-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

வாக்கினால் அறிந்தான்!

செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து. 401

     “செவ்விதாக இவன் பேசும் பேச்சுக்கும் செயலுக்கும் இவனுடைய செவ்வையான உள்ளத்திற்கும் பொருத்தமின்றி இவன் கொண்டிருக்கும் உருவம் என்னவோ?” என்று வீமராசன் ஐயுற்று, எல்லாவற்றையும் கருதிப் பார்த்தான். பார்த்து, நுட்பமான ஒரு பேச்சினால், அவனே நளனென்று உறுதி செய்து தெளிந்தும் கொண்டான்.

ஒளியாது உருக்காட்டு

பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்கும் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் உரு. 402

     “பாக்கு மரத்தின் அழகிய தலைப்பினையுடைய பாளையினைக் கண்டு, பசுமையான தலையுடைத்தான பாம்பின் படமென்று ஐயமுற்று, மந்திகள் அதன் உண்மைத் தன்மையினைத் தெளியாதே இருக்கும் சிறந்த நாட்டிற்கு உரியவனே! நின்னை இவ்வாறு எல்லாம் ஒளித்துக் கொள்ளாது, நின் உண்மை உருவைக் காட்டுவாயாக” என்றான், வீமராசன்.

பாம்பரசன் தந்த துகில்

அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ. 403

     தன்னோடு பொருதிய கலிமகனின் வஞ்சனையினாலே, உரிமை பூண்டு காத்து வருகின்ற அரசியல் உரிமையினை முன்னாளிலே இழந்துவிட்ட நளராசன், நாகராசன் தனக்குக் கொடுத்த அழகான பூப்போலும் மென்மையான ஆடைகளுள் ஒன்றனைப் பிரித்து உடுத்துக் கொண்டான்; எஞ்சிய ஒன்றனைப் பிரித்துத் தன் மேலே போர்த்தும் கொண்டான்.

பாகன் வடிவு நீங்கிற்று

மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு. 404

     அவ்வாறி அவன் ஆடைகளை அணிந்து கொண்ட அந்த வேளையிலே, காட்டிடத்தே காதலியைக் கைவிட்டு மறைந்து வாழும், பெரிதான மலையொத்த தேரினைச் செலுத்தும் பாகனுடைய வடிவமானது, மேலோனான திருமாளின் உலகளந்த மெய்ப்பாதங்களே துணையாக மேற்கொண்டோர்களது அருவினைகள் எல்லாம் நீங்கிப் போவதனைப் போல, நீங்கிற்று. (நளன் தன் உண்மை உருவுடன் அங்கே நின்றான்.)

தாதை கண்டார்

தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலரும் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து. 405

     தந்தையை எதிரே கண்டதும், தாமரை மலர் போன்ற கண்களிலே நீர் துளிர்க்க, அரும்பு மலர்கின்ற குடுமியினனான இளவரசன், மின்னலைப் போன்ற இடையுடையாளான தன் தங்கையோடும் போய்த் தன் தந்தையின் குற்றமற்ற பொன்னடிகளிலே வீழ்ந்து, அவற்றைத் தன் கண்ணீரினாலே கழுவினான்.

தமயந்தி வந்த நிலை

பாதித் துகிலோடு பாய்ந்திழியும் கண்ணீரும்
சீதக் களபதனம் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு. 406

     பாதி ஆடையோடு, பாய்ந்து வழியும் கண்ணீரும், குளிர்ச்சியான கலவைச் சாந்து அணிவதற்குரிய மார்பகங்களிலே சேர்ந்துள்ள புகுதியுமாகச் சென்று, தமயந்தியும் மலர்ந்த தாரணிவோனாகிய நளமன்னனின் மலரடிகளிலே வீழ்ந்தாள்; அப்போது நளனுக்கும் கண்ணீர் பெருகி வழிந்தது. (பாதித் துகில் என்றது, அன்று அவன் அரிந்து பிரிந்து போன போது உடுத்திருந்த அதே பாதி ஆடை.)

நீரான் மறைத்தன

வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று. 407

     ‘வெம்மையான விடத்தோடு பொருத்தமுடையதான விழிகளிரண்டும் சோர்ந்து துயில்கொள்ளலான அவ்விடத்தே விட்டுப் போனவர்’ என்று கருதியே, இவ்விடத்தே கச்சுவிளங்கும் முலையாளான தமயந்தி, அந்த மன்னவனைக் காணாமற்படிக்கு, இடை நின்று நீரினாலே மறைத்துக் கொண்டிருந்தன அவள் கண்கள்!

பூமாரி பெய்தார்

உத்தமரின் மற்றிவனை ஒப்பார் ஒருவரிலை
இத்தலத்தில் என்றிமையோர் எம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து. 408

     ‘இப் பூமியிலேயுள்ள உத்தமர்களுக்குள்ளாக, இவனைப் போன்றோர் மற்று ஒருவருமே இல்லை’ என்று சொல்லித் தேவர்கள் புகழ்ந்து, தேன்மழை பெய்யும் அழகிய மாலை அணிந்துள்ளானாகிய நளமன்னனின் மேலே, தம் கையிற் கொணர்ந்த பூக்களை மழை போலப் பெய்து வாழ்த்தியபடி வானில் நின்றார்கள்.

கலியின் வேண்டுகோள்

தேவியிவள் கற்புக்கும் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகில் ஒப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன். 409

     முழுதும் நிறைந்த அன்பினாலே உலகத்தைக் காக்கின்ற நளனின் முன்பாகக் கலியும் வந்து தோன்றினான். “காவலனே! நின் தேவியாகிய இவளுடைய கற்புடைமைக்கும், நின் செங்கோள் முறைமைக்கும் இப் பூவுலகிலே ஒப்புடையவராக இனி வருபவர் தாம் யாவர்? எவருமில்லை. மேலும், நீ விரும்பும் வரங்களையும் என்பால் கேட்டுக் கொள்வாயாக” என்றாள்.

நீ அடையேல்

உன்சரிதஞ் செல்ல உலகாளும் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையேல் என்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து. 410

     ஒளி சிதறும் மணிகளிழைத்த பூண்களையும், வாள் வீரர்களைக் கொண்ட தானையினையும் உடைய மன்னவன், கலியின் சொற்களைப் போற்றி, “மின்னொளி சொரியும் வேலினை உடையோனே! உன் சரிதம் செல்ல நீ உலகினை ஆளுகின்ற அந்தக் காலத்திலே, என் வரலாற்றினை மிகவும் விருப்பமுடனே கேட்டு அறிந்தவர்களை நீ ஒரு போதும் சேர்ந்து வருந்தாதிருப்பாயாக” என்று வேண்டினான்.

கலியின் வாக்குறுதி

என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி. 411

     “மின்னலைப் போல ஒளிருங் கூர்மையான வேலாயுதத்தை உடையவனே! என் காலமாகிய கலியுகத்திலே உன் சரிதத்தைக் கேட்டவர்களை யான் அடையவே மாட்டேன்; இது சத்தியம்” என்று, நல்ல நீலோற்பல மலர்கள் தேனைச் சொரிந்து கொண்டிருக்கும் சோலைகளையுடைய வள நாட்டிற்கு உரியவனான நளனின் முன்பாக நின்று, கலிமகன், உறுதிமொழி சொல்லிவிட்டுச் சென்றான்.

விருந்து செய்தான்

வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து. 412

     மகரந்தங்கள் புதையுண்டு போமாறு, தேன் பாய்ந்து ஒழுகிக் கொண்டிருக்கும் பூக்களையுடைய, சோலைகளாகிய வேலி சூழ்ந்த விதர்ப்ப நாட்டு மன்னனாகிய வீமராசன், வேத நெறியினின்றும் வழுவாத வேந்தனான நளனையும், பூப்பூத்த குளம்போல விளங்கும் கண்களையுடைய தன் மகளையும், அவர்கள் மக்களையும் அழைத்துக் கொண்டு போய், அவர்கட்கு விருந்து செய்தான். (பூந்தடங்கண் - அழகிய அகன்ற கண்.)

அயோத்தி மன்னன் வேண்டுதல்

உன்னையான் ஒன்றும் உணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீர் அயோத்தியார் மன். 413

     பெரிய நீர் வளமுடைய அயோத்தி நாட்டாரின் அரசனான இருபதுபர்ணன், “பொன்வண்டுகள் பொருந்தும் தாரினை உடையோனே! யான் ஒன்றும் அறியாது உன்னைக் குறித்துச் சொன்னதெல்லாம் பொறுப்பாயாக” என்று கூறி விடைபெற்றும், பின்னர்த் தன் மேன்மையான பண்பினின்றும் குன்றாத நளனின்றி வெறுமையாயிருந்த தன் தேரின் மீது அமர்ந்தும், தன் நாடு நோக்கித் தானே தேரை நடத்திச் சென்றான்.

9. வாழ்வு பெற்றான்

தேர் ஏறினான்

விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேநீர் அளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன். 414

     முற்றிய ஆம்பற் பூக்கள் தேனாகிய நீரினைப் பாய்ச்சி, அருகில் உள்ள செந்நெற்பயிரின் கதிர்களை விளைவிக்கும், மிக்க நீர் வளத்தினையுடைய நிடத நாட்டாரின் மன்னவன், வில்லேந்திய படையானது தன் முன்னே செல்லவும், வேலேந்திய வேந்தர்கள் தன் பின்னே செல்லவுமாகப் பொற்றேரின் மேல் அமர்ந்தவனாகித், தன் தேவியோடும் கூடித் தன் நாட்டிற்குப் புறப்பட்டான்.

தூரம் எவ்வளவோ?

தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி எத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனு நம்பதிதான் மிக்கு. 415

     “அசுரரை வெல்லும் பொருட்டாக ஏந்திய நெடிதான கூரிய வேலினை உடையோனே! மற்றை வழியின் தொலைவு இனியும் எவ்வளவோ?” என்று தமயந்தி நளனை முருகனாகக் குறிப்பிட்டுக் கேட்க, “மானே! கேட்பாயாக! இந்த மலையினைக் கடந்து, இதன் பின் ஏழு மலைகளுக்கு அப்புறமாக நம்முடைய மாவிந்தமென்னும் நகரந்தான் மேன்மையுடன் இருக்கின்றது” என்று, நளனும் அவளுக்குச் சொன்னான்.

கதிரவனின் உதயம்

இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்கு
இருக்குமா காண்பான்போல் ஏறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று. 416

     அந்த இருளானது கழிந்து போக, மறங்கொண்ட வேலினையுடைய நளன், அலையெறிந்து வருகின்ற நீர் வயல்களுக்கு அங்கங்கே பாய்ந்து கொண்டிருக்கும் சிறந்த நிடத நாட்டிலே புகுந்து, அங்கே அரசு வீற்றிருக்கும் தன்மையைக் காண்பவனே போல, வேகத்தினாற் செருக்கிய குதிரைகளைப் பூட்டிய தேரினையுடைய கதிரவனும், தன் உதயகிரியின் மேலாகச் சென்று ஏறினான்.

சென்று அடைந்தான்

மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில். 417

     மணம் பொருந்திய இளம் பூக்களால் தொடுத்த கோதையினைச் சூடிய தமயந்தியோடு, தன் மக்களும் தானுமாக, ஒரு வெற்றிச் சிறப்புடைய அழகிய பெரிய தேரின் மேல் ஏறிச்சென்று, மாவிந்தமென்னும் வளமான தன் நகரத்தைச் சூழ்ந்திருப்பதான, திருமகள் தங்கியிருப்பது போன்றதொரு அழகிய பொழிலினை, நளன் அப்போது அடைந்தான்.

தூதரை விடுத்தான்

மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணையம் உளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான். 418

     குளிர்ச்சியான மாலையினை அணிந்த தேர் வேந்தனாகிய நளன், “மற்றவனாகிய புட்கரனுக்கு என் வரவினைச் சென்று சொல்லி, மறுமுறையும் ஆடும் சூதிற்குத் தகுதியான பணையப் பொருள் என்பால் உளதென்று சொல்லி, அந்த மன்னவனை இங்கே அழைத்து வந்து சேருங்கள்” என்று, சிறந்த தூதுவர்களைப் புட்கரனிடத்தே போக அனுப்பி வைத்தான்.

புட்கரன் கண்டான்

மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர். 419

     வஞ்சகமாக பெரிய சூதிலே நளனை வஞ்சித்த கடினமான உள்ளத்தையுடைய புட்கரன், தூய நறுமலர்கள் நிறைந்த பூஞ்சோலையிடத்தே, அமைந்த பெரும்படையினர் சூழ்ந்திருக்கப், பெண்ணன்னத்தின் நடையுடையாளான தமயந்தியோடும் இருந்த நளனைத், தன் எதிரே வீற்றிருக்கக் கண்டான்.

நலம் விசாரித்தல்

செங்கோல் அரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோல் அரசன் வினாவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்
யாவர்க்கும் தீதிலவே என்று. 420

     செங்கோன்மையாளனாகிய நளமன்னனின் முகத்தை நோக்கி, அறிவிலே தேர்ச்சியற்ற கொடுங்கோல் அரசனான புட்கரன், “அழகான தன்மையுடைய நாடு காவல் செய்யும் கொடைவேந்தனே! காதலனான உனக்கும் நின் காதலிக்கும் நின் மக்களுக்கும் தீங்குகள் எதுவும் இல்லையே!” என்றான்.

கையாழி வைத்தான்

தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணையம் எனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து. 421

     தீமை தரும் கலி முன்னாளில் செய்த வஞ்சத்தினை அறியாதே, புட்கரனும் சூதாடுதற்குத் துணிந்து, “பணையம் யாது?” என்று கேட்க, நீலக்கடலிலே துயிலும் திருமாலைப் போன்ற நளனும், வளமான புனைதற் தொழிலையுடைய தன் கைக்கணையாழியைக் கழற்றிப் பணையமாக வைத்தான்.

வென்றானை வென்றான்!

அப்பலகை யொன்றின் அருகிருந்தார் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து. 422

     அந்த நளனும், தன் அருகே இருந்தவர் தன்னைப் புகழும் படியாக, அந்தச் சொக்கட்டான் பலகை ஒன்றினாலேயே, சொல்லுவதற்கு அரிய தன் செல்வத் திருநகரையும், உவமித்தற்கு அரிய வலிமையுள்ள படையோடும் கூடிய தன் வளநாட்டையும், முன்பு வஞ்சனையினாலே வென்ற புட்கரனிடத்திலிருந்து மீண்டும் வென்று கொண்டான்.

புட்கரன் போயினான்

அந்த வளநாடும் அவ்வரசும் ஆங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லான் நளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாம் கொடுத்து. 423

     செந்தமிழ் வாணர்கள் தம் நாவினாலே பொருத்தமுறச் சொல்லிய சொற்களினாலே நளன் என்று புகழ்ந்து பாடும் அரசனுக்கு, அந்த வளமான நாடும், அந்த அரசும் அவ்விடத்தேயாகித் தன்னை விட்டுப் போகத், தான் முன் வந்தபடியே புட்கரனும், தன் பழைய இடத்தை நோக்கிப் புறப்பட்டான்.

நளன் நகர் அடைந்தான்

ஏனை முடிவேந்தர் எத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகரம் எய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன். 424

     மற்றைய முடிவேந்தர்கள் எத்திசைக் கண்ணுமிருந்து தன் புகழைப் பாட, சேனை தன்னைப் புடைசூழ்ந்து வரத், தேர் மீது ஏறியமர்ந்து, பொருந்தின புகழ் உடையதான பொன்னகரமாம் அமராபதியினைச் சென்றடையும் தேவேந்திரனைப் போல விளங்கியவனாக, நளனும், தன்னுடைய நல்ல மாவிந்த நகரத்திலே புகுந்தான்.

ஏதோ உரைப்பான் எதிர்

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர். 425

     தன் நாட்டினை மீளவும் அடைந்து, தன் தேவியோடும் மன்னன் வருவதைக் கண்ட அந்த மாவிந்தமாகிய மாநகருக்கு, மேகத்தைக் காணப்பெற்ற மயிலையோ, கண்ணொளி வரப்பெற்ற ஒளியுடைய முகத்தையோ, நீரினைப் பெற்று உயர்ந்த விளைவு நிறைந்த விளை நிலத்தையோ, வேறு எதனையோ ஒப்பாகச் சொல்லுவேன் யான்?

வாழ்த்திச் சென்றனன் வியாசன்

வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்த வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடத்திட்டான் பண்டு. 426

     பண்டைக் காலத்திலே வேதங்களின் அமைதியினை ஒழுங்கு படுத்தியவன் வேத வியாச முனிவன். “நல்லொழுக்கமே மேற்கொள்ளும் தருமராசனே! வெற்றியுடைய நிடதத்தார்களின் வேந்தனான நளனின் சரிதை இது. அதனால் நின் துன்பத்தையும் மாற்றிக் கொள்க” என்று கூறிய பின், தருமனுக்கு ஆசிமொழிகளும் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றும் சென்றனன்.

வாழி! வாழி!

வாழி யருமறைகள் வாழிநல் அந்தணர்கள்
வாழிநளன் காதை வழுத்துவோர் - வாழிய
மள்ளுவநாட் டாங்கண் வருசந் திரன் சுவர்க்கி
தெள்ளுறமெய்க் கீர்த்தி சிறந்து. 427

     அரிதான வேதங்கள் நான்கும் வாழ்க! நல்ல ஒழுக்கமுடைய அந்தணர்கள் வாழ்க! நளன் கதையினைக் கூறுவோர் கேட்போர் அனைவரும் வாழ்க! மள்ளுவ நாட்டினிடத்தே தோன்றி ஆண்டு வரும் சந்திரன் சுவர்க்கி என்னும் கோமானுடைய தெளிவுற்று புகழ் என்றும் சிறந்து வாழ்வதாக!

கலி நீங்கு காண்டம் முற்றும்.

நளவெண்பா முற்றும்.

நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9