முதல் பாகம் - அடையாளம்

5. பூத பயங்கரப் படை

     பெரிய காராளர், இளைய நம்பியிடம் கூறத் தொடங்கினார்:

     ”நீங்கள் எங்களுடைய சித்திர வண்டிகளில் மதுரைக்குப் போய்க் கோட்டைக்குள் நுழைவது மிகவும் எளிதாயிருக்கும். இதே வண்டிகளில் தான் நான் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல் அனுப்பி வைப்பது வழக்கம். அதனால் என்னுடைய இந்த வண்டிகளையும், ஆட்களையும் கோட்டைப் பாதுகாவலர்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என் மனைவியும், மகளும் தவிர மூன்றாவதாக நீங்கள் போகிறீர்கள். உங்களை அவர்கள் ஐயப்படாமல் இருக்க வேண்டும். கோட்டை வாயில் வரை போய்ச் சேருவதற்குள் வழியில் அங்கங்கே சந்தேகக் கண்களோடு திரியும் பூத பயங்கரப் படையினர் பார்வையிலும் நீங்கள் படாமல் தப்ப வேண்டும்.”

     “எங்களோடு தாங்கள் மதுரை மாநகருக்கு வரவில்லையா, காராளரே?”

     “நான் வர முடியாது! சில காரணங்களுக்காகப் பெரியவரோடு இங்கே இன்றியமையாதபடி இருக்கும் கடமை பெற்றுள்ளேன்! தவிரவும் வழக்கமாக நான் அதிகம் கோட்டைக்குள் அகநகரில் போவதில்லை. அப்படிப் போனால் என்மேல் கூடக் களப்பிரர்கள் சந்தேகப்படலாம். விலகி இருந்து அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதால் தான் நான் அவர்களிடம் அடைந்திருக்கும் நம்பிக்கை நம் காரியங்களுக்குப் பயன்படுகிறது. அதையும் கெடுத்துக் கொண்டு விட்டால் ஒரேயடியாக அகநகர் விஷயங்கள் நமக்கு எதுவுமே தெரியாதபடி இருண்டு விடும். என் குடும்பத்துப் பெண்கள் இறையனார் திருக்கோவிலுக்கும், இருந்த வளமுடைய விண்ணகரத்துக்கும் புறநகரில் திருமருதமுன் துறையில் புண்ணிய நீராடவும் அடிக்கடி போய் வருவார்கள். அதனால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வர முடியாது...”

     “நியாயம் தான். தாங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். போகும் போது நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதன்படி நடந்து கொள்வேன். அபாயங்களைத் தவிர்க்க முயலவேண்டும். நீங்கள் கவலைப்படுவதை என்னால் மறுக்க முடியவில்லை, காராளரே.”

     “என் மகள் ஓர் அற்புதமான வழியைச் சொன்னாள்! அதன்படி ஓர் அபாயமும் இல்லாமல் பத்திரமாக நீங்கள் கோட்டைக்குள் போய்விட முடியும். ஆனால்...?”

     “ஆனால் என்ன?... ஏன் தயங்குகிறீர்கள்?”

     “திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரரும் மதுராபதி வித்தகரின் பேரபிமானத்துக்குரியவருமாகிய தங்களிடம் அதை எப்படிச் சொல்வது என்பதுதான் என் தயக்கம். பெருவீரராகிய நீங்கள் அப்படி அகநகருக்குள் போக விரும்புவீர்களா, இல்லையா என்பது தெரியாமலே எப்படி அதை நான் உங்களிடம் வெளியிடுவதென்று தான் கலங்குகிறேன்...”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.