முதல் பாகம் - அடையாளம்

13. நதியும் நாகரிகமும்

     இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.”

     “மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்சாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும் பயனுமில்லை. எதிரிகள் நம் கண்காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”

     “நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது குறைந்த உயரத்திலிருந்து விழக்கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டுவிடுவதும் அரச தந்திரங்களில் ஒன்று தான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும் உயரங்களையும் அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே’ - என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல் அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக்கூடாது.”

     “மிகவும் பல்லாண்டு காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...”

     “நியாயம் தான். அதை நம்மை விட நம்முடைய வழிகாட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்து தான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கனிகிற வரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத் தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

     இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறிய வேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில் அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய்விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளையநம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.