் உணர்ச்சியே ஓர் உருக்கொண்டு அவர்கள்
முன்னால் நிற்பதுபோல் தோன்றியது. முதன் முதலில் ஓர் இளம் கன்னிகையில்
இதயத்தில் காதல் உதயமாகும்போது அதனுடன் பிறக்கும் நாணங்கலந்த இன்பப்பெருக்கை
அவர்கள் கண்முன்னால் பார்த்தார்கள். காதல் வளர்ந்து வரும் ஆரம்ப தினங்களில்
காதலனுடைய பெயரைக் கேட்கும் போதும், அவனுடைய இருப்பிடம் முதலிய வரலாறுகளை
அறியும்போதும், அவனுடைய குணாதிசயங்கள் வர்ணிக்கப்படும்போதும் பெண் இதயத்தில்
பொங்கித் ததும்பும் ஆனந்த குதூகலத்தையும் அதனால் அவளுடைய மேனியில் ஏற்படும்
அதிசயமான மாறுதல்களையும் பிரத்தியட்சமாகப் பார்த்தார்கள். நாளடைவில்
அந்தக் காதல் முற்றும்போது, எப்படி அது சித்தப்பிரமையின் சுபாவத்தை எய்திக்
காதலியைப் பித்துப் பிடித்தவளாக்குகிறது என்பதையும், அந்த நிலையில் காதலுக்காகவும்
காதலனுக்காகவும் பெண்ணானவள் எப்பேர்ப்பட்ட தியாகங்களையெல்லாம் செய்யச்
சித்தமாகி விடுகிறாள் என்பதையும் கண்டார்கள். பெற்று வளர்த்த அன்னையையும்
அப்பனையும் விட்டு விட்டுக் காதலனோடு புறப்படவும் காதலுக்குத் தடையாக
நிற்கும் சமூக ஆசாரங்களையெல்லாம் புறக்கணித்து ஒதுக்கவும், ஊராரின் நிந்தனைகளையெல்லாம்
பொறுத்துக்கொள்ளவும் எவ்வாறு அந்தப் பெண் மனம் துணிகிறாள் என்பதையும்
நேருக்கு நேரே பார்த்தார்கள். மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள் பெம்மான் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!" வாக்கினால் விவரிக்க முடியாத மேற்சொன்ன உணர்ச்சிகளையெல்லாம் பெண் உள்ளத்தில் படிப்படியாகக் காதல் முதிர்ந்து வரும் அபூர்வ பாவங்களையெல்லாம், சிவகாமி அபிநயத்தில் காட்டிவந்தபோது, சபையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, "இது சாமானிய மனித வர்க்கத்துக்குரிய காதல் அல்ல - அண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் இறைவனாகிய எம்பெருமானுக்கே உரிய தெய்வீகக் காதல்!" என்று தோன்றியது. அவ்வளவுடன் நின்று விடவில்லை. காதல் பரிபூரணமடைவதற்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டியிருக்கிறது. காதலி தனக்காக இவ்வளவெல்லாம் தியாகங்களைச் செய்ய சித்தமாயிருந்தும், அந்தத் தெய்வக் காதலன் திருப்தியடையவில்லை. மேலும் அவளைச் சோதனைக்குள்ளாக்க விரும்பித் திடீரென்று ஒரு நாள் மறைந்து விடுகிறான். இதனால் சோகக்கடலிலே மூழ்கிய காதலி வெளியுலகை அடியோடு மறந்துவிடுகிறாள். தன்னையும் மறந்து விருகிறாள். தன் பெயரைக்கூட மறந்து விடுகிறாள். "உன் பெயர் என்ன?" என்று யாரேனும் கேட்டால், காதலனின் திருநாமத்தைச் சொல்லுகிறாள்! அத்தகைய மன நிலைமையில் மறுபடியும் தெய்வக் காதலன் அவள் முன்னால் தோன்றும்போது, காதலியானவள் தான் செய்யாத குற்றங்களுக்காகத் தன்னை மன்னித்து விடும்படி கோரி அவனுடைய திருப்பாதங்களில் பணிகிறாள்! படிப்படியாக மேற்கூறிய உணர்ச்சிகளையெல்லாம் முக பாவத்திலும் கண்களின் தோற்றத்திலும் அங்கங்களின் அசைவிலும் சைகைகளிலும் காட்டிக் கொண்டு வந்த சிவகாமி, கடைசியில், "தலைப்பட்டாள் நங்கை தலைவன்
தாளே!"
என்ற அடியைப் பாடிவிட்டுக் கூப்பிய கரங்களுடன் அடியற்ற மரம்போலத் தரையில்
விழுந்தாள்! உடனே சபையில் "ஹா! ஹா ஹா!" என்ற குரல்கள் எழுந்தன. 'சிவகாமி!' என்று கூவிக்கொண்டு ஆயனர் எழுந்தார். எழுந்து அவள் கிடந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து மாமல்லரும் பரபரப்புடன் சென்றார். ஆயனர் சிவகாமி கிடந்த இடத்துக்கு அருகில் தரையில் உட்கார்ந்தார். அவருடைய அங்கங்கலெல்லாம் பதறின. அதைப் பார்த்த மாமல்லர், தரையில் உதிர்ந்து கிடக்கும் மென்மையான மலர்களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப் பொருக்கும் பாவனையுடனே சிவகாமியைத் தமது இரு கரங்களாலும் மிருதுவாக எடுத்து ஆயனரின் மடியின்மீது இருத்தினார். அதற்குள்ளாக அங்கிருந்தவர்களில் பலர் எழுந்து ஓடிவந்து அம்மூவரையும் சுற்றிக்கொண்டார்கள். சிலர் "தண்ணீர்! தண்ணீர்!" என்றார்கள். சிலர் "விசிறி! சிவிறி!" என்றார்கள். "வழியை விடுங்கள்!" என்று ஒரு குரல் கேட்டது. நாவுக்கரசர் பெருமான் தமது ஆசனத்திலிருந்து எழுந்து சிவகாமியின் அருகில் வந்தார். ஆயனரின் மடியில் தலை வைத்து உணர்வின்றிப் படுத்திருந்த சிவகாமியின் முகத்தை அவர் கருணை ததும்பும் கண்களினால் பார்த்தார். தமது திருக்கரத்தில் கொண்டு வந்திருந்த திருநீற்றை அவளுடைய நெற்றியில் இட்டார். சற்று நேரம் அந்த மண்டபத்தில் ஊசி விழும் சத்தம் கேட்கும்படியான மௌனம் குடிகொண்டிருந்தது. காலை நேரத்தில் கருங்குவளையின் இதழ் விரிவது போல சிவகாமியின் கண்ணிமைகள் மெதுவாகத் திறந்தன. திறந்த கண்கள் நாவுக்கரசரின் திருமுகத்தை முதலில் தரிசித்தன. தந்தையின் மடியில் படுத்தபடியே சிவகாமி இரு கரங்களைக் கூப்பி அம்மகாபுருஷரைக் கும்பிட்டாள். "நீ மகராஜியாய் இருக்க வேணும், குழந்தாய்!" என்று வாகீசப் பெருமான் ஆசி கூறினார். அந்த ஆசியைக் கேட்ட சிவகாமியின் பவள நிற இதழ்களில் புன்னகையின் ரேகை தோன்றியது. அது தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் செவ்வாம்பல் பூவானது வெட்கத்தினால் தயங்கித் தயங்கி மடலவிழ்வதுபோல் இருந்தது. பின்னர் அவளுடைய கருவிழிகள் இரண்டும், எதையோ தேடுவதைப்போல் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் குமார சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டன. "அடிகள் எனக்குக் கூறிய ஆசி மொழி தங்கள் செவியில் விழுந்ததா?" என்று அக்கண்கள் மாமல்லரைக் கேட்டதுடன், அவருடைய குற்றங்களையெல்லாம் மறந்து மீண்டும் அவருடன் சிநேகமாயிருக்கச் சித்தமாயிருப்பதையும் தெரியப்படுத்தின. மறுபடியும் நாவுக்கரசரின் திருக்குரல் கேட்கவே சிவகாமி பூரண சுய உணர்வு வந்தவளாய் சட்டென்று எழுந்து நின்றாள். இவ்வளவு பேருக்கு நடுவில் தான் மூர்ச்சையாகி விழுந்ததை எண்ண அவளுக்குப் பெரிதும் வெட்கமாயிருந்தது. வாகீசர் கூறினார்: "ஆயனரே! பரதக் கலையின் சிறப்பைக் குறித்து நான் படித்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதனுடைய பூரண மகிமையையும் இன்றுதான் அறிந்தேன். என்னுடைய வாக்கிலே வந்த பாடலில் இவ்வளவு அனுபவமும் இவ்வளவு உணர்ச்சியும் உண்டென்பதை இதற்கு முன்னால் நான் அறியவில்லை. தங்கள் குமாரியினால் பரத சாஸ்திரமே பெருமையடையப் போகிறது. உண்மையாகவே அது தெய்வக் கலையாகப் போகிறது. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது!... இவ்விதம் சுவாமிகளின் திருவாயிலிருந்து வெளியான அருள் மொழிகளை அனைவரும் ஆவலுடன் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் வீதியில் குதிரையொன்று விரைவாக வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் மடத்தின் வாசலில் வந்து நின்றது. உடனே குமார சக்கரவர்த்தி மடத்தின் வாசற்படியை நோக்கிச் சென்றார். வாகீசர் அங்கே சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து, "நீங்களும் போகலாம்" என்று சமிக்ஞையால் கூற, எல்லாரும் தயக்கத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மாமல்லர் வாசற்படியின் அருகில் நின்று ஏவலாளன் ஒருவனுடன் ஏதோ பேசிவிட்டு, உள்ளே வந்தார். நாவுக்கரசரை நோக்கிக் கைகூப்பி, "சுவாமி! மதுரையிலிருந்து தூதர்கள் ஏதோ அவசரச் செய்தியுடன் வந்திருக்கிறார்களாம் நான் விடைபெற்று கொள்கிறேன்" என்றார். "அப்படியே, குமார சக்கரவர்த்தி! தந்தைக்குச் செய்தி அனுப்பினால், அவருடைய அபிப்பிராயப் படியே நான் தென் தேசத்துக்கு யாத்திரை போவதாகத் தெரியப்படுத்தவேணும்!" என்றார். "ஆகட்டும் சுவாமி" என்று மாமல்லர் கூறி, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! துறைமுகம் போய்ச் சேர்ந்ததும், சிவகாமியின் சௌக்கியத்தைப் பற்றிச் செய்தி அனுப்புங்கள். சில காரணங்களினால் நான் கொஞ்ச காலத்துக்குக் காஞ்சியை விட்டு வெளிக்கிளம்ப முடியாமலிருக்கிறது" என்றார். இவ்விதம் பேசி வருகையில் மாமல்லர் அடிக்கடி சிவகாமியை நோக்கி அவளிடம் நயன பாஷையினால் விடைபெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், சிவகாமியோ ஆயனரின் பின்னால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள். எனவே, சிவகாமியிடம் சொல்லிக் கொள்ளாமலே மாமல்லர் புறப்பட வேண்டியதாயிற்று. போகும்போது, நாவுக்கரசர் பெருமான் அங்கிருப்பதைக்கூட அவர் மறந்து 'தட்' 'தட்' என்று அடிவைத்து நடந்து சென்றதானது, ஆத்திரங்கொண்ட அவருடைய மனநிலையை நன்கு பிரதிபலித்தது. சற்றுநேரத்துக்கெல்லாம் வாசலில் குதிரைகளின் காலடிச் சத்தமும், ரதத்தின் சக்கரங்கள் கடகடவென்று உருண்டோ டும் சத்தமும் கேட்டன. சிவகாமிக்கு அப்போது தன் உயிரானது தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியில் சென்று ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது. நாவுக்கரசரிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு ஆயனரும் சிவகாமியும் புறப்பட வேண்டிய நேரம் வந்த போது, பெருமான் ஆயனருக்குச் சமிக்ஞை செய்து அவரைப் பின்னால் நிறுத்தினார். முன்னால் சென்ற சிவகாமியின் காதில் விழாதபடி மெல்லிய குரலில் பின்வருமாறு கூறினார்: "ஆயனரே! உமது புதல்விக்குக் கிடைத்திருக்கும் கலை அற்புதக் கலை; தெய்வீகக் கலை. அதனாலேயே அவளைக் குறித்து என் மனத்தில் கவலை உண்டாகிறது. இத்தகைய அபூர்வமான மேதாவிலாசத்தை இறைவன் யாருக்கு அருளுகிறாரோ, அவர்களைக் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குவதும் உண்டு. உமக்குத்தான் தெரியுமே? இந்த எளியேனை ஆட்கொள்வதற்கு முன்னால் இறைவன் எத்தனை எத்தனை சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கினார்..." சற்று முன்பு வரையில் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆயனர் மேற்கூறிய மொழிகளைக் கேட்டுத் தலையில் இடி விழுந்தவர் போல் பதறி, "சுவாமி! இதென்ன சொல்கிறீர்கள்? மகா புருஷராகிய தாங்கள் எங்கே? அறியாப் பெண்ணாகிய சிவகாமி எங்கே? அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும்? தங்களுடைய திருவாக்கில் இப்படி வந்துவிட்டதே! என்றார். "ஆயனரே! இரைந்து பேச வேண்டாம் சிவகாமிக்கு இது தெரிய வேண்டியதில்லை. ஆனால் நீர் முன் ஜாக்கிரதையாக இருப்பது நலம். உமது அருமைக் குமாரியைப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம் சொல்லுகிறது. ஆஹா! இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்கு அளித்தார்!" என்று கூறி வருகையில் நாவுக்கரசரின் கண்களில் கண்ணீர் மல்கிற்று. "ஆனாலும் நீர் தைரியமாக இருக்கவேண்டும். இந்த உலகில் பணி செய்து கிடப்பதே நமது கடன். நம்மைத் தாங்கும் கடன் கருணை வடிவான இறைவனுடையது. உமது பணியைச் செய்து கொண்டு நீர் நிம்மதியாக இரும். எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும் மனம் கலங்க வேண்டாம். அன்பர்களுக்கு முதலில் எவ்வளவு துன்பங்களை அளித்தாலும் முடிவில் இறைவன் ஆட்கொள்வார்." இவ்விதம் கூறிவிட்டு நாவுக்கரசர் பெருமான் மடத்துக்குள்ளே சென்றார். அன்று மாலை அந்தத் திருமடத்துக்குள்ளே பிரவேசித்தபோது உள்ளம் நிறைந்த குதூகலத்துடன் பிரவேசித்த ஆயனச் சிற்பியாரோ, இப்போது இதயத்திலே பெரியதொரு பாரத்துடன் வெளியேறினார். அபூர்வமான வேலைப்பாடுகளுடன் அவர் சிலை வடிவமாக்கிக் கொண்டிருந்த பெரியதொரு பாறாங்கல்லைத் தூக்கி அவருடைய இதயத்தின் மேலே யாரோ வைத்துவிட்டது போலிருந்தது. |