இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

3. மூல விருட்சம்

     மாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும் இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும்’ என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும்படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:

     “இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே, அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்படவேண்டும்?”

     “அது எப்படி முடியும்? மாவலி முத்தரையர் பாலியில் தான் பேசுகிறார். அரசரின் வலதுகரம்போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”

     “இருக்கலாம்! ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”

     “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள் ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும் அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்தமட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”

     இவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும்காதும் வைத்தாற்போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள்? நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித்தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே?” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:

     “யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர்? அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விடமுடியும்? அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.