இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

17. பொன் கூண்டிலிருந்து?

     இசையும் கூத்தும், இன்பமும் நிறைந்த இரத்தின மாலையின் மாளிகையில் ஒரு குறைவுமில்லை என்றாலும் தான் சிறைப்பட்டிருப்பது போல் உணரத் தொடங்கினான் , இளையநம்பி. அவன் தனிமையை உணர்ந்து விடாதபடி எவ்வளவோ பேணிப் பிரியப்பட்டு நெருங்கிப் பாதுகாத்து வந்தாள் இரத்தினமாலை. ஓர் இணையற்ற வாலிபப் பருவத்து வீரனை அன்பினாலும், உபசரணைகளாலும் மட்டுமே தடுத்து வைப்பது என்பது எவ்வளவு அரிய காரியம் என்பதை அவள் உணர முடிந்தது. சில வேளைகளில் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போதே அவனது சிந்தனை வேறெங்கோ போய் விடுவதை அவள் கண்டிருந்தாள். சில இரவுகளில் மஞ்சத்தில் அவன் உறக்கமின்றிப் புரள்வதையும் பெருமூச்சு விடுவதையும், எழுந்து அமர்ந்து கன்னத்தில் கையூன்றிய வண்ணம் கவலையோடு சிந்திப்பதையும்கூட அவள் காண நேர்ந்திருந்தது.

     அப்படி அவன் மஞ்சத்தின் மேல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஓர் இரவில், அவள் மிகமிகக் கனிவான குரலில், “உங்களைப் பார்த்தால் எனக்கே பரிதாபமாக இருக்கிறது. சமயா சமயங்களில் நீங்கள் முள்ளின் மேல் இருப்பதைப் போல் பொறுமையற்றுத் தோன்றுகிறீர்கள். எங்களிடையே இருப்பதில் உங்களுக்கு ஏதேனும் உபசார குறைவு இருந்தால் அதைத் தயங்காமல் சொல்லலாம்” என்று அவனிடமே கேட்டாள்.

     அவன் ஒருவித ஏக்கத்தோடு மறுமொழி கூறினான்: “இரத்தினமாலை! இங்கே எனக்கு ஒருகுறையும் இல்லை என்பதே மிகப் பெரிய குறைதான். ஒரு குறையோ, தடையோ எதிர்ப்படாத வாழ்வில் ஆண் மகன் தன்னை ஓர் ஆண்மகன் என்றே நிரூபித்துக் கொள்ளமுடியாமல் போகிறது. இந்தச் சுகவாசம் என்ற பொன் கூண்டிலிருந்து நான் விடுபட்டாலொழிய என் மனம் ஆறுதலடையாது. என் வேதனையின் முழு அர்த்தத்தை நீயும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். வீரர்களை வெறும் அன்பினால் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது போலிருக்கிறது.”

     “நீங்கள் ஒரு பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்கிறீர்கள். வீரர்களை வெறும் அன்பினால் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மையா? அல்லது உணர்வு மயமாக நெகிழ்ந்த அன்பை வீரர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்பது உண்மையா?”

     “நமக்குரிய தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பெரிய அன்பு மேலெழும்போது, நமக்குரிய மனிதர்களைப் பற்றிய சிறிய அன்பு அதில் கரைந்து போய்விடுகிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.”

     “என்னை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் நீங்கள் கூறுகிற தத்துவமோ இது?”

     “மனிதர்களை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் தத்துவங்கள் பிறப்பதில்லை. தத்துவங்களுக்கு மறப்பதையும் நிராகரிப்பதையும் விட உயர்ந்த நோக்கங்கள் உண்டு.”

     “ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சமயா சமயங்களில் அப்படி உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தோன்ற வில்லை.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.