வேல் ஏற்ற படலம் - Vel Yetra Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



யுத்த காண்டம்

32. வேல் ஏற்ற படலம்

வானரத் தலைவர்களைத் தொடர்ந்து, குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்

'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்;
வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்' என்னா,
இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 1

சேனைகள் புடை சூழ, இராவணன் போர்க்களம் செல்லுதல்

சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த,
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் - தேவரைத் தொலைத்த
வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், விளங்க. 2

நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி,
ஆறு போல் மத மா கரி ஐ-இரு கோடி,
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி,
சீறு கோள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. 3

'மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், முனையின்
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!' என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 4

இராவணனையும் அரக்கர் தானையையும் கண்ட வானரர் ஆரவாரித்தல்

அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர்
வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சினைச் சுடுவது ஓர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை, கண்டார். 5

கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்-
'மண்டு போரிடை மடிவதே நலம்' என மதித்தார். 6

அரக்கன் சேனையும் குரக்குச் சேனையும் கைகலத்தல்

அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் கோத்து,
நெருக்கி நேர்ந்தன; நெருப்பு, இடை பொடித்தன; நெருப்பின்
உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது உதிரம். 7

அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப,
முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. 8

தூவி அம் பெடை அரி இனம் மறிதர, சூழி
தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப,
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த,
மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த. 9

கண் திறந்தனர் கணவர்தம் முகத்த அவர் முறுவல்
கண்டு இறந்தனர் மடந்தையர், உயிரொடும் கலந்தார்-
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப. 10

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும்
நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான் -
'தாழ் இல் என் படை தருக்கு அறும்' என்பது ஓர் தன்மை. 11

அனுமனும் இலக்குவனும் அரக்கர் படையைச் சிதைத்தல்

மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும், வேல், முதலிய அயில் படை அடக்கி,
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, அச் சேனை;
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு பால். 12

அழலும் கண் களிற்று அணியொடும், துணி படும்; ஆவி
சுழலும் பல் பரித் தேரொடு புரவியும், சுற்ற,
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்-
குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். 13

'வில்லும் கூற்றுவற்கு உண்டு' என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை பெருங் குழுவை;
ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 14

இராவணன் கொதித்து, அம்பு தொடுக்க குரக்குச் சேனை நிலைகெடுதல்

'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம்' என்று இராவணன் கொதித்தான். 15

ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின்
தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். 16

ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் புணரி. 17

இலக்குவன் - இராவணன் பொருதல்

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி,
'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான். 18

ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 19

விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம்
உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 20

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், 'நூழில்
ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்மா!
நீக்கி, என் இனிச் செய்வது?' என்று இராவணன் நினைந்தான். 21

இராவணன் மோகப் படையை விட, வீடணன் கூற இலக்குவன் ஆழிப்படையை விடல்

'கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்;
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 22

'மோக மாப் படை ஒன்று உளது; அயன் முதல் வகுத்தது;
ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது;
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்வயின் ஏவி,
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்'- 23

என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன், 'ஆழியான் படையினின் அறுத்தி'
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 24

வீடணன் உபாயத்தால் படை வலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்

வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம்தமக்கு' என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். 25

மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு அனல் வேள்வி,
அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 26

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம்கொடு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். 27

'ஈது என் உயிர் அழிக்கும்' என்று வீடணன் உரைக்க, இலக்குவன் 'இதைப் போக்குவேன்; அஞ்சல் நீ' எனல்

எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும்;
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை' என்றலும், பெரியோன்,
'அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!' என்று இடை அணைந்தான். 28

வேலைத் தானே மார்பில் ஏற்க, இலக்குவன் எதிர்தல்

எய்த வாளியும், ஏயின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை' என்று, உம்பரும் பெரு மனம் உலைந்தார். 29

'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப்
பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்,-
எற்பென், என் தனி மார்பின்' என்று, இலக்குவன் எதிர்ந்தான். 30

வேலை ஏற்க பலரும் முந்த, இலக்குவன் அவ் வேலைத் தன் மார்பில் ஏற்றல்

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? 31

முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
'நின்மின்; யான் இது விலக்குவென்' என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக, 32

வீடணன் தண்டு கொண்டு இராவணனது தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல்

'எங்கு நீங்குதி நீ?' என வீடணன் எழுந்தான்,
சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியோடும் படப் புடைத்தான்,
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 33

இராவணன் வீடணன்மேலும், அனுமன்மேலும் கணை தொடுக்க, அவனை வீடணன் வெகுண்டு, பின் தொடர்தல்

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி,
பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி,
போயினன், 'செரு முடிந்தது' என்று, இலங்கை ஊர் புகுவான். 34

'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென்' என்று அரக்கன்மேல் வீடணன் வெகுண்டான். 35

வீடணனைக் கொல்லாது இராவணன் இலங்கைக்கு மீள்தல்

'வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை' என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான். 36

வீடணன் துயரம் மிக்கவனாய், இலக்குவன் பாதத்தில் வீழ்ந்து, இறக்க முயல, சாம்பன் தடுத்தல்

அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி,
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 37

'பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற,
என் இருந்து நான்? இறப்பென, இக் கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன்' என்றவன் மறுக,
'நில், நில்' என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்: 38

'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன் மின்' என்று இடர் தீர்த்தான். 39

சாம்பன் உரைப்படி அனுமன் மருந்து கொண்டு வந்து, இலக்குவனை உயிர்ப்பித்தல்

மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்?' என்னலும், அன்னான்
கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் கடந்தான். 40

உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் கொணர்ந்த வீரன்,
பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் உண்டோ ? 41

தந்தனன், மருந்து தன்னை; தாக்குதல் முன்னே யோகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம்; உயிர் தரும் வலத்தது என்றால்,
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடிதல் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 42

இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணனின் நலத்தை உசாவல்

எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால் தழுவி, 'எந்தாய்!
விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!' என்று, விம்மித்
தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி,
'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்' என்று உவகை கொண்டான். 43

வானரத் தலைவர்கள் இராமனிடம் சேர்ந்து வணங்க, இராமன், 'விளைந்தது என்ன?' என வினாவுதல்

'"தருமம்" என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின்' என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 44

ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று
குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்,
வென்றியின் தலைவர்; கண்ட இராமன், 'என் விளைந்தது?' என்றான். 45

இராமன் அனுமனைத் தழுவி ஆசி கூறுதல்

உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் ஊற,
சொற்றனன் சாம்பன், வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
'பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!' என்றான். 46

இலக்குவனை இராமன் பாராட்டி உரைத்தல்

புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி,
துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் போய், வந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 47

இளவலைத் தழுவி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வண்மைத்
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே? 48

புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காண்கில்' என்றான். 49

இராமன் இளைப்பாறுதல்

சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான். 50

மிகைப் பாடல்கள்

அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, 'அமரில்
துரக்க, மானுடர்தம்மை' என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி,
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான். 2-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247