மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

10. அளப்பரிய தியாகம்

     பெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில் சேரவேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக்கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா! தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

     தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன்’ என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஓலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன்.

     பெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஓலையோடு திரும்பிச் சென்றபின் கீழேயுள்ள நிலவறையில் வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்கவருமாறு கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஓலைகளை எடுத்து எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங்கழித்து எழுதுவதை நிறுத்திக்கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல் திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி நிலவிட அவன் மனத்திற்குள் ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஓலைகளில் மீண்டும் அவன் எழுதத் தொடங்கியபோது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கைவளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன.

     உடனே அவன் முன்னெச்சரிக்கையும் விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஓலைகளையும், அப்போது செல்வப் பூங் கோதைக்குக் கொடுத்தனுப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான்.

     இன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்:

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.