-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்




இரண்டாம் பாகம்

11. முள்ளால் எடுத்த முள்

     மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைச் சாதாரண மனிதராக சாதாரண உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் பார்க்க வேண்டுமென்று விதிக்கு என்ன தான் ஆசையோ? தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

     கரவந்தபுரத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது தூதுவன் அரண்மனைக்கு வந்த போது அவர் மேலும் வியப்புக்கு உள்ளானார். கொற்கைக் கலவரங்களும், வடக்கு எல்லைப் பூசல்களும் பற்றிய செய்திகள் அந்த இரண்டாவது தூதன் மூலம் வந்து சேர்ந்தன. ஏற்கனவே அனுப்பப்பட்ட மானகவசன் என்னும் தூதன், தான் அங்கிருந்து புறப்படுகிற வரையில் கரவந்தபுரத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதையும் புதிதாக வந்தவன் கூறினான்.

     அவற்றைக் கேள்விப்பட்ட போது, உணர்வுகள் பதிந்தறியாத அந்த நெற்றியில் உணர்ச்சிகளைக் காண முடிந்தது. இரண்டாம் முறையாக அந்தத் தூதுவன் வந்திருப்பதையும், அவன் கூறிய செய்திகளையும் மகாராணியாருக்கு அறிவிக்கவில்லை அவர். புதுப் புதுத் துன்பங்களைக் கூறி முன்பே கவலைகள் பெருகியிருக்கும் அந்த மலர் நெஞ்சத்தை மேலும் வாடவிடுவதற்கு விரும்பவில்லை அவர். எல்லைக் கற்களை உடைக்கிற அளவு வடக்கே பூசல் நடப்பது அவருடைய பொறுமையையே சோதித்தது.

     "உன்னிடமும் ஒரு பதில் ஓலை கொடுத்து அனுப்புகிறேன். ஆனால் நீ அதைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு செல்லும் போது இடை வழியில் எங்காவது, யாராவது உன்னிடமிருந்து பறிக்க முயன்றால் சிரமப்பட்டு அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். தாராளமாக விட்டுக் கொடுத்துவிடு."

     இடையாற்று மங்கலம் நம்பி இப்படிக் கூறிய போது வந்திருந்த தூதுவன் திகைத்துப் போனான். அவனுக்கு அவர் என்ன நோக்கத்தோடு அப்படிச் சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. அவன் விழித்தான். அவரோ சிறிதும் தாமதம் செய்யாமல் பதில் ஓலை எழுதி உறையிலிட்டு அரக்கு இலச்சினை பொறித்து அவன் கையில் கொடுத்து விட்டார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தூதுவன் அங்கே அதிக நேரம் தங்கியிருப்பதையே விரும்பாதவர் போல் துரத்தினார். அவனும் புறப்பட்டு விட்டான். அவனை அனுப்பிய பின் மகாமண்டலேசுவரர் சிந்தனையில் மூழ்கினார்.

     அவருடைய சிந்தனையில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற ஒரே கேள்வி இதுதான்:

     'நெருங்கி வந்து கொண்டிருக்கும் போரை இன்னும் சிறிது காலம் பொறுத்துத் தாமதமாக வரச் செய்வதற்கு வழி என்ன?'

     இந்தச் சில நாட்களுக்குள் எத்தனையோ துன்பங்களையும் அதிர்ச்சிகளையும் தாங்கி அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் உடனுக்குடன் நினைத்து முடிவு செய்திருக்கிறார் அவர். ஆனால் மலை போல் எழுந்து நிற்கும் இந்தப் பெரிய கேள்விக்கு அவ்வளவு எளிமையாக விடை கண்டுபிடிக்க முடியவில்லை. சிந்தனை பல கிளைகளாய்க் கிளைத்து எங்கெங்கோ சுற்றிப் படர்ந்தது. எத்தனையோ பெரிய படையெடுப்புகளின் திடுக்கிடத் தக்க நிலைமைகளையெல்லாம் அவர் சமாளித்திருக்கிறார். போரில் வெற்றிகளையும் பார்த்திருக்கிறார், தோல்விகளும் உண்டு. இதே இராசசிம்மன் இப்போது இருப்பதை விட இளைஞனாக இருந்த காலத்தில் போர்கள் ஏற்பட்டிருக்கின்றன. பராந்தக பாண்டியர் மறைந்த நாளிலிருந்து எங்கேயாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு காரணம் பற்றிப் போர் உண்டாகிக் கொண்டுதான் இருக்கிறது.

     உப்பிலிமங்கலத்துப் போரைக் காட்டிலுமா பெரிய போர் இனிமேல் ஏற்படப் போகிறது? வடதிசை அரசர்களுக்கு ஒத்துழைத்து அந்தப் போருக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னன் பாண்டி நாட்டை வென்று விடலாமென்று எத்தனை நம்பிக்கை வைத்திருந்தான். கடைசியில் மேலாடையையும் உடை வாளையும் கூடக் களத்தில் எறிந்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடும் நிலையை அடைந்தான் அவன்.

     அதன் பின் வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த போர்களில் தஞ்சைப் பெரு மன்னனை இரண்டு முறை ஓடஓட விரட்டினோம். அப்போது பாண்டி நாட்டின் எல்லை விரிந்து பரந்திருந்தது. போர் வீரர்களும் ஏராளமாக இருந்தார்கள். இராசசிம்மனுக்கு அது மிகவும் இளமைப் பருவமாதலால் எதற்கும் அஞ்சாத துணிவும் வாலிபச் செருக்கும் இருந்தன. தளபதி வல்லாளதேவனும் அவனும் உற்சாகமாகப் போர் வேலைகளில் ஈடுபட்டார்கள். பாண்டிய மண்ணின் பெருமையைக் காத்திட வேண்டும் என்ற ஒரு வீராவேச வெறி அப்போது எங்கும் பரவியிருந்தது. இப்போது மட்டும் அந்தத் துடிப்பு இல்லாமலா போய் விட்டது?

     துடிப்பும், துணிவும் இருந்து என்ன செய்வது? சரியான தலைமையில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளால் படை வசதிகள் அழிவுபட்டுக் குறைந்து போயின. நாட்டு எல்லை தென்கோடி வரை குறுகிவிட்டது. அன்றைய நிலையில் வஞ்சிமாநகரம் வரை சென்று பெரும் படையோடு தனியாக நின்று தனது தாய்வழிப் பாட்டனுக்கு வெற்றி தேடித் தரும் அளவுக்குக் குமாரபாண்டியன் தீரனாக இருந்தான். கடைசியாக வடதிசை அரசர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு செய்த போரில் வடபாண்டி நாடாகிய பகுதி முழுவதும் தோற்றுப் போக நேரிட்டுவிட்டது. தோற்றால்தான் என்ன? எப்போதும் வெற்றியடைந்து கொண்டிருக்க முடியுமா? குமாரபாண்டியன் நாடு தோற்றது பெரிதன்று. மனம் தோற்றுப் பயந்து போய் கடல் கடந்து ஓடினானே, அதுதான் பெரிய தவறு. அவனுடைய இந்தத் தவறு வடதிசையரசர்களைப் பெரிய அளவுக்கு ஊக்கமுறச் செய்து மேலும் மேலும் படையெடுத்து வரத் தூண்டுகின்றது. அவன் நாட்டில் இல்லாமல் எங்கோ மறைந்திருப்பது கூடாதென்று அரிய முயற்சியால் ஈழ நாட்டிலிருந்து வரவழித்தேன்; வந்தான். அவனை இரகசியமாக மறைத்து வைத்திருந்து என்னென்னவோ செய்ய எண்ணினேன். காலம் வரும் வரை பொறுத்திருந்து சரியான படைபலத்தை உருவாக்கிக் கொண்டு வடபாண்டி நாட்டை மீண்டும் கைப்பற்றியிருக்க முடியும். மகாராணி வானவன்மாதேவியின் இரண்டு பெரிய கனவுகளை நனவாக்கிவிட எண்ணியிருந்தேன்.

     "செந்தமிழ் தென்பாண்டி நாட்டின் அரசனாக இராசசிம்மனுக்கு முடிசூட்ட வேண்டும். மணவினை மங்கலம் முடிவெடுக்க வேண்டும்."

     இராசசிம்மனோ என் திட்டங்களையும் தன் அருமந்த அன்னையின் கனவுகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கடலைக் கடந்து போய்விட்டான். நான் சேந்தனிடம் கூறியனுப்பியிருக்கும் திட்டப்படி குழல்வாய்மொழியும் அவனும் இளவரசனைத் தேடிக் கொண்டு வரப் புறப்பட்டிருப்பார்கள். தளபதி வல்லாளதேவன் கோட்டாறிலுள்ள தென் திசைப் பெரும் படையைப் போருக்குத் தயார் செய்து கொண்டிருப்பான். எப்படியிருந்தாலும் நமக்கு பிறருடைய உதவி வேண்டும். இராசசிம்மன் மனம் வைத்தால் ஈழ நாட்டுக் காசிப மன்னரிடமிருந்து கூடப் படை உதவி பெற்றுக் கொண்டு வரமுடியும்.

     பார்க்கலாம்! எப்படி எப்படி எது எது நடக்கிறதோ? இப்போது செய்ய வேண்டிய முதல் வேலை வந்து கொண்டிருக்கிற போரை உடனடியாக வரவிடாமல் தடுப்பது. மகாமண்டலேசுவரருடைய நினைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. அவர் மனத்தில் தென் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக மானசீகத் தோற்றத்தில் தோன்றிக் குழம்பிக் கொண்டிருந்தனர். கோப்பரகேசரி பராந்தக சோழன், கொடும்பாளூரான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன், அரசூருடையான் சென்னிப் பேரரையன் - அந்த நான்கு எதிரிகள் தாம் படையெடுப்பு ஏற்பாட்டில் ஒரு முகமாக முனைந்திருப்பதாகக் கரவந்தபுரத்திலிருந்து வந்த செய்தி கூறியது. ஆனால் மகாமண்டலேசுவரருக்கு எட்டியிருந்த வேறு சில செய்திகளால் இதில் பரதூருடையான் என்னும் மற்றோர் பெருவீரனும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. படைகளிலும், போர்ப் பழக்கத்திலும் வல்லவர்களான இந்த ஐந்து பேரும் ஒன்று கூடிய கூட்டணியை முறியடிப்பது எளிமையானதல்லவென்று அவரும் உணர்ந்தார். ஆகையால் தான் அந்தப் போர் விரைவில் நெருங்கி வந்து விடாதபடி எப்படித் தடுப்பதென்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்து மூழ்க நேர்ந்தது. எதிரிகள் எவ்வாறு நேரடியாகப் போருக்கு வந்து விடாமல் கலவரங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ, அப்படி நாமும் ஏதாவது செய்தால் என்னவென்று அவருக்குத் தோன்றியது.

     சிந்தித்துக் கொண்டே இருந்தவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர் போல் அரண்மனை மெய்க்காவலர் படைத்தலைவன் சீவல்லபமாறனை அழைத்து வருமாறு ஒரு சேவகனை அனுப்பினார். அவரால் அனுப்பப்பட்ட சேவகன் சீவல்லபமாறனைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்கு அவசரமாகச் சென்றான்.

     மகாமண்டலேசுவரர் குறுக்கும், நெடுக்குமாக உலாவுவது போல நடந்தார். 'முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வேறு வழி இல்லை' - வாய்க்குள்ளேயே இந்தச் சொற்களை மெல்லச் சொல்லிக் கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அளவு பிசகாமல் காலடி பெயர்த்து வைத்து அவர் நடந்த நிமிர்வான நடை உள்ளத்துச் சிந்தனையின் தெளிவைக் காட்டியது.

     சீவல்லபமாறன் வந்து அடக்க ஒடுக்கமாக வணங்கி விட்டு நின்றான். மகாமண்டலேசுவரர் அவனை வரவேற்றார். "வா அப்பா! உன்னை வரவழைத்த காரியம் மிக அவசரம். அதற்கு நீ தயாராக இருப்பாய் என்றே நினைக்கிறேன்" என்று கூறினார்.

     "மகாமண்டலேசுவரரின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதற்கு அடியேன் தயாராக இருந்துதான் ஆகவேண்டும்."

     "கட்டளை இருக்கட்டும். அதற்கு முன்பு வேறோரு எச்சரிக்கை. நீயோ மெய்க்காவற் படைத்தலைவன்; மெய்க் காவலனுக்கு மெய்யைக் காக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போது நான் கூறப்போகும் மெய், உன்னையும் என்னையும் தவிர்த்துப் புறம் போகக்கூடாத மெய். ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிற மெய்."

     "புறம் போகக் கூடாதென்பது தங்கள் விருப்பமாயின் அப்படியே மனத்தில் பாதுகாத்துக் கொள்வேன்."

     "நல்லது! ஏற்பாட்டைச் சொல்லட்டுமா?"

     "சொல்லுங்கள்."

     "பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்தவர்களாகவும், எங்கும், எந்த விதத்திலும் வேடமிட்டு நடிக்கத் தெரிந்தவர்களாகவும், உயிருக்கு அஞ்சாதவர்களாகவும், ஓர் ஐம்பது வீரர்கள் இப்போது உன்னிடமிருந்து எனக்குத் தேவை!"

     அவரையும், அவருடைய வார்த்தைகளையும் விளங்கிக் கொள்ள முடியாமல் திணறிப் போய் மருண்டு பார்த்துவிட்டுக் கேட்டான் அவன்:

     "ஐம்பது வீரர்களா வேண்டும்?"

     "ஆம்! எண்ணி ஐம்பது பேர்கள் வேண்டும் எனக்கு."

     "அரண்மனை மெய்க் காவற் படையினரில் இருந்து தான் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு ஆட்கள் இல்லை!"

     "செய்! ஆனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நான் கூறிய தகுதிகளுக்குப் பொருந்தியிருக்க வேண்டியது மிகவும் அவசியம்."

     சீவல்லபமாறன் அதற்கு ஒப்புக் கொண்டு போனான். மகாமண்டலேசுவரர் எதை எண்ணியோ சிரித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் வண்ணமகள் புவன மோகினி அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.

     "சுவாமி! தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதியைக் காணவில்லை. இன்று காலை மகாராணியார் பார்த்து அழைத்து வரச் சொன்னார்கள். போய்ப் பார்த்தேன்; இல்லை. அரண்மனையில் எங்குமே தளபதியின் தங்கையைக் காணாததால் எங்களுக்கு ஒரே கவலையாக இருக்கிறது. செய்தியை அறிந்து மகாராணியாரும் மனக் கலவரமடைந்தார்கள். தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்."

     "அதங்கோட்டாசிரியர் மகள் விலாசினியைக் கேட்டால் தெரியுமே? அந்தப் பெண்கள் இருவரையும் எப்போதும் சேர்ந்தே காண்கிறேன் நான்!" - வியப்பை மறைத்துக் கொண்டு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.

     "விலாசினி இங்கு இல்லை. இன்று காலை ஆசிரியரும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் போகும் போது அந்தப் பெண்ணும் போய்விட்டாள்" என்று மீண்டும் பரபரப்பான குரலில் முறையிட்டாள் வண்ணமகள்.

     "அந்தப் பெண் காணாமல் போய்விட்டாளே என்று மகாராணியோ நீங்களோ யாருமே கவலைப்பட வேண்டாம். அவள் தைரியசாலி. ஏமாறுகிறவள் இல்லை. ஏமாற்றும் ஆற்றலுள்ளவள். காரியமாகத்தான் அவள் காணாமல் போயிருப்பாள்."

     பெரிதாகக் கவலைப்படும்படி எதுவும் நடந்து விடாத மாதிரி அலட்சியமாகப் பேசினார் அவர். மகாமண்டலேசுவரர் அந்தப் பெண் காணாமற் போனது பற்றி அக்கறையில்லாமல் பேசுவது ஏனென்று வண்ணமகளின் சிற்றறிவுக்கு எட்டவில்லை! அவள் திரும்பிச் சென்றாள்.

     'ஆண்களும் பெண்களும், சிறியவர்களும் பெரியவர்களுமாகத் தெரிந்தும், தெரியாமலும் என்ன என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அரண்மனையில் காணாமற் போகிறார்கள், வருகிறார்கள். என்னைப் போல் பொறுப்பும், பதவியும் உள்ளவனுக்குத்தான் மாபெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் இருப்பதாக நான் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கூர்ந்து நோக்கினால் வேறு சிலரும் இந்தப் பெருமைக்குப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா தெரிய வருகிறது!' வேடிக்கையாக இவ்வாறு எண்ணி நகைத்துக் கொண்டார் அவர்.

     அப்போது சீவல்லபமாறன் திரும்ப வந்து, "மகாமண்டலேசுவரரின் திருவுள்ளப்படி திறமையான வீரர்களைத் தயார் செய்துவிட்டேன். அவர்கள் எல்லோரும் காவற்படை மாளிகையில் தங்கள் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இனி மேலே செய்ய வேண்டியதென்ன?" என்றான். அவர் புன்னகை பூத்தார்.

     "மேலே செய்ய வேண்டியதா!... இதோ என் அருகில் வா... சொல்கிறேன்."      சீவல்லபன் மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.

     "உன் வலது உள்ளங்கையை நீட்டு!" அவன் நீட்டினான். குபீரென்று ஒரு நீளமான கருவேல முள்ளை எடுத்து அவனது சிவந்த உள்ளங்கையில் பதியும்படி குத்தினார் அவர். அவன் வலி பொறுக்க முடியாமல் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அவருடைய செயலின் பொருள் புரியாமல் முகத்தை சுளித்துக் கொண்டான்.

     "வேறொரு கருவியின் துணையின்றி இதை எப்படி எடுப்பாய்?" ஒன்றுமறியாத பச்சைக் குழந்தையை வினாவுவது போல் வினவினார்.

     "..." அவன் பதில் கூறவில்லை. "இதோ இப்படி எடுக்க வேண்டும்" என்று மற்றொரு கூரிய முள்ளால் அதைக் கிளறி வெளியே எடுத்துவிட்டுச் சிரித்தார் அவர். குன்றிமணி பழுத்தது போல் ஒரு துளி குருதி உருண்டு எழுந்தது அவன் கையில்.

     மகாமண்டலேசுவரரின் அதிசயிக்கத்தக்க இந்தச் செயல் மெய்க்காவலர் படைத் தலைவனான சீவல்லபமாறனைத் திகைக்க வைத்தது. குழம்பிய உள்ளத்துடன் அவன் அவரைப் பணிவோடு நிமிர்ந்து பார்த்தான். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியும் ஆவல் அவன் முகத்தில் நிறைந்திருந்தது.

     "சீவல்லபமாற! நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் இது போன்றதொரு வேலையைத்தான் செய்ய வேண்டும். இது உனக்கு விளங்கியிருக்காது. விளக்கமாகச் சொல்கிறேன் கேள்!" என்று ஆரம்பித்தார் அவர்.