மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

17. கடமையும் காதலும்

     போர் நிகழும் எல்லைகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் வெற்றிச் செய்தி கொண்டு வந்திருந் தார்கள். கோநகரையும், சுற்றுப் புறங்களையும் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டதன் விளைவாக வடக்கே வெள்ளாற்றங்கரைப் போரில் களப்பிரப் படை வீரர்கள் சின்னாபின்னமாகி அழிந்தார்கள். எஞ்சியவர்கள் மதுரைக்கு திரும்பாமல் தங்கள் பூர்வீகமாகிய வட கருநாடக நாட்டை நோக்கித் தோற்று ஓடிப் போய் விட்டார்கள். பாண்டியர்கள் உள்நாட்டையும், கோநகர் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றி வென்று களப்பிரக் கலியரசனைக் கொன்றுவிட்டார்கள் என்று செய்தி தெரிந்ததும் களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த பூதபயங்கரப் படையினருக்கும், ஏனைய களப்பிர வீரர்களுக்கும் மிகப்பெரிய தடுமாற்றமும் தளர்ச்சியும் ஏற்பட்டன. இரண்டு போர் முனைகளிலுமே களப்பிர வீரர்கள் தெம்பிழந்து நம்பிக்கையற்றுப் போயினர். தோல்விக்கும், வீழ்ச்சிக்கும், இதுவே காரணமாய் அமைந்தது. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லைப்போரில் ஈடுபட்ட களப்பிர வீரர்களாவது தலை தப்பினால் போதும் என்று தோற்றதும் சொந்தநாட்டிற்குத் திரும்பியோடும் வாய்ப்பிருந்தது. தென் மேற்கே சேரனோடு போரிட்டுக் கொண்டிருந்த களப்பிர சேனையோ பெரும்பகுதி அழிந்துவிட்டது. எஞ்சியவர்களைச் சேரன் சிறைப்பிடித்து விட்டான் என்று தெரிந்தது.

     இந்தப் போரில் வென்றால் வெற்றி பெற்றதுமே மதுரை மாநகரில் நிகழப்போகும் புதிய பாண்டியப் பேரரசின் முடி சூட்டுவிழா வைபவத்திற்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முன்பே சேரனுக்கும், பல்லவனுக்கும் எழுதியிருந்த ஓலைகளில் இவர்களை மதுரைக்கு அழைத்திருந்தார் பெரியவர். இப்போது போர் முடிவுக்குப்பின் இன்று வெற்றிச் செய்தியோடு பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வந்திருந்த தூதர்கள் இருவரில் சேரவேந்தனின் தூதுவன் தன்னுடைய அரசன் முடிசூட்டு வைபவத்துக்காகப் பரிவாரங்களோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். பல்லவ வேந்தன் சிம்ம விஷ்ணுவோ, களப்பிரநாடு தன்னுடைய எல்லையில் இருப்பதாலும் பாண்டிய நாட்டிலும், தெற்கெல்லையிலும் வெள்ளாற்றங்கரையிலும் தோற்ற தோல்விகளுக்காகப் பழி வாங்குவதற்காக களப்பிரர்கள் எந்த சமயத்திலும் தன் மேல் படையெடுக்கலாம் என்பதாலும் மதுரை மாநகருக்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்து மகிழ இயலாதென்று, தன் தூதன் மூலம் மதுராபதி வித்தகருக்குச் சொல்லியிருந்தான். பல்லவன் சொல்லி அனுப்பியதில் உள்ள நியாயம் பெரியவருக்குப்புரிந்தது. பல்லவன் சிம்மவிஷ்ணு காலத்தாற் செய்த உதவிக்கு நன்றி உரைத்துப் பதில் ஓலை வரைந்து தூதனிடம் கொடுத்திருந்தார். அவர் முடிசூட்டு விழாவுக்காக பல்லவ மன்னன் மதுரை வந்தால் அந்த நேரம் பார்த்து பல்லவ மண்ணிற் படையெடுத்துத் துன்புறுத்தக் களப்பிரர்கள் தயங்கமாட்டார்கள் என்பதைப் பெரியவர் புரிந்து கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து மீண்டும் தெற்கே களப்பிரர் படையெடுப்பு நேராதிருக்க வலிமை வாய்ந்த சிம்மவிஷ்ணு அரணாகவும் பாதுகாப்பாகவும் நடுவே இருக்கவேண்டிய இன்றியமையாத நிலையை உணர்ந்தே மதுரைக் கோநகரின் மங்கல முடிசூட்டு விழாவுக்கு வரச்சொல்லி மீண்டும் அவனை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் பெரியவர். மற்றொருவனாகிய சேர தூதனிடம், “மகிழ்ச்சியோடு உங்கள் சேர வேந்தனை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்பதையும், போருக்கு முன் உங்கள் அரசனுக்கு நான் அளித்திருக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதையும் எதிர்கொண்டு சென்று தெரிவித்து உங்கள் அரசனை இங்கு அழைத்துவா!” என்று சொல்லி விளக்கி அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர் முன்னிலையில் அரச தூதர்களுக்குரிய முறைகளுடனும், பெருமைகளுடனும், அவர்களை விடை கொடுத்து வழியனுப்பி வைத்தான் இளையநம்பி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.