மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

16. கோட்டையும் குல நிதியும்

     மல்லன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அழகன் பெருமாள், இளையநம்பியின் காதருகே வந்து மெல்லக் கூறினான்:

     “ஐயா! தென்னவன் மாறனைக் கொன்றதற்காகக் களப்பிரக் கலியரசனைத் தன் கைகளாலேயே பழி வாங்கப் போவதாகச் சிறையிலிருக்கும்போதே இவன் பல நாள் விடாமல் கோபத்தோடு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை இப்போது நிறைவேற்றிவிட்டான் என்று தெரிகிறது! கலியரசனோடு போரிடும் வேலை இனி நமக்கு இல்லை. அதை இவன் நிறைவேற்றிப் பழிதீர்த்து விட்டான்.” பகைவனின் குருதி படிந்த அந்தக் கொலை வாளைப் பார்த்து இளையநம்பியின் கண்கள் கூசின. அந்த வாளில் யாருடைய குருதி படிந்திருந்ததோ அந்தக் குருதிக்கு உரியவன் தன் உடன் பிறந்தவர்களில் இருவரையும், உடன் பிறவாத சகோதரர்களாகிய பாண்டிய வீரர்களையும் கொன்றிருக்கிறான் என்பது நினைவு வந்தவுடன் அவனுடைய கூச்சம் அகன்று மனதில் கடுமை சூடேறியது. கோட்டையைக் கைப்பற்றியதும் முதல் கட்டளையாக, “இங்கே அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள களப்பிரப் பெண்களையும், நகரின் எல்லையிலுள்ள பாலி மொழிப் புலவர்களையும், கலைஞர்களையும், களப்பிரர்களின் சமயத்தைச் சேர்ந்த துறவிகளையும் மிகவும் பாதுகாப்பாகப் பாண்டிய நாட்டின் எல்லை வரை வெளியேற்றிக்கொண்டு போய்விட்டு வர வேண்டும்” என்று முன் எச்சரிக்கையாக அறிவித்திருந்தான் இளையநம்பி.

     களப்பிரர்-பாண்டியர் பழம்பகையில் பெண்களும், புலவர்களும், கலைஞர்களும், துறவிகளும் துன்புற நேரிடக் கூடாது என்றே முன்னெச்சரிக்கையோடு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாண்டிய மரபின் பெயர் களங்கப்படும் விதத்தில் எந்தப் பூசலும் கோநகரில் நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் இளையநம்பி கண்ணும் கருத்துமாயிருந்தான். பாண்டிய மரபின் பெருமைக் குறைவின்றி உரிய முறையில் இலவந்திகைக் காட்டில் பெருஞ்சித்திரனின் அந்திமக் கிரியைகள் நடைபெற்றன. அது முடிந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும் பெரியவர் கூறியிருந்த பிரம்ம முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரே நல்வாழ்த்துக்களுடன் அனுப்பியிருந்த கொடியை மதுரை மாநகரக் கோட்டையில் ஏற்றவேண்டும். ஊரறிய உலகறிய மீண்டும் பாண்டியப் பேரரசு உதயமாவதன் அடையாளமாக இப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது.

     வைகறையின் குளிர்ந்த காற்றோடு அந்தக் கொடியேற்றத்திற்கு வானமே வாழ்த்துக் கூறுவதுபோல் மெல்லிய பூஞ்சாரலாக மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது. விடிகாலைப் பறவைகளின் குரல்களும், வைகறைப் பண்பாடும் இசைவாணர் வாழ்த்தொலிகளும், கோட்டை மூன்றிலில் கூடியிருந்த ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்களும், ஆபத்துதவிகளும், முனையெதிர்மோகர் படையினரும் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க மதுரை மாநகரின் பழம்பெரும் கோட்டையிலே மீண்டும் பாண்டியர் மீன் கொடி ஏறியது. இருள் நீங்கிப் பொழுதும் புலர்ந்தது. கொடியுடன் பெரியவர் கொடுத்தனுப்பியிருந்த இடை வாளை அணிந்து ஆலவாய் இறையனார் கோயிலுக்கும், இருந்த வளமுடையார் கோயிலுக்கும் சென்று வணங்கிய பின் மங்கல வேளையில் அரண்மனையிற் பிரவேசம் செய்தான் இளையநம்பி.

     மதுரைமாநகரத்து அரண்மனையின் கீழ்த்திசையில் கோட்டை மதில்களிலே தெரியும் காலைக் கதிரவனின் ஒளியைக் கண்டபோது, முதன் முதலாகத் தான் பெரியவர் மதுராபதி வித்தகரைத் திருமோகூரில் சந்தித்த போது பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாயிற்று என்று அவர் கூறியதற்கு மறுமொழியாக, ‘ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா’ என்று நம்பிக்கையோடு அவருக்கு மறுமொழி கூறியிருந்தது, இன்று இப்படி நிதரிசனமாகி இருப்பதை உணர்ந்தான்.

     அரண்மனைக்குள்ளோ, கொலுமண்டபத்திலோ அதிக நேரம் தங்காமல் ‘கொடி ஏறிப் பறக்கத் தொடங்கிய சில நாழிகை நேரத்திற் கிழக்குக் கோட்டை வாயில் வழியாக நானே நகருக்குள் வருவேன்’ - என்று பெரியவர் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு காராளரும் பரிவாரமும் புடைசூழக் கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்தான் இளையநம்பி. பாண்டியப் பேரரசு மீண்டும் உதயமாகக் காரணமான பெரியவரை வரவேற்பைத் தன் முதற்கடமையாக அவன் கருதினான்.

     கோநகரக் குடிமக்கள் இந்த மாபெரும் வெற்றிக்காகக் காத்திருந்தவர்களைப் போல் தெரு எங்கும் தோரணங்கள் கட்டி வாழை மரங்கள் நட்டுக் கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். கோநகரும், சுற்றுப்புறங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. மங்கல வாத்தியங்களும், வெற்றி முரசங்களும், வாழ்த்தொலிகளும் எல்லாத் திசைகளிலும் எழுந்து பேராரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. இளையநம்பி கிழக்குக் கோட்டை வாயிலுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பே அங்கே ஆயிரம் வெண் புரவிகளில் அணிவகுத்த வீரர்களோடு புறப்பட்டுக் கொற்கையிலிருந்து வந்து காத்திருந்தான் குதிரைக் கோட்டத்து மருதன் இளநாக நிகமத்தான். முகபடாம் தரித்த யானையின் மேல் அந்துவன் எடுப்பாக அமர்ந்திருந்தான். இளையநம்பியைக் கண்டதும் யானைப்பாகன் அந்துவன், “அரசே! இந்த ஏழையின் முகராசிக்குக் கெட்டபெயர் வராமல் காப்பாற்றியதற்காக தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரிய வில்லை. ‘இந்த நகரத்தில் முதலில் என் முகத்தில் விழிப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் வந்த காரியம் நிச்சயமாக வெற்றிபெறும்’ என்று பல திங்கள் காலத்துக்கு முன் உங்களிடம் சொல்லியதை இப்போது நிறைவேற்றி விட்டேன்” -என்றான். அவனுடைய கள்ளங் கபடமற்ற பாராட்டை ஏற்றுப் புன்முறுவல் பூத்தான் இளையநம்பி.

     பூரண் கும்பத்துடனும் மங்கல தீபத்துடனும் பெரியவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் நோக்குடனும் அங்கே தன் பணிப்பெண்களோடு காத்திருந்தாள் கணிகை இரத்தினமாலை. கிழக்குக்கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை வரை அழைத்துச் செல்வதற்காக இரத்தின மாலையின் முத்துப்பல்லக்கும் காத்திருந்தது. அழகிய பெண்கள் இருமருங்கும் வெண்சாமரம் வீசக் காத்திருந்தனர். வழிநெடுக மலர்களைத் தூவியிருந்தார்கள். மங்கலப் பொருள்களைச் சிதறியிருந்தார்கள்.

     பாண்டியன் இளையநம்பி, நகருக்குள் பிரவேசிக்கப் போகும் அந்த மாபெரும் அரச தந்திரிக்கு மாலை சூட்டி வரவேற்பதற்காகவே காராளரோடும், அழகன்பெருமாளோடும் பரிவாரங்களோடும் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்தபின் கீழ்த்திசையில் மற்றொரு சூரியன் புதிதாக உதித்து வந்ததுபோல் ஒளிதிகழும் அந்தப் பேருருவம் ஆபத்துதவிகள் சூழ வந்து தோன்றியதும் கடல் அலைபோல் கூட்டத்தில் பேராரவாரம் எழுந்தது. வாழ்த்தொளி விண்ணை எட்டியது. மதிற்கூவர்களின் மேலிருந்தும், கோட்டைக் கதவுகளிலிருந்தும் மரங்களின் மேலிருந்தும் அந்த ஒளிமயமான பேருருவத்தின் மேல் மலர்மாரி பொழிந்தது. இன்றுதான் வாழ்விலேயே ஒரு புதிய மாறுதலாக உணர்வுகளே தெரியவிடாத அந்த முகமண்டலத்தில் வெளிப்படை யாகப் புன்முறுவலைப் பார்த்தான் இளையநம்பி. இரத்தின மாலை நிறைகுடமும், மங்கல தீபமும் காண்பித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றாள். முழந்தாள் மண்ணில் பதிய மண்டியிட்டு வணங்கிய பாண்டியன் இளையநம்பியைத் தூக்கி நிறுத்தி, நெஞ்சாரத் தழுவிக் கொண்டார் பெரியவர் மதுராபதி வித்தகர். நாத்தழுதழுக்க இளையநம்பி அவரிடம் கூறலானான்:

     “ஐயா! இந்தப் பேரரசை நீங்கள்தான் மீட்டுத் தந்திருக்கிறீர்கள்! நான் வெறும் கருவிதான். ஆயுதங்களும் வீரர்களும் வென்ற வெற்றி என்பதைவிட இதைத் தங்கள் சாதுரியத்தின் அரச தந்திர வெற்றி என்றே கூறலாம்.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.