மணிபல்லவம் - Manipallavam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



ஐந்தாம் பருவம் - நிறை வாழ்வு

1. கருணை மறமும் கழிவிரக்கமும்

     மறுநாள் பொழுது விடிந்தால் புத்த பூர்ணிமையாதலால் அன்று மணிநாகபுரத்துத் தெருக்கள் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தன. கரையோரங்களில் முத்துக் குளித்தெடுக்கும் முத்துச் சலாபங்களும், உள்நிலப் பகுதிகளில் நாகரத்தினங்களும், வேறு பல்வகை மணிகளும் வளமாக நிறைந்துள்ள அந்தத் தீவின் தலைமையான நகரமாயிருந்ததனால் மணிநாகபுரம், நோக்கிய திசையெல்லாம் செல்வச் செழிப்புக் கொண்டு விளங்கியது. அந்த நகரத்து வீதிகளில் புலிநகக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கின. அல்லியும் குவளையும் அலர்ந்த அழகுப் பொய்கைகள் அங்கங்கே தோன்றின. தரையை ஒட்டித் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரங்களும், மடல் விரித்து மணம் கமழும் தாழை மரங்களும் கடற் காற்றில் ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தன. வெள்ளியைப் பொடி செய்து குவித்தாற் போல வெள்ளை வெளேரென்று மின்னும் மணற்பரப்பும், சிற்சில இடங்களில் கருமை நிறம் மின்னும் மணற்பரப்புமாக வாழ்க்கைக் கடலின் அலைகளில் சுகமும் துக்கமும் மாறி மாறி ஒதுக்கப்பட்டுக் குவிவதைப் போல வெண்மையும் கருப்புமாகக் குவிந்திருந்தன. மிக அருகில் தென்படும் அலைவளமும் தீவுக்குள்ளே தொலைவில் உள்ளடங்கித் தென்படும் மலைவளமுமாக இயற்கையின் ஆழத்தையும், உயர்த்தையும் அழகுற விளக்குவதுபோல் தென்பட்ட அந்த நாட்டின் காட்சியில் இளங்குமரனின் மனம் ஈடுபட்டது. மணிமார்பனோ ஓவிய ஆர்வத்தோடு இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

     தழைத்து நீண்டு வளர்ந்து கருமை நிறத்தில் சிற்றலையோடிச் சரிந்து மின்னுகிற கூந்தலை மூன்று நாகப் படங்கள் போலவும், ஐந்து நாகப்படங்கள் போலவும், ஏழு நாகப்படங்கள் போலவும், பகுத்து அலங்காரமாகப் பின்னிக் கொண்டிருந்த நாக நங்கையர்கள் சிலர் கூட்டமாக எதிர்ப்பக்கத்து வீதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இருந்தாற் போலிருந்து வீதியில் எல்லா விதமான இனிய இசைக் கருவிகளும் மிக நளினமாக ஒன்று சேர்ந்து கொண்டு இங்கிதமான குரலில் ஒலிப்பது போல அந்த நாக நங்கையர்களின் காலணிகளும், வளை களும் ஒலித்தன. அந்தக் கூட்டத்திலேயே அழகு மிக்கவளும், ஏழு பிரிவாகத் தன் கூந்தலை வகிர்ந்து சடைவில்லை போல நாகணி அணிந்து அலங்கரித்துக் கொண்டிருந்த வளுமாகிய ஒருத்தியை ஏறிட்டு நோக்கிய மணிமார்பன் கண்களை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

     “என்ன? இந்த ஏழாற்றுப் பிரிவில் உங்கள் கப்பல் கவிழ்ந்து விடும் போல் இருக்கிறதே! நான் ஒருத்தி உங்கள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கணவனின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் பதுமை. மணிமார்பன் தன் மனைவியின் பக்கமாகத் திரும்பிப் பார்த்து நாணத்தோடு நகைத்தான்.

     “இல்லை பதுமை! அவள் தன் கூந்தலை ஏழு பகுப்பாகப் பிரித்துப் புனைந்து கோலம் செய்திருக்கிற அழகைச் சித்திரத்தில் அப்படியே தீட்ட முடியுமா என்று தான் கூர்ந்து நோக்கினேன்!”

     “அதுதான் முன்பே சொல்லியிருக்கிறேன், அன்பரே! ஏழாற்றுப் பிரிவில் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீள்வது அருமை...” என்று பதுமை மறுமொழி கூறியபோது தன் மனைவியின் சொற்களில் சிலேடையாக வந்த ‘ஏழாற்றுப் பிரிவு’ என்ற இரு பொருள் அழகை உணர்ந்து புரிந்து கொண்டு பெருமைப்பட்டான் மணிமார்பன். அவளை மேலும் வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. “நீ கூடச் சில சமயங்களில் அழகான வாக்கியங்களைப் பேசிவிடுகிறாய், பதுமை! பார்வையிலும் தோற்றத்திலும் பிறக்கும் போதே பிறந்த அலங்காரங்களாலும், பிறந்து வளர்ந்த பின் பிறப்பிக்கப்பட்ட அலங்காரங்களாலும் பெண்களுக்கு வாய்த்திருக்கிற அழகு போதாதென்று பேச்சிலும் அழகு வந்துவிட்டால் இந்த உலகம் அதைத் தாங்காது பெண்ணே!”

     “உலகம் தாங்காவிட்டால் போகிறது! நீங்கள் இப்படிப் பேசி என்னை ஏமாற்றி ஏழாற்றுப் பிரிவில் கவிழ வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய விலாப்புறத்தில் வந்து நின்று அவன் பார்வை பதிந்திருந்த திசையை மறைத்தாள் பதுமை. மணிமார்பன் கண்களின் பார்வையை முழுமையாகத் தன் மனைவியின் மேல் திருப்பிக் கொண்டு அவளைக் கேட்டான்:

     “சித்திரக்காரனுக்கு இப்படிப்பட்ட மனைவி வாய்த்து விட்டால் தொழில் பெருகினாற் போலத்தான்.”

     “மனத்தில் பெருகட்டும்! இப்படி வீதியில் பெருக வேண்டாம்” என்று விட்டுக் கொடுக்காமல் குறும்புச் சிரிப்போடு மறுமொழி கூறினாள் பதுமை. மணிமார்பனும் அவன் மனைவியும் மற்றவர்களை முன்போக விட்டு விட்டுப் பின்னால் மெல்ல மெல்லத் தயங்கி நடந்து சென்று கொண்டிருந்ததனால் தங்களுக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது. இந்திர விகாரத்துத் துறவிகளும் பிறரும் உடன் வந்திருந்ததனால் விசாகை மணிநாகபுரத்துப் பெளத்த விகாரத்துக்கு விடை பெற்றுக் கொண்டு போயிருந்தாள். மறுநாள் காலை மீண்டும் மணிபல்லவத்தில் சந்திப்பதாக விடைபெற்றுப் போகும் போது அவள் இளங்குமரனிடம் கூறியிருந்தாள்.

     வீரசோழிய வளநாடுடையாரும் இளங்குமரனும் வீதியில் முன் பகுதியில் நாகதெய்வக் கோட்டத்தை நோக்கி விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மணிநாகபுரத்துக் கரையில் இறங்கி நிற்பதற்கு முன்னும், இறங்கி நின்ற பின்னும், தான் இளங்குமரனிடம் கூறியிருந்த செய்திகள் எந்த விதமான பரபரப்பையும், ஆவலையும் அவனிடம் உண்டாக்காமற் போகவே வளநாடுடையாருக்கு வியப்பாயிருந்தது.

     ‘இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே உனக்கு இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது’ என்று தன்னால் சற்றுமுன் இளங்குமரனிடம் கூறப்பட்ட வார்த்தைகளிலிருந்து அவன் எதையுமே எதிர்பார்த்துப் புரிந்து கொண்டு வியப்படையாமல் அமைதியாக நடந்து வருவதைக் கண்டு வளநாடுடையார் திகைத்தார். எல்லாப் பரபரப்பும் எல்லா ஆவலும் அவருக்குத் தான் ஏற்பட்டனவே தவிர அவன் உணர்ச்சிகளைக் கடந்த அமைதியோடும் நிதானத்தோடும் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய நிதானத் திலும் அமைதியிலும் சிறிது கழிவிரக்கமும் கலந்திருந்ததைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தைத் தான் உண்டாக்கிப் பேசிய தாலேயே அவனுக்கு அந்தத் துயரம் தோன்றியிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் புரிந்து கொண்டார். படிப்படியாக முயன்று தன்னுடைய உட்கருத்தை அவன் விளங்கிக் கொள்வதற்கேற்ற மன நிலையை அவனிடம் தோற்றுவிக்கும் நோக்கத்தோடு மீண்டும் பேச்சுக் கொடுத்தார் அவர்:

     “தம்பி! இழந்த பொருள்களையும், இழந்த நல்லுணர்வுகளையும் திரும்பவும் அடைகிறவனுடைய பெருமையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

     முன்பின் தொடர்பில்லாமல் கோடை மழையைப் போல் அமைதியை கலைத்துக் கொண்டு திடீரென்று இப்படிப் பேச்சைத் தொடங்கிய அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பின்பு மெல்லப் பதில் கூறினான் இளங்குமரன்.

     “பொருள்களை இழப்பதற்காகத் துயரப்படுவதும், அடைவதற்காக மகிழ்வு கொள்ளுவதும் சிறிய காரியங்கள். நம்மோடு பற்றும் பாசமும் வைத்து நீண்ட உறவாகப் பழகி விட்ட ஒருவரது உயிர் நம் கண் காண அழிந்தால் அதற்காக நாம் குமுறித் துக்கப்படுவதை மட்டும் தான் கைவிட முடிவதில்லை. அப்படி உயிர்த் தொடர்புடையதாக வரும் பற்றுப் பாசங்களைக் கூட வென்று நிற்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சில சமயங்களில் ஞானத்தின் பலமிருந்தும் அத்தகைய துக்கங்களை வெல்ல முடியாமல் நாமே இருண்டு போய்க் கண் கலங்கி மலைத்து மேலே நடக்க முடியாமல் நின்று விடுகிறோம்.”

     இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது இளங்குமரனும் தான் நடப்பதை நிறுத்திக் கொண்டு கண் கலங்கிப் போய் இருந்தான். அவனுடைய சொற்கள் நலிந்து உணர்ச்சி வசப்பட்டிருந்தன. அவன் மேல் நிறைந்த அநுதாபத்தோடு அருகில் சென்று தழுவிக் கொண்டார் வளநாடுடையார்.

     “எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரெதிரே சந்திப்பது இயலாத காரியம் தம்பி. மனைவி தூங்கும்போது எழுந்து வெளியேறி உலகத்திற்குத் துக்க நிவாரணம் காண வந்த புத்தனும், காதற் கிழத்தி காட்டில் உறங்கும் போது எழுந்திருந்து ஓடிப்போன நளனும் உணர்ச்சிகளை எதிரே சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதானே அப்படிப் புறப்பட்டிருக்க வேண்டும்?” என்று அவர் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அருட்செல்வ முனிவருடைய ஞாபகமே அவனைக் கண்கலங்கச் செய்திருக்கிறது என்று தெரிந்தது. அந்தக் கலக்கத்தையே வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டு தன் மனத்தில் இருப்பதை அவனுக்குச் சொல்லிவிட எண்ணினார் வளநாடுடையார்.

     “இழந்த பொருள்களைத் திரும்பப் பெறுவதே இன்பமானால் இழந்த உயிரையே திரும்பப் பெறுவது இணை கூற முடியாத பேரின்பமாக அல்லவா இருக்கும்?” என்று கூறிவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார் அவர். அதில் தவிப்பும் ஏக்கமும், தெரிவதற்குப் பயந்து கொண்டே தெரிவதுபோல, மெல்லத் தெரிந்தன.

     “ஐயா! அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தை இன்று நீங்கள் என்னிடம் உண்டாக்கியிருக்க வேண்டாம். எந்தவிதமான உணர்ச்சிகளை எதிரே சந்திப்பது தாங்க முடியாததென்று கருதுகிறீர்களோ அதே விதமான உணர்ச்சிகளை நான் இன்று சந்திக்கும்படி செய்து விட்டீர்கள். அருட்செல்வ முனிவருடைய நினைவு வரும் போது அதைத் தொடர்ந்து வேறு பல நினைவுகளும் என்னைச் சூழ்கின்றன. முள்ளில் வீழ்ந்த ஆடையை மேலே எடுக்க இயலாதது போல் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழம் பாசங்களிலிருந்து மனத்தை மேலே கொண்டு போக முடியாமல் தவிக்கிறேன் நான். இப்படி ஒரு நிலையை இவ்வளவு தொலைவு அழைத்துக் கொண்டு வந்து நீங்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.” அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு என்ன மறுமொழி கூறுவதென்று சில கணங்கள் வளநாடுடையார் தயங்கினார்.

     “பாசங்கள் உன்னை நெருங்குவதாய் நீயாக எண்ணிக் கலங்காதே, இளங்குமரா! உன்னுடைய பாசமும் இரக்கமும் எவை காரணமின்றித் தோன்றி உன்னை வருத்து கின்றனவோ, அவற்றையே மீண்டும் நீ காணப் போகிற வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எவற்றுக்காக இத்தனை ஆண்டுகளாய் மனத்திற்குள்ளேயே துக்கம் கொண்டாடினாயோ அவற்றை மீண்டும் மறுபிறவியாகக் காண்பது போல் எதிரே கண்டு இழந்த நம்பிக்கைகளை யெல்லாம் அடையப் போகிறாய்! நாளைக்குப் புத்த ஞாயிற்றின் ஒளி மட்டுமின்றி உன் வாழ்விலும் நம்பிக்கைகளின் ஒளி பரவப்போகிறது” என்று அவர் இளங் குமரனிடம் கூறிக் கொண்டிருந்தபோது அந்த வீதியின் மேற்புறத்து மாளிகையிலிருந்து காற்றில் நழுவினாற் போல ஒளிமிக்க முத்துமாலை ஒன்று அவன் தோளில் நழுவி வந்து விழுந்தது. அவனும், வளநாடுடையாரும் மேலே நிமிர்ந்து பார்த்தார்கள்.

     அப்படிப் பார்த்தபோது நாகதெய்வக் கோட்டத்தின் அருகேயிருந்து மிகப்பெரிய மாளிகை ஒன்றின் மாடத்திலிருந்து ஓர் இளைஞன் கீழே குனிந்து அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றான். அவனுடைய வலது கையில் சரம்சரமாக இன்னும் பல முத்து மாலைகள் இருந்தன. அவன் அந்த மாளிகையின் மதலை மாடமாகிய கொடுங் கையின் முன்புறம் விழா நாளுக்காகச் செய்யும் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தான் போலிருக்கிறது. மாடத்தின் முன்புறம் நல்ல நாட்களில் மங்கள அடை யாளமாகக் கட்டப்படும் நாட்கொடிகளும் முத்துத் தாமங்களும் தொங்கின. அந்த மாடத்தையும் அதைப் போலவே அலங்கரிக்கப்பட்ட வேறு பல மாடங்கள் அடங்கிய அதன் முழுத் தோற்றத்தையும் பார்த்தால் அது ஏதோ பெரிய இரத்தின வணிகருடைய இல்லம் போல விளங்கியது. முத்துமாலை கை நழுவி வீதியில் சென்று கொண்டிருந்த அவர்கள் தோளில் விழுந்து விட்டதற்காக அந்த இளைஞனும் தன்னைத்தானே கடிந்து கொள்கிறவனைப் போல முகத்தில் நாணம் தெரிய நின்றான். பின்பு விரைவாகக் கீழே இறங்கி வந்தான். நாகநாட்டு இளைஞர்களுக்கே உரிய ஒளிமிக்க தோற்ற முடையவனாயிருந்தான் அவன். யாரோ புத்த பூர்ணிமை நாளுக்காகத் தனது மாளிகை மாடங்களை முத்துத் தோரணங்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது கையிலிருந்த முத்துத் தாமங்களில் ஒன்றைக் கீழே நழுவ விட்டு விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி அந்த முத்துச்சரத்தை அதற்குரியவனிடம் சேர்ப்பதற்காகத் தயங்கி நின்றான் இளங்குமரன். ஆனால் இப்போது அவன் நினையாத வேறொரு காரியத்தைச் செய்தார் வளநாடுடையார். மேலே மதலை மாடத்திலிருந்து முத்துமாலையை வாங்கிக் கொண்டு போவதற்காகக் கீழிறங்கி வந்த இளைஞன் அருகில் வந்ததும், “குலபதி, நாங்கள் உள்ளே வரலாம் அல்லவா?” என்று சுபாவமாக அவனிடம் வினவினார் வளநாடுடையார்.

     குலபதி என்று அழைக்கப்பட்ட அந்த அழகிய நாக இளைஞனுடைய முகத்தில் வளநாடுடையாரின் கேள்வியைச் செவியுற்ற பின் புன்முறுவல் மலர்ந்தது. அந்தப் புன்முறுவல் இன்னும் நன்றாக மலர்ந்து பெருமுறுவலாகிய முகபாவத்துடன் இளங்குமரனையும் அவரையும் நோக்கிக் கைகூப்பினான் அவன்.

     “நன்றாக வரலாம் ஐயா! ஒவ்வொரு கணமும் உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்” என்று மறுமொழி கூறினான் குலபதி என்று கூப்பிடப்பட்ட அழகன்.

     “இதோ உங்களுடைய முத்துமாலை” என்று இளங்குமரன் அவனிடம் தன் மேல் நழுவி விழுந்த முத்து மாலையைத் திருப்பிக் கொடுக்க முற்பட்டதும், “அந்த மாலை இனிமேல் உங்களுடையதுதான். எப்போது உங்கள் தோளில் விழுந்துவிட்டதோ அப்புறம் உங்களுக்குரியது தானே?” என்று சிரித்தபடி மறுத்து விட்டுக் குலபதி அவர்களை அந்த மாளிகைக்குள்ளே அழைத்துக் கொண்டு போனான்.





புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247