உமாபதி சிவாசாரியார்

அருளிய

வினா வெண்பா

     இது பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய நூலாகும். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கிக் கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது எனபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன. பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினை விளக்குவனவாக அமைந்திருக்கின்றன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெறுவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர். முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ. 1

இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி
மருளி நிலையருளு மானும் - கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா
வீங்குனரு ளாலென் பெற. 2

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில். 3

கனவு கனவென்று காண்பரிதாங் காணி
னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென். 4

அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா
யாமா ரறிவா ரினி. 5

சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான். 6

உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்
தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி. 7

அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்
பூணுமிறைக் கென்னாம் புகல். 8

இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா
வன்றாகி லாமா றருள். 9

ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை. 10

காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர். 11

ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு. 12

அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண். 13