கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

     பத்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர்கொண்டு அழிக்க முடியாத பகையாக இருந்தது அது. அடுப்படியில் வேர்வை சொட்டச் சொட்ட மாடாக உழைக்கும் ஒரு சரக்கு மாஸ்டருக்கு இத்தனை அழகான மகள் பிறந்திருக்கக் கூடாதுதான்.

     மன எரிச்சலாலும் எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் பிறந்த வேதனையினாலும் பல சமயங்களில் அனந்தபத்மநாபன் என்ற முழுப்பெயரை உடைய அனந்துவுக்கே இப்படித் தோன்றியது. அந்தப் பிரச்னை அவர் மனத்தை வாட்டி எடுத்தது.

     ஒரே பெண், அதுவும் தாயில்லாப் பெண். அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நேருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வேதனையினால் அனந்துவுக்குத் தொடர்ந்து பல நாட்களாக இராத் தூக்கமில்லாமல் போய்விட்டது. வேலையை விட்டுவிட்டுப் பெண்ணின் கல்லூரிப் படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டு சென்னையை விட்டு ஊரோடு திரும்பிப் போய்விடலாமா என்று கூட அவர் யோசித்தார்.

     திருவல்லிக்கேணி வேங்கடரங்கம் பிள்ளைத் தெரு என்பது, இப்பால் கடலோரத்துக் குடிசைப் பகுதிகளுக்கும் அப்பால் மேற்குப் பக்கம் சம்பிரதாயமான பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலைச் சுற்றிய தெருக்களுக்கும் இடையே அமைந்திருந்தது.

     அந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக் குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில் ஒரு போர்ஷனில் தான் அனந்து குடியிருந்தார். அந்த வீட்டில் நடுவே நடப்பதற்குச் சிமெண்டுத் தளமிட்ட பாதையின் இருபுறமும் எதிரெதிராக மூன்றும் மூன்றும் ஆறு ஒண்டுக் குடித்தனப் போர்ஷன்கள் இருந்தன. அதை ஒரு வீடு என்று சொல்வதை விட ஒண்டுக் குடித்தன போர்ஷன்கள் அடங்கிய ஸ்டோர்ஸ் என்றே சொல்லிவிடலாம்.

     அனந்து வேலை பார்த்த காண்டீன் இருக்கும் பத்திரிகைக் காரியாலயம் மவுண்ட் ரோடில் இருந்தது. காலை ஐந்து மணிக்குச் சைக்கிளில் வீட்டை விட்டுப் புறப்பட்டாரானால் மறுபடி அனந்து வீடு திரும்ப இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்கு மேலாகிவிடும்.

     வீட்டில் கல்லூரிக்குப் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் இருக்கிறவள் சாரதா மட்டுந்தான். காலையில் அவளே சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்கு ஓடவேண்டும். கூட்டத்தில் இடிபட்டுப் பஸ்ஸில் இடம்பிடித்துக் கமாண்டர் இன் சீஃப் சாலையிலுள்ள கல்லூரிக்கு நேரத்துக்குப் போயாக வேண்டும்.

     அப்படிப் பரக்கப் பரக்கப் போகிற போதுதான் ஒரு நாள் பஸ்ஸில் அந்த வம்பு வந்து சேர்ந்தது. வம்பு ஒரு நாளோடு போகாமல் வாடிக்கையாக மாறி விடவே சாரதா வேதனைக்குள்ளானாள். தன்னை இத்தனை அழகாகவும், பிறருடைய கவனத்தைக் கவரும்படியும் படைத்த தெய்வத்தின் மேலேயே அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

     விளையாட்டாக ஆரம்பித்து, தொந்தரவாக மாறி விபரீதமான எல்லைக்கு வந்திருந்தது அது. பஸ்ஸில் அரும்பு மீசையும், சுருட்டை முடியுமாகத் தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் களையோடு ஒரு மாணவன் அவள் கையிலிருந்த புத்தகப் பையில் ஒரு கடிதத்தை மடித்துப் போட்டான். பஸ்ஸில் நாலு பேர் முன்னால் வீண் கலாட்டா வேண்டாமென்று முதல் நாள் பேசாமால் இருந்துவிட்டாள் சாரதா.

     கல்லூரிக்குப் போய் அதைப் பிரித்துப் பார்த்தால், அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த ஓர் இளம் சினிமா கதாநாயகியைப் போல் அவள் அழகாயிருப்பதாகப் புகழந்துவிட்டு அவளைத் தான் காதலிப்பதாக எழுதியிருந்தான் அந்த அசடு. அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு மறந்து போனாள் சாரதா.

     ஆனால் அவன் அப்படி அவளை மறந்து விடவில்லை என்பது மறுநாளும் சரியாக அதே நேரத்துக்கு அவன் பஸ் ஸ்டாண்டில் வந்து முளைத்ததிலிருந்து தெரிந்தது. இன்று முன்னைவிடப் பெரிய கத்தையாக ஒரு கடிதம் வந்து சாரதாவின் பையில் விழுந்தது. சாரதா கோபமாக ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் அவன் பஸ்ஸின் முன் பக்கமாக விரைந்து நடந்து போய்க் கும்பலில் கலந்து கொண்டான்.

     அவள் பையில் அவன் கடிதத்தைப் போடுவதைப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் பார்க்காதது போல் இருந்து விட்டார். வர வரப் பெரிய நகரங்களில் தவறுகளை ஆண்மையோடு தலையிட்டுக் கண்டிக்க முன்வரும் ஆண்பிள்ளைகளே இல்லையோ என்று கூடச் சாரதாவுக்குத் தோன்றியது.

     தங்களுக்குச் சம்பந்தமில்லாத நல்லதோ கெட்டதோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் நடுவாகப் போய்விட வேண்டும் என்ற நாசூக்கு மனப்பான்மையில் நகரங்களில் முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் கோழைகளாக இருப்பதையும் அவள் கண்டாள். இரண்டாம் நாள் எழுதிய கடிதத்தில் ஒரேயடியாகப் பிதற்றியிருந்தான் அவன்.

     "கண்ணே! சொந்தக் காரில் கல்லூரிக்குப் போகிற நான் உன் பொருட்டுப் பஸ்ஸில் ஏறி வந்து கால் கடுக்க அலைகிறேன். உனக்காக நான் படும் சிரமங்கள் ஏராளம்.

     "இன்று நாம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாமா? உன்னைக் காரிலேயே அழைத்துச் சென்று காரிலேயே பத்திரமாகக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்" என்பதாக எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.

     கடிதத்தைக் கூடச் சொந்தமாக எழுதாமல் ஏதோ சினிமாக் காதலில் வருகிற வசனம் போல் எழுதியிருந்தான். சொந்தமாக அவனுக்கு எதுவுமே தெரியாதோவென்று சாராதாவுக்குத் தோன்றியது. காதலைக் கூடப் பல திரைப்படங்களைப் பார்த்த தன் இமிடேஷனாக அவன் செய்து கொண்டிருப்பதாகப் பட்டதே ஒழிய, உணர்ந்து ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவனுக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை.

     வேறொரு நாள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி அவளை அவன் பின் தொடர்ந்த போது கோபத்தோடு தன் கால் செருப்பை கழற்றி அடிக்கப் போவது போல் காண்பித்தாள் அவள். சாரதாவின் அந்தச் செயல் கூட அவனை அவமானப்படுத்தவோ எரிச்சலூட்டவோ செய்யவில்லை.

     "கோபத்தில் கூட நீ அழகாயிருக்கிறாய். உன் பட்டுப் பாதங்களை நாள் தவறாமல் சுமக்கும் செருப்பு செய்த புண்ணியத்தைக் கூட நான் செய்யவில்லையா?" என்று புலம்பினானே ஒழியக் கோபப்படவில்லை. அவன் சரியான கல்லடி மங்கனாக இருந்தான். அவனை எரிச்சலூட்டவும் முடியவில்லை அவளால்.

     ரோஷமில்லாதவனை, மான உணர்ச்சியில்லாதவனை, ஆண் பிள்ளையாகவே மதிக்கத் தோன்றவில்லை சாரதாவுக்கு. செருப்பைக் கழற்றிக் காண்பித்த மறுநாளிலிருந்து அவன் தன்னைப் பின்பற்றி வரமாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள்.

     ஆனால் அவள் நினைத்தபடி நடக்கவில்லை. மறுநாள் காலையில் பஸ்ஸிலும் திரும்பி வரும் போதும் அவன் தட்டுப்படவில்லை என்றாலும் அவள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தெரு முனையில் ஒரு கார் அவள் அருகே வந்து மெல்ல நின்றது. அவன் தான் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

     "மிஸ், ஏறிக்குங்க! உங்களை வீட்டிலே விட்டுடறேன்."

     அவள் அவன் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. விடுவிடுவென்று நடந்தாள். காரும் மெதுவாக அவளைத் தொடர்ந்தது.

     அதிகபட்சம் வீட்டு வாசல்வரை பின் தொடர்வான். அதற்கு மேல் துணியமாட்டான் என்றே சாரதா நினைத்தாள். ஆனால் அவள் ஸ்டோருக்குள் நுழைந்து தன் போர்ஷன் கதவைத் திறந்தபோது, மற்ற ஐந்து போர்ஷன் ஆட்கள் பார்க்கும்படி உள்ளே வந்து, "இந்தாங்க, உங்களுக்காகவே வாங்கினேன்!" என்று ஒரு மல்லிகைப் பூப்பொட்டலத்தை நீட்டினான் அவன். சாரதாவுக்குச் சர்வநாடியும் ஒடுங்கினாற் போல ஆகிவிட்டது.

     பூப்பொட்டலத்தை வாங்காமலே, "முட்டாள்! பண்பில்லாத ஜடமே!" என்று அவள் கூப்பாடு போடவே, மற்றப் போர்ஷன் வாசலில் நின்று பார்த்தவர்களின் கவனம் இன்னும் அதிகமாகவே இவர்களிடம் திரும்பியது.

     ஐந்து போர்ஷன்களில் இரண்டில் ஆண்கள் கூட ஆபீஸிலிருந்து திரும்பியிருந்தனர். எட்டியும் பார்த்தனர். ஆனால் சாரதாவின் உதவிக்கு யாரும் துணிந்து முன் வரவில்லை. என்னவென்று விசாரிக்கக்கூடப் பயப்பட்டார்கள்.

     அவள் வாங்கிக் கொள்ளாமல் மறுக்கவே பூப்பொட்டலத்தை வாசற்படியில் வைத்துவிட்டுச் சினிமாக்களில் வருகிற மாதிரி முன்புறம் வலக்கையை நீட்டி, உள்ளங்கையை மறுபடி முகத்துக்குக் கொண்டு போய் முத்தம் கொடுக்கிறார் போல உதடுகளில் பதித்துவிட்டு, விசிலடித்துப் பாடிய படியே திரும்பிப் போய் வாசற்படிக்கு நேரே நிறுத்தியிருந்த காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் அவன்.

     அவன் முயற்சி என்ன என்பதை எரிச்சலோடு புரிந்து கொண்டாள் அவள். அக்கம்பக்கத்தார் தன்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசிக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டே இப்படி அவன் நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

     ஆத்திரத்தோடு அவன் வைத்துவிட்டுப் போன பூப்பொட்டலத்தை வாயிற்புறம் வீசி எறிந்தாள் அவள்.

     இரவில் தந்தை வீட்டுக்கு வந்ததும் அழுது கொண்டே நடந்ததைச் சொன்னாள் சாரதா. அவன் ஓட்டிக் கொண்டு வந்த காரின் நம்பரையும் ஞாபகமாகக் குறித்துக் கொடுத்தாள்.

     இரவு அகாலமென்றும் பாராமல் பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த ஏ.ஜி.ஆஃபீஸ் கிளார்க் ஒருத்தரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் அனந்து. இப்போதே புகார் செய்துவிட்டால் காலையில் சாரதா கல்லூரிக்குப் புறப்படும் போதே பஸ் நிறுத்தத்தில் வந்து அந்தப் பையனைப் போலீஸார் பிடிக்க முடியும் என்று அனந்து எண்ணியிருந்தார்.

     போலீஸ் நிலையத்தில் புகார் செய்த போதும் அவ்வாறே காலையில் பஸ் நிறுத்தத்தில் வந்து கவனிப்பதாக அவர்கள் கூறினார்கள்.

     போலீஸ் நிலையத்திலிருந்து திரும்பும்போது, "ஓய் அனந்து! இதை என்ன பண்ணியாவது நிறுத்தியாகணும். இப்படித் தினம் ஒரு பையன் பூவையும் வளையலையும் தூக்கிண்டு உம்ம பொண்ணைத் தேடிண்டு வந்தா ஸ்டோர்லே மத்தக் குடித்தனக்காரர் ஒரு மாதிரி நினைக்க ஆரம்பிச்சுடுவா. தெருவிலேயும் பேர் கெட்டுப் போயிடும். தாறுமாறாப் பேச்சுக்கள் வேற கிளம்பும்" என்று உடன் வந்தவர் அனந்துவை எச்சரித்தார்.

     அனந்துவுக்கும் அது நியாயமென்றே பட்டது. எதிர்பார்த்தது போல் மறுநாள் காலையில் போலீஸ்காரர் ஒருவர் அனந்துவைத் தேடி வந்தார். வந்த போது அனந்து வீட்டில் இல்லை. முதல் நாள் போலீஸ் நிலையத்துக்கு உடன் சென்ற பக்கத்துப் போர்ஷன்காரர் இருந்தார். அவரைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய் இரண்டு நிமிஷம் பேசியபின் அவரிடமே தேநீர் குடிக்கச் சில்லறையும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் கான்ஸ்டேபிள். அவர் பஸ் நிறுத்ததுக்கே வரவில்லை.

     வழக்கமான தொல்லை தொடர்ந்தது. இளைஞன் வந்தான். பஸ்ஸில் ஜாடைமாடையான அர்த்தமுள்ள சில சினிமாப் பாடல்களைச் சாரதாவின் காதருகே முணுமுணுத்தான். 'மெதுவா மெதுவாத் தொடலாமா?' என்று சீட்டியடித்துக் கொண்டே அவள் தோளைத் தொட்டான். பின்னலைப் பிடித்து இழுத்தான், அவனைச் சுற்றி நின்ற மற்ற இளைஞர்களும் மாணவர்களைப் போல் தோன்றவே, பஸ்ஸிலிருந்த மற்றவர்கள் இதில் தலையிட்டுச் சண்டையை விலைக்கு வாங்கப் பயந்தார்கள். பேசாமல் இருந்தார்கள்.

     சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போலீஸில் புகார் கொடுத்து விட்டு அப்புறம் சும்மா இருந்து விடுவார்கள் போல் தோன்றியது. போலீஸ் விசாரிக்க வருவதற்குள் இராமனும் கிழவனாகி விடுவான், சீதையும் கிழவியாகி விடுவாள். உடனடியாகக் கோபம் கொண்டு பொங்கியெழ வேண்டிய விஷயங்களில் எல்லாம் கையாலாகாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடும் ஆண் பிள்ளைகளை ஆண்களாகவே சாரதா நினைத்ததில்லை.

     "புதுமணத் தம்பதிகளிடம் கடற்கரையில் நகைகள் கொள்ளை. கணவனும் இளம் மனைவியும் இரவு கடற்கரையில் தனியே உலாவச் சென்றபோது ரௌடி ஒருவன் கணவனிடம் பேனாக் கத்தியைக் காட்டி மிரட்டி மனைவியின் நகையை அவனே கழற்றித் தருமாறு செய்த திருட்டு, கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் புலன் விசாரித்து வருகிறது" என்பன போன்ற தினசரிப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போது எல்லாம், "கேவலம் ஒரு ரௌடியின் பேனாக்கத்தியிலிருந்து மனைவியைக் காக்கத் தோள் வலியில்லாத ஓர் ஆண்பிள்ளையா வாழ்நாள் முழுவதும் அவளைக் கட்டிக் காக்கப் போகிறான்? இன்றைக்கு முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் ஆண்களைப் போல் தோன்றுகிறார்களே ஒழிய ஆண்மையுள்ளவர்களாக இல்லேடி! ஆண்களைப் போலத் தோன்றுகின்றவர்கள் எல்லாம் ஆண்மையுள்ளவங்க இல்லை. இது மாதிரி செய்ததிலேருந்து நாம அதைத்தான் தெரிஞ்சுக்கணும்" என்று தன் தோழிகளிடம் சொல்லி விமரிசித்திருக்கிறாள் சாரதா. முதல் நாளிரவே அப்பாவும் பக்கத்துப் போர்ஷன்காரரும் போலீஸில் புகார் செய்திருந்தும் அவர்கள் இன்றும் வராதது அவளுக்கு எரிச்சலூட்டியது. பொறுமை இழக்கச் செய்தது.

     மாலையில் வீடு திரும்பியதுமே போலீஸ் வராததன் மர்மம் அவளுக்குப் புரிந்தது.

     "நீ குடுத்த கார் நம்பரை வச்சு விசாரிச்சதிலே அந்தப் பையன் ஐ.ஜி.யோட தங்கை புள்ளைன்னும், அவன் ஐ.ஜி. வீட்டிலேயே தங்கி மாநிலக் கல்லூரியிலே படிக்கிறான்னும் தெரிஞ்சிருக்கு. அதனாலேதான் போலீஸ்காரர் தயங்கறா அம்மா" என்று பக்கத்துப் போர்ஷன்காரர் சாரதாவுக்குத் தகவல் சொன்னார்.

     "பையன் பேரு தங்கப் பாண்டியன். முன்னாலேயும் இது மாதிரி இரண்டு மூணு புகார்கள் வந்து மேலே இருந்து 'ப்ரஷர்' வந்ததாலே ஒண்ணும் பண்ணாமே சும்மா விட வேண்டியிருந்ததாம். அதனாலே இந்தப் புகார் விஷயத்திலேயே போலீஸ் தயங்கறாங்க."

     சாரதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அத்தனை குடித்தனக்கார ஆண்களும் வீட்டில் இருந்தபோதே பகல் ஒன்றரை மணிக்குச் சரியாக வாசலுக்கு நேரே காரைக் கொண்டு வந்து நிறுத்தி, ஏதோ தாலி கட்டின மனைவியைக் கூப்பிடற மாதிரி, "ஏய் சாரதா! இன்னிக்கு மாட்னி ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வம்பு பண்ணாமே எங்கூட உடனே புறப்படு" என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே அட்டகாசமாக வந்தான் அவன்.

     எல்லாப் போர்ஷனின் வாசலிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அத்தனை பேரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, "நீ யார்டா ராஸ்கல் அவளைக் கூப்பிட?" என்று ஒருத்தனாவது தைரியமாகக் கேட்க முன்வரவில்லை. ஏ.ஜி. ஆபீஸ் கிளார்க், ரிடயர்டு போஸ்ட் மாஸ்டர் கேசவையர், எவர்பிரைட் ஸ்டீல் கம்பெனி ஸ்டெனோ நாகராஜன், ரெவின்யூ போர்டு ஆபீஸ் ரங்கராமாநுஜம், எல்.ஐ.சி. லோகநாதன் ஒருத்தராவது தம் போர்ஷன் முகப்பிலிருந்து ஒரு முழங்கூட முன்னுக்கு நகர்ந்து வரவில்லை.

     முந்தா நாள் சிங்கராசாரி தெரு டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் பதினைந்து ஏழைப் பையன்களுக்குத் தர்ம உபநயனம் பண்ணி வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர்கூட வாயைத் திறக்காமல் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதைக் கண்டு சாரதாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம்.

     அன்றிரவு அப்பா திரும்பி வந்ததும், "வேறு வீடு பாருங்கள்! அல்லது இந்த ரௌடியைத் தடுத்து நிறுத்த வழி சொல்லுங்கள்" என்று கண்டிப்பாகக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள் சாரதா.

     ஆனால் அப்பா அன்றிரவு திரும்பி வந்த நிலையில் சாரதா அவரிடம் அதிரப் பேசுவதற்கே முடியாது போயிற்று. காலிலும் கையிலும் அடுப்புச் சரிந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டிப் புண்ணும் ரணமுமாக, கூட வேலை பார்க்கிற ஆள் டாக்ஸியில் அவரைக் கொண்டு வந்து விட்டுப் போனான். இந்த நிலையில் அவளே நாலு நாள் லீவு போட வேண்டியதாயிற்று.

     கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு அவள் அப்பாவுக்குச் சிச்ருஷை செய்த நாட்களிலும் அந்த ரௌடியின் தொல்லை ஓயவில்லை. சாரதா அப்பாவிடம் அழுது புலம்பினாள்.

     "சூரியனைப் பார்த்து நாய் குறைக்கறதுன்னு நெனைச்சுண்டு பேசாம இரும்மா. அவனை எதிர்த்துக்க நமக்குப் பலமும் மனுஷா துணையும் இல்லே. அவன் பெரிய இடத்துப் புள்ளையாம்! தெய்வத்துக்குக் கண் இருந்தா அவனைக் கேக்கட்டும். நம்மாலே வேற ஒண்ணும் பண்ண முடியாது சாரதா" என்றார் அனந்து.

     சென்னையிலேயே அனந்துவின் கூடப் பிறந்த சகோதரிகள் இருவர் இருந்தனர். ஒருத்தி அவருக்கு மூத்தவள். மற்றொருத்தி இளையவள். இருவருக்கும் வயது வந்த மகன்கள் இருந்தனர். அந்த மருமகன்களில் ஒருத்தருக்குச் சாரதாவைக் கொடுக்கலாமா என்று கூட அனந்துவுக்கு ஒரு நினைப்பு இருந்தது.

     அனந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டித் தீப்புண்களோடு படுத்த் படுக்கையான மறுநாள் அவருடைய தங்கையும் ஸ்டேட் பாங்கில் ஆபீஸராக வேலை பார்க்கும் அவளுடைய மகனும் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வந்திருந்த சமயம் பார்த்து அந்தக் காதல் ரௌடியும் வந்து சேர்ந்தான்.

     அனந்து உடனே முழு விவரத்தையும் தன் மருமகனிடம் சொல்லி, "இந்தச் சண்டாளனைக் கொஞ்சம் விசாரியேன்! வயசு வந்த பொண்ணு கிட்ட நாள் தவறாமல் வந்து வம்பு பண்றான். அக்கம்பக்கத்திலே பேரைக் கெடுத்துடுவான் போலிருக்கு" என்று கேட்டுக் கொண்டார்.

     "இந்த மாதிரி ரௌடிகிட்ட எல்லாம் நேரே வம்பு பண்ணினாக் கையிலே பிளேடு, கத்தி கித்தி வச்சிருப்பான் மாமா! நம்ம கௌரவம் என்ன ஆறது? அவன் அளவுக்கு நம்மாலே எறங்க முடியாது. நான் வேணா ஒண்ணு பண்றேன். போறப்போ போலீஸ்லே ஒரு 'ஈவ்டீஸிங்'குன்னு புகார் கொடுத்துட்டுப் போறேன்" என்றான், அந்த மீசை முளைத்த ஆண்பிள்ளை. சாரதாவுக்கு 'சை' என்று ஆகிவிட்டது.

     மூன்றாம் நாள் அனந்துவின் மற்றொரு சகோதரி வந்திருந்தாள். அவள் பிள்ளை ரகுவுக்கு ஒரு கம்பெனியில் ஸேல்ஸ் மேனேஜர் உத்தியோகம். அவன் நல்ல விளையாட்டு வீரன்; உடற்கட்டுள்ள பலசாலி, கொஞ்சம் கராத்தே, ஜூடோ பயிற்சி கூட உண்டு. அவனைக் கொஞ்ச நேரம் அங்கேயே தங்கச் சொல்லி அந்தக் காதல் ரௌடியிடம் மோத விட வேண்டும் என்று முயன்றார் அனந்து. அவனும் சம்மதித்தான். அதற்குள் ஏதோ பேச்சுவாக்கில் சாராதாவுக்குத் தொல்லை கொடுக்கிற அந்த இளைஞன் ஐ.ஜி.யின் தங்கைபிள்ளை என்பதால் போலீஸில் எவ்வளவு புகார் செய்தும் பயனில்லை என்று அவரே சொல்லிவிடவே அவனுக்குப் பயம் வந்து விட்டது.

     "மாமா, யாரோ எவனோன்னாப் பரவாயில்லை. நாலு உதை உதைச்சுத் தெருவிலே தூக்கி எறிஞ்சிடலாம். நீங்க சொல்ற மாதிரியாயிருந்தா யோசிச்சு திட்டம் போட்டுத் தான் ஏதாவது செய்யணும். அவசரப்பட்டுடாதீங்கோ. சாரதாவைக் கூடக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்கோ" என்று உபதேசம் செய்துவிட்டு நழுவி விட்டான். இந்தத் தொல்லைக்கு விடிவே இல்லை என்ற முடிவுக்குச் சாரதா வந்துவிட்டாள்.

     'இரண்டு பேருக்கும் ஏதாவது பழைய சம்பந்தம் இருக்கும். இல்லாட்டா ஒருத்தன் இப்படி விடாமத் துரத்திண்டு கார்லே நாள் தவறாம வருவானா? முதல்லே கொஞ்சம் வருமானத்துக்கு ஆசைப்பட்டிருப்பாள். அப்புறம், 'இப்போ வராதே, போடான்னு' ஒதுக்கினா அவன் எப்படிப் போவான்?' என்று கூட அக்கம் பக்கத்தில் அபாண்டமாகப் பேச்சுக் கிளம்பி விட்டது. நாக்கில் நரம்பில்லாத சில அயோக்கியன்கள் விதவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். "பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்துவே பொண்ணைப் பெரிய பெரிய பணக்காரப் பையன்களோட பழக விட்டுட்டான். அதுனாலே வந்த வம்புதான் இதெல்லாம். இப்பக் குறைப்பட்டுண்டா அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்?" என்று ரகசியமாகத் தம் மனைவியிடம் கூறினார், பக்கத்துப் போர்ஷனைச் சேர்ந்த சமஷ்டி உபநயன தர்மப் புகழ் போஸ்ட்மாஸ்டர்.

     இப்படிச் சாரதாவால் வெறுக்கப்பட்டும், சாரதாவைப் பாதிக்காமலுமே அவளுக்கு எல்லா விதத்திலும் கெட்டப் பெயரை உண்டாக்கி விட்டான், அந்த ரௌடிப் பையன்.

     கொதிக்கும் எண்ணெய் பட்டு உண்டான தீப்புண்களை விட இந்த மனப்புண் அனந்துவை வாட்டியது.

     நாலைந்து நாள் கழித்து ஒரு மாலை வேளையில் முன்பு அவரை டாக்ஸியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுப் போன அதே சக ஊழியன் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போக வந்தபோது அனந்து கண்களிலிருந்து மாலை மாலையாக நீர் வழிய மௌனமாக அழுது கொண்டிருந்தார்.

     "ஏன் மாமா அழறேள்?"

     "வாடா ராஜு! நான் பொறந்த பொறப்பை நெனைச்சு அழறேன். காண்டீனெல்லாம் எப்படி இருக்கு? சரக்கெல்லாம் யார் போடறா?" என்று கண்களில் வழிந்த நீரைத் துடைத்து கொண்டு அவனை வரவேற்றார் அனந்து.

     "அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மாமா! நீங்க ஏன் இப்போ அழுதுண்டிருக்கேள்னு மனசிலே உள்ளதை மறைக்காமே நிஜத்தை எங்கிட்டச் சொல்லணும், பொய் சொல்லப்படாது."

     அனந்து சிறிது தயங்கிய பின் உண்மையை விவரித்தார். முதலில் அவர் தயங்கியதற்குக் காரணம் ஒரு காண்டீனில் தனக்குக் கீழ்ப்பட்டவனாக மாவரைக்கிற உத்தியோகம் பார்க்கும் எழுதப் படிக்கத் தெரியாதவனான ஒருத்தனிடம் நாசூக்கான தன் குடும்ப அந்தரங்கத்தைச் சொல்வதா வேண்டாமா என்று எண்ணியதுதான். அவர் அதைச் சொல்லி முடிக்கவும் காய்கறிக் கடைக்குப் போயிருந்த சாரதா திரும்பி வரவும் சரியாயிருந்தது.

     "சாரதா, இவன் ராஜு! எங்கூட வேலை பார்க்கிறான். சொந்த ஊர் மானாமதுரை. மாவரைக்கிறதிலே நிபுணன். அன்னிக்கி என்னைக் கொண்டு வந்து விட்டப்போ அவசரத்திலே நான் உனக்கு இவனைப் பத்திச் சொல்லலே. இவனுக்கு ஒரு காபி கலந்து குடு" என்றார் அனந்து.

     சாரதா அவனைப் பார்த்தாள். ஆள் ஒற்றை நாடியாக, ஊதினால் விழுந்து விடுகிற மாதிரி இருந்தான். ஆனால் நல்ல உயரம். உழைத்து இறுகி உரம் பாய்ந்த தோள்கள். தோளில் சமையல் கைக்காரியத்துக்குப் பயன்படுகிற மாதிரி பிடித்துணியையே துண்டாகப் போட்டுக் கொண்டிருந்தான். அழுக்குப் பனியன். அழுக்கு வேஷ்டி. ஆளே நல்ல கறுப்பு. கறுப்பு முகத்தில் இடுங்கிப் போய் மின்னும் ஒளிமிக்கக் கண்கள். எந்த ஊரிலும், எந்த வீட்டிலும் எவ்வளவு உயரமான நிலைப்படியும் நிச்சயம் இவன் நிமிர்ந்தால் இடிக்கும் என்பது போல் அத்தனை உயரம். கறுத்த உதடுகளும் மூக்கும் வசீகரமற்ற முகமுமாக இருந்தான் அவன். சிரித்தால் மட்டும் தேங்காய்ச் சில்லு மாதிரி வெள்ளை வெளேரென்று பற்கள் மின்னின. அப்பாவின் அறிமுகத்தை ஏற்பது போல் அவனை நோக்கி கைகூப்பி விட்டுக் காப்பி கலப்பதற்காகச் சமையற்கட்டுக்குள் சென்றாள் சாரதா. அப்போது வாசலில் வெறுப்பூட்டும் குரல் கேட்டது.

     "ஹல்லோ மை டியர் சாரதா!" என்ற அழைப்பைத் தொடர்ந்து சினிமாப் பாடல்; 'உன்னை நான் சந்திப்பேன். என்னை நீ கொஞ்சிவிட்டால்...' என்று, பாதியில் நின்றது. சீட்டியடிக்கிற ஒலி தொடர்ந்தது.

     "இவன் தாண்டா ராஜு! நாள் தவறாமே வந்து மானத்தை வாங்கறான். யாரோ பெரிய போலீஸ் ஆபீஸருக்கு உறவாம். அதனாலே எல்லாம் பயப்படறா. கோயில்காளை மாதிரி பொம்பளைகள் பின்னால் ஒவ்வொரு திறந்த வீடா நுழைஞ்சிடுவான் போலிருக்கு."

     "சித்தே இருங்கோ மாமா, வரேன்!" ராஜு வெளியே போக எழுந்திருந்தான்.

     "உனக்கெதுக்குடா வந்த இடத்திலே வம்பு? பேசாமே உக்காரு."

     "நான் ராமநாதபுரம் ஜில்லாக்காரன் மாமா! கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துண்டு கையைக் கட்டிண்டு ஆம்புள்ளையா நின்னுண்டிருக்க என்னாலே முடியாது."

     அவன் அவர் தடுத்ததையும் மீறி வெளியே பாய்ந்தான்.

     அடுத்த நிமிஷம் என்ன நடக்கிறது என்பதை அனந்து உள்ளிருந்தே கேட்கவும் அநுமானிக்கவும் முடிந்தது. ராஜுவின் குரல் தான் முதலில் விசாரித்தது.

     "நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும் இங்கே?"

     "நானா? நான் சாரதாவின் ஆருயிர்க் காதலன்."

     இதற்கப்புறம் உரையாடல் இல்லை. பளீரென்று ஓர் அறை விழுகிற ஓசை கேட்கிறது.

     "டேய்! என்னையா அறையறே? நான் யார் தெரியுமா?"

     "தெரியுமே! பொம்பளைப் பொறுக்கிகளிலே ஒருத்தன். போடா! உனக்குப் பெருமை ஒரு கேடு."

     இன்னொரு பலமான அடி விழுகிறது. "நீங்க யாராயிருந்தாலும் தெருவிலே போய் அடிச்சுக்குங்கோ. இங்கே சண்டை கூடாது. இது கௌரவமா நாலு பேர் குடியிருக்கிற இடம்." இப்படிக் குறுக்கிட்டது சமஷ்டி உபநயன தர்ம போஸ்ட்மாஸ்டரின் குரல்.

     "சும்மா வாயை மூடுங்க சார். உங்க கௌரவந்தான் நல்லாத் தெரியுதே. வீட்டோட இருக்கிற பொம்பிளையைத் தேடி வந்து எவனோ ஒரு கிறுக்கன் நாள் தவறாம வம்பு பண்றதைப் பார்த்துக்கிட்டுப் பொறுமையா இருக்கிற கௌரவத்தையே நான் சொல்றேன் சார்." இது அவரைச் சாடும் ராஜுவின் குரல்.

     அனந்துவால் எழுந்திருந்து நடமாட முடியாத நிலை. ஓடுப்போய் ராஜுவைத் தடுக்க முடியவில்லை அவரால். படுத்த இடத்திலிருந்தே, "ராஜு" என்று பலங் கொண்ட மட்டும் அவர் கத்தினார். ஆனால் ராஜு அப்போது அதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை. தெருவில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி ஓடத் தொடங்கியிருந்த காதல் ரௌடியைத் துரத்திப் போய்ப் பிடித்து மேலும் உதைத்து கொண்டிருந்தான் அவன்.

     பத்து நிமிஷத்தில் கார் சர்ரென்று சீறிக்கொண்டு கிளம்பும் ஓசையும், "போடா ராஸ்கல்! இனிமே இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தியோ தொலைச்சுப்பிடுவேன் தொலைச்சு. சொந்த அக்கா தங்கையோட பிறந்ததில்லையாடா நீ?" என்று ராஜு அவனை எச்சரித்து அனுப்பும் ஓசையும் உள்ளே படுத்திருந்த அனந்துவுக்குக் கேட்டன.

     ராஜு உள்ளே திரும்பி வந்த போது சாரதா காபி கலந்து கொண்டு வந்திருந்தாள்.

     "வந்த இடத்திலே ஏண்டா வம்பை விலைக்கு வாங்கினே? காபியைக் குடிச்சிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடு. அவன் போய்ப் போலீஸோட வரப் போறான்" என்றார் அனந்து.

     "ஓடிப் போறது எதுக்கு மாமா? கோழைன்னா பயந்து ஓடிப் போவான். நான் ஏன் போகணும்? போலீஸ் வரட்டும். வந்தா என்ன? நடந்ததைச் சொல்றேன். கேக்கலேன்னா ஜெயிலுக்கு உள்ளே போறேன். நீங்க என் சம்பளத்தை வாங்கி எனக்காக ஒரு வக்கீல் வச்சு வாதாடுவேளா இல்லியா சொல்லுங்கோ?"

     "சாரதா, முதல்லே அவனுக்குக் காபியைக் கொடு, சொல்றேன்." சாரதா காபியைக் கொடுத்தாள், ராஜு அதை வாங்கிப் பருகி முடிக்கவும் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

     'அஸால்ட் அண்ட் அட்டெம்டட் ஃபார் மர்டர்' என்று எஃப்.ஐ.ஆர். தயாரித்து அவனை இழுத்துச் சென்றார்கள் போலீஸார். அவன் புன்முறுவலுடன் நடந்து போனான்.

     காபி டவரா டம்பளருடன் தெரு வாசல் வரை அவனை வழியனுப்ப வந்த சாரதா முதல் முதலாக முழுப்பௌருஷமும் நிறைந்த ஓர் பூரண ஆண்மகனுக்குத் தன் கையால் காபி கலந்து கொடுத்த பெருமையோடு கண்களில் நீர் மல்க நின்றாள்.

     பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கள் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. கடைசியாக அவள் ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்து அவனுக்குத் தன் கைகளால் காபியும் கலந்து கொடுத்திருந்தாள்.

     அவன் அழகாக இல்லைதான். ஆனால் நிச்சயமான ஆண்பிள்ளையாக இருந்தான். ஜாமீன் கேட்டு அவனை விடுவிக்க வக்கீலை தேடிச் செல்வதற்கு அப்பாவிடம் யோசனை கேட்பதற்காக உள்ளே விரைந்தாள் சாரதா.




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
மேலும் விபரம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00