இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

20. பெருஞ்சித்திரன் பேசினான்

     நீராடிப் புலர்த்திய கூந்தல் முதுகில் புரள அந்தக் கூந்தலோடு தெரிந்த அவன் முகம் பெண் பிள்ளை ஆண்கோலம் புனைந்து வருவது போலிருந்தது. பெரிய வரை வணங்குவதற்காகத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக அவன் விழுந்த போது கூட இயல்பாக வணங்குவதற்குக் கீழே கிடப்பது போல அமையாமல் நாணிக் கோணித் தடுக்கி விழுவதுபோல் அமைந்தது. வணங்குகிறவனை வாழ்த்தவேண்டுமே என்ற முறைக்காகப் பெரியவர் அவனை வாழ்த்தினார்.

     “நீ பாண்டியகுல அரசுடைமைச் சின்னங்களாகிய நவநித்திலங்களை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறாய்! அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும்! உன் குடும்பத்து உடைமையை அந்தக் குடும்பத்தில் ஒருவனாகிய நீயே கொண்டு வந்திருப்பதற்கு நான் நன்றி கூறுவது முறையில்லை என்றாலும் உன்னை ஒத்த பருவத்து விடலைப் பிள்ளைக்கு நன்றியும் பாராட்டும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என்பதை உணர்ந்தே நான் இப்படிப் பாராட்டுகிறேன்.”

     அந்தப் பிள்ளை விடலைத்தனம் நீங்கிப் பொறுப்புள்ளவனாக வளர்ந்திருக்கிறானா இல்லையா என்பதை மிகமிகத் தந்திரமான முறையில் பரிசோதனை செய்ய விரும்பித்தான் அவர் இவ்வாறு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் சற்றே அதிகமான வார்த்தைகளைக் கொட்டி அவனுக்கு நன்றி கூறியிருந்தார். தகுதியற்றவனைத் தூற்றி வசை பாடித்தான் அவமானப்படுத்தவேண்டும் என்பதில்லை; அளவற்றுப் புகழ்வதன் மூலமாகவும் அவமானப்படுத்த முடியும். எதிரிகளை வசைபாடி அவமானப்படுத்துவது பாமரர்கள் காரியம். துதிபாடி அவமானப்படுத்துவது அரச தந்திரிகள் காரியம். கொற்கைப் பெருஞ்சித்திரன் மதுராபதி வித்தகருக்கு எதிரி இல்லை என்றாலும் பலவீனமான துணைவனாகவே இருந்தான். முதல் தரமான விரோதியை விடப் பலவீனமான நண்பன் கெடுதலானவன் என்று பெரியவருக்குத் தெரியும்.

     தான் அவனுக்கு நன்றி கூறி அவன் நவநித்திலங்களைக் கொற்கையிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததைப் பாராட்டிய வஞ்சப் புகழ்ச்சியைப் புரிந்துகொண்டு உடனே அவன், “ஐயா, நீங்கள் இந்த எளியேனை நன்றி கூறிப் பாராட் டலாமா? நானும் என் மரபினரும் தங்களுக்கு அல்லவா கல்பகோடி காலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்பதாக உபசாரத்துக்காகவாவது சொல்கிறானா இல்லையா என்று எதிர்பார்த்தே அவர் பேசியிருந்தார். அரச குடும்பத்துப் பிள்ளைக்கு இருக்கவேண்டிய தந்திரமும், உடனே அநுமானித்து முடிவெடுக்கும் இயல்பும் இந்தப் பிள்ளையிடம் சிறிதேனும் இருக்கிறதா, இல்லையா என்று முடிவாக அறியவே அவர் இதைச் செய்ய வேண்டியிருந்தது.

     கொற்கைப் பெருஞ்சித்திரனோ அவர் தன்னைப் புகழ்ந்து நன்றி சொல்லுவதை மெய்யாகவே வார்த்தைக்கு வார்த்தை பொருளுள்ளதாக எடுத்துக் கொண்டு மகிழ்ந்து முகம் மலர்ந்தான்.அதோடு அமையாமல், “ஐயா வழி நடைக் களைப்பும் சோர்வும் எனக்குச் சொல்லி மாளாத அளவு வேதனையைக் கொடுத்து விட்டன. இந்த முனையெதிர் மோகப் படை வீரர் மட்டும் வந்து என்னை எழுப்பியிருக்க வில்லையாயின் இன்னும் மூன்று நாளானாலும் என்னுடைய தூக்கம் கலைந்திருக்காது” என்றான் பெருஞ்சித்திரன். மதுராபதி வித்தகர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டார். அவர் மனம் உள்ளே நகைத்தாலும் முகம் சலனமற்று இருந்தது.

     “அப்படியா? நாம் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகத்தானே களப்பிரர்கள் நமக்குப் பல்லாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஓய்வு கொடுத்திருக் கிறார்கள் பெருஞ்சித்திரா? கொற்கையில் இவ்வளவு காலமாக நீ செய்து கொண்டிருந்ததும் அதுதானே?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.