இராவணன் வதைப் படலம் - Ravanan Vathaip Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





யுத்த காண்டம்

37. இராவணன் வதைப் படலம்

தேவர்கள் வாழ்த்த, இராமன் தேரில் செல்லுதல்

ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1

'எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார்' என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2

இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்

அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், 'அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி' என்றான். 3

வானரர் போருக்கு ஆயத்தமாதல்

இரிந்த வான் கவிகள் எல்லாம், 'இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல்' என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; 'திசையோடு அண்டம்
பிரிந்தனகொல்!' என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4

வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5

இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன்,
'காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை' என்னச் சொன்னான். 6

'வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை!' என்றான்; அமலனும், 'சீரிது!' என்றான். 7

வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், 'நீ இலக்குவனோடு போர் செய்' எனல்

'தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்;
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு' என்றான் -
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8

'அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்' என்றான்;
வெம்பு இகல் அரக்கன், 'அஃதே செய்வென்' என்று, அவனின் மீண்டான். 9

இராமன் தேர் அணுக, 'அதன் எதிரே தேரை விடு' எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, 'முட்டத்
தூண்டுதி தேரை' என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10

மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்

'எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்' என்றான். 11

என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, 'அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி' என, சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே
சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர். 12

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண் வாட் கைக்
கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன் தாள்
ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13

அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 15

மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச் செய்தல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; 'செல விடு, செல விடு!' என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16

இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்

'பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன்' என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம்
குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17

இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்

அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை,
வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18

உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கள் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20

எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21

துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்

இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், 'ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்?' என்று எண்ணுவான். 22

வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23

இராம இராவணர் தோற்றம்

கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25

வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்;
அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26

துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்,
'எவன் அ(வ்) ஈசன்?' என்பார் தொழ, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27

இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28

சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
'என்ன சங்கு?' என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29

திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்

ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30

மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31

இராவணன்-இராமன் போர்

துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32

சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங் கண் குதிரை குதிப்பன,
ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 33

கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா
இடியின் ஏறும், முறையின் இடித்தன-
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34

இருவருடைய வில்லின் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்,
வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்-
ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36

தேவர்களின் திகைப்பும், பூமழையும்

'ஆவது என்னை கொலாம்?' என்று அறிகிலார்,
'ஏவர் வெல்வர்?' என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்,
பூண முந்தின, சிந்தின பூ மழை,
காண வந்த கடவுளர் கை எலாம்-
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38

இருவரின் வில்லின் தகைமை

நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன-
ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39

இராவனது சினத்தின் எழுச்சி

அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும், அப்
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்பபோல்,
குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40

மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற
எண்ணின் சூல் மழை இல்ல; இராவணன்
கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும், நாவொடு
கால் கலங்குவர், தேவர்; கண மழைச்
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42

இக் கணத்தும் எறிப்ப தடித்து என,
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என,
பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை
புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43

இராவணன் சின மொழி

'கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி, படியின்மேல்
எற்றுவேன்' என்று உரைக்கும், இரைக்குமால். 44

'தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,
வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென், சிறை' எனப் பேசுமால். 45

இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்

பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும்,
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன்,
குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான். 46

உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன; மழை ஒப்பன; வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47

'துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும்' என்று இமையோர்களும், அயிர்த்தார்;
கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 48

உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்-
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49

விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை போர்த்தன; விசை ஓர்
கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; கலையோர்
எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; 'என்னே,
திண் போர்த் தொழில்!' என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50

அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 51

செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள்,
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52

இராம இராவணப் பெரும் போர்

நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,
ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர்
வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை,
தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து
எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 54

வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ-
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல்
தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்-
குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 56

ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க,
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின கொடிய. 57

மந்தரக் கிரி என, மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என,
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென
அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவிப் போதலால்,
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக்
கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59

தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்

'முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ?
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்;
எழ விடு, தேரை' என்று இராமன் கூறினான். 60

'அந்து செய்குவென்' என அறிந்த மாதலி
உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை;
இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம்
வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61

இருவரது தேரும் சாரிகை திரிதல்

இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை
திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,
அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும்,
சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63

'எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது' என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்,
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64

உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின்,
நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின்,
வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65

தேர்களின் வேகம்

'இந்திரன் உலகத்தார்' என்பர்; 'ஏன்றவர்,
சந்திரன் உலகத்தார்' என்பர்; 'தாமரை
அந்தணன் உலகத்தார்' என்பர்; 'அல்லரால்,
மந்தர மலையினார்' என்பர்-வானவர். 66

'பாற்கடல் நடுவணார்' என்பர்; 'பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார்' என்பர்;
'மேல் கடலார்' என்பர்; 'கிழக்கு உளார்' என்பர்;
'ஆர்ப்பு இடை இது' என்பர்-அறிந்த வானவர். 67

'மீண்டனவோ?' என்பர்; 'விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ?' என்பர்; 'கீழவோ?' என்பர்;
'பூண்டன புரவியோ? புதிய காற்று!' என்பர்;-
'மாண்டன உலகம்' என்று, உரைக்கும் வாயினார். 68

ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும்,
ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும்,
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா,
ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69

அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்

உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70

ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71

தேர்கள் இலங்கையை அணுகுதல்

விலங்களும் வேலையும், மேலும் கீழரும்,
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்,
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென,
இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72

தேர்ப் பரிகளின் திறமை

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி,
எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73

இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில்
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை,
சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச்
சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74

சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல்
பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும்,
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத்
தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75

இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக்
குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76

மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்

நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77

இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்

மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய
உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால்,
கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78

'தோற்றனனே இனி' என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்;
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க்
காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல,
வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன;
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80

திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81

வானரத் தலைவனும், இளைய மைந்தனும்,
ஏனை, 'அத் தலைவனைக் காண்கிலேம்' எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82

இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83

தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84

கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85

திசை உறு துகிலது, செறி மழை சிதறும்
விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86

படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து
இடை உறு திசை திசை இழுகுற, இறைவன்
அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம் வரு கலுழன்
நண்ணலும், இமையவர், 'நமது உறு கருமம்
எண்ணலம், முனிவினின் இவறினன்' எனவே. 88

இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்

ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,
ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89

தீ முகம் உடையன சில; முகம் உதிரம்
தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய;
பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்,
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91

இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92

இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்

இனையன நிகழ்வுற, எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற,
வினை உறு தொழிலிடை விரவலும், விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில்,
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94

இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்

விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த;
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான்,
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95

ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96

ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, - விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97

ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்

'நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை' என்ன,
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப,
மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98

தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால் பிளத்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99

'என்ன கைக் கடுப்போ!' என்பர் சிலர்; சிலர், 'இவையும்
அன்ன மாயமோ; அம்பு அல' என்பர்; 'அவ் அம்புக்கு
இன்னம் உண்டுகொல் இடம்!' என்பர் சிலர்; சிலர், 'இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம்' என்பர்-முனிவர். 100

மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய,
பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101

இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், 'பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி' என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102

'விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச்
சுட்டனன்' எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்;
'கெட்டனம்' என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103

'பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு' என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்-
ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104

இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்

'பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென்' என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106

பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107

கண்டு, 'தாமரைக் கடவுள் மாப் படை' எனக் கழறா,
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா,
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108

இராவணன் மாயையின் படையை விடல்

'தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப்
பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென்' என்று, இராவணன் மதித்தான். 109

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110

மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல்
காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல,
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112

குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும்,
ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113

ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த-
'வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின்' என்னா,
கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்

பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
'பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு' என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116

மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்

தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும்
தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்-
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118

தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார்,
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்,
தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119

மாயப் படையின் விளைவு கண்டு, இராமன் மாதலியை வினவுதல்

இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
'வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன் கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாமெனின், பகர்' என, மாதலி நிகழ்த்தும்: 120

இராமன் ஞானக் கணையால் அதனை ஒழித்தல்

'இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், "கோடியால் விலைக்கு" எனும் பதடியின், விட்டான்-
கருப்புக் கார் மழை வண்ண!-அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம். 121

'வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்,-
நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின் பெரும் பெயர் நொடியின்,
நீக்குவாய்!-உனை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும். 122

'வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத்
துரத்தியால்' என, ஞான மாக் கடுங் கணை துரந்தான்-
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 123

துறத்தல் ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர,
அறத்து அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது, அம் மாயை. 124

இராவணன் சூலம் வீசுதல்

நீலம் கொண்டு ஆர் கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டார், கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 125

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, 'வீரர்-
கண் தா, குலம், முற்றும்' சுடும் என்று அக் கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்துள்ளது கண்டான். 126

எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி,
திரியாநிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியாநிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா, 127

சூலத்தை வெல்ல தேவர்கள் இராமனை வேண்டுதல்

'செல்வாய்' என்னச் செல்ல விடுத்தான்; 'இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல் வாய் வெங் கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்!' என்றனர், வானோர், மெலிகின்றார். 128

சூலத்தின்மேல் எறிந்த படைகள் பயனிலவாக, இராமன் செய்வதறியான் போல் இருத்தல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன,-தன்னை மறவாதே
நினையும் ஞானக் கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின-வீரன் சரம் வெய்ய. 129

எய்யும், எய்யும் தேவருடைத் திண் படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்,
ஐயன் நின்றான், செய் வகை ஒன்றும் அறிகில்லான். 130

இராமனை நெருங்கிய சூலம் அவனது உங்காரத்தால் பொடியாதல்

'மறந்தான் செய்கை; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான்' என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே,
பிறந்தான் நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 131

சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல் நூறு உதிர் ஆகி. 132

வானோரின் பெரு மகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர் மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
'தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம்!' என்றனர்-வானோர், உயிர் பெற்றார். 133

இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்

'வென்றான்' என்றே, உள்ளம் வெயர்த்தான், 'விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது' என்னும் பொருள் கொண்டான்;
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134

'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான். 135

இராவணன் நிருதியின் படையை விடுதல்

'யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்;
நேரே செல்வென்கொல்' என் அரக்கன் நிமிர்வு எய்தி,
'வேரே நிற்கும்; மீள்கிலென்' என்னா, விடலுற்றான். 136

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படை நெஞ்சில்
கருதி, தன்பால் வந்தது அவன் கைக்கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்து, செலவிட்டான்-
குருதிச் செங் கண் தீ உக, ஞாலம் குலைவு எய்த. 137

வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச,
பெய்யும் கோடிப் பல் தலையோடும் அளவு இல்லா,
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப, 138

வாய் வாய்தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 139

'கடித்தே தீரும்; கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும்' என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
'முடித்தான் அன்றோ, வெங் கண் அரக்கன்? முழு முற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது' என்னப் புகைகின்ற. 140

நிருதிப் படையைப் போக்க, இராமன் கருடப் படையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவன் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்,
'எல் வாய்தோறும் எய்தின' என்னா, எதிர் எய்தான்,
'தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 141

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ் சிறை வேகத் தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 142

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
'இளக்க அரும் இலங்கை தீ இடுதும், ஈண்டு' என
விளக்கு இனம் எடுத்தன போன்ற, விண் எலாம். 143

குயின்றன சுடர் மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர் தரப் பதும நாளங்கள்
வயின் தொறும் கவர்ந்தென, துண்ட வாள்களால்
அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 144

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின் தோற்றத்த. 145

அங்கு அ(வ்) வெங் கடுங் கணை அயிலின் வாய்தொறும்,
வெங் கணை படப் பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலை எனப் புக்க போலுமால்;
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல! 146

இராவணன் விஞ்சைகள் தளர்தலும், இராமன் வீரமும் வலியும் மிகுதலும்

ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்,
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள், நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும் வீரமும். 147

பிறை முக அம்பினால் இராமன் இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுதல்

வேதியர் வேதத்து மெய்யன, வெய்யவற்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்,
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்,
பாதியின் மதி முகப் பகழி ஒன்றினால். 148

மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி
போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய். 149

குதித்தனர் பாரிடை, குன்று கூறுற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினார்
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினார்;
மதித்தனர், இராமனை-வானுளோர் எலாம். 150

இராவணனது அற்ற தலை மீண்டும் முளைத்து, இராமனை ஆரவாரத்துடன் வைது அதட்டுதல்

இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும், அத் தலை
மறந்திலது எழுந்தது, மடித்த வாயது;-
சிறந்தது தவம் அலால், செயல் உண்டாகுமோ! 151

கொய்தது, 'கொய்திலது' என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக் கணத்து எழுந்தது ஓர் சிரம்,
செய்த வெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது, தெழித்தது, மழையின் ஆர்ப்பினால். 152

கடலீல் வீழ்ந்த இராவணன் தலையும் ஆரவாரித்தல்

இடந்தது கிரிக் குவடு என்ன எங்கணும்
படர்ந்தது, குரை கடல் பருகும் பண்பது,
விடம் தரு விழியது, முடுகி, வேலையில்
கிடந்ததும், ஆர்த்தது, மழையின் கேழது. 153

இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்

'விழுத்தினன் சிரம்' எனும் வெகுளி மீக்கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154

'தலை அறின், தருவது ஓர் தவமும் உண்டு' என,
நிலை உறு நேமியான் அறிந்து, நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான். 155

கொற்ற வெஞ் சரம் பட, குறைந்து போன கை
பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது;
அற்ற கை, பிறந்த கை, யார் அது ஓர்குவார்? 156

அற்ற தன் கையை எடுத்து இராவணன் மாதலிமேல் வீசித் தாக்குதல்

பொன் கயிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டென வில்லை விட்டிலா
வன் கையைத் தன் கையின் வலியின் வாங்கினான். 157

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக் கை தன் மார்பில் தாக்கலும்,
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய் வழி உதிரம் தூவுவான். 158

மாதலிமேல் இராவணன் தோமரம் வீச, இராமன் அதனைத் துகளாக்குதல்

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினன்-
தாம் அரத்தால் பொராத் தகை கொள் வாட் படை,
காமரத்தால், சிவன் கரத்து வாங்கினான். 159

'மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு' என,
மூண்ட வெந் தழல் சிந்த முடுக்கலும்,
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெங் கணை
தூண்டினான்; துகளானது, தோமரம். 160

இராவணனது தலைகளை இராமன் தொடர்ந்து அறுக்க, அவை பல இடங்களிலும் சிதறி விழுதல்

ஓய்வு அகன்றது, ஒரு தலை நூறு உற,
போய் அகன்று புரள, பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்-அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்தியே. 161

நீர்த் தரங்கங்கள்தோறும், நிலம்தொறும்,
சீர்த்த மால் வரைதோறும், திசைதொறும்,
பார்த்த பார்த்த இடம்தொறும், பல் தலை
ஆர்த்து வீழ்ந்த-அசனிகள் வீழ்ந்தென. 162

தகர்ந்து மால் வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின், புணரியை முற்றுற. 163

வீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தோண்டுதல்

பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்,
பழுது சொல்லும் அன்றே, மற்றைப் பண்பு எலாம்?-
தொழுது சூழ்வன முன், இன்று தோன்றியே,
கழுது சூன்ற, இராவணன் கண் எலாம். 164

இராவணன் வாள் முதலியன வீச, இராமன் அவனை வெல்லும் வகை குறித்துச் சிந்தித்தல்

வாளும், வேலும், உலக்கையும், வச்சிரக்
கோளும், தண்டும், மழு எனும் கூற்றமும்,
தோளின் பத்திகள்தோறும் சுமந்தன,
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 165

அனைய சிந்திட, ஆண் தகை வீரனும்
'வினையம் என் இனி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென்' என்ன, 'நிசாசரன் மேனியைப்
புனைவென், வாளியினால்' எனப் பொங்கினான். 166

இராவணனது மேனியை முற்றும் அம்பினால் இராமன் மூடுதல்

மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்,
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 167

வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன,
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன,
தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில,
போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம். 168

மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு,
உயிரும் தீர உருவின் ஓடலும்,
செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து,
அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான். 169

தேரில் இராவணன் உணர்வு இழந்து கிடக்க, சாரதி தேரை விலக்கி நிறுத்தலும், இராமன் அம்பு எய்தலைத் தவிர்த்தலும்

வாரி நீர் நின்று எதிர் மகரம் படர்
சோரி சோர, உணர்வு துளங்கினான்;
தேரின் மேல் இருந்தான்-பண்டு தேவர் தம்
ஊரின் மேலும் பவனி உலாவினான். 170

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
'போர்த்துப் பொய்த்தனன்' என்று, பொலம் கொள் தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 171

கை துறந்த படையினன், கண் அகல்
மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும்,
எய் திறம் தவிர்ந்தான்-இமையோர்களை
உய் திறம் துணிந்தான், அறம் உன்னுவான். 172

இப்பொழுதே இவனைக் கொல்வாய் என்ற மாதலிக்கு, இராமன், 'அது நீதி அன்று' என மறுத்தல்

'தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய்' என, மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும், இது இயம்பினான். 173

படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து' என்றான். 174

உணர்வு பெற்ற இராவணன், தேரைத் திரும்பி நிறுத்தியதற்காகச் சாரதியைச் சினத்தல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரொடும்
போவர் அஞ்சினர், அன்னது ஓர் போழ்தினின்,
ஏவர் அஞ்சலையாதவர்? எண்ணுடைத்
தேவர் அஞ்ச, இராவணன் தேறினான். 175

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என,
மறக் கண் வஞ்சன், இராமனை வான் திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன், பின்னுற நோக்கினான். 176

'தேர் திரித்தனை, தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய்' எனா,
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 177

'தஞ்சம் நான் உனைத் தேற்ற, தரிக்கிலா
வஞ்ச! நீ பெருஞ் செல்வத்து வைகினை;
"அஞ்சினேன்" எனச் செய்தனை; ஆதலால்,
உஞ்சு போதிகொலாம்!' என்று உருத்து எழா. 178

சாரதி தேரைத் திருப்பி நிறுத்திய காரணத்தைத் தெரிவித்தல்

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கு அணியாத் தலை தாழ்வுறா,
'மூள் கடைக் கடுந் தீயின் முனிவு ஒழி,
கோள் கடைக் கணித்து' என்று அவன் கூறுவான்: 179

'ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது அக் கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது, இத் தொழில்; எம் வினை மெய்ம்மையால். 180

'ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்,
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால்.' 181

இராவணன் சாரதிமேல் இரக்கம் கொண்டு, தேரை மீட்கச் செய்து இராமன் எதிருறல்

என்று இறைஞ்சலும், எண்ணி இரங்கினான்,
'வென்றி அம் தடந் தேரினை மீட்க!' என,
சென்று எதிர்ந்தது, தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 182

கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான், வலி மும் மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என, வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 183

இராமன் இராவணனின் வில்லைத் துண்டித்தல்

'"எல் உண்டாகின் நெருப்பு உண்டு" எனும் இது ஒர்
சொல் உண்டாயதுபோல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம்' எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 184

நாரணன் படை நாயகன் உய்ப்புறா,
பார் அணங்கினைத் தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான். 185

அயன் படைத்த வில், ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்,
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்,
'பயன் படைத்தனம், பல் கவத்தால்' என்றார். 186

மாறி மாறி, வரிசிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ-இருநூறு அவை
வேறு வேறு திசை உற, வெங் கணை
நூறி நூறி, இராமன் நுறுக்கினான். 187

இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான்-திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 188

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
'இவை அனைத்தும் இவனை வெல்லா' எனா,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 189

'கண்ணினுள் மணியூடு கழிந்தன,
எண்ணின் நுண் மணலின் பல வெங் கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய, புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று' எனா, 190

'நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம் படை வாங்கி, இப் பாதகன்
மாரின் எய்வென்' என்று எண்ணி, வலித்தனன்,
ஆரியன், அவன் ஆவி அகற்றுவான். 191

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா,
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா,
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 192

புரம் சுடப் பண்டு அமைந்தது, பொன் பணை
மரம் துளைத்தது, வாலியை மாய்த்துளது,
அரம் சுடச் சுடர் நெஞ்சன் அரக்கர் கோன்
உரம் சுட, சுடரோன் மகன் உந்தினான். 193

அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்

காலும் வெங் கனலும் கடை காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம்
நாலும் கொண்டு நடந்தது, நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194

ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்,
பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்-
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற,
வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195

அக் கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று,
புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும்,
திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196

முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
'எக் கோடியாராலும் வெலப்படாய்' எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி. 197

இராவணனைக் கொன்ற அம்பு தூ நீராடி மீண்டு, இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசி கூறித்
தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய், பாற்கடலில் தூய் நீர் ஆடி,
தேர்க் குன்ற இராவணன் தன் செழுங் குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான் தன் கடுங் கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா. 198

தேரிலிருந்து இராவணன் தலைகீழாக நிலத்தில் விழுந்து, முகம் பொலிவுற்றுக் கிடத்தல்

கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலைநின்றும், பணிக் குலமும் மணிக் குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க,
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான். 199

வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா. 200

இராமன் இராவணனைப் பார்த்தல்

'பூதலத்தது ஆக்குவாயாக, இனிப்பொலந் தேரை' என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப் பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந் தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உரு ஆகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரியக் கண்டான். 201

'தேரினை நீ கொடு விசும்பில் செல்க' என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம்மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்விரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும் திருவாளன் தெரியக் கண்டான். 202

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை
நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத. 203

தோடு உழுத நறுந் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழியத் தொங்கல்
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப, பணைக் கை யானைக்
கோடு உழுத நெடுந் தழும்பின் குவை தழுவி, எழு மேகக் குழுவின் கோவைக்
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்: 204

இராவணனின் புறப்புண் கண்ட இராமன் முறுவலித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும், தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும், மருவ நின்ற
முளரி அம் கண்ணன், மூரல் முறுவலன், மொழிவதானான்: 205

'வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும்,
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்புக்
குன்றி ஆசுற்றது அன்றே-இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 206

'"கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான்" என்னக் கற்கும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற; ஈசனார் இருக்கை நிற்க! 207

'மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண் தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று' என்றான். 208

இராவணனது முதுகில் வடு உற்ற உண்மையை வீடணன் விளக்கி, அவனது உயர்வைப் புலப்படுத்துதல்

அவ் உரைக்கு இறுதி நோக்கி, வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
'செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ!' என்னா,
எவ் உயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்று, இனைய சொன்னான்: 209

'ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 210

'நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந் திசை எல்லை யானைக்
கோடு உளதனையும் புக்குக் கொடும் புறத்து எழுந்த புண் கோள்
பாடு உளது அன்றி, தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்? 211

'அப் பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப் பணை முழங்க, மேல்நாள், அமரிடைக் கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும், காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும், வெரிநிடைப் போய அன்றே. 212

'அவ் வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன் வயின் செல்லின், தேவ!
வெவ் விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ் விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 213

'வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம், ஆண்டு, ஓர்
பன்றியாய் எயிற்றுக் கொண்ட பரம்பரன் முதல பல்லோர்,
"என்று யாம் இடுக்கண் தீர்வது?" என்கின்றார்; "இவன் இன்று உன்னால்
பொன்றினான்" என்றபோதும், புலப்படார், "பொய்கொல்?" என்பர்.' 214

இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய இராமன் வீடணனைப் பணித்தல்

'அன்னதோ?' என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்ன தோள் இணையை நோக்கி, 'வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி' என்றான். 215

மிகைப் பாடல்கள்

புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்,
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். 5-1

வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிரு தரும், களிறும், தேரும்,
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா. 17-1

பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி
எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள்,
தங்கள் தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார். 17-2

எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு ஒரு கடிகை தன்னில், ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி
வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை மடித்தான்; கண்டு,
உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான். 17-3

மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே,
கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும்
மேவினன், அரக்கனை விடாது பற்றியே. 71-1

அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்;
அண்டர்கள் கலங்கினர்; 'அரக்கராயுளோர்
உண்டு, இனிக் கரு' என ஓதற்கு இல்லையால். 71-2

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது,
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின். 89-1

மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
'சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத் தடுக்க,
பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; அதனால்,
நயம் படைப்பென்' என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான். 104-1

அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்;
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய,
சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான். 106-1

ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் சினந்தே,
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் செறுத்தான்;
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். 108-1

இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன்
சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்; மதியின்
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன்,
உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும் ஒறுத்தான். 108-2

வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்;
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க,
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி,
'பேருவிப்பென், மற்று இவன் உயிர்' எனும் உளம் பிடித்தான். 108-3

முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள்
ஒக்க வாரி, அங்கு அரக்கனும், ஊழ் முறை துரப்ப,
புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும், பொடிபட்டு
உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? 108-4

இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, அங்கு
எத் திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. 119-1

'அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலையக்
கொண்ட காலம் ஈதோ!' எனக் குலைகுலைந்து, அமரர்
துண்ட வான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, 'இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்' என்றான். 119-2

மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே
போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் பொழுதில்
காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் கறுத்தான். 124-1

நெற்றி விழியான்-அயன், நிறைந்த மறையாளர்,
மற்றை அமரர், புவியில் வானவர்கள், 'ஈர்-ஐந்து
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ?' என-இசைத்தான். 131-1

'வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்,
நீதியொடு கால்குலைய, நீசன் விடு சூலம்
ஈது அழியும்' என்று இதயம் எண்ணினன், இராமன். 131-2

எவ் வகை உரகமும் இரியல் போயின,
நொவ்வியல் உற்றன; நொடிப்பது என் இனி?
அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே
கவ்வையின் உழந்தன, சிறையின் காற்றினே. 144-1

பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன்; முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து; உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல். 151-1

ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்,
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால். 151-2

அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை,
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார். 152-1

இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்-
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான், 153-1

தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே. 160-1

ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான மீது எழ, மாதலி தூண்டிட,
ஞான நாயகன் தேரும் எழுந்துறப்
போனது; அண்டப்புறத்து அமர் கோலினார். 164-1

அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தொடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும், 183-1

ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத்தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: 183-2

'துறக்கும் என்பதை எண்ணி, சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.' 183-3

ஈது அரக்கன் புகல, இராமனும்,
'தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து,
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப்
போது உரைக்கும்' எனக் கொடு பொங்கினான். 183-4

மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய, அன்னான்
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் பொன்றிட, பண்டு அங்கு இமையா முக் கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடித்
தேறுதல் செய்து உழல் போதில், தீவினை மாய்த்திடப் போம் நல் வினையேபோல. 200-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247