இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

2. மாவலி முத்தரையர்

     நன்றாக மழித்து முண்டனம்* (* மொட்டைத் தலை) செய்து மின்னும் தலையும் நீண்டு தொங்கும் காதுகளும், கண்களின் கீழேயும் நடு நெற்றியிலும் கோர மாகத் தழும்பேறிய கருமையுமாக மாவலி முத்தரையர் எழுந்து நின்றார். ஒரு குருவுக்குரிய சாந்தமோ அமைதியோ அவர் கண்களில் இல்லை. நெற்றியிலும் கண்களின் அடியிலேயும் இருந்த கருப்புத் தழும்புகள் வேறு மேலும் அந்த முகத்தைக் கொடுரமாகக் காண்பித்தன. பார்த்த மாத்திரத்திலேயே ஒரு கபட சந்நியாசிக்கு முன் நிற்கிறோம் என்று உணர வைத்துவிடும் அளவுக்கு அவர் தோற்றமும் அவர் மேற் கொண்டிருந்த புனிதமான கோலமும் முரண்பட்டன. அவர் பேசலானார்:

     “கலியா இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே உன்னுடைய பூத பயங்கரப் படையினர் மூலம் நீ தெரிந்து கொண்டிருப்பதைவிட அதிகமான செய்திகளை நான் கூறமுடியும் என்று நினைக்கிறேன். தென் பாண்டி நாட்டு நெற்கழனிகளில் நெல்லும், கொற்கைத்துறைச் சிலாபங்களில்* (* முத்துக் குளிக்கும் இடம்) முத்துக்களும், பொதிய மலையில் சந்தனமும், தேக்கும், அகிலும் விளைகின்ற மகிழ்ச்சியில் என்றோ கைப் பற்றிய இந்தப் பாண்டிய நாட்டைக் கவலையில்லாமல் ஆண்டு கொண்டிருக்கலாம் என்று நீயும் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி உள்நாட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களையும், பகை களையும் நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை மிக நன்றாக உணர்ந் திருக்கிறேன்.”

     “அடிகள் உணர்ந்தால் நானே உணர்ந்தது போல் தான்! பாண்டியர்கள் கலகம் செய்து ஆகப்போவது என்ன? நாம்தான் அந்தப் பழம்பெரும் அரச மரபை மறுபடியும் தலையெடுக்க முடியாதபடி பூண்டோடும் அழித்து விட்டோமே? வமிசமே இல்லாமற் போய் விட்ட ஒரு குலம் மறுபடி வாகை சூட முடியுமா?”

     “கலியா! பலமுறை நீ என்னிடம் இப்படியே கூறி வருகிறாய்! உன் நினைப்புத் தவறானது. மேலாகத் தெரியும் அடிமரத்தின் வாட்டத்தைக் கொண்டு கீழே வேர்கள் எல்லாமே வாடி விட்டன என்பதாக நீ அநுமானம் செய்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். பாண்டிய அரச மரபுக்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”

     “எதைக் கொண்டு தாங்கள் அப்படி நம்புகிறீர்கள்?”

     “மிகப்பெரிய ஆல மரங்கள் எளிதாக அழிவதில்லை!”

     “அழித்துப் பல ஆண்டுகள் கடந்து விட்டனவே?”

     “விழுதுகளில் சிலவற்றை அழித்துவிட்டு மூலவிருட்சமே பட்டுப் போய்விட்டதாக நீ நினைக்கிறாய்?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.