சூடாமணிப் படலம் - Soodamani Padalam - சுந்தர காண்டம் - Sundara Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





சுந்தர காண்டம்

5. சூடாமணிப் படலம்

சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்

'உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம்' என்று உணர்வுகொண்டான். 1

'கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள் ஆய்!
வீட்டியிடும் மேல், அவனை வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என் பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடி தாழ்வென்; அது காண்டி; இது காலம்; 2

'பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன். 3

'அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன்பால்,
வெறுங் கை பெயரேன் - ஒருவராலும் விளியாதேன். 4

'"இலங்கையொடும் ஏகுதிகொல்" என்னினும், இடந்து, என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால். 5

'அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, "உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்" எனப் பகரின், என் அடிமை என் ஆம்? 6

'புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ?
"கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்" எனக் கழறுகேனோ? 7

'"இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக் குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க" என்னினும், அது இன்று புரிகின்றேன். 8

'இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந் துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல் புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால். 9

'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 10

அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்

ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
'ஆய தன்மை அரியது அன்றால்' என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்; 11

'அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால். 12

'வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம் அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய்! 13

'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ் சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என்பது என்? வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ? 14

'கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க, என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி, காகங்கள்
உண்டபோது அன்றி, யான் உளென் ஆவெனோ? 15

'வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல் அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ? 16

'பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? 17

'அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். 18

'வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், "ஆண்" எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19

'தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? "இமைப்பின்முன்
மாண்டு தீர்வென்" என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு, எழுந்து ஏகினன், கீழ்மையால். 20

'"மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின்,
தேவு வன் தலை சிந்துக நீ" என,
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு; எனது ஆர் உயிர் தந்ததால். 21

'அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும் மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான். 22

'ஆயது உண்மையின், நானும் - அது அன்று எனின்,
மாய்வென் மன்ற;-அறம் வழுவாது என்றும்,
நாயகன் வலி எண்ணியும், நானுடைத்
தூய்மை காட்டவும், இத்துணை தூங்கினேன். 23

'ஆண்டுநின்றும், அரக்கன் அகழ்ந்து கொண்டு,
ஈண்டு வைத்தது, இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது;
காண்டி, ஐய! நின் மெய் உணர் கண்களால். 24

'தீர்விலேன், இது ஒரு பகலும்; சிலை
வீரன் மேனியை மானும் இவ் வீங்கு நீர்
நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்,
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால். 25

'ஆதலான், அது காரியம் அன்று; ஐய!
வேத நாயகன்பால், இனி, மீண்டனை
போதல் காரியம்' என்றனள் பூவை; அக்
கோது இலானும், இனையன கூறினான்: 26

அனுமன் சீதையைப் புகழ்ந்து, 'இராமனிடம் யாது கூறவேண்டும்' என வினவல்

'நன்று! நன்று! இவ் உலகுடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்'
என்று சிந்தை களித்து, உவந்து, ஏத்தினான் -
நின்ற சங்கை இடரொடு நீங்கினான். 27

'இருளும் ஞாலம் இராவணனால்; இது
தெருளும், நீ இனிச் சில் பகல் தங்குறின்;
மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய்' என்று, அடியின் இறைஞ்சினான். 28

அனுமனிடம் சீதை மனம் கசந்து சொன்ன செய்திகள்

'இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ. 29

'"ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டு" என்று வேண்டுவாய். 30

'ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி: "மன் அருளால் எனைக்
காத்து இருந்த தனக்கே கடன், இடை
கோத்த வெஞ் சிறை வீடு" என்று கூறுவாய். 31

'"திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்கு வந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கை யாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால் கடன் செய்க" என்று செப்புவாய். 32

மாமியர்க்குச் சொன்ன செய்தி

'"சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்" எனும் இன்ன சொல்,
அறத்தின் நாயகன்பால்; அருள் இன்மையால்
மறக்கும்ஆயினும், நீ மறவேல், ஐயா! 33

மீண்டும் இராமனுக்குச் செய்தி சொல்லுதல்

'வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்" என்ற, செவ் வரம்
தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 34

'"ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும்,
மீண்டு வந்து பிறந்து, தன் மேனியைத்
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள், தொழுது" என்று விளம்புவாய். 35

'அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போதவும்,
விரசு கோலங்கள் காண விதி இலேன்;
உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன். 36

'தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும், அங்கு ஏகுவது அன்றியே,
என்னை நோக்கி, இங்கு, எங்ஙனம் எய்துமோ? 37

'எந்தை, யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை,
"சுந்தரத் தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு" என்பாய். 38

அனுமன் சீதையைத் தேற்றுதல்

இத் திறம் அனையவள் இயம்ப, 'இன்னமும்,
தத்துறல் ஒழிந்திலை, தையல் நீ!' எனா,
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை,
ஒத்தன, தெரிவுற உணர்த்தினான்அரோ: 39

'வீவாய், நீ இவண்; மெய் அஃதே?
ஓய்வான், இன் உயிர், உய்வானாம்!
போய், வான் அந்நகர் புக்கு அன்றோ?
வேய்வான் மௌலியும்? மெய் அன்றோ? 40

'கைத்து ஓடும் சிறை, கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்!
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்!
இத்தோடு ஒப்பது யாது உண்டே? 41

'நல்லோய்! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம், எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல, எம் கோனும்
வில்லோடும் செல வேண்டாவோ? 42

'நீந்தா இன்னலில் நீந்தாமே,
தேய்ந்து ஆறாத பெருஞ் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால், எம்மின் உயர்ந்தார் யார்? 43

'"நன்று ஆய் நல்வினை நல்லோரைத்
தின்றார் தம் குடர் பேய் தின்னக்
கொன்றால் அல்லது, கொள்ளேன் நாடு"
என்றானுக்கு, இவை ஏலாவோ? 44

'மாட்டாதார் சிறை வைத்தோயை,
"மீட்டாம்" என்கிலம் மீள்வாமேல்,
நாட்டார், நல்லவர், நல் நூலும்
கேட்டார், இவ் உரை கேட்பாரோ? 45

'"பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்,
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்,
மாண்டாள்" என்று, மனம் தேறி
மீண்டால், வீரம் விளங்காதோ? 46

'கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய்என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகு ஓர் ஏழும்
சுட்டாலும், தொலையா அன்றோ? 47

'முன்னே, கொல்வான் மூஉலகும்,
பொன்னே ஓங்கிய போர் வில்லான்,
என்னே! நின் நிலை ஈது என்றால்,
பின்னே, செம்மை பிடிப்பானோ? 48

'கோள் ஆனார் உயிர் கோளோடும்,
மூளா வெஞ் சினம், முற்று ஆகா;
மீளாவேல், அயல் வேறு உண்டோ ?
மாளாதோ புவி வானோடும்? 49

'தாழித் தண் கடல்தம்மோடும்,
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம், அன்று,
ஆழிக் கையவன் அம்பு, அம்மா!
ஊழித் தீ என உண்ணாவோ? 50

'"படுத்தான், வானவர் பற்றாரை;
தடுத்தான், தீவினை; தக்கோரை
எடுத்தான்; நல்வினை, எந் நாளும்
கொடுத்தான்" என்று, இசை கொள்ளாயோ? 51

'சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின், எல்லோரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ-
உன்னால் நல் அறம் உண்டானால்? 52

'புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய் குடையும்தோறும்,
ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ? 53

'ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென,
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி
தாழ் இருங் குருதியால், தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று, இரைப்பக் காண்டியால். 54

'சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலிஅம் கண்ணியர் அறுத்து நீத்தன,
வாலியும் கடப்ப அரு வனப்ப, வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்கக் காண்டியால். 55

'விண்ணின் நீளிய நெடுங் கழுதும், வெஞ் சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்,
புண்ணின் நீர்ப் புணரியில் படிந்து, பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால். 56

'கரம் பயில் முரசுஇனம் சுறங்க, கை தொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில, நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின், ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை முனிப்பக் காண்டியால். 57

'புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி
திரை உறு குருதி யாறு ஈர்ப்பச் செல்வன,
வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின,
கரை உறு நெடுங் கடல் தூர்ப்பக் காண்டியால். 58

'வினையுடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக,
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்,
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால்,
கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால். 59

'தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை, நுதி கொள் மூக்கினால்,
காக்கைகள் கவர்ந்து கொண்டு, உண்ணக் காண்டியால். 60

'மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி, வில்
கால் உறு கணை தடிந்து, இடுவ காண்டியால். 61

'நீர்த்து எழு கணை மழை வழங்க, நீல வான்
வேர்த்தது என்று இடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழு பொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால். 62

'நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு, ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறாக்
காலனும், வெறுத்து, உயிர் காலக் காண்டியால். 63

'அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால் முறை பிடித்து, மாலைய
கணம் கொடு குரக்குஇனம் குளிப்பக் காண்டியால். 64

'செப்புறல் என் பல? தெய்வ வாளிகள்,
இப் புறத்து அரக்கரை முருக்கி ஏகின,
முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்,
அப் புறத்து அரக்கரும் அவியக் காண்டியால். 65

'ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று; யான், விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பினும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ? 66

'"ஆவி உண்டு" என்னும் ஈது உண்டு; உன் ஆர் உயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்ட, தீய்ந்திலாப்
பூ இலை; தளிர் இலை; பொரிந்து வெந்திலாக்
கா இலை; கொடி இலை;-நெடிய கான் எலாம். 67

'சோகம் வந்து உறுவது, தெளிவு தோய்ந்து அன்றோ?
மேகம் வந்து இடித்து உரும்ஏறு வீழ்கினும்,
ஆகமும் புயங்களும் அழுந்த, ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும், உணர்வு நாறுமோ? 68

'மத்து உறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? 69

'"இந் நிலை உடையவள் தரிக்கும்" என்றியேல்,
பொய்ந் நிலை காண்டி; யான் புகன்ற யாவும், உன்
கைந் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்;
மெய்ந் நிலை உணர்ந்து, நீ விடைதந்து ஈ' என்றான். 70

'தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி! நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு, உவந்து இருத்தி, அன்னை! நீ. 71

'எண்ண அரும் பெரும் படை, நாளை, இந் நகர்
நண்ணிய பொழுது, அதன் நடுவண், நங்கை! நீ,
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என் நெடும் வெரிநில் காண்டியால். 72

'அங்கதன் தோள்மிசை, இளவல், அம் மலை
பொங்கு வெங்கதிர் எனப் பொலிய, போர்ப்படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி; தனிமை நீங்குவாய். 73

'குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே,
விராவு அரு நெடுஞ் சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன்' என்றனன். 74

அனுமன் உரையால் சீதை தேறி கூறல்

ஆக இம் மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்;
ஓகை கொண்ட் களிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
'போகை நன்று இவன்' என்பது, புந்தியின் வைத்தாள்;
தோகையும், சில வாசகம் இன்னன சொன்னாள்: 75

'சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன, கோமாற்கு
ஏறும்' என்று, இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்: 76

'நாகம் ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து, எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படை விட்டது, மெல்ல விரிப்பாய். 77

'"என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்?
மன்ன!" என்றலும், "மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர் ஆக" என அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை தொடர்ந்தோய்! 78

சீதை சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல்

என்று உரைத்த, 'இனிது இத்தனை பேர் அடையாளம்;
ஒன்று உணர்த்துவது இல்' என எண்ணி உணர்ந்தாள்,
தன் திருத் துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச் சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், 79

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா,
ஏங்கினாள்; அவ் அனுமனும், 'என்கொல் இது?' என்னா,
வீங்கினான்; வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும். 80

'மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்' என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம். 81

கூந்தல் மென் மழை கொள் முகில்மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது, மெல்லியல்தன் திருமேனி
சேந்தது, அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது, காட்டினள்; மாருதி கண்டான். 82

'சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை, நல்லோய்!
கோடி' என்று கொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள். 83

சூடாமணி பெற்ற அனுமன் விடைபெற்றுச் செல்லுதல்

தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால். 84

மிகைப் பாடல்கள்

'சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு, தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால்!
ஈண்டு யான் வரம் வேண்டினென், ஈறு இலாய்!' 31-1

என்று உரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ் சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறை நெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால். 38-1

'"கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ் இலங்கை" என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி! நீயும் கண்டு, இரங்கப் போதியால்.' 65-1

'"அங்கு, அது அஞ்சி, நடுங்கி, அயன் பதி அண்மி,
"இங்கு நின் வரவு என்னை" எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடு எண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய். 77-1

'இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில் நின்றவர் கண்டு, "இனி, அந்தோ!
எந்தைதன் சரண் அன்றி, ஒர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண் வீழ்க!" என உற்றதும் வைப்பாய். 77-2

'"ஐய நின் சரணம் சரண்!" என்று, அவன் அஞ்சி,
வையம் வந்து வணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
"வெய்யவன் கண் இரண்டொடு போக!" என, விட்ட
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய். 77-3

'"எந்தை, நின் சரணம் சரண்!" என்ற இதனால்,
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்று கொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க!" என, வைத்ததும் வைப்பாய். 77-4

'வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்;
நாக நம்பன் இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கிய வென்றியின், இன் சொல் பணிப்பாய். 77-5




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247