-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

3

     சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மூன்று பேரூர்கள் மாறிமாறித் தலைநகரங்களாக அதாவது அரசாங்க நிர்வாக பீடமாக இருந்ததாகவும் அவை முறையே புகார்த் துறையில் அமைந்த உறையூர் என்றும், பிறகு தஞ்சாபுரி என்று வழங்கப்பட்ட தஞ்சை நகரும் இவற்றுக்குப் பிற்பாடு கங்கைகொண்ட சோழபுரம் என்றும் இருந்ததாக வரலாறுகள் பகருகின்றன. ராஜேந்திர சோழ மன்னருக்குப் பிற்பட்ட மன்னர்கள் பெரும்பாலும் கங்கைகொண்ட சோழபுர விண்ணகரம் என்றும், கங்காபுரி என்றும் வழங்கி வந்த கங்கை மாநகரையே தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினர் என்றாலும் விக்கிரம சோழனுக்குப் பிற்பட்ட மன்னர்கள் தஞ்சையைத் தலைமைப் பீடமாக மாற்றிக் கொண்டு விட்டனர்.

     விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தன் தந்தை எவ்வளவு அழகுபடுத்தியிருந்தாரோ அதைவிடச் சற்று அதிகமாக அழகுபடுத்தியிருந்தான் என்பதுடன் கோட்டை கொத்தளங்களையும் வலுப்படுத்தியிருந்தான் என்றும் கூறப்படுகிறது. சோழர்களின் வேவுப்படையின் சிறப்பு, ஊடுருவிப் படைகளின் தந்திரம், மெய்யுதவிப் படையினரின் தன்னம்பிக்கை, நால்வகைப் படையினரின் நிகரற்ற சக்தி - யாவும் கூடி விக்கிரம சோழன் காலத்தில் சோழ நாட்டைப் பகைவர்களின் சிம்ம சொப்பனமாகச் செய்திருந்தது என்று கூறினால் மிகையல்ல.

     இத்தகைய சோழர் தலைநகரில் சிம்மநாதன் நுழைந்து புறநகரையும் தாண்டிவிட்டான்.

     கங்கைகொண்ட சோழபுரம் பெரும் நகர். நாலா திசைகளிலும் இயற்கைப் பாதுகாப்பாக இலங்கிய புறநகர் நாளா வட்டத்தில் விரிவடைந்து அங்கேயே பெருங்குடி மக்களுக்கான சகல வசதிகளும் அமைவுற்றதால் உள்நகரை அதாவது கோட்டை அமைந்த ஊரை அரசகுலத்தினருக்கும் அவர்களைச் சார்ந்த உயர்நிலைப் பெருமக்களுக்குமே உரியதாக்கி அழகழகான பெருமாளிகைகளும், பல உப்பரிகைகளைக் கொண்ட மாடமாளிகைகளும் நாலு திசையும் சூழ்ந்து இடையே பேரசரின் திருமாளிகைக் கம்பீரமாக எழுந்து நின்ற காட்சியைப் பெருங் கவிஞர்கள் வர்ணிக்க வேண்டிய விஷயம் ஆதலால், நமது சிம்மநாதன் புறநகர் கடந்து, கோட்டையின் எதிரே நுழைவாயிலில் வந்து நின்று தொலைவிலிருந்தே உள்நகரைக் கண்டான் என்பதுடன் சுருங்கக் கூறுவதுதான் நமக்குத் தகுந்தது.

     அண்மைக் காலத்தில்தான் விக்கிரம சோழன் சோழ அரியணையில் அமர்ந்தானாயினும் ஏறக்குறைய ஐம்பதாண்டுக் காலம் ஈடு இணையில்லாது சோழ சாம்ராஜ்யமாண்ட குலோத்துங்க சோழர் மிகச் சிறப்பான நிலையில் இருந்த தமது ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் விட்டுச் சென்றுள்ளார். இளம் வயதினனானாலும் விக்கிரமன் நிதானமும், எதையும் திட்டமிட்டுச் செய்யும் ஆற்றலும் பெற்றிருந்ததால் தந்தையின் சிறப்பாட்சியைத் தழுவி தன்னாலும் ஆள முடியும் என்பதை மக்களுக்கு நன்குணர்த்தியதுமின்றி, பிற நாட்டினரும் அதாவது சோழ சாம்ராஜ்ய மேற்பார்வையில் இலங்கிய நாடுகளிலும் தேவையான அளவுக்குப் புரியும்படி நடந்து கொள்ளத் தவறவில்லை.

     ஆயினும் கலிங்கர்களும் கதம்பர்களும் மாமன்னன் குலோத்துங்கன் இல்லை, இனி அவனைப் போல் யார்தான் இருக்க முடியும் என்று நினைத்து நிமிரவும் செய்தார்கள். சின்னஞ்சிறு கங்கபாடியே துள்ளியெழ விரும்பினால் இவர்களைப் பற்றிக் கேட்பானேன்?

     எனினும் விக்கிரம சோழன் பலவகையிலும் பாக்கியசாலிதான். தந்தையும் தந்தையின் அன்னையும் அவனை ஆட்சிக்குகந்தவனாகப் பயிலுவித்திருந்தது போதாதென்று, பூந்துறை நாயகன் என்று சோழ நாடு பெருமையோடு போற்றிய பூந்துறை நாட்டு மண்டலாதிபதியான வீரபராக்கிரம சோழன் அவனுடைய மதியூகியமைச்சர்களில் முக்கியத்துவம் வகித்தது வெகுவாகக் குறிப்பிடத்தக்கது.

     சோழர்களின் நலமே தங்கள் நலமாகக் கருதிய கொடும்பாளூர் வேட்டரையர், முனையரையர், காடவர், கோவரையர், முத்தரையர், மழவரையர், போத்தரையர், வல்லவரையர், பல்லவரையர் போன்ற சோழர்குலக் காப்பாளர்களான பெருங்குலத்தினர்கள் பெருந்துணையும் முதலமைச்சர் ஸ்ரீவத்ஸ பிரம்மாதிராயர் அருந்துணையும், உடன்பிறந்த அண்ணன்மார்களாயிருந்தாலும் சோழவமிசப் பாரம்பரிய உரிமைப்படி சோழர் முடியேற்கும் தகுதியும் வாய்ப்பும் பெற்றிருந்தாலும் தம்பி விக்கிரமனுக்காக உதறிவிட்ட வீரசோழன், சோழகங்கன் என்றும் தனது மூத்தவர்களின் பெரும் பாதுகாப்பும் இவனுக்குக் கிடைத்திருந்ததால் விக்கிரமன் பாக்கியசாலி என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இருப்பதற்கில்லை.

     ஆயினும் பூந்துறை நாயகன்தான் இப்போது முழுக்க முழுக்க விக்கிரமனை நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்றிருந்தான் என்றால் அது தவறாகாது. சோழர்களின் நலனில் கருத்துள்ள ஒரு சிலருக்கு இந்தப் பூந்துறையானின் தலையீடு பிடிக்கவில்லையானாலும் எதிர்க்கவில்லை. ஆனால் மிகப் பெரும்பாலோர் அவனைப் பரிபூரணமாக ஆதரித்தது உண்மையில் மிக மிகப் பொருத்தமானதே.

     ஏனெனில் பூந்துறை நாயகன் என்னும் விருதுடைய கரிவர்மன், பேரரசன் குலோத்துங்கருக்கு ஏதோ ஒருவகையில் நெருங்கிய உறவு கொண்டவன் என்று இலைமறைவு காய் மறைவாகச் சிலர் பேசிக் கொண்டாலும் அவன் மாவீரன் மட்டுமில்லை, மிகச் சிறந்த ராஜதந்திர சதுரன் என்பது பகிரங்கமாகப் பலரும் அறிந்து மகிழ்ந்திருந்த விஷயமாகும்.

     தவிர காடவர்கோன் பேத்தியை மணந்திருந்தான் இவன். எனவே அரசகுல சம்பந்தமும் உள்ளவனாக இருந்ததால் நாட்டில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தான். இவனுடைய அரிய முயற்சியால்தான் சோழர்குலச் செல்வியான சூரியவல்லியை மணக்கவிருந்த இலங்கை நாட்டின் இளவரசன் மரணாபத்திலிருந்து தப்ப முடிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பேரரசர் குலோத்துங்கர் உயிருக்கே பேராபத்து ஒன்று நேர இருந்ததைத் தடுத்துத் தன்னையே மரணாபத்துக்குட்படுத்திக் கொள்ளவும் அஞ்சாதவன் என்ற பெருமையும் உண்டு இவனுக்கு.

     பேரரசரால் வீரபராக்கிரம சோழன் என்று பேர் கொடுக்கப் பெற்றாலும் மிகச் சாதாரணமான பூந்துறை நாயகன் என்ற பெயரையே அவன் விரும்பினான்.

     வீரபராக்கிரம சோழன் என்ற பட்டப் பெயரைப் பேரரசர் இவனுக்கு சும்மா கொடுத்து விடவில்லை என்றும், சம்பா நாட்டுக்கு குலோத்துங்கர் கடல் வழியாகப் பயணம் செய்த காலத்தில் அங்கு ஒரு அரசகுலப் பெண்ணுடன் கந்தர்வ விவாகம் செய்து கொண்டதும், இந்த அரச தம்பதிகளுக்குப் பிறந்தவனே இந்தப் பூந்துறை நாயகன் என்பதும், இவனுடைய இயற்பெயர் சூரியவர்மன் என்பதும் இவன் தாய் சம்பா நாட்டுப் பத்திராவர்ம மகாராஜாவின் வழி வந்த மாவீரரான மகேந்திரவர்மரின் மகள் என்றும் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் உண்டு.

     இவ்வுண்மையைக் கொண்டு பார்த்தால் சோழ அரியணைக்கு முதல் உரிமை கொண்டாடக் கூடிய தகுதியையும் உறவு முறையும் பெற்றிருந்தவன் இந்தப் பூந்துறை நாயகன். ஆனால் உரிமை கொண்டாடவில்லை. விக்கிரமனைப் பரிபூரணமாக ஆதரித்துப் பாதுகாக்கும் சாதாரண வீரனாக இருப்பவன்.

     கங்கைகொண்ட சோழபுரக் கோட்டை வாயிலில் தனக்கு உள்நகர்ப்புறத்துள் நுழைய அனுமதியை எதிர்பார்த்து சிம்மநாதன் தனது தோழன் உலூகனுடன் வெளியே நின்ற சமயத்தில் வீரசோழன் வேல்நம்பியுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

     “வந்திருப்பவன் சிம்மநாதன்தான் என்பது நிச்சயமாகிவிட்டது. என்றாலும் நாம் அவசரப்படுவதற்கில்லை வேல்நம்பி. பூந்துறை நாயகன் வரட்டும், இது பற்றிக் கலப்போம். இதற்கிடையே அவனை நம் கண்காணிப்பாளர் இருவர் அரச மரியாதைகளுடன் உள்நகர் மாளிகையொன்றில் தங்கச் செய்யட்டும். விக்கிரமன் திரும்பி வரும் வரை சிம்மநாதன் இங்கு இருக்கட்டும். நாம் சந்தேகிப்பதாகத் தினையளவு கூட அவன் மனதில் எதுவும் தோன்றிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்...”

     “உத்திரவு இளவரசே. காலிங்கராயரின் மகனும், கடுங்கோனும் வந்திருக்கிறார்களே, அவர்களுக்கு...”

     “உடனே வரச்சொல். கடுங்கோன் உடல் நலம் பெற்றறிருக்கிறான் இல்லையா?”

     “விழுப்புண்கள் ஆறிவிட்டன. எனினும்...” சற்றே தயங்கினான் வேல்நம்பி.

     வீரசோழன் இலேசாகச் சிரித்துவிட்டு “நீ தயங்குவது புரிகிறது வேல்நம்பி. கடுங்கோன் இனியும் வைத்திய சாலையில் தங்கமாட்டான். நாமும் வற்புறுத்த முடியாது. ஒருவேளை பூந்துறையார் முயன்றால்...”

     “மயிலைப் பராந்தக மூவேந்த வேளார் ஒப்புதல் அளிப்பாரா?”

     “பூந்துறையார் கேட்டு அவர் மறுப்பதற்கில்லை வேல்நம்பி. இன்னமும் நாம் அவரிடமோ, அவருடைய சகோதரர்களிடமோ நேரில் எதையும் கேட்கக் கூடிய நிலை ஏற்படவில்லை. சோழர் குலம் அவர்களுக்குத் தங்களை அறியாமற் செய்த...”

     “இல்லை இளவரசே. நம் அரசரை அவர்கள் விருந்தினராக அழைத்துப் போயிருக்கிறார்கள். இது பூந்துறையார் முயற்சிதான். என்றாலும் அவர்களும் நாளதுவரை பேரரசர்க்குரிய மதிப்பினைத் தராமலில்லை. சற்றேனும் மாறுபட்டால் பூந்துறையார் கொதித்தெழுவார் என்பது நமக்கும் தெரிந்ததுதான்.”

     “உண்மைதான் வேல்நம்பி. ஆனால் பராந்தக வேளார் நோக்கம் என்னவாயிருக்கும் என்பதுதான் புரியவில்லை. சோழகங்கன் கூட விழிக்கிறான். விக்கிரமனுக்கு இவ்வாண்டில் மணம் முடித்துவிட வேண்டுமென்றுதான் தந்தை முடிவு செய்திருந்தார். ஆனால் ஒருவர் பின் ஒருவராகத் தந்தையும் பாட்டியும் மரணமுற்றது காரணமாக நாம் துக்க வயப்பட்டதால் இந்த முடிவு நிறைவேறவில்லை. ஆயினும் பூந்துறையாரிடம் தந்தை இவ்விஷயத்தில் காலதாமதம் கூடாது என்றும் விரைவில் ஒரு ஏற்பாட்டினைச் செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளார். அதனால்தான் ஓராண்டுத் துக்க காலத்தைக் கூட ஆறு திங்களாகக் குறைத்துள்ளனர். எது எப்படியாயினும் சரி, கடுங்கோனுக்கு இனி இங்கு இருப்புக் கொள்ளாது. அவன் மனதில் உள்ள வேகம் நாம் எதிர்பார்க்கும் காலத்தைக் காட்டிலும் அதிவேகமாகக் கலிங்கத்தில் புகுந்துவிடச் செய்யும் அவனை. கடுங்கோன் மற்றவர்களைப் போல் அல்ல. பழிவாங்கும் வேக உணர்ச்சி அவனைவிட்டு அகலவே அகலாது. எனினும் நமக்கும் ஒரு கடமையுண்டல்லவா? எனவே நாம் ஏதோ சொல்லிப் பார்ப்போம். உடன் அழைத்துவா” என்றதும் வேல்நம்பி வெளிப்போந்தான்.

     சில நொடிகளில் அவனும் காலிங்கராயன் மகனான மாவலிராயனும் மகத்தான கலிங்கப் போரில் மாபெரும் வெற்றி கண்ட கருணாகரத் தொண்டைமானின் நண்பனும் மும்முறை கலிங்கத்தின் மீது சோழ மாமன்னர் வெற்றி காண்பதற்குப் பேருதவி புரிந்த இராசசிங்க போத்தரையனின் மகனும் ஆன வீரசேகர போத்தரையனும் வந்தான். ஆனால் இவனுக்குக் கடுங்கோன் என்ற பெயரை பேரரசி அம்மங்கைதேவியே சின்னஞ்சிறு வயதிலேயே வைத்திருந்தாள்.

     இவனுக்கு ஏழெட்டு வயதிருக்கும். அப்போது இவன் தந்தையைத் தாங்கி வந்த குதிரை இவன் மாளிகை வாயிலில் நின்றிருந்தது. மீண்டும் அவர் அவசரமாக செல்ல வேண்டுமாதலால் சேணத்துடன் அது தயாராக நின்றது. வீரசேகரன் குழந்தைதானே. சட்டெனத் தாவி, அதன் மீது ஏறிவிட்டான். திடீரென்று தன் மீது ஏதோ பாரம், அது பெரிய ஆளா சிறு குழந்தையா என்றறியாத குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயிற்று.

     வீதியில் இருந்தோர் “ஐயகோ...!” என்றனர். இவன் அன்னை, மகன் இனித் திரும்பான் என்று மூர்ச்சை போட்டு விட்டாள். தந்தையோ செய்வதறியாது வேறொரு குதிரை மீது ஏறி பல குதிரை வீரர்கள் புடைசூழ முன்னே ஓடும் பரியைப் பிடித்துச் சிறுவனைக் காக்க விரைந்தார்.

     சிறு பயல் துணிந்த கட்டை. கடிவாளத்தை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாவிட்டாலும் சேணத்தில் படுத்துவிட்டான். எங்கும் இந்தப் பரி ஓட்டத்தைப் பார்த்துப் பதறியவர்தான் அதிகம். சிலர் குறுக்கிட்டு அதை நிறுத்த முயன்றனர். பயனில்லை. ஏறக்குறைய அரைக்காத தூரம் ஓடிய குதிரை என்ன நினைத்ததோ என்னவோ சட்டென நின்று இருமுறை துள்ளிக் குதித்தது. பயல் விழவில்லை. நல்ல காலம்.

     இச்சமயம் மன்னர் தமது மெய்யுதவிகளுடன் வந்து கொண்டிருந்தார் எதிரே. குதிரையை ஒரு மாதிரி மிரட்டி நிற்கச் செய்ததும்.. சற்றுத் தூரத்தில் சிவிகையில் வந்த பேரரசி, ஏன் மகனும் மற்றவர்களும் நின்றுவிட்டார்கள் என்று பதறி சிவிகையை நிறுத்திப் பார்த்ததும், ஒரு குதிரையைப் பிடித்து அதிலிருந்து ஒரு சிறுவனை மன்னரே இறக்கியதைக் கண்டதும் அரசி அங்கு சென்று “யார் இந்தப் பயல்?” என்று கேட்டாள்.

     அனைவரும் மரியாதையுடன் ஒதுங்கி நிற்க, அந்தப் பயலோ தன்னைக் குதிரை மீதிருந்து இறக்கி விட்டவரைப் பயங்கரமாகப் பார்த்தான். பிறகு “ஏன் என்னை இறக்கினாய்?” என்று கடுங்குரலில் அவன் கேட்டதும் அரசி சிரித்துவிட்டு “நீ யார் கடுங்கோனா?” என்று நயமாகக் கேட்டதும், “நீ சும்மாயிரு பாட்டி. நான் குதிரை மீது போவதைத் தடுத்து நிறுத்தி இறக்கிவிட இவர் யார்?” என்று மீண்டும் கேட்டதும் மாமன்னர் வாய்விட்டுச் சிரித்து “பலே.. பலே! அம்மா, இவன் நம்ம போத்தரையனின் பேரன். அடையாளம் புரிகிறதா?” என்று கேட்டதும் சட்டென வியப்புற்ற பேரரசி இன்னும் அருகே சென்று பார்த்துவிட்டு “ஆமாம். அப்படியே உரித்து வைத்திருக்கிறதே... நல்லது... போத்தரையன் பெற்ற பிள்ளையே. இனி நீ நமக்குக் கடுங்கோன்தான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்த சமயத்தில் இராசசிங்கப் போத்தரையனே வந்துவிட்டார்.

     மன்னரையும் பேரரசியையும் பார்த்துவிட்டு முதலில் வணங்கிய அவர், இவர்களிடையே தன் மகன் விரைப்பாகப் பார்த்து நிற்பதைக் கண்டு துணுக்குற்று “மன்னிக்க வேண்டும் பேரரசி. இந்தப் பொடியன் சட்டெனக் குதிரை மீது தாவி ஏறியிருக்கிறான்...”

     “போதும் இராசசிங்கா. விஷயம் புரிந்தது. ஆனால் இவன் என்னைப் பார்த்து அதாவது கண்களை உருட்டி விழித்து நீ யார் என்னை இறக்க என்று கேட்டு மிரட்டுகிறான். முதலில் அதற்கு நீ மரியாதையாகப் பதில் கூறு” என்று மன்னர் புன்னகைத்தபடியே கூறியதும் போத்தரையன் விதிர் விதிர்த்துப் போய் நின்றுவிட்டான்.

     “இராசசிங்கா, உன்னுடைய மகன் உன் அப்பனைப் போலவே விழிகளை உருட்டிப் பார்க்கிறான். எனவே அவனுக்கு நான் கடுங்கோன் என்று விருதளித்தேன். தவறில்லையே?” என்று கேட்டபடி பேரரசி சிவிகையில் ஏறியதும்...

     “மன்னிக்க வேண்டும் பேரரசி! இந்தப் பயல் தெரியாத்தனமாக...”

     “கேட்டதற்குப் பதில் இல்லை. பெயர் என்ன? பொருத்தமா? இல்லையா? அவனுடைய வீரவிழிப் பார்வைக்கு ஏற்றதா?”

     “கடுங்கோன்...” என்று போத்தரையன் உச்சரித்ததும் மன்னரும் சிரித்துவிட்டார்.

     ஆனால் அந்தச் சிறு பயல் இன்னும் கூட மாறவில்லை.

     “போத்தரையன்தான் இப்படி ஒரு கடுங்கோனாகப் பிறந்துவிடுவோம் என்று எதிர்பார்த்தானோ இல்லையோ” என்று பேரரசி சொல்லிவிட்டுச் சிவிகையில் அமர்ந்து விட்டாள்.

     அன்று முதல் இன்று வரை அதாவது இருபத்தைந்து வயதுக் காளையாக வளர்ந்திருக்கும் அவனுக்குக் கடுங்கோன் என்ற பெயர்தான் நிலைத்தது.

     வீரசோழன் எதிரே மூன்று வீரர்களும் வந்து நின்று முறைப்படி வணங்கியதும் கடுங்கோனைச் சற்று ஊன்றிப் பார்த்த வீரசோழன் “நீ இன்னும் சில நாட்கள் சிகிச்சையில் இருப்பது அவசியமில்லையா?” என்று கேட்டதும், கடுங்கோன், “இப்படியே இருந்தால் நான் ஆயுள் முழுமைக்கும் நோயாளியாகத்தான் இருக்க வேண்டும். இளவரசே, மீண்டும் நான் கலிங்கம் போகத்தான் வேண்டும். என் தங்கையின் கதி யாதாயிற்று என்று தெரிந்து கொள்ளும் வரை நான் தூங்க முடியாது. தவிர இக்கடமையில் நான் தோல்வி கண்டால் அது எனக்கு மட்டுமில்லை, சோழ நாட்டுக்கே களங்கம் இல்லையா இளவரசே?” என்று சிம்ம கர்ஜனை மாதிரி முழங்கியவன் மேலும், “இராஜசிங்கப் போத்தரையரின் மகள் இன்று கலிங்கத்தின் கயவன் எவனோ ஒருவனின் பிடியில் சிக்கியிருக்கிறாள். அவளை மீட்க இந்தச் சோழர் எதுவும் செய்யவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல, நாலு திங்கள் ஓடிவிட்டன. யாரும் எதுவும் செய்யவில்லை என்று அவளே கூட மனமொடிந்து இதற்குள் இறந்திருந்தால் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்றல்லவா நீங்கள் உத்திரவிட வேண்டும்.”

     “நீதான் ஒருமுறை அங்கு ஊடுருவிச் சென்றாய். எனினும் வாள் புண்களுடன் திரும்பியிருக்கிறாயே. இனியும் இது போல் நடக்காதிருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் கடுங்கோன்?”

     “நியாயமான கேள்விதான். இந்த மாரிக் காலத்துக்குள் நான் அவளைக் கண்டு பிடிக்காமல் போனால் அப்புறம் எப்பவுமே முடியாது. தந்தையுமில்லை, தாயும் இல்லை, நான் ஒருவன்தான் இருக்கிறேன். எனவே என் தங்கை என்ன நினைப்பாள் என்று நீங்களே ஊகிக்க முடியும் இளவரசே” என்று அவன் தழுதழுத்த குரலில் விளக்கியதும் வீரசோழன் சட்டெனப் பதில் கூறவில்லை.

     ஆனால் இதுகாறும் வாய்மூடி நின்ற மாவலிராயன் “கடுங்கோன் தன்னுடைய தங்கையின் கதியறியும் வரை தூங்கமாட்டான் என்பது உண்மை. ஏனெனில் அவள் கலிங்கன் ஒருவனால் கவரப்பட்டதற்குத் தானே காரணம் என்று நம்புகிறான்.”

     “இவனையறியாமல் நிகழ்ந்துவிட்ட கொடுமைக்கு இவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்று வீரசோழன் கேட்டதும், கடுங்கோன் சட்டென்று “நான் அறியாதிருந்தாலும் வயது வந்த பெண் ஒருத்திக்குப் பாதுகாப்பு அளிக்கும் கடமை என்னைச் சேர்ந்ததுதானே இளவரசே?”

     “உன்னுடையது மட்டுமில்லை. சோழ நாட்டுடையதுமாகும். ஒரு சோழ நாட்டுப் பெண் பிறநாட்டானால் கவரப்பட்டாள் என்பது நம் அனைவருக்கும் கேவலமாகும். அதைவிட அவளைத் திரும்பக் கொண்டு வராமல் இருப்பது ஏற்கெனவே ஏற்பட்டுள்ள கேவலத்தைப் பெருக்குவதுமாகும்” என்றான் வீரசோழன்.

     கடுங்கோன் இப்போது குறுக்கிடவில்லை. ஆனால் மாவலி “இது ஒரு சாதாரண விஷயம் இல்லை இளவரசே. கலிங்க பீமன் காலத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. இப்போது அது மாறிவிட்டது. பெண்களைக் கவர்ந்து சென்று பணயமாக்கிக் காரிய சாதனை செய்து கொள்ளும் பழக்கம் இதுவரை இல்லை. ஆனால் இப்போது நடந்துள்ளது. எனவே இது பற்றி நாம் முழுக்கவனம் செலுத்தி உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் இளவரசே.”

     மாவலிக்கு ஏன் இவ்விவகாரத்தில் இவ்வளவு தீவிர அக்கறை என்பது புரியாமலில்லை இளவரசன் வீரசோழனுக்கு. கடுங்கோன் தங்கை பூங்கொடி அழகும் துருதுருப்பும் தேள் கொட்டுவது போன்ற பேச்சுத் திறனும் கொண்டவள். மாவலிக்கு நெடுநாளாக இவள் மீது ஒரு கண் என்றும் தெரியும். ஆனால் பூங்கொடியின் மனநிலை பற்றி எதுவும் தெரியாது. எனவே மாவலியும் கடுங்கோனுடன் செல்ல அனுமதி கேட்க வந்திருப்பது தவிர்க்க முடியாத ஒரு கடமைப் பொறுப்பாகும்.

     வீரசோழன் இப்படி நினைத்ததும் அப்படியானால் இவர்கள் இருவருக்கும் தற்காலிகமாகவாவது கலிங்கம் செல்ல அனுமதி வழங்க வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்தான். எனினும் வாய்விட்டுக் கூறிவிடவில்லை.

     கோட்டைக் காவலன் வந்து வணங்கி நின்றதும் ‘என்ன?’ என்று கேட்பது போல அவனைப் பார்த்தான் வீரசோழன்.

     “கங்கபாடியிலிருந்து சிம்மநாதன் என்பவரும், அவருடைய மெய்யுதவி உலூகன் என்பவரும் இங்கு வந்துள்ளனர். மன்னரைச் சந்தித்து பரிசில் ஒன்று கொடுத்து வரும்படி அவர்களுக்கு கங்க நாட்டரசர் உத்திரவாம். உள்ளே வர அனுமதி நாடி என்னை அனுப்பியுள்ளனர்” என்று பணிவுடன் அறிவித்ததும் “நல்லது, நான் வேல்நம்பியை அனுப்புகிறேன்” என்று இளவரசன் அவனைப் போகச் சொன்னான்.

     மாவலியும் கடுங்கோனும் இளவரசரை ஏறெடுத்துப் பார்க்க “கங்கன் விஷயம் நாம் பொறுத்துப் பார்க்க வேண்டிய பிரச்சனை. பூந்துறையாரும் மன்னரும் திரும்பும் வரை அவர்கள் இங்கு தங்கியிருப்பர். வேல்நம்பி தேவையானபடி செயல்படுவான்” என்று கூறியதும் அவர்கள் முகத்தில் சற்றே திருப்தி களையிட்டது.

     சிம்மநாதன், உலூகன் இருவரும் கோட்டைக்குள் மரியாதையாக அனுமதிக்கப்பட்டு உள்ளே வந்ததும் உலூகன் வானளாவி நிற்கும் மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கண்டு புறநகர்தான் அப்படி என்றால் இந்த கோட்டையும் இப்படியா? எவ்வளவு அழகான, அகன்ற, சுத்தமான வீதிகள்? படுத்துப் புரளலாம் போலிருக்கிறதே. சோழர்கள் வாழ்வின்பத்தைப் பூரணமாக அனுபவித்து இன்புறும் பெருமனத்தினர் என்பதற்கு இதனைக் காட்டிலும் வேறென்ன வேண்டும் என்று உள்ளூர நினைத்தான்.

     “பேரரசர் திரும்பும் வரை எங்கள் மதிப்புள்ள விருந்தினர்களாக நீங்கள் தங்கும்படி எங்கள் தலைவர் இளவரசர் வீரசோழர் கோரியுள்ளார், இதோ இம்மாளிகைதான் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வேலையாட்கள், காவலர்கள், சமையலாட்கள் யாவரும் ஒரு கால் நாழிகை நேரத்தில் வந்துவிடுவர்...” என்று வேல்நம்பி வெகு பணிவுடன் அறிவித்ததும் சிம்மநாதன் உள்ளூர வியந்தான்.

     சோழர்கள் வீரர்கள் மட்டும் இல்லை. மற்றவர்களை மதித்துப் பழகும் பெருந்தன்மையுள்ளவர்கள் என்று நினைத்தவன் “உங்கள் இளவரசருக்கு நேரில் நன்றி கூற வாய்ப்புக் கிடைக்குமா?” என்று கேட்டதும் “நிச்சயமாக... எந்த நேரத்திலும் நீங்கள் அவரைச் சந்திக்கலாம். பயணக் களைப்புக்காக இளைப்பாறிய பிறகு அவரைச் சந்திக்க விருப்பமா?” என்று கேட்டதும்,

     “இயலுமானால் இன்னும் சிறிது நேரத்திலேயே சந்திக்க விரும்புகிறேன்” என்றான் சிம்மநாதன்.

     “அப்படியாயின், இதோ நானே போய்ச் சந்தர்ப்பம் அறிந்து வருகிறேன்” என்று புறப்பட்டுவிட்டான் வேல்நம்பி.      உலூகன் ‘தங்கள் தற்காலிக இருப்பிடமான மாளிகையே இவ்வளவு பெரிதானால்... மற்றவை... அப்பாடி!’ என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தான்.

     சிம்மநாதன் சட்டுப்புட்டென நீராடிவிட்டு புதிய ஆடையணிகளைத் தரித்து கால் நாழிகை நேரத்தில் தயாராகிவிட்டான். இதே சமயம் வேல்நம்பியும் வந்து “தங்களுக்குச் சிரமம் இல்லையானால் இப்பொழுதே வரலாம்” என்று அறிவித்தான்.

     ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அவனுடன் கால்நடையாகவே சென்றான் சிம்மநாதன்.

     பெரியதோர் மாளிகை. அதன் மையத்தில் பெரியதோர் மண்டபம். அம்மண்டபத்தில் நடுவே அமர்ந்திருந்தான் வீரசோழன். அவன் பக்கத்தில் கடுங்கோனும், மாவலியும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தனர்.

     “வாரும் சிம்மநாதரே... வாரும்” என்று வீரசோழன் மிகவும் மகிழ்வுற்ற குரல் தொனியுடன் வரவேற்றதும் சிம்மநாதன் சில நொடிகள் என்ன செய்வதென்று புரியாமல், பிறகு சட்டென வணங்கியதும் “இதோ இப்படி என் பக்கலில் அமரும்” என்றான் அடுத்தபடியாக வீரசோழன்.

     சோழ இளவரசன் தன் பக்கலிலேயே தன்னை அமர்த்திக் கொண்டதும் சிம்மநாதன் சில நொடிகள் மீண்டும் திகைத்தாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “நீங்கள் ஏதோ முக்கியமான கடமையில் ஈடுபட்டிருக்கும் போது நான் குறுக்கிட நேர்ந்தது...” என்று இழுத்தான்.

     “இல்லை... இல்லை, உங்களை வரவேற்பதும் என்னுடைய முக்கியமான கடமைகளில் ஒன்றுதான். கங்கபாடி எங்களுடைய சகோதர நாடு. நீங்களோ அந்நாட்டு அரச குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர். தவிர நீங்கள் நல்லெண்ணத் தூதுவராக வந்திருக்கிறீர்கள். எனவே இது இன்னும் அதிகமாக முக்கியத்துவம் பெறுகிறது. பேரரசர் திரும்ப இரண்டு மூன்று நாட்களாகும். அதுவரை நீங்கள் எங்கள் விருந்தினராக எவ்வித குறையுமின்றி இருக்க வேண்டும். என்னுடைய சாந்த மெய்யுதவிகளையே உங்களுக்குத் தேவையான அத்தனை பணிகளையும் செய்யும்படி ஏவியுள்ளேன். நீங்கள் இந்தக் கோட்டை கொத்தளங்களை மட்டும் அல்ல, அண்மையிலுள்ள கோயில்களை, வனங்களை, இதர காட்சிகளையெல்லாம் இந்த இரண்டு மூன்று தினங்களில் சுற்றிப் பார்க்கலாம்.”

     “மிக்க நன்றி. நீண்ட பயணத்துக்குப் பிறகு எங்களுக்கு இந்த இளைப்பாறும் காலம் மிகவும் தெம்பூட்டக் கூடியது.”

     “தெம்பு மட்டுமில்லை. நீங்கள் கூத்துக்களில் கருத்துள்ளவரானால் நாளை இங்கு ஒரு அற்புதமான கூத்து நடைபெற இருக்கிறது. சோழ நாட்டின் தலை சிறந்த ஆடற்கலையரசி ஏழிசைவல்லபி என்பவர் அக்கூத்தினை நடத்துகிறார். நீங்கள் அவசியம் காண வேண்டிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி அது.”

     “நிச்சயமாகப் பார்க்கிறேன்.”

     “அரச குடும்பத்தினர், பெருங்குடிப் பிரபுக்கள் வரிசையில் உங்களுக்கு இடம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன். வேல்நம்பி, இதை கவனத்தில் வைத்துக் கொள்.”

     “உத்தரவு இளவரசே!” என்று கூறுவதற்கும் உலூகன் அவசரம் அவசரமாக நுழைவதற்கும் சரியாயிருந்தது.

     “அவன் என்னுடைய மெய்யுதவி. உலூகன் என்பது அவன் பெயர்.”

     “ஓகோ! நல்லது சிம்மநாதரே. நாம் மீண்டும் நாளை சந்திப்போம். இப்போது நீங்கள் போய் இளைப்பாறுதலோ அல்லது உம் விருப்பம் எப்படியோ அப்படி செயல்படும்படி வேண்டுகிறேன்” என்று வீரசோழன் சொல்லிவிட்டு எழுந்ததும், சிம்மநாதனும் எழுந்து வணங்க வீரசோழனும் பதில் வணக்கம் செய்து விடை கொடுத்தான்.

     சிம்மநாதனுடன் திரும்பவும் வேல்நம்பி சென்று அவனை மாளிகையில் விட்ட போது அங்கு சமையல் ஆள், காவலர்கள் யாவரும் வந்திருப்பதைக் கண்டு எவ்வளவு ஒழுங்காகச் செயல்படுகிறார்கள் இந்தச் சோழர்கள் என்று அவனால் வியக்காமலிருக்க முடியவில்லை.