இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

12. அடையாளக் குழப்பம்

     தாமரைத் தடாகங்களும், தண்ணென்ற மூங்கில் மரக்கொத்துகளும், பசுமை போர்த்த நெல் வயல்களும் நிறைந்த மருத நில ஊரான திருமோகூரில் அந்திப்போது மெல்ல வந்து கொண்டிருந்தது. மாமரத்துக் குயில் பிரகாசம் மிகுந்த பகற்பொழுது முழுவதும் மறைந்து போன அல்லது விட்டுப் போன எதையோ இரவுக்கு நினைவூட்டுவது போல் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தது. பகல் என்னும் நாயகனை இழந்த மேற்குத் திசை நங்கை, பால் ஒழுகும் வாயுடைய பிறைமதி என்னும் குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு தனிமையிற் புலம்புவது போன்ற சோகமயமான அந்த மாலை, மேற்கு வானம் எங்கும் செந்தீப்பட்டு எரிவதுபோல வந்து கொண்டிருந்தது. வந்துவிட்ட இந்த அஸ்தமன வேளையை நாளையோ, நாளன்றைக்கோ விரைந்து வரப் போகும் களப்பிரர் ஆட்சியின் நிரந்தரமான அஸ்தமனத்தோடு ஒப்பிட்டபடி நடந்தான் கொல்லன். பெரிய காராளர் மாளிகையிலிருந்து வெளியேறியதுமே வீதித் திருப்பத் திலிருந்து ஒரு களப்பிரப் பூத பயங்கரப்படை வீரன் தன்னைப் பின் தொடர்வதை அவன் புரிந்துகொண்டான். பின் தொடர்கிறவனின் ஐயப்பாடும் பரபரப்பும் பெருகுவதற்கு ஏற்றவகையில் திரும்பித் திரும்பிப் பார்க்காமல் யாருமே தன்னைப் பின்தொடராதது போல் சென்றான் கொல்லன். இடையே ஒரு மாற்றத்தையும் செய்தான் அவன். பின்னால் வருகிறவன் ஒளிவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்டபோது, அந்த நெற்களத்தின் ஓரத்திலிருந்த பனைமரத்தடி மேட்டில் அமர்ந்து காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில் அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூதபயங்கரப் படைவீரன் தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர்கொள்கிறானோ அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர்கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால் தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும் தடையாகவும் நேர்ந்துவிடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.

     கொல்லன் நினைத்தபடி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம் கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.

     வந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில் ஒலிப்பிழை கூட நேராமல் தெளிவாகக் கயல் என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன் இதை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப்பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணியாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ - என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல்

     “அதனால் என்ன? தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா?” - என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டுவிட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்’ - என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும் இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூதபயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால் அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும்போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்றவேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால் வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே! களப்பிரகுல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.